மாற்றம் நிகழ்த்திய இந்திய மகளிர்

       மக்களுக்கு சமுதாய மாற்றத்தை விதைத்திடவும் தங்களைத்  தாங்களே சரி பார்த்துக்கொள்ளவும் நல்லதொரு ஊடகம் நூல்கள். நூல்களின் வழியே மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் சமூகத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் வழிகள் தென்படுகின்றன. நேற்றைய வரலாற்றை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொண்டு எதிர்காலத்தை சிறப்பாக கட்டமைப்பதற்கும் நூல்கள் உதவி செய்கின்றன. அந்த வகையில் வானவியல், கணிதம், விலங்கியல், உடற்கூறு அறிவியல், கருவியல், விடுதலைப் போராட்ட வரலாறு, சமூகப் போராளிகள், சிறுவர் கதைகள் என பல தளங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி நமக்கு காட்சிப்படுத்தி இருக்கும் பேராசிரியர் சோ மோகனா அவர்களின் இந்த நூலின் வழியே இந்தியாவில் சமூகத்தில் மாற்றத்தை நிகழ்த்திய சில பெண்கள் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் போராடிய எத்தனையோ பெண்கள் இன்னும் கணக்கில் சேராமல் இருட்டடிப்பு செய்யப்பட்ட வரலாறு உண்டு. ஆண்களுக்கு நிகராகப் போராடிய ஒரு சில பெண்களின் வரலாறு எழுதப்பட்டிருந்தாலும் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தன்னலத்தைத் துறந்து குடும்பத்தை மறந்து விடுதலைப் போருக்காக தங்களை இணைத்துக் கொண்ட எத்தனையோ பெண்கள் இருந்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த நூலில் சில விடுதலைப் போராட்ட மகளிர் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்று அவர்களின் விலைமதிக்க முடியாத தியாகங்கள் நமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு சமூகம் சிறப்புற வாழவேண்டும் என்றால் அது சார்ந்து இருக்கும் எல்லாத் துறைகளிலும் முன்னேற்ற நிகழ்வுகள் அவசியம். இயற்கையைப் பாதுகாத்தல் தொடங்கி எதிர்காலத் திட்டங்களைக் கட்டமைப்பதுவரை எல்லாவித பணிகளிலும் பெண்களின் ஈடுபாட்டையும் அவர்களின் உழைப்பையும் சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களையும் முழுமையாக மதித்து அவர்களது செயல்பாடுகளுக்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்பதையே இந்த நூலில் வழியே எழுத்தாளர் பெண்களைக் கொண்டு பேசிச் செல்கிறார்.

கல்வியில் மறுக்கப்பட்டும் பொது நலன் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டும் பிள்ளை பெறுதல் ஒன்றுக்கு மட்டுமே பெண்கள் குடும்பத்தில் வளர்க்கப்பட்டனர் என்ற காலகட்டத்திலும் தங்கள் குடும்பத்தில் எவ்வளவு போராட முடியுமோ அவ்வளவு போராடி சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தீர்வுகளை நோக்கி தெருவில் இறங்கிய எத்தனையோ பெண்கள் இந்த கட்டுரைகளின் வழியே வெளிச்சத்திற்கு வருகிறார்கள்.

விடுதலைப் போராட்டம், மருத்துவத்துறை,  தொழிலாளர் இயக்கம்,  இயற்கையை பேணிப் பாதுகாத்தல், புற்றுநோய் ஆராய்ச்சி, அறிவியல் ஆய்வாளர், திருநங்கையானவர் உயர் பதவியை அடைதல் என பல துறைகளில் போராடி வெற்றி பெற்று வரலாறாக நிலைத்து நின்றவர்களையும் வாழும் வரலாறாக எதிர்காலத் தலைமுறையினருக்கு பாதை அமைக்கும் பெண்களின் வாழ்க்கை இந்த நூல் நமக்கு அறியத் தருகிறது.

இந்தியாவின் முதல் முகமதிய பேரரசி ரஷ்யா சுல்தானா. சுமார் நான்கு ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட போதும் அவரது வீர தீரச் செயல்கள் வரலாற்றின் பக்கங்களில் நிரந்தரமாக எழுதப்பட்டு அவரது புகழுக்கு பெருமை சேர்க்கின்றது. இவர் முதல் பெண் சுல்தான் மற்றும் முகமது அரசின் கடைசி பெண் சுல்தான் இந்தியாவின் முதல் பெண் அரசி என்ற பெருமைகளை பெற்றவர். தனது தந்தையார் மரணத்திற்கு பின் தனது தனயன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றாலும் மக்கள் எல்லோரும் ஒருமனதாக விரும்பிய காரணத்தினால் டெல்லி பேரரசியாக முடி சூடிக் கொண்ட ரஷ்யா சுல்தானா பலவித திறமைகளுடன் ஆட்சியை கொண்டு செலுத்தி இருக்கிறார்.

ஆங்கிலேயே ஆதிக்கத்தின் கீழ் இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்தபோது அதற்கு எதிராக போராடிய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பெண்களும் போராளிகளாக தம்மை இணைத்துக் கொண்டிருந்தனர். அகிம்சையின் கீழ் காந்தியடிகள் போராட்டத்தை தொடங்கினாலும் எத்தனையோ தலைவர்கள் பல போராட்ட வடிவங்களில் ஒன்று திரண்டு ஆயுதம் தாங்கியும் போராட்டத்தை கொண்டு செலுத்தி இருக்கின்றனர். அந்த வகையில் இந்திய சுதந்திர முதல் முஸ்லிம் போராளியாக அறியப்படும் பேகம் ஹஜரத் மஹால் பற்றிய கட்டுரையில் அவரது வாழ்க்கை வரலாறு முழுமையாக எழுதப்பட்டுள்ளது. ஓர் ஆப்பிரிக்க அடிமையின் மகளாக அடிமைச் சந்தையில் இருந்து விலைக்கு வாங்கப்பட்ட ஹஸ்ரத் தனது எஜமானர்களுக்கு கீழ் அரண்மனையில் அடிமை வேலை செய்து கொண்டிருந்தார். லக்னோ மன்னர் வாஜித் அலி ஷாவின் கவனத்தைக் கவர்ந்த ஹஜ்ரத் மகால் அவரால் தனது அரண்மனைக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் மனைவியாக கடத்தப்படுகிறார். ஐந்து ஆண்டுகள் வாசித் அலி ஷா ஹஜ்ரத்துடன் குடும்பம் நடத்தினாலும் அதற்கு பிறகு அவரை விவாகரத்து செய்கிறார். தனது அந்தப்புரத்திலிருந்தும் தனது ஆட்சிப் பகுதியில் இருந்தும் ஹஸ்ரத் மகாலைத் துரத்தி விடுகிறார் ஒரு கட்டத்தில் ஆங்கிலப்படை லக்னோவை முற்றுகையிட்டபோது மன்னர் கல்கத்தா சிறையில் இருக்கிறார். பட்டத்தரசிகளுக்கு என்ன செய்வது என்று தெரியாத சூழலில் சவாலான நேரத்தில் பொறுப்பைத் துணிந்து எடுத்து ஹஸ்ரத் மகால் தனது நாட்டை ஆங்கிலேய ஆட்சியாளரிடம் இருந்து காப்பாற்றுகிறார். 1857 ஆம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போர் உச்சத்தில் இருந்த நேரத்தில் ஹஜ்ரத் மகால் தனது படையுடன் லக்னோவில் இருந்த பிரிட்டிஷ் தூதரகத்தை முற்றுகையிட்டு இடித்து தரைமட்டமாக்குகிறார் அவருக்கு கீழ் 2 லட்சம் புரட்சியாளர்கள் திரண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்துள்ளனர். ஆயினும் ஆங்கிலேயரின் துப்பாக்கிக்கு பயந்து பின்வாங்கிய ஹஸ்ரத் மஹால் நேபாளத்திற்கு சென்று தலைமறைவாகிறார். அங்கேயே தனது உயிரையும் விடுகிறார் அவரது கல்லறையும் நேபாளத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிற்றரசின் மகாராணி சீரழியும் வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட போதும் தனது கணவனும் மன்னனுமானவன் தன்னைத் துரத்தி அடித்த போதும் நாட்டைக் காக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் அவர் மீண்டும் அரண்மனைக்குத் திரும்பி ஆங்கிலேயர்களை எதிர்த்த வரலாறு இன்றும் பேசப்படுகிறது.

1857 ஆம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போர் காலகட்டத்தில் நானா ஷாகிப் அவர்களுக்கு உதவிய மிக முக்கியமான விடுதலைப் போராளி அசிசன் பாய். ஒரு விலைமகளின் மகளாகவே பிறந்தவள் தனது இறுதிவரை ஆங்கிலேயரின் பிடியில் சிக்காமல் ஆங்கிலேயருக்கு எதிராக துப்பாக்கிப் பயிற்சி எடுத்துக் கொண்டு போர் புரிந்தவர். ஒரு கட்டத்தில் ஆங்கிலேயரிடம் பிடிபட்ட போதும் இந்திய வீரர்களையும் நானா சாகிப்பையும் காட்டிக் கொடுக்க மறுத்து அதன் காரணமாக தூக்குக் கயிற்றை  முத்தமிட்டவர்.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான கடம்பினி மருத்துவரான வரலாற்றைச் சொல்லும் கட்டுரை அவர் மருத்துவம் பயில அவரது கணவர் துவாரகாநாத் கங்குலி எப்படியெல்லாம் சிரமப்பட்டார் என்பதையும் நீதிமன்ற வழக்கின் மூலமும் போராட்டத்தின் மூலமும் கடம்பினியை கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்த்து முதல் இந்திய மருத்துவராக வெளிக்கொணர்ந்தார் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லாத் தடைகளையும் உடைத்து பெண்களுக்கு ஒரு பாதை அமைத்துத் தர ஏதோ ஒரு இயக்கமோ செயல்பாடுகளுமோ தேவையாக இருந்திருக்கின்றன. அப்படியான தொழிலாளர்களின் நலனிலும் அக்கறை கொண்டு அவர்கள் சார்பில் மிகப்பெரிய தொழிலாளர் இயக்கத்தை உருவாக்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றியவர் இந்திய தொழிலாளர் இயக்க முன்னோடி என அழைக்கப்பட்ட அனுசுயா சாராபாய். இந்தியாவில் பெண் தொழிலாளர் இயக்கத்தின் முன்னோடி மற்றும் தலைவர் இந்தியாவின் பழமையான ஜவுளி தொழிலாளர் சங்கமான அகமதாபாத் ஜவுளி தொழிலாளர் சங்கத்தின் நிறுவனர் என பல சிறப்புகளுக்கு உரியவர். அனுசுயா மருத்துவப் பட்டம் பெறுவதில் தனது சமண நம்பிக்கைகளை மீறி விலங்கு உறுப்புகளை பிரித்தெடுத்தல் முறை உள்ளது என்பதை உணர்ந்த போது அதிலிருந்து விலகி பொருளாதாரம் படிப்பதற்கு லண்டன் சென்றவர் சோசலிசம் சமுதாயத்திற்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையின் கீழ் பெண்கள் உரிமை இயக்கத்தில் இங்கிலாந்தில் பங்கெடுத்து தனது எதிர்காலத்தை பொதுநலத்திற்காக கட்டமைத்துக் கொண்டவர். அனுசுயா இந்தியாவின் காந்தியடிகளை சந்திப்பதற்கு முன்பே மூன்று முறை தொழிலாளர்களுக்காகப் போராடி 20 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டவர். காந்தியால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரே பெண்மணி என்ற பெருமைக்கு உரியவர்.

விடுதலைப் போராளி துர்கா தேவி ஆங்கிலேயர்களால் தி அக்னி ஆப் இந்தியா என்று அழைக்கப்படும் அளவிற்கு அதிரடித் தாக்குதல்களால் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர். பகத்சிங் பிரிட்டிஷ் காவல் துறை உதவி காவல் கண்காணிப்பாளர் ஜான் சான்டர்ஸை லாகூரில் கொன்ற பிறகு காவல்துறையிலிருந்து தப்பிப்பதற்கு துர்கா தேவி அவரது மனைவியாக நடித்து அவரை காப்பாற்றுகிறார். துர்கா தேவியின் முடிவு அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய சமூக மரபுகள் திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான தொடர்பை வலியுறுத்தும் சூழலில் அதைத் தாண்டி துணிச்சலான முடிவாக கருதப்படுகிறது. பகத்சிங் உட்பட்ட தோழர்கள் மூவரையும் போலீஸ் விசாரணையில் இருந்தும் சிறையில் இருந்தும் மீட்பதற்காக தனது 3000க்கும் மேற்பட்ட மதிப்புள்ள ஆபரணங்களை விற்று உதவியவர் துர்கா தேவி.

வெள்ளையனே வெளியேறு இயக்க காலகட்டத்தில் காந்தியடிகள் உட்பட முக்கியமான தலைவர்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட சூழலில் அந்த இயக்கத்தை முன் நின்று நடத்தி மிகப் பெரிய வரலாறாக மாறியவர் ஆகஸ்ட் புரட்சி ராணி அருணா ஆசப் அலி.

இயற்கையை நேசிப்பவர்களுக்கு கல்வியறிவு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கல்விக்கும் இயற்கையை நேசிப்பதற்கும் தொடர்பு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. உயிர்களிடத்தில் கருணையும் நேசமும் கொண்டிருக்கும் எல்லா மனதிடமும் மனித நேயம் மிகுந்து காணப்படும். அப்படியான எல்லையற்ற கருணையே ஒரு கிராமத்து மனுசியை தனது கிராமத்தை மரங்களின் கிராமமாக மாற்றிக் காட்ட உதவியுள்ளது. கர்நாடகாவில் உள்ள பொட்டல் காடாக இருந்த கூதூர் சாலைகளின் இருமருங்கிலும் ஆலமரக்கன்றுகளை நட்டு பராமரிக்கிறார் மூன்று ஆண்டுகளில் 284 மரங்களை நட்டு பல லட்சம் மதிப்புள்ள சோலைவனத்தை உருவாக்குகிறார் திம்மக்கா. இந்த அரும்பணிக்கு அவரது கணவரை தவிர எந்த அமைப்போ அரசோ ஊரோ உதவி செய்யவில்லை. தன் வாழ்நாள் முழுவதும் அவர் மரங்களையே குழந்தைகளாகப் பேணி பாதுகாத்து மரம் வளர்ப்பில் ஈடுபட்டு இருக்கிறார். உலகம் முழுவதும் எத்தனையோ விருதுகள் அவருக்கு சூட்டப்பட்டாலும் இன்றும் சாலையின் இருமருங்கிலும் மரம் நட்டவர் என்ற பொருள்படும் கன்னடத்தில் சாலமருத என்ற அடைமழியோடு சாலமருத திம்மக்கா என்று உலகம் முழுவதும் அவர் அறியப்படுகிறார். தனி ஒரு மனுசியாக அவர் வாழ்நாள் முழுக்க செய்துள்ள இந்த சாதனையை ஒவ்வொருவரும் தங்களது வாழ்வில் ஒரு மரத்தையாவது நட்டு வளர்க்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்ளும் போது இயற்கையின் வளர்ச்சியும் பசுமையும் உலகையும் உயிர்களையும் சிறப்பாக வாழ வைக்கும்.

இந்தியாவில் முதன் முதலில் அறிவியல் துறையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் வாங்கிய முதல் பெண் உலகப் புகழ்பெற்ற நோபல் பரிசு வாங்கிய சர் சி வி ராமன் அவர்களால் புறக்கணிக்கப்பட்ட கமலா சோகோனி. பெண்கள் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவது ஆண்களை நிலைகுலைய வைக்கும் என்ற பிற்போக்குத்தனத்தை கொண்டு சர் சி வி ராமன் கமலா சோக்கோனியை புறக்கணித்தவர். தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு மேல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி அவரது துறையில் இணைந்தே தீர வேண்டும் என்ற போராட்டத்தை வெற்றிகரமாக முடித்து முதல் முனைவர் பட்டம் பெறுகிறார். மலைவாழ் மக்கள் ஏழைகள் உண்ணும் உணவுப் பொருட்களில் மூன்று வகையான பொருட்கள் அவசியம் என்று ஆராய்ச்சி செய்து நிரூபித்து அதன் வழியே ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வருவதற்கு முன் நின்றவர் கமலா சோகோனி.

புற்றுநோய் மற்றும் தொழுநோய்க்கான காரண காரியங்கள் மற்றும் பதில்களைக் கண்டறிய அயராது போராடிய மருத்துவர் பழங்குடியின பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரத்திற்காக தொடர்ந்து போராடியவர் அறிவியல் மற்றும் கல்வியின் உதவியுடன் உயரிய சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கு வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் இந்திய பெண் அறிவியலாளர்கள் சங்கத்தை ஏற்படுத்தி பெண் விஞ்ஞானிகளுக்கு இடையே அறிவியல் சாதனைகளை ஊக்குவித்தல் அறிவியலில் பெண்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்வது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்களின் பிரதிநிதி அமைப்பாக பணியாற்றுதல் ஆகிய நோக்கங்களை சிறப்பாக முன்னெடுத்தவர் என்ற பெருமைக்குரியவர் டாக்டர் கமல் ரணதிவே

நிலப் பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தவர் ஸ்வராஜ்யம் என்று பெயரிடப்பட்டு தேச விடுதலை போராட்டக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.  ஒரு கட்டத்தில் தனது நில பிரபுத்துவ ஆதிக்கத்தை எதிர்த்து துப்பாக்கி ஏந்தி போராடத் துவங்கியவர். தெலுங்கானா ஆயுதப் புரட்சியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று நிஜாம் மாநிலத்தின் நிலப்பரப்புத்துவ நவாப்பிற்கு எதிராக அதிகார வர்க்கத்திற்கு எதிரான சுரண்டலுக்கான எதிரான போராட்டத்தை வழிநடத்தியவர் மல்லு சுவராஜ்சியம். விவசாயிகள் தங்கள் சொந்த  10 லட்சம் ஏக்கர் நிலங்களை பாதுகாக்க 3000 கிராமங்களில் உள்ளவர்கள்  ஒன்று திரண்டு நிலப்பரப்புத்துவ ஒடுக்கு முறைக்கு எதிராக துப்பாக்கி ஏந்தி போராடுகின்றனர். ஏழை மக்கள் சட்ட விரோதமான வரிகளை மிராசுதாரர்களுக்கு கட்ட வேண்டும் தானியங்கள் உழுபடை கருவிகளுக்கு வரி திருமணங்களுக்கு வரி தங்கள் பெண் பிள்ளைகள் பருவமடைந்ததற்கு வரி பிறப்புக்கு வரி இறப்புக்கு வரி என சட்டத்தில் வராத வினோதமான வரிகள் மிராசுதாரர்களுக்கு கட்ட வேண்டும் என்ற கொடுமையில் இருந்து பாதுகாக்கவும் தங்கள் நிலங்களைப் பாதுகாக்கவும் தொடங்கிய போராட்டமே தெலுங்கானா புரட்சி. அதில் பத்து வயதில் இருந்தே தனது குடும்ப வழக்கத்தை மீறி பல்வேறு சாதிகள் சமூகங்களை சேர்ந்த கொத்தடிமை தொழிலாளர்களுக்கு அரிசி விநியோகம் செய்வதன் மூலம் போராட்டவாதியாக அறியப்பட்டவர் மல்லு ஸ்வராஜியம். 1947 இல் அவரது தலைக்கு 40 ஆயிரம் ரூபாய் விலை பேசி அவரது இருப்பிடத்தைக் காட்டிக் கொடுப்பவர்களுக்கு விலை பேசியது நிலப் பிரபுத்துவ ரசாக்கர்கள் அமைப்பு..

ஒதுங்க இடமின்றி பள்ளியில் சேர்க்கப்படாமல் விரட்டி விடப்பட்டவர் உறங்க இடமும் உண்பதற்கு உணவும் கிடைக்காமல் பேருந்து நிலையங்களில் தூங்கி எழுந்தவர் பல தெருக்களில் பிச்சை எடுத்தவர் என தனது வாழ்வின் இருண்ட பக்கங்களில் வாழ்ந்து கொண்டிருந்தவர் தனக்குக் கிடைத்த சிறு வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இந்திய திருநாட்டின் முதல் திருநங்கை நீதிபதியாக பதவியேற்க்கிறார் என்பது அவரது விடாமுயற்சியையும் உழைப்பையும் எடுத்துக்காட்டுகிறதுதானே.  மாற்றுப் பாலின சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு இந்த வாய்ப்பு கிடைப்பது இது முதல் முறை.  இது அதிகாரம் அளித்தல் பற்றியது மட்டுமல்ல அமைப்பில் நுழைந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அதிகாரத்தைப் பெறுவது பற்றியது என்ற மேற்கோளை தனது வாழ்வில் நிலை நிறுத்திக் கொண்டவர் திருநங்கை ஜோயிதா மோண்டல்.

அதிகாரத்தைப் பெறுவது மட்டுமல்ல பெண்களுக்கான போராட்டத்தின் வடிவம். அந்த அதிகாரத்தின் மூலம் எல்லோருக்கும் வாய்ப்புகளை வழங்கும் கட்டமைப்பை உருவாக்குவதில் பெண்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்பதே ஒவ்வொரு பெண் போராளிகளின் முக்கிய நோக்கமாக இருந்து கொண்டிருக்கிறது. தங்களை தங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் கருவியாக மட்டுமே சுருக்கிக் கொள்ளாமல் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் சமூக முன்னேற்றத்திற்கு உதவுவதற்கும் பெண்கள் போராடத் துவங்குகிறார்கள். இத்தகு பெண்களுக்கு நல்லதொரு வழிகாட்டல் ஆகவும் தான் செல்லும் பாதை சிறப்பானதாகவும் நேர் வழியானதாகவும் அமைந்திட வரலாற்றின் சுவடுகள் அவர்களுக்கு உதவுகின்றன. அந்த வகையில் இந்திய சமூகத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்வதற்கு எத்தனையோ பெண்கள் உதவி இருக்கிறார்கள் என்பதை இந்த நூல் குறித்துக் காட்டுகிறது.

000

– பேராசிரியர் சோ மோகனா – வெளியீடு அறிவியல் வெளியீடு சென்னை – முதல் பதிப்பு ஜனவரி 2025

விலை ரூ 110

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி ஏழை தாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.  மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *