கோடை விடுமுறை! ஒரு மாதம் பள்ளி விடுமுறை. நண்பர்கள் சேது, கோபி மற்றும் சேகர் மூவருக்கும் பொழுது போவதே மிகக் கடினமாக இருந்தது.

அவர்களுடைய பாரதி தெருவில் காலை ஏழு மணி முதல் எட்டு மணி வரை கண்ணாம்பூச்சி அல்லது ஓடிப் பிடித்து விளையாடுவார்கள்.

மட்டையை எடுத்துக் கொண்டு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று தான் அவர்களுக்கு ஆசை. ஆனால், ”தெருவில விளையாடதீங்க பசங்களா” என யாராவது கத்துவார்கள்.

உடனே சேதுவின் அம்மாவோ அல்லது சேகரின் அப்பாவோ வெளியே வந்து அவர்களை வீட்டுக்குள் அழைத்துச் சென்று விடுவார்கள்.

“நேத்திக்கி கடைத்தெருவில பாபுவைப் பாத்தேன்டா. அடுத்த வருஷம் அவன் பள்ளிக்கூடத்துக்கு சைக்கிள்ல தான் வருவானாம்”என்றான் கோபி.

“அவன் தான் அரையாண்டு விடுமுறை சமயத்திலேயே சைக்கிள் கத்துகிட்டானே! அவங்க அக்கா கத்து கொடுத்தாங்களாம்” சேகர்.

“பசங்களா, உள்ள வாங்க! தெருவில வேலைக்கி போறவங்க வண்டில்லாம் வரும். உள்ள வந்து விளையாடுங்க” சேதுவின் அம்மா.

சேதுவின் வீட்டுத் தோட்டத்தில் சிறிது நேரம் பந்து விளையாடினர்.

“சரிடா!  நா வரேன். சாயந்திரம் எங்க சித்தி வீட்டுக்குப் போறேன். பத்து நாள் கழிச்சு தான் வருவேன்” என விடை பெற்றான் கோபி.

“தினமும் ஒரு பக்கம் கையெழுத்து பயிற்சி எழுதணும். ரெட்டை வரி நோட்டு வாங்கணும்” என்றான் சேது.

“ஆமா! நான் இப்போ போய் வாங்கிட்டு வரப் போறேன்” என்று சொல்லி பையில் இருந்த ஐம்பது ரூபாய் தாளைக் காட்டினான் சேகர்.

“இருடா! நானும் வரேன்” என்று சொல்லிவிட்டு அம்மாவிடம் கெஞ்சி பணம் வாங்கி வந்தான் சேது.

“ஜாக்கிரதையா ஓரமா போயிட்டு, ஓரமா வரணும்.”

“சரிம்மா! எப்பவும் பள்ளிக்கூடத்துக்கு போற பாதை தான! தைரியமா இரு! சேகரோடத் தான் போறேன்”.

இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.

அவர்கள் தெருவில் நல்ல இணைய வசதியும் கிடையாது. அவர்கள் வீடுகளிலும் நல்ல கைபேசியோ அல்லது நல்ல தொலைக்காட்சிப் பெட்டியோ கிடையாது. அந்தத் தெருவில் விளையாட ஒரு சிறு மைதானம் கூடக் கிடையாது.

வழக்கம் போல அவர்கள் தெரு முனை வரை கோலி விளையாடிக் கொண்டே சென்றார்கள்.

சைக்கிள் கடைக்கு அருகில் தான் நோட்டுபுத்தகம் வாங்கும் கடை!

அவர்கள் கால்கள் தாமாகவே சைக்கிள் கடை முன் நின்றன.

“பள்ளிக்கூடம் லீவு விட்டாச்சே! எங்கடா வந்தீங்க?” என்றார் சைக்கிள் கடைக்காரர்.

பதில் ஒன்றும் சொல்லாமல் சைக்கிள்களைப் பார்த்துக் கொண்டு இருந்தனர் நண்பர்கள் இருவரும்.

”கடை முன்னாடி நிக்காதீங்க! போங்க போங்க!“ என விரட்டினார் கடைக்காரர்.

“அவர் சைக்கிள் வேணும்”சேகர்.

“ஒரு மணி நேரத்துக்கு பத்து ரூவா”

“அன்னிக்கி ஒரு ரூவான்னு சொன்னீங்க”

“அது அன்னிக்கி! இது இன்னிக்கி”

சேகர் தன் பையில் இருந்து ஐம்பது ரூபாயை எடுத்தான்.

“சைக்கிள் ஓட்டத் தெரியுமா?”

“தெரியும், தெரியாது” ஓரே நேரத்தில் இருவரும் பதிலளிக்க, ”சரி, இன்னொரு இரனூறு ரூவாயக் கொடுத்துட்டு எடுத்துட்டுப் போங்கடா” என்றார் கடைகாரர்.

”அங்கிள், நாங்க சைக்கிள் வாடகைக்குத் தான் கேக்குறோம். வாங்க இல்ல” என்றான் சேகர்.

“ஆஹா! வந்துட்டாங்கடா மைசூர் மஹாராஜா பேரங்க! இருநூத்து ஐம்பது ரூவாயில சைக்கிள் வாங்க! போங்கடா” என விரட்டினார் கடைக்காரர்.

அப்போது நளினமாகச் சிரித்தபடி ஒரு இளைஞன் கடைக்குள் நுழைந்தான்.

“என்ன மாமா! சின்ன பசங்களை விரட்டிகிட்டு இருக்கீங்க” எனக் கேட்டான்.

“வாப்பா பிரபு! இந்தப் பசங்களுக்கு சைக்கிள் கத்துக்கணும். அவர் சைக்கிள் கேக்குறாங்க!”

“ம்ம்… சரியான உயரம் தான்! கால் எட்டும்! கொடுக்கலாமே!”என்றான் பிரபு.

“நீ ஊருலேந்து வந்துருக்க. உனக்கு இதெல்லாம் புரியாது. இவனுக சைக்கிள அக்கு வேறா ஆணி வேறா ஆக்கிட்டா யாரு ரிப்பேருக்குக் காசு தருவா? இல்ல… இவனுகளே கீழே விழுந்து கால கையை உடைச்சுகிட்டா… யாரு பதில் சொல்றது. சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சா குடுக்கலாம்”.

“சைக்கிள் குடுத்தா ஓட்டக் கத்துக்குவோம்” என சேகர் சொல்ல, பிரபு சிரித்துவிட்டான்.

“அப்போ கத்துக்கிறதுக்கு சைக்கிள் தர மாட்டீங்களா?” சேது.

“பெரியவங்க யாராவது சொன்னா தான் தருவேன்”

“மாமா, நான் சொல்றேன், தாங்க மாமா!”

“பிரபு, புரியலயா உனக்கு! சின்னப் பசங்கடா! தனியா எங்கனா போயி…”

“மாமா! நானும் லீவுல சும்மா தான இருக்கேன். நானே அவங்களோட போறேன். இந்தாங்க இருநூறு ரூவாய், வாடகை எவ்வளவு? தைரியமா குடுங்க நான் பாத்துக்கறேன்” என்றான் பிரபு.

இருநூறு ரூபாய் தாளும், பிரபுவின் நம்பிக்கையான பேச்சும் கடைக்காரரை சைக்கிள் தர முடிவு செய்ய வைத்தது.

“பாத்துப்பா! உனக்காகத் தான் குடுக்கறேன்”என்றார்.

“தேங்ஸ் அண்ணா!” என்றனர் சேதுவும் சேகரும்.

”வடக்குத் தெருவில ரெண்டு ஆலமரம் இருக்குல்ல அங்க போயிரலாம். வண்டி எதுவும் வராது. கல், மேடு பள்ளம் இருக்காது.” என்றபடி அவர்களை அழைத்துச் சென்றான் பிரபு.

“யார் கூப்பிட்டாலும் இப்படி வந்துடுவீங்களாடா!” பிரபு.

“உன்னத் தெரியுண்ணே! நல்லாவே தெரியும். மூணாம் வருஷம் நம்ம பள்ளியில பரிசு வாங்கினயே!” சேகர்.

படிப்பிலும் விளையாட்டிலும் படு கெட்டி பிரபு. சேதுவும் சேகரும் படிக்கும் பள்ளியின் முன்னாள் மாணவன்.

“ஒரு காலை அந்தப்பக்கம் போடு. பெடல்… பெடல்… காலை வை… அழுத்து! ஊம்! இன்னும் வேகமா! ஹேண்டில பிடி…”

பிரபுவின் கட்டளைகள் தெளிவாக இருந்தன. சிறுவர்கள் இருவரும் நன்றாகவே கற்றுக் கொண்டனர்.

சைக்கிள் கற்றுக் கொண்டு விட வேண்டும் அவர்கள் ஆர்வமுடன் இருந்தனர்.

“முதுகை நிமித்தி உட்காரு!”

ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.

“சரி! வாங்க போகலாம். சைக்கிள விட்டு இறங்கு சேகர்! நல்லா கத்துக்காம ரோட்ல ஓட்டக் கூடாது.”

இறங்கும் போது, சேகர் துள்ளிக் கொண்டு குதித்தான். சைக்கிளோடு சரிந்து விழுந்து, காலில் சில சிராய்ப்புகள்!

பிரபு பக்கத்தில் ஒரு கடையில் தண்ணீர் வாங்கி காயத்தை கழுவி விட்டான். இருவருக்கும் தேநீர் வாங்கிக் கொடுத்தான்.

“தேங்ஸ் அண்ணா!” என சேதுவும் சேகரும் சொல்லிய போது தேநீரின் தெம்பும் அதில் தெரிந்தது.

“ஏண்டா! ஒரு ஒரு பைசாவையும் பாத்து பாத்து செலவு பண்ணிகிட்டு இருக்கேன். ஐம்பது ரூவா குடுத்து விட்டா, பத்து ரூவாய்க்கு சைக்கிள் விடுவியா? கீழே விழுந்து பெருசா அடி பட்டா… வரட்டும் உங்க அப்பா…“ சேகரின் அம்மா அடிக்காத குறைதான்.

மறுநாள் காலை .

“நா தர மாட்டேன் தான்யா சொன்னேன். கேளுங்க உங்க பசங்களையே! அந்த பிரபு தம்பி உறுதி குடுத்ததாலத் தான…” எனக் கடைகாரர் தன்னிலை விளக்கம் தந்து கொண்டு இருந்தார்.

“அது சரி, விழுந்து வாரி, அடிபட்டா… நீ தருவியா ஆஸ்பத்திரிக்குப் பணம்! இல்ல அந்த பிரபு வருவானா?” படபடத்தார் சேகரின் அப்பா.

”அண்ணா!” என சேகர் குரல் கொடுக்க, “அதோ வந்துட்டான் பிரபு! அவன்கிட்டயே பேசுங்க” என கடைக்காரர் சொல்ல, சேகரின் அப்பா ஆக்ரோஷமாகத்த்தான் திரும்பினார்.

ஆனால், பிரபுவின் புன்னகையும் வசீகரமும் கம்பீரமும் அவரை ஈர்த்தது.

குரலைத் தாழ்த்தி, “என்ன தம்பி!” என்றார்.

பிரபு அவர் கைகளைப் பற்றிக் குலுக்கினான்.

“ஐயாம் பிரபு! சேகர் ரொம்ப சூட்டிகையான பையன் சார்! “

“சந்தோஷம் “ உண்மையில் பையனைப் பற்றிய பாராட்டு சந்தோஷத்தைக் கொடுத்தது., “நீ..ங்க என்ன படிக்கீறீங்களா?”

“ஆமாம் சார், சென்னையில எம்.ஐ.டி ல படிக்கிறேன்.”

“அப்பா! அண்ணன் எங்க ஸ்கூல்ல ஃபுட்பால் டீம் கேப்டனா இருந்தாரு!”

”சேகரும் பிரமாதமா வருவான். என்னமா சொல்றத டக்குன்னு புரிஞ்சுக்கிறான்.”

“ஆனா அவன் கொஞ்சம் பயந்த சுபாவக்காரன்” என்றார் சேகரின் அப்பா.

“யாருக்கு பயம்? அவனுக்கா? அப்படி பயப்படுறவன் மாதிரி தெரியல்லையே ! பெரியவங்க முன்னால கொஞ்சம் பயபக்தியா, அடக்க ஓடுக்கமா இருப்பானாருக்கும். நல்ல தைரியசாலி தான்” என்றான் பிரபு. 

“இப்பக் கூட பாருங்க! கீழே விழுந்து தான வாரியிருக்கான். ரோட்டில விழுந்துடுவான்னு பயம்….” சேகரின் அப்பாவை முடிக்கவிடவில்லை பிரபு.

“நாம தான தைரியமா வளர்க்கணும். பயப்படாம இருக்கக் கத்துத் தரணும்.”

பிரபுவின் புன்னகையும் நம்பிக்கையும் சேகரின் அப்பாவுக்குத் தொற்றிக் கொண்டது.

கடைக்காரரும் இணைந்து கொண்டார். ”இந்த வயசில சைக்கிள் கத்துக்கலேன்னா எப்படி? கால் நல்லா எட்டுது. அப்புறம் என்ன?” என்றார்.

“இல்லப்பா! யார் அவனோட தினம் ஓடறது?”

“அதான் நான் இருக்கேனே! இன்னும் இருபது நாள் இங்கதான் இருப்பேன்” பிரபு.

விடுமுறை முடிவதற்குள் சேது, சேகர் மட்டுமல்ல, அவனது பள்ளி மாணவர்கள் அநேகம் பேர் பிரபுவின் தயவில் சைக்கிள் கற்றுக் கொண்டார்கள். மாலை வேளைகளில் ஃபுட்பாலும் விளையாடினார்கள்.

தைரியமும் தன்னம்பிக்கையும் அவர்கள் கண்களில் மின்னின. 

000

கமலா முரளி

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர்  திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.

ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.

கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவரது “மங்கை எனும் மந்திர தீபம்”  (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ?” என்ற சிறுகதைத் தொகுப்பு மணிமேகலைப் பிரசுர வெளியிடாக மலர்ந்துள்ளது.

மற்றும் இவரது சிறார் கதை நூல், “கிளியக்காவின் பாட்டு” லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடாக வந்துள்ளது.

கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் முத்தமிழ் சங்கம் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் இணைந்து வழங்கிய ’திருப்பூர் சக்தி விருது’ இந்த ஆண்டு (2024) பெற்றுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *