மெத்தைக் கட்டிலின் ஓரத்தில் படுத்திருந்த மேனகாவை எழுப்ப அவனுக்கு பயமாக இருந்தது. ஆனால் எழுப்பியே தீர வேண்டும். சின்னவன் சுகனை அவளுக்கு அண்டையில் படுக்க வைத்து அவள் தட்டிக் கொண்டிருக்கிறாள். அவன் தூங்கினாலும் கலைந்து நெளிந்தாலும் விளிம்பில் தவறிக் கீழே விழும் அபாயம் அதிகம். எழுப்பினால் இந்த இராத்திரியில் ஒரு போர்க்களம் நிச்சயம் என்பதால் என்ன செய்வதெனத் தெரியாமல் குட்டி போட்டப் பூனையாக கட்டிலையே சுற்றி சுற்றி வந்தான்.
கால்மாட்டில் போய் கொஞ்ச நேரம் நின்று அவளையே பார்த்தான். சற்று தள்ளி நடுக்கட்டிலில் தாராளமாய் படுத்துறங்கும் பெரியவள் ஷாலினியைப் பார்த்தான். மேனகா மீது ஆத்திரமாக வந்தது. அவன் மீதான கோபத்தில் வேண்டுமென்றே செய்கிற இந்த வினையை எப்படி எதிர்கொள்வதெனத் தெரியாமல் முழித்தான். மெல்ல கொலுசின் மீது கை வைத்து காலை உலுக்கினான். கண்களைத் திறக்காமலேயே கணநேரத்தில் உதைப்பது போலத் தூக்கிச் சொண்டிய கால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியது.
‘அட சனியனே முழிச்சிட்டுதான் படுத்துருக்கியா?’
வெளியறைக்குச் செல்வது போல பாசாங்கு காட்டி
“இந்த வெளையாட்டுலாம் காலையில வச்சிக்க.. புள்ளைய தூக்கி நடுவாக்குல போட்டுப் படு” என்றான் சத்தமாக.
“எல்லாம் எங்களுக்குத் தெரியும்.. நீ போய் தூங்குற வேலையப் பாரு” என அவளிடமிருந்து சன்னமாக பதில் வந்தது. அதன் பொருள் ‘தூங்கித்தான் பாரேன்’ என்பதென அவனுக்கு நன்றாகத் தெரியும்.
இயலாமையில் காலை தரையில் உதைத்துக் கொண்டான்.
“இப்ப என்ன? உன் குடும்பத்தையே கூப்பிடணும். அவ்வளவு தானே? சரி காலைல போய் நேர்லயே சொல்லிட்டு வர்றேன் போதுமா?”
“ஒண்ணும் தேவையில்ல.. உனக்குத் தேவை மடியில உக்கார வைக்க ஒரு மாமன் தான? என் தம்பிய கூட வர வேணாம்னு சொல்லிடுறேன். உன் சொந்தத்துல ஒரு மாமன ரெடி பண்ணு” அவளிடமிருந்து அலட்சியமாக பதில் வந்தது.
மனதுக்குள் நினைத்துக் கொண்டான். தனது சொந்தத்தை இழுக்கத் தொடங்கி விட்டாள்.
‘ரைட்.. சாமி இப்போதைக்கு மலை ஏறாது’
எதுவும் பேசாமல் மீண்டும் வாசலில் நின்று எட்டிப் பார்த்தான். சுகனது வலது கால் கட்டிலை விட்டு வெளியே நீண்டிருந்தது. இந்தக் கிறுக்கியை நம்பவும் முடியாது. அப்படியே தூங்கிப்போய் விடுவாள்.
தலைமாட்டிலிருந்த இரண்டுத் தலையணைகளை எடுத்து சத்தம் காட்டாமல் குனிந்து சுகனுக்கு நேராக தரையில் வைத்தான். பிள்ளை தவறினால் கீழே விழும் கோணத்தை ஆராய்ந்து தலையணையை நகர்த்தி நகர்த்தி அவன் வைத்துக் கொண்டிருப்பதை ஓரக்கண்ணால் பார்த்தாள். சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். இன்னொரு பக்கம் பாவமாகவும் இருந்தது.
ஷாலினிக்கு முடி இறக்கும்போது அவன் தாத்தா தவறிவிட்டதால் விமரிசையாக செய்ய முடியவில்லை. சுகனுக்காவது விலாவாரியாக செய்யலாமென நினைத்தால் துட்டு தேறாதென தட்டிக் கழிக்கிறானென்ற எரிச்சல் அவளுக்கு.
உள்விளக்கை அணைத்துவிட்டு வெளியே வாசலுக்கு வந்து காற்றோட்டமாக அமர்ந்தவனின் முகத்துக்கு நேராக விட்டில்கள் பறந்தன. ச்சூ போ! எனத் தட்டிவிட்டான். ஒரு சுற்று அலைந்து வந்து மீண்டும் முகத்தை மேலும் கீழுமாய் அளவெடுத்துக் கொண்டிருந்தவற்றை விரட்டத் தோன்றாமல் விளக்கொளியிலிருந்து விலகிப்போய் அமர்ந்து மாமனார் வீட்டுக்கு செல்வது பற்றி யோசிக்கத்தொடங்கினான். பதினான்காம் நெம்பர் பஸ் தூரத்தில் செல்வது வெளிச்சப்புள்ளியாகத் தெரிந்தது.
அடுத்தநாள் மாமனார் வீட்டில் அவரது இரண்டு அண்ணன்களுக்கும் சொல்லியே ஆகவேண்டுமென கறாராக சொல்லிவிட்டார்கள். இவன் பாத்ரூம் போவது போல வெளியே வந்து மேனகாவை அழைத்தான்.
‘என்னடி இது? உங்க பெரியப்பாக்களுக்கும் சொல்ல சொல்றாங்க? இதுக்குத் தான் உன் தம்பி மட்டும் போதும்னு சொன்னேன். கேட்டியா நீ?’
மறுமுனையில் அவள் குரல் அலட்சியமாக ஒலித்தது.
‘நீதான் வெறும் சக்கரைப்பொங்கல்னு சொல்லிட்டியே? அப்புறம் என்ன வலிக்குது? நான் அரைப்படி சேத்துப்போட்டு பொங்க மாட்டனா?’
அவன் ஆபத்தான காலங்களில் பயன்படுத்தும் அஸ்திரத்தை எடுத்தான்.
‘பாப்பா… அங்கலாம் சொன்னா அப்புறம் எங்க சித்தப்பா வீட்டுக்கும் சொல்லணும். இல்லனா பாரு பொண்டாட்டி வூட்டு ஆளுங்கள மட்டும் கூட்டிட்டு போய்ட்டு வந்துட்டான்னு பேர் வச்சிடுவாங்க.. ப்ளீஸ் பாப்பா’
அவள் அதற்கும் அசரவில்லை. ‘பரவால்ல சொல்லு. நான்தான பொங்கப் போறேன்? நீயா செய்யப்போற? கூட மாட எங்க அம்மா இருக்குல்ல.. வெறும் சக்கர பொங்கலுக்கு எதுக்குடா இவ்வளவு பொலம்பல்?’
கிடா வெட்டாததை தெளிவாக குத்திக் காட்டுகிறாள். தாளமுடியாத எரிச்சலை அடக்கியபடிப் பேசினான்.
‘இப்ப என்ன சொல்ல வர்ற? நீ சொல்ற ஆளுங்கள எல்லாரையும் அழைச்சிடுறேன். ஆனா நானு எக்கேடு கெட்டா உனக்கு என்ன வலிக்குது? கடன் நான் தான கட்டணும்?’
‘என்ன கடன் பண்றாங்க உனக்கு? இதுக்கே இப்படி.. இன்னும் கெடா வெட்டி விருந்து வச்சா வயிறு பொங்கிடும் போல..’
மீண்டும் அதையே… எதுவும் பேசாமல் போனை அணைத்தான்.
மனதுக்குள் எதையோ முணுமுணுத்துக் கூட்டினான்.
‘ரெண்டு ,மூணு ஒரு ஏழு மொத்தமா இருவது டிக்கெட் வரும். அதுக்கு தனியா ஒரு டிராவல்ஸ் பேசணும். சாமி சோறுன்னாலும் அதுக்குன்னு வெறும் சக்கர பொங்கலையேவா போட்டு கூட்டி வர்றது? முடியெறக்க ஆளு வர்றதுக்குள்ள பசிக்கிதுனு கதறுங்க.. ஒரு நாலு கிலோ ரவையாச்சும் கிண்டிப் போடணும். அதுக்கூட பெரிய செலவு இல்ல. ரிட்டர்ன் வர்றப்ப கண்டிப்பா ஒரு ஓட்டல்ல இறக்கித்தான் ஆவணும். சைவம்னு வச்சாக்கூட எம்பது ஒரு இருவது எட்டு ரெண்டு பதினாறு.. அங்க ஒரு ஆயிரத்தி அறுனூறு. வண்டிக்காசு ஒரு எட்டு பூஜ சாமான் ரெண்டாயிரம் எப்படிப் பார்த்தாலும் பன்னெண்டு பதிமூணு ஆயிடும் போலருக்கே’
சேகர் போன வாரமே வந்து சலித்துக்கொண்டது ஞாபகம் வந்தது. போர் போட்டபோது வாங்கிய தொகையில் இன்னும் இருபதாயிரம் பாக்கி நிற்கிறது. வடுகத்தம்பட்டி கனகு மாமாவுக்கு வேறு மாடு பிடித்தக் காசு இன்னும் தராமல் இருக்கிறான். எதையும் புரிந்து கொள்ளாமல் மேனகா செலவு இழுத்து விடுவதாகத் தோன்றியது.
தட்டைக் கழுவி ஊற்ற வெளியே வந்த அத்தையிடம் மற்ற வீடுகளில் சொல்லிவிட்டு வருவதாகக் கூறிவிட்டுக் கிளம்பினான்.
மறுநாள் காலை சித்தப்பா வீட்டுக்கு சொல்லப் போனபோது சித்தப்பா அவருடைய பங்கு நியாயத்தைச் சொன்னார்.
‘மொட்ட அடிக்கிற சரி.. உன் குடும்பத்தோட முடிஞ்சா பரவாயில்ல. பெரிய மாமனாருங்க வராங்க.. நான் வரேன்.. உன் மாமன் வேற வரான்னு சொல்ற.. இத்தன குடும்பத்த கூட்டிட்டு போயி வெறும் சக்கரப் பொங்கல போட்டு அனுப்புறது என்னா கதை?’
இவன் திக்கென நிமிர்ந்தான்.
‘அதுக்கு?’
‘அதுக்கு என்னானா என்ன சொல்றது? மேனகாவ பொண்ணு கேட்டுப் போனப்பவே கஞ்சப்பயகுடும்பம்னு உன் பெரிய மாமனாரு கேவலமா பேசுனாப்ல.. பாப்பாவுக்கு மொட்ட அடிச்சப்பவும் ஒண்ணும் செய்யல’
‘அது தாத்தா செத்ததால ஒண்ணும் செய்யாம வுட்டாச்சு’ என்றான் அவசரமாக.
‘ஆமாமா.. அதனால தான் சொல்றேன். இப்பவும் செய்யாம வுட்டா நல்லாருக்காதுல்ல. கோழியாவது புடிச்சிக்கலாம். ஒரு ரெண்டரை கிலோவுல நாலு நாட்டுச் சேவல் புடிச்சா போதும். நெறமா செஞ்சிப் போட்டுடலாம்’
‘அடச்சை..’ மனதுக்குள் சிரித்துக் கொண்டான். எருக்குழியை கிளறி நாசம் செய்கிறதென பக்கத்து காட்டுக்காரன் போட்ட சண்டையில் புரட்டாசி முடிந்த மறுநாளே இருபது உருப்படிகளை குஞ்சும் கோழியும் சேவல்களுமாக கொண்டு போய் டவுன் கடையில் விற்றுவிட்டு வந்திருந்தான்.
சித்தப்பா தன்மானத்தை வேறு தொட்டுக் காட்டிவிட்டார். இதற்கு மேல் மறுப்பு சொல்ல முடியாது. அவன் கடைக்குச் சென்றபோது மாலைக் கருக்கல் ஏறியிருந்தது. உள் நுழையும் முன்பே நிதானமாக கூண்டில் பார்வையை ஓட்டினான். பதினைந்துக்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகள் கீழடுக்கிலும் ஐந்தாறு சேவல்கள் மேலடுக்கிலும் நின்றிருந்தன. அவற்றில் மூன்று சேவல்கள் தன்னுடையதைப் போலத் தோன்றியது. அவற்றையே பிடித்துக் கொள்ளலாமென விலை கேட்டான்.
‘உயிர் எடை கிலோ நானூறு வரும்ண்ணா..’
‘என்ன லோகு.. முந்நூத்தம்பதுக்கு தானே என்கிட்ட வாங்குன? அதுக்குள்ள விலை ஏறிடுச்சா? குறைச்சு சொல்லு’
‘கட்டுப்படியாவாதுண்ணா.. நோம்பி நேரம்.. இந்த வெலைக்கே கிடைக்கலண்ணு ஆளா பறக்குறாங்க’
‘கொடுமையா இருக்குது லோகு..’ தன் சேவல்கள் தன்னிடமே விலையேறி வருவதை நினைத்து சிரிப்பதா அழுவதா என யோசித்தான். காதுகுத்து முடித்து மொத்தமாக பார்த்துக் கொள்ளலாமென முடிவெடுத்துக் கொண்டு கோழிகளை வண்டியில் கட்டினான். மொத்தம் ஐந்து சேவல்கள். குடல், முடி நீங்கலாக பதிமூன்று கிலோ தேறுமென கணக்கு போட்டான். இது ஒன்றும் பெரிய விஷயமாகப் படவில்லை. இவனுக்கே கொஞ்சம் பக்குவம் தெரியும். மேனகாவின் தாய்மாமா மனைவி நன்றாக சமைப்பாள். வேறு வழியில்லை. அவர்களிடமும் ஒரு வார்த்தை சொல்லிவிட வேண்டியது. வண்டியை கிழக்காக தலைச்சங்காடு பக்கம் திருப்பினான்.
வண்டியை வாசலில் நிறுத்தியதும் மேனகாவின் தாய்மாமா ஓடிவந்து வரவேற்றார். களத்தில் கட்டிலைப் போட்டு அமர்ந்தார்கள். உள்ளறையில் சின்னத்திரையில் மிளிர்ந்த இனிமே தான் ஆரம்பம் சீரியல் வெளியிலிருந்தே தெளிவாகத் தெரிந்தது.
‘அதெல்லாம் பிரச்சினையில்ல. ஒரு இருவது இருவத்தஞ்சு டிக்கெட்டுனா நாமளே சமாளிச்சிடலாம். நான் வந்துடுறேன்..’ என டீயை ஆற்றியபடியே மேனகாவின் அத்தை சொன்னதும் இவனுக்கு நிம்மதியாக இருந்தது. டீயை ஊதிக் குடித்து எழும்பவும் மேனகாவின் சின்ன தாத்தா மகன் வண்டியை வந்து நிறுத்தவும் சரியாக இருந்தது. இவன் அந்த அந்தியிலும் வியர்த்துப்போய் நின்றான். அவர்கள் குடும்பத்தில் மூன்று பேர் அண்ணன்தம்பிகள்.
‘யாரு மருமகப்பிள்ளையா? வாங்க வாங்க.. காதுகுத்தாமே.. கேள்விப்பட்டேன். என்னைக்கு?’
‘நாளாறன்னிக்கு மாமா.. நாளைக்குத்தான் வந்து சொல்லலாம்னு இருந்தேன்’ என வழிந்தான்.
‘அதுக்கென்ன மாப்ள.. அதான் குத்துக்கல்லாட்டம் இங்கேயே நிக்கிறனே.. இங்க சொன்னா போதும்’ என அவர் மீசையை நீவியபடி சிரித்தார்.
‘இல்ல மாமா.. மத்த ரெண்டு மாமாவுக்கும் சொல்லணும்ல.. ‘ என இழுத்தான்.
‘அட.. என்கிட்ட சொன்னா என்ன? எந்தம்பிகளுக்கு சொன்னா என்ன? நீங்க தனியாளா சின்னப்படுறது தெரியாதா எங்களுக்கு? இன்னும் ஒரு நாள் தான் இருக்கு. நீங்க மத்த வேலைய பாருங்க.. நாங்க கண்டிப்பா வந்துடுவோம்.. எனக்கும் டீ போடு கண்ணு’ என்றபடியே சேரில் அமர்ந்து கால்களை நீட்டி முறுக்கி கொட்டாவி விட்டவரை வெறித்துப் பார்த்தான். வரும் வழியில் எத்தனை பேரென எண்ணிக் கொண்டே வந்தான். இப்போது எண்ணிக்கை நாற்பதைத் தாண்டியிருந்தது.
நல்ல இருளில் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது வாசல் விளக்கு வெளிச்சத்தில் மாட்டுக் கொட்டகை பைப்பில் யாரோ கிடாவை கட்டியிருந்தார்கள். அது புது இடத்தில் நிற்காமல் கத்திக் கொண்டே வட்டமாக மண் பறித்துக் கொண்டிருந்தது.
வண்டிச் சத்தம் கேட்டு வெளியே வந்த மேனகா அவனைக் கூர்ந்து பார்த்து சிரித்துக்கொண்டு களத்திலேயே நின்றாள். அந்த சிரிப்பில் விஷமத்தனம் இருப்பதாகப்பட்டது. கோழிகளை கீழே இறக்கி வைத்தபடி ‘யாருது ஆடு? அவுந்துக்கிட்டு வந்துடுச்சா?’ எனக் கேட்டவனை சிரிப்பை நிறுத்திவிட்டு பரிதாபமாகப் பார்த்தாள் அல்லது பரிதாபமாக பார்ப்பது போல நடித்தாளென்றும் சொல்லலாம். முகத்தை இயல்பாக வைக்க முயற்சித்து சிரிப்பை அடக்கிக் கொண்டிருப்பதை கவனிக்கையில் அவனுக்கு அப்படித்தான் தோன்றியது.
‘உன்னத்தான் கேட்குறேன்.. கெடா யாருது?’
‘நம்மளது தான்.. ‘ மீண்டும் சிரிப்பை அடக்கிக் கொண்டே.
‘மேனகா.. ஏற்கனவே செம்ம டென்ஷன்ல வந்துருக்கேன். வேணாம் ப்ளீஸ்’
‘தெரியும்.. இப்பதான் மாமா போன் பண்ணார். சின்ன தாத்தா வீட்ல வந்துருந்தாங்களாமே..’
அவள் சிரிப்புக்கான காரணம் புரிந்தது.
‘அத விடு. கெடா யாருது?’
‘நம்மளது தான்..’
அவன் நேராக தொட்டிக்குப் போய் வாளித் தண்ணீரை எடுத்து தலைக்கு ஊற்றிக்கொண்டான். சத்தம் கேட்டு அவன் அம்மாவும் வெளியே வந்தாள்.
‘இப்ப சொல்லப் போறியா இல்லையா?’
‘நான் என்னப்பா பண்ணேன். உங்க மாமா சொன்னாருனு வெடிமூக்கன் தான் வந்து கட்டிட்டுப் போனாரு’
அவனுக்கு இன்னும் கோபம் அதிகமானது. ‘அவன் எதுக்கு இத வந்து கட்டிட்டுப் போனான்?’ அவளை வேகமாக நெருங்கியவனை குறுக்கே புகுந்து அம்மா தடுத்தாள்.
‘அவக்கிட்ட எதுக்குடா எகிறுற? உன் மாமனுக்கு போன் பண்ணிக் கேளு’
மாமா போனை எடுத்ததும் அடக்கிக் கொண்டு கேட்டான்.
‘மாமா.. அவன் கெடா எதுக்கு இங்க நிக்கிது?’
‘அட நீ சொன்னனு தானப்பா அவன் சொன்னான்..’
‘என்னனு?’
‘காதுகுத்துக்கு கெடா வேணும்னு தம்பி சொன்னாப்ல.. நம்மகிட்ட பதமா இருக்கு.. என்ன பண்றதுன்னு கேட்டான். சரி போய் வீட்ல கட்டிட்டு போன்னு சொன்னேன்’
‘நான் எங்க மாமா கெடா கேட்டேன்? கோழி மட்டுந்தான் சொல்லிட்டு இருக்கேன்..’
‘அப்படியா? ஊருல நீ கோழினு யாருகிட்டயாவது சொல்லியிருப்ப.. அவங்க கெடாவும்னு நினைச்சிருப்பாங்க. அதனால என்னடா இப்ப? செய்யறதே செய்யுற? கிடா வெட்டாம என்ன காதுகுத்து?’
‘காசு இருந்தா செய்ய மாட்டனா மாமா? ஏற்கனவே ரொம்ப டைட்ல போகுது? ஒண்ணுமே புரியல’
‘அடப்போடா.. எவன் இப்ப கடன் வாங்காம விசேசம் பண்றான்? அப்புறம் உன் மாமனார் வீட்ல வெறும் கோழிக்கறிய மட்டும் போட்டு வரும்படி வாங்கிக்கிட்டான்னு சொல்ல மாட்டாங்களா? அதெல்லாம் சீர் வரும்ல? அதுல சமாளிச்சிக்கலாம்’
‘என்னவோ போங்க.. என்னை கேட்காமலேயே எல்லாம் நடக்குது. இப்ப வெடிமூக்கனுக்கு எப்படி காசு தர்றது?’
‘அட அவன் ஒரு ஆளு.. அதெல்லாம் சொல்லியாச்சு. உடனேலாம் காசு தர வேண்டியது இல்லடா.. குவாட்டருக்கு மட்டும் கொஞ்சம் கவனிச்சு விட்டுடு.. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா குடுத்துக்கலாம்’
அவன் எதற்கும் சமாதானமடையாமல் முனகியபடியே போனை அணைத்தான். ஓடிப்போய் மீண்டும் தண்ணீரை மொண்டு ஊற்றிக்கொண்டவன் தொட்டியின் மீதே அமர்ந்து கொண்டான்.
வெடிமூக்கனைப் பற்றி ஊருக்கே நன்றாகத் தெரியும். தண்ணி போடும் வரை குழைந்துப் பேசுவான். போதையேறியதும் நடு இரவில் வந்து நின்று கொண்டு சத்தம் போட்டு ஊரைக் கூட்டுவான்.
‘ஒரு குவாட்டர வாங்கி ஊத்திவுட்டு என் கிடாய லவட்டிக்கிட்ட பாத்தியா?’ என வில்லத்தனமாகச் சிரித்து மானத்தை வாங்கி விடுவான். இது போன்ற காட்சிகள் ஏற்கனவே ஊரில் நடந்திருக்கின்றன. வீட்டிலிருக்கும் அண்டா, மானிய விலையில் வாங்கிய சொட்டு நீர் பைப்புகள், ஊன்றுவதற்காக வைத்திருந்த ஒட்டுரகத் தென்னங்கன்று என பொருட்கள் வேறு வேறாக இருந்தாலும் சத்தம் அதுவாகத் தான் இருக்கும்.
திரும்பி கிடாவைப் பார்த்தான். எப்படியும் பன்னிரண்டு கிலோ தேறும். பதமான இளங்குட்டி. அடுத்த ஒரு நாளுக்குள் தேடியலைய முடியாது. எதுவும் பேசாமல் எழுந்து வீட்டுக்குள் போனான். சாப்பிட்டுவிட்டுப் படுக்கையில் மேனகா சமாதானம் செய்வதுபோல பக்கத்திலேயே நின்றிருந்தாள்.
‘ஒண்ணும் வேணாம். எல்லாம் சமாதானம் ஆகிட்டேன்..’ என நிமிர்ந்துப் பார்த்து சிரித்தவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
‘என்ன சங்கதி? நம்பவே முடியல..’
‘பின்ன? சாமி காரியம்ல.. சலிச்சிக்கிட்டா செய்ய முடியும்? ‘
என்றவனின் தலையை பரிவாகக் கோதிவிட்டவளை ஏக்கமாகப் பார்த்தான்.
‘ஆனா இதோட போதும்ப்பா.. இதுக்கு மேல பாடி தாங்காது’
மேனகா கலகலவென சிரித்தாள். இவன் அதை பயன்படுத்திக் கொண்டான்.
‘எப்படியும் கிடா விருந்துனு ஆகிடுச்சு. பங்காளிங்க ஊர்ல முக்கியமான ஆளுங்ககிட்ட போய் சொல்லிட்டு வந்துடுறேன்’
‘ஆமா.. நானே சொல்லணும்னு நினைச்சேன். காலைல மொத வேலையா அதப் பாருங்க.. ‘ என்றபடி சுகனிடம் நகர்ந்தவளை நிறுத்தினான்.
‘அப்படியே…’
அவள் என்னவென்பது போலப் பார்த்தாள்.
‘இல்ல.. எல்லாருக்கும் சொல்றதுனு முடிவாகிடுச்சு. அப்படியே மதிவதனிகிட்டயும் சொல்லட்டுமா?’
‘அதான பாத்தேன்..’ இதற்காகத் தானா உன் கோபம் காணாமல் போனதென்பது போலப் பார்த்தாள்.
மதிவதனியை அவன் ஒரு காலத்தில் காதலித்தான். தூரத்து உறவு முறை. மதிவதனியின் குடும்பம் வசதியாக இருந்ததில் இவனுக்கு பெண் தர மறுத்தது. இருவரும் ஊரை விட்டுப் போய் திருமணம் செய்து கொள்ளுமளவுக்குச் சென்று அடிதடியாகி கண்ணீரோடு பிரிந்ததெல்லாம் தனிக்கதை. அதன்பிறகு மதிவதனி ஓமலூருக்கு மேற்கே ஒரு வி.ஏ.ஓ.வை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டாள். திருமணமானப் புதிதில் அனைத்தையும் மேனகாவிடம் சொல்லி அழுதிருக்கிறான். அவன் நேர்மையை மேனகா நிரம்ப நேசித்தாள்.
இளையராஜாவின் ‘மாலை கருக்கலில் சோலைக் கருங்குயில்..’ பாடலை அவன் கேட்கும்போதெல்லாம் ‘ஓ… மதிவதனி ஞாபகமோ…’ என கூடவே கேலியாகப் பாடுவாள். மதிவதனியும் ஊருக்கு வரும்போதெல்லாம் அவன் வீட்டுக்கு வந்து பேசிவிட்டுப் போவாள். என்ன பேசினாலும் இனிமேல் ஒன்றும் நடக்காதென்ற ஏக்கப் பார்வைகள் இருவரிடமுமே எழுவதை அவள் சென்றபிறகு மேனகா கிண்டல் செய்வாள். அவனை ஒன்றும் தெரியாதது போல பம்மவிட்டு இரசிப்பது அவளுக்குப் பிடித்திருந்தது.
‘ப்ளீஸ்ப்பா.. கூப்பிடுறேனே..’
ஏற்கனவே நொந்திருப்பவனை கெஞ்சவைக்க வேண்டாமென முதலிலேயே சம்மதம் தெரிவித்ததில் அவன் வெட்கம் கொண்டான்.
‘ஐயே.. வலியுது பாரு..’ என சிரித்தபடியே சுகனிடம் சென்று படுத்தாள்.
அவர்கள் அதிகாலையிலேயே கோயிலை அடைந்திருந்தார்கள். அவனது குலதெய்வம் திட்டக்குடிக்கு கிழக்கே அமைந்திருந்தது. எப்படியும் போய் வருவதற்குள் பொழுதாகிவிடுமென்பதால் இந்த அதிகாலை புறப்பாடு. சமையலுக்கு ஐந்தாயிரம் ரூபாயில் ஆள் பேசியிருந்தான். மாமாவிடம் வண்டி வாடகை இதர செலவுகளுக்கென கையிருப்பு போக இருபதாயிரம் கடன் வாங்கியாயிற்று. ஒரு மினி ஆட்டோ தனியாக தயார் செய்து கிடாவோடு சமையல் பாத்திரங்களை அதில் இட்டு நிரப்பியிருந்தார்கள். ஒரு டிராவல்ஸ் வாகனம் இரண்டாகியிருந்தது. அது மட்டுமின்றி பெரிய மாமனார் வகையறாக்கள் தனி வண்டி ஏற்பாடு செய்து வருவதாகச் சொன்னார்கள். அதற்கு தன்னிடம் காசு கேட்க மாட்டார்கள் என மேனகா உறுதியளித்தது அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
ஆனால் பிரச்சினை வேறு மாதிரியாக உருவெடுத்திருந்தது. பெரிய மாமனாரின் மகன்கள் வெடிமூக்கனோடு கூட்டு சேர்ந்திருந்தார்கள். ‘மாப்ள வீட்டு காதுகுத்துல கச்சேரி இல்லனா எப்படி? அதான் மாப்ளைக்கு சிரமம் வேணாம்னு நாங்களே செலவு பாத்துக்கிட்டோம். கடைசில கணக்கு சொல்றோம்’ என்பதை அவர்கள் ரொம்பவும் சீரியசான தொனியில் சொன்னார்கள். குவாட்டர் பாட்டில்கள் நிரம்பிய இரண்டு அட்டைப் பெட்டிகள் இறக்கப்பட்டு அருகிலிருந்த முள்காட்டுக்கு எடுத்துச் செல்லப்படுவதைப் பார்த்ததிலிருந்து அவனுக்கு மயக்கம் வருவது போலிருந்தது. அடிக்கடி கருப்பனாரை திரும்பிப் பார்த்து ‘அமைதி அமைதி’ என சொல்லிக் கொண்டான்.
பொங்கலிட்டு முடித்து கிடாய்க்கு மாலையிட்டு சாமி முன் நிறுத்தினார்கள். தீர்த்தம் விழுந்ததுமே துளிர்த்தல் நலம். ஆனால் உடனடியாக வாக்கு கிடைக்காதது கண்டு அனைவரும் பதட்டமடைந்தனர். மேனகா கீழே விழுந்து உருண்டு வேண்டினாள்.
‘சோதிக்காத சாமி.. எப்படியாவது என்னை காப்பாத்தி விடுப்பா..’ கொஞ்சம் விட்டால் அழுது விடுபவன் போல இவனும் மனமுறுகினான்.
கைமாற்றி தீர்த்தம் தெளித்தார்கள். மூன்றாவது முறையாக தெளிக்கச் சொன்னபோது பூசாரி மறுத்தார். ‘என்னமோ குறையிருக்கு.. பாத்து சரி பண்ணுங்க’ என்றார். அதற்குள் தகவல் பரவி கச்சேரியில் மையமிட்டிருந்தவர்கள் உட்பட கூட்டம் கூடிவிட்டது. ஆளாளுக்கு ஒரு யோசனை சொன்னார்கள். அவனது அம்மாவை வந்து வேண்டச் சொன்னார்கள். அவள் தெற்கு பார்த்து தூணில் பிடிவாதமாக அமர்ந்திருப்பதைக் கண்டு மாமா ஓடிப்போய் அழைத்தார்.
அவள் ஒரே திசையைப் பார்த்தபடி ‘அது எப்படிடா துளுக்கும்? நான் தான் ரெட்டக் கிடா வெட்டுறதா வேண்டியிருந்தேனே..’ என்றதும் கூட்டத்தில் சலசலப்பு பரவியது.
‘அடக் கொடுமையே.. இதென்னடா கூத்து?’ என்று யாரோ கூவினார்கள்.
இவன் முறைப்பதைப் பார்த்ததும் எழுந்து நின்று ‘இவன் தான் சக்கர பொங்கலோட போகட்டும் னு முனகிகிட்டே இருந்தான். அப்புறம் பொங்கல் கோழியாச்சு கோழி கிடாயாச்சு.. ரெட்டக் கிடானு சொல்லியிருந்தேன்னா என்னை ஒரு வழி பண்ணியிருக்க மாட்டான்? எப்படி முறைக்கிறான் பாரு..’ என கொண்டையை அவிழ்த்து முடிந்தாள்.
பூசாரி ஓடிவந்து ‘ஒண்ணும் தப்பில்ல.. நமக்கு தெரிஞ்ச இடத்துல பேசிட்டேன்.. இப்பவே போனீங்கன்னா இன்னொரு கிடா புடிச்சிட்டு வந்துடலாம்’ என்றார்.
அவன் கிடாவைத் திரும்பி பரிதாபமாகப் பார்த்தான். அது ஈரம் பரவிய சுகத்தில் நின்றபடியே கண்களை சொக்கியிருந்தது.
வெடிமூக்கனை அழைத்து தான் விசேஷங்களுக்கு மட்டும் அரிதாகப் போட்டுக்கொள்ளும் அரை பவுன் மோதிரத்தை கழட்டிக் கொடுத்தான்.
‘வடக்க போய் பாலம் ஏறி இறங்குனா டவுனு.. ஏதாவது ஒரு அடகுக்கடைய புடி. அப்புறம் வெரசா பூசாரி சொன்ன எடத்துக்கு போய்ட்டு வந்துடு’ எனக் கூறி உடன் ஒரு பங்காளியை வண்டியில் ஏற்றி அனுப்பினான். திரும்பி வந்து பெண்களோடு உற்சாகமாக நியாயம் பேசிக்கொண்டிருந்த அம்மாவைப் பார்த்தான்.
‘ரெண்டு கெடாவையும் ஜோடியா நிறுத்தி தீர்த்தம் போட்டும் துளுக்காம இருக்கட்டும்… அப்புறம் இருக்கு உனக்கு..’ என மனதுக்குள் பொருமிக் கொண்டான்.
சரியாக ஒரு மணிநேரம் கழித்து வெடி மூக்கனும் பங்காளியும் கிடாயோடு வந்து சேர்ந்தார்கள். அதற்கும் குளிப்பாட்டி திருநீறு வைத்து இரண்டையும் ஜோடியாக நிறுத்தினார்கள். பூசாரி ஆகாயத்தை நோக்கி நெடுநேரம் வேண்டிவிட்டு,
‘சோதிக்காம வாக்கு குடுடா கருப்பா..’ என்றபடி தீர்த்தம் தெளித்த மறுநொடியில் இரண்டும் சொல்லி வைத்தாற்போல் தலையாட்டின.
பூசாரி வீச்சரிவாளை ஓங்கியிறக்க அவன் அம்மா அருள் வந்து ஆடத் தொடங்கியிருந்தாள். இவன் மேனகாவைத் தேடினான். அவள் உதடுகளை மடக்கி மீண்டும் சிரிப்பை அடக்கியவாறு தூணோரம் ஒளிந்தபடி நின்றிருந்தாள். இவன் கவனத்தை சாமி பக்கம் திருப்பி மீண்டும் அமைதி அமைதியென சொல்லிக் கொண்டான். மீண்டும் மேனகாவை பார்க்கையில் அவள் மதிவதனியை வரவேற்றுக் கொண்டிருந்தாள். இவன் தலையை சரிசெய்தபடியே அனைத்தையும் மறந்து அவளருகில் ஓடினான்.
காதுகுத்து முடிந்து சீர் நடக்கையில் மாமனார் போட்ட ஒன்றரை பவுன் சங்கிலியை கவனித்தான். தோடு ஒரு இரண்டு கிராம். அடகுக்கு வைத்தால் இந்தக் கடனை அடைத்துவிடலாம். மொய்ப்பணமாக எப்படியும் பத்தாயிரம் தேறுமென்ற நம்பிக்கையோடு சபையில் அமர்ந்திருந்தவனை மாமா வலுக்கட்டாயமாக எழுப்பி தனியாக அழைத்துப் போனார்.
‘என்ன மாமா?’
‘கூட்டத்த பாத்தியா? ‘
அவன் அப்போது தான் கவனித்தான். நினைத்ததை விட கூட்டம் ஜோராக வந்திருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் இரண்டிலிருந்து பிள்ளைகளோடு மூன்று நான்கு பேர் கூட வந்திருந்தனர்.
‘என்ன மாமா இது? நூத்தியம்பது இலைக்குத் தான் சொல்லியிருந்தேன். முந்நூறுக்கும் மேல வரும் போலருக்கே..’
‘உள்ளூர்ல மேற்க ஒரு கிடாவிருந்து திடீர்னு கேன்சலாகிடுச்சுடா. அது நடந்துருந்தா இங்க குறைஞ்சிருக்கும்’
உள்ளூர்வாசிகளைத் தாண்டியும் முகம் தெரியாத வெளியூர்காரர்கள் நிறைய பேர் நின்றிருந்தனர். உற்று கவனித்தபோது நிறைய கரைவேட்டிகள் தென்பட்டன. பெரிய மாமனார் கட்சிக்காரர். சரக்கு கச்சேரி என்றவுடன் நிறைய கட்சியாட்களையும் அழைத்து வந்துவிட்டதை புரிந்து கொண்டான். அவனுக்கு ஏற்கனவே மேனகாவின் மீதிருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டிருந்தது.
‘இப்ப என்ன மாமா பண்றது?’
‘ஆளுக்கு நாலு துண்டு கூட வைக்கலன்னா மானக்கேடா போய்டும்டா’ மாமா கவலைப்பட்டார்.
‘அதுக்கு என்ன செய்றது? என்ன முடியுமோ அததான் செய்ய முடியும்..’
‘அதெல்லாம் சிறப்பா செஞ்சிடலாம். ஒண்ணும் கவலப்படாத..’ என்ற சித்தப்பா மகன் முத்துவின் குரல் கேட்டு பின்னால் திரும்பினான்.
‘எப்படி முத்து சரியாவும்?’
‘நம்ம மலையன் மவன் இப்பதான் ஊருல இருந்து கிளம்பியிருக்கான். என் கிடாய தூக்கி கார்ல போட்டுகிட்டு வரச் சொல்லியிருக்கேன்.. இந்த ரெண்டு கிடாயயும் துண்டு போடுறதுக்குள்ள அவன் வந்துடுவான். உடனே இதையும் உறிச்சு ரெடி பண்ணிடலாம். விடு’
அவன் எரிச்சலாக முத்துவைப் பார்த்தான். ‘எதுக்கு முத்து தேவையில்லாத வேல.. இருக்கிற செலவ எப்படி சமாளிக்கிறதுனே தெரியல.. என்கிட்ட சுத்தமா காசு இல்ல.. ‘ எனக் கத்தியவனை யாரோ ஓடிவந்து சமாதானம் செய்தார்கள்.
‘அட நீ ஒருத்தன்.. நான் காசா கேட்குறேன் உனக்கு. நான் உனக்கு தரவேண்டியது இருக்குல்ல. அந்த கணக்கு வழக்குல வச்சிக்கப்பா.. விசேசத்துல எது சரியில்லனாலும் சோறு தான் முக்கியம். அதுவும் கறி விருந்துனா சொல்லவே தேவையில்ல. நம்ம மாணிக்கம் மவன் வரதனுக்கு என்ன பேரு? துண்டுக்கறி வரதன்.. கிணறு வெட்டி தண்ணி வந்ததுக்கு கறிவிருந்து ஆக்கிப் போடுறேன்னு ஊரையே கூட்டிப்புட்டான். புடிச்சது ஒத்தக் கிடா. இலைக்கு ரெண்டு துண்டு கூட வைக்க முடியாம தடுமாறி தத்தளிச்சி பந்தியிலயே எனக்கு உனக்குனு பெரிய கைகலப்பாகிடுல..? அன்னைக்கு அமைஞ்ச பேரு துண்டுக்கறி வரதன்னு. அவன் பேரன் தலையெடுத்து வந்தும் இன்னும் அந்தப் பேரு போகல.. நீ பேசாம இரு. எல்லாம் நாங்க பாத்துக்கறோம்.’ என அலட்டிக் கொள்ளாமல் அவன் சொல்லிவிட்டுச் சென்றபிறகு இவனுக்கு எல்லாம் புரிந்தது.
இவனது பம்புசெட் மோட்டாரை மூன்று வருடங்களுக்கு முன்பு எடுத்துப் போனவன் அவன் கிணற்றிலேயே வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறான். இவன் இப்போது மேல் மோட்டாரை விற்றுவிட்டு தண்ணி மோட்டார் போட்டுக் கொள்ளும் முடிவிலிருக்க அவனிடமிருக்கும் தனது பழைய மோட்டாரையும் கொடுத்துவிட்டு மாற்றினால் தொகை கணிசமாகக் குறையுமென்ற நினைப்பிலிருந்தான். இப்போது முத்து தனது கிடாயை வைத்து அந்த நினைப்பைத் தான் முட்டித்தள்ளிவிட்டுப் போகிறான்.
மூன்றாவது கிடாயும் வந்திறங்கிய போது இங்கு கறி பாதி வெந்திருந்தது. கோழிக்கறியும் இன்னொரு பாத்திரத்தில் வறுவலாகத் தயார் நிலையிலிருந்தது. மூன்றாவது கிடாயை அரக்கப் பரக்கத் துண்டாக்கி தனிப்பாத்திரத்திலிட்டு வேக வைத்தார்கள். சீக்கிரம் வேக செவன் அப் ஊற்றி கொட்டாங்குச்சிகளை போட்டார்கள். அனைத்தையும் கலந்து சாமிக்கு படையலிட்டபோது மணி நான்காகி இருந்தது. பந்தி விரித்து முதல் இலைக்கு சுகனின் கையால் பரிமாறினாள் மேனகா.
விருந்து முடித்து ஒவ்வொருவராக விடைபெற்றுப் போக பாத்திரங்களைக் கழுவி ஆட்டோவில் ஏற்றினார்கள். எல்லோரும் வண்டியில் ஏறியப்பின் அவன் கருப்பனாரிடம் சென்று கைகளைக் கூப்பினான். குலுங்கியழுதப்படி பேசத் தொடங்கினான்.
‘என்னமோ என் சூழ்நிலை சாமி.. எங்கப்பனும் ஊர் பூரா கடன் வாங்கித்தான் செத்தான். தனியா போராடி வந்தேன். எம்மவனுக்கும் அந்த நெலம வந்துடக்கூடாதுன்னு தான் கொஞ்சம் மனசு கூசிப் போச்சு. கொஞ்சம் யோசிச்சு யோசிச்சு செஞ்சிட்டேன். எதுவும் நினைச்சிக்காத சாமி.. நீ நினைக்க மாட்ட.. உனக்குத்தான் என் பொழப்பு என்னானு தெரியுமே..’ என்றபடி விழுந்து கும்பிட்டான்.
வண்டியிலேறி கோயிலைக் திரும்பிப் பார்த்தான். சாமியிடம் அழுதுவிட்டப் பிறகு அனைத்தும் கரைந்திருந்தது.
வீடு திரும்பியதும் மேனகாவிடம் கிண்டலாகக் கேட்டான்.
‘எப்படியோ சக்கரப் பொங்கல கறி விருந்தா மாத்திட்ட.. அதுவும் மூணு கிடா. இப்ப சந்தோசமா?’
அவள் எதுவும் பேசாமல் டீ கொதிப்பதை கவனித்துக் கொண்டிருந்தாள்.
‘அம்முக்கல்லி வாயத் திறக்குறாளா பாரு? மாமியாரும் மருமவளும் சேர்ந்துக்கிட்டு நல்லா தலைல மொளகா அரைச்சிட்டீங்க இல்ல..?’
அவள் நிமிர்ந்து பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டாள். முறைத்தது போலிருந்தது. ‘இப்போது நம் கைதானே ஓங்கியிருக்கிறது.. முறைக்க வாய்ப்பில்லையே’ என அவன் யோசித்துக் கொண்டிருந்தபோது அவள் டீயை டம்ளர்களில் ஊற்றிக்கொண்டே கேட்டாள்.
‘அதெல்லாம் இருக்கட்டும்.. நான் கவனிக்கலன்னு நினைச்சியா? அதென்ன மதிவதனி இலைக்கு மட்டும் ரெண்டு மூணு தடவ கறி போகுது.. தலைக்கறி வேற தனியா போகுது.. என்ன விஷயம்?’
பதில் வராததால் டீயை வைத்துவிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
ஆளைக் காணவில்லை.
000

ந.சிவநேசன்.
சேலம் மாவட்டம் ஆரியபாளையம் சிற்றூர். ஆசிரியர் பணி. கவிஞர் மற்ரும் சிறுகதை ஆசிரியர். கானங்களின் மென்சிறை, ஃ வரைகிறது தேனீ, இதயங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை, மீன்காட்டி விரல் ஆகியவை இவரது நூல்கள். தொடர்ந்து இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்.