பெஹல்காம் பயங்கரவாதக் குறுங்கதைகள்

தீவிரவாதத்துக்கு மதம் இல்லை…?

 அரவிந்த் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டான்: 

// அரசியல் தீவிரவாதங்களுக்கு மதம் இல்லை. ஆனால், மதத் தீவிரவாதங்களுக்கு மதம் உண்டு. இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு சர்வ நிச்சயமாக மதம் உண்டு. பெஹல்காமில் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொடூரமாகக் கூட்டப் படுகொலை செய்யப்பட்ட 26 அப்பாவிகள்,  இந்துக்கள் என்பதால்தானே கொல்லப்பட்டார்கள்? //

அரவிந்த் மதச் சார்பற்றவன். எந்தக் கட்சியிலும், அரசியல் – சமூக அமைப்புகளிலும் அவனுக்குத் தொடர்பு கிடையாது; அவற்றுக்கு ஆதரவு தெரிவிக்கவும் மாட்டான். வாட்ஸாப், முகநூல் போன்ற குழுக்களில் – நண்பர்களுக்கான குழுக்களில்கூட – சேர மாட்டான்.

சமூக ஊடக செயல்பாட்டாளன் அல்ல. ஆதார் அட்டைக்கு அடுத்தபடியாக இன்று ஏதாவது ஒரு சமூக ஊடகக் கணக்காவது அடிப்படைத் தேவையாக ஆகிவிட்டதால் முகநூல், இன்ஸ்டாக்ராம், எக்ஸ் தளம் ஆகியவற்றில் கணக்கு வைத்திருக்கிறான்.

செல்ஃபி போட்டோக்கள், குடும்பத்தார் போட்டோக்கள், சாயங்கால வானம் மாதிரி எந்தப் பதிவுகளும் வெளியிடுவது கிடையாது. எவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக் கூற மாட்டான்; அவனது பிறந்த நாளையும் மறைத்து வைத்திருப்பான். முக்கியமாக, உறவினர்கள் யாரையும் சமூக ஊடக நட்பில் சேர்த்துவதில்லை என்பதைக் கொள்கையாகவே வைத்திருக்கிறான். சமூக ஊடகங்களை சமூகப் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது அவனது தரப்பு. அதனால் சமூக விஷயங்களை மட்டுமே அதில் பதிவிடுவான். மற்றவர்களின் சமூகப் பதிவுகளுக்கு மட்டுமே பின்னூட்டமிடவும் செய்வான்.

நடுநிலை, நேர்மை, துணிச்சல், சொம்பு தூக்காமை, பட்டவர்த்தனம் ஆகிய கெட்ட குணங்கள் அவனுக்கு இருந்தன. அதனால், அவனுக்கு அங்கே நண்பர்கள் குறைவு, மறைமுக விரோதிகள் அதிகம்.

இதனால் வழக்கமாக அவனுக்கு 5 – 7 விருப்பங்கள்தான் வரும். எப்போதாவது 10 கிடைத்தால் வெற்றி விழா. 20 – 25 கிடைத்தால் சாதனை.

பெரும்பாலும் யாரும் பின்னூட்டம் இட மாட்டார்கள். அருமை, சிறப்பு, வாழ்த்துக்கள் போன்றவற்றை அவன் பின்னூட்டமாகக் கருதுவதில்லை.

முற்பகல் 11:30 வாக்கில்தான் சமூக ஊடகங்களில் பயனர்கள் அரிதிற் பெரும்பான்மையினரும் குழுமியிருப்பர். அப்போது பதிவு இட்டால்தான் அதிகமான மக்கள் பார்க்கவும், உடனடியாக எதிர்வினையாற்றவும் செய்கின்றனர். அதனால் அந்த ராவுகாலம், எமகண்டம் பார்த்துத்தான் இன்றும் அவன் பதிவை  வெளியிட்டிருந்தான். ஆயினும், மதிய உணவு நேரம் வரை ஒரு விருப்பக்குறியோ, பின்னூட்டமோ விழவில்லை.

சிறுபான்மைகளுக்கு ஆதரவு என்றால் விருப்பங்களும், இதயங்களும் குவியும். தோழர், சகோதரர் என்று பாசம் பொழிந்து பின்னூட்டங்கள் இடுவார்கள். சிறுபான்மைகள் செய்கிற அராஜகம், ஜாதி – மத வெறிச் செயல்கள், குற்றங்கள், கலவரங்கள், தீவிரவாதம் ஆகியவற்றைக் கண்டித்துப் பதிவு இட்டால் 97.68% பேர் கண்டுகொள்ள மாட்டார்கள். சில சமயம் ஒரே ஒரு லைக் வரும். சில சமயங்களில் அதுவும் இராது. இந்தப் பதிவும் அப்படித்தான் ஆகப்போகிறது என்று பட்டது. அலுவலகக் கணினி ஜன்னலைச் சாத்திவிட்டு தன் வேலையைத் தொடரலானான்.

இரவு வீடு திரும்பிய பின் அலைபேசியில் இன்ஸ்டாக்ராம் செயலியைத் திறந்து பார்த்தான். கணிசமான விருப்பக்குறிகளும், செவ்விதயங்களும் விழுந்திருந்தன. அதைக் காட்டிலும் பின்னூட்டங்கள் நிறைந்திருந்தது ஆச்சரியப்படுத்தியது. ஆவலோடு வாசிக்கலானான்.

ஃபைசல்தப்லீக்: சகோதரரே! இஸ்லாம் அமைதி மார்க்கம். இஸ்லாத்தின் பேரால் தீவிரவாதம் செய்பவர்கள், இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டவர்களாக, இஸ்லாத்துக்கு விரோதமானவர்களாக கருதபடுவார்கள்

ரஞ்சித்சிவம்: பாய்… அமைதி மார்க்கம் உருட்டை இன்னும் நீங்க விடலையா? கழிவி கழிவி ஊத்தறாங்களே சமூக ஊடக கமென்ட்டுல!

ப்ரியங்கா_திருச்சி: ஆமா அரவிந்த், எல்லாரும் மனுஷங்க தான். இதுல மதம் எதுக்கு?

தேசபக்தன்_143: ப்ரோ… நீங்கசொல்றது 200% உண்மை.ஆனா, முஸ்லீம்ல சிலநல்லவங்களும் இருக்காங்க

திராவிடசெழியன்: சங்கி மங்கி! உனக்கெல்லாம் வேற வேலையே இல்லையா?

அதிகைநேசன்_64: கவற்சிகரமான வாசகங்கள், சிந்திக்கவிடாமல் ஆமாம் போட வைத்துவிடும். தீவிரவாதத்துக்கு மதம் இல்லை என்பதும் அப்படித்தான். இஸ்லாமியத் தீவிரவாதம் பற்றி பேச்சு எழும்போதுதான் இந்த வாசகம் முன்வைக்கப்படுகிறது என்பதும் கவனிக்க & சிந்திக்கத் தக்கது.

ஜனநாயகவாதி: இஸ்லாமிய வெறுப்பை பரப்பறதே சங்கிக வேலையா போச்சு

அண்ணன்அடிமை: பெஹல்காம் தாக்குதல் பிஜேபி அஜென்டா

பொன்.மாணிக்கம்: யூ ட்யூப் கமென்ட்லயும் “தீவிரவாதத்துக்கு மதம் உண்டு”ன்னு சிலர் பதிவிட்டிருந்தாங்க.

தளபதிசுரேஷ்: நண்பா, உங்க இஸ்லாமிய வெறுப்பு பேச்சு கண்டிக்க தக்கது. நீங்க சமூக நல்லிணக்கத்துக்கு எதிரா இருக்கீங்க.

சிறுபான்மை_குரல்: நீதான்டா சங்கி நாயே மதவெறியன். முஸ்லீம் பத்தி தப்பா பேசாதே

     பின்னூட்டங்களை வாசித்துப் பார்த்த அரவிந்திற்கு லேசான ஆறுதல் இருந்தாலும் கனத்த அதிர்ச்சி, சங்கடம், கடுப்பு, விரக்தி ஆகியவை உண்டாகின. இந்தப் பதிவை நீக்கிவிடலாமா, அல்லது தனது சமூக ஊடகக் கணக்குகள் யாவற்றையும் முடக்கிவிடலாமா, அல்லது உணவில் உப்பு சேர்ப்பதை விட்டுவிடலாமா  என யோசிக்கலானான். 

பின் குறிப்பு: 

இக் கதையில் இடம்பெறும் சமூக ஊடகப் பின்னூட்டங்களில் உள்ள எழுத்துப் பிழை, சொற் பிழை, இலக்கணப் பிழை, சொற்கள் ஒட்டியுள்ள பிழை ஆகியவை பின்னூட்டர்கள் வழக்கமாகச் செய்யும் பிழைகளை உள்ளது உள்ளபடி காட்டுவதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்டது. 

மேய்ப்பர்கள் ஜாக்கிரதை!

பெஹல்காம் இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலின் ரத்தம் இன்னும் காய்ந்திருக்கவில்லை.

தமிழ் தேசியக் கட்சித் தலைவர், “இஸ்லாமியர்கள் என் தொப்புள்கொடி உறவுகள். இஸ்லாமியத் தீவிரவாதிகள்  என் சகோதரர்கள், என் அப்பாக்கள். அவர்கள் உயிரோடு இருந்தாலும், இறந்தாலும் நான் அவர்களுக்கு வீரமரியாதை செலுத்துவேன்” என்றார். தலித் கட்சித் தலைவர், “அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல; போராளிகள்!” எனப் போற்றிப் புகழ்ந்தார். திராவிட சமூக ஆர்வல பீரங்கினி, “சுற்றுலாப் பயணிகளின் ஆடையைக் கழற்றிப் பார்த்துவிட்டு சுட்டுக் கொன்றவர்கள் இந்திய ராணுவ வீரர்கள்தான். ஒன்றிய சங்கி அரசு இதற்கு முன்பும் ராணுவத்தை வைத்து இதைச் செய்திருக்கிறது” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டாள்.

இவை  இந்து உணர்வாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. அவர்களின் இழிசெயல்கள் குறித்து காட்டமான விமர்சனங்கள் எழுந்தன. தேச துரோகிகள் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என சமூக வலைத்தளங்கள் எங்கும் பதிவுகள், பின்னூட்டங்கள் ஏராளமாக இடப்பட்டன. புழுத்த நாய் கேட்டால் தனது வாலிலேயே சுருக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிற அளவுக்கு அவர்கள் கழிப்பிடக் கழுவு நீரில் கழுவி ஊற்றப்பட்டனர். இதற்கெல்லாம் அசரக்கூடியவர்களா அவர்கள்?!

யூட்யூபர் நெற்றிக்கண் துரைப்பாண்டிக்கு கோபம் உச்சிக்கு ஏறியது. தனது சேனலில் கண்டனக் காணொளியை வெளியிட்டார்.

     “பெஹல்காம் இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, தற்போது வரை இந்தியா அல்லது தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக எந்த ஒரு முக்கியமான இஸ்லாமிய வெறுப்பு சம்பவங்களும் பதிவாகவில்லை. ஆனால், இஸ்லாமியர்களுக்கு ஆதரவு என்ற பெயரில், நாடு முழுதும் தேச விரோத சக்திகள்  இந்தியாவுக்கு எதிராகவும் துரோகமாகவும் பேசிவருகின்றன. குறிப்பாக, பயங்கரவாத நாடும், நமது எதிரி நாடுமான பாகிஸ்தானுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவிப்பது, இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது ஆகியவற்றை சில கட்சித் தலைவர்களும், சமூக – அரசியல் அமைப்புப் பிரமுகர்களும் செய்துள்ளனர். ‘பெஹல்காம் தாக்குதல் மற்றும் 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதல் ஆகியவை அரசு சதி’ என்று கூறிய அ.இ.ஐ.ஜ.மு. (AIUDF) கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. அமினுல் இஸ்லாமை அஸ்ஸாம் போலீசார் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் (NSA) கீழ் கைது செய்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் இத்தகைய தேச விரோதிகள்  சுதந்திரமாகத் திரிகின்றனர். காரணம், இந்த மாநில அரசு, ஓட்டு வங்கிக்காக இவர்களுக்குச் சாமரம் வீசுவதுதான்!” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

நூற்றுக்கணக்கான இந்துக்கள் அவரது கருத்தை ஆதரித்திருந்தனர். தேசத் துரோகிகளை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், இந்தியக் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும், பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என கோப வெளிப்பாடுகளோடு பின்னூட்டங்கள் வந்தன.

அடுத்த நாளே, சமூக அமைதியைக் குலைக்கும் விதமாக அந்தப் பதிவை இட்டதாக நெற்றிக்கண் துரைப்பாண்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

துரோகிகள்

கலைந்த தலைகள், ஆங்காங்கே கந்திய முகங்கள், காயம்பட்டுக் கிழிந்த உதடுகள், லத்தியடியின் ரத்த விளாறுகளும் வீக்கங்களும் கொண்ட முதுகுகள் – உடல்கள், கந்தலாகித் தொங்கும் சட்டைகளோடு, ஜின்னா நகர் தெருவில், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயது ஆண்களானஅந்த ஐந்து பேரும் விந்தியும், நொண்டியும் நடந்தனர். முழங்கால் மூட்டுகள் பெயர்ந்துவிடுகிற அளவுக்கும், உள்ளங்கால் தோல் பிய்ந்துபோகிற அளவுக்கும் போலீஸ் பாடம் புகட்டியிருந்தது. ஒவ்வொரு அடிவைப்பிலும் வலி உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை தெறித்தது. அவர்களின் கால்கள், ராஞ்சிக்கும் தன்பாத்துக்கும் மத்தியிலுள்ள நிலக்கரி நகரான ஹசாரிபாக்கின் பழக்கப்பட்ட தெருக்களில் ஊன்றி நடக்க சிரமப்பட்டன. 

மக்களுக்குக் காட்சிப்படுத்தி அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே போலீஸார் அவர்களை ஊர்வலமாகத் தெருவில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தனர். காஃபிர் குடியிருப்புவாசிகளின் கூட்டம் ஆவலோடு பக்கவாட்டுகளிலும் பின்னாலும் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. நடந்தும் வாகனங்களிலும் செல்கிற வழிப்போக்கர்களும் நின்று வேடிக்கை பார்த்து, என்ன குற்றம் எனக் கேட்டறிந்து, “குண்டர் தடுப்பு சட்டத்துல அடைக்கணும்”, “என்கௌண்டர் பண்ணணும்”, “ஓட ஓட பாகிஸ்தானுக்கே அடிச்சு விரட்டணும்” என ஆவேசமாகச் சொல்லிவிட்டுச் சென்றனர்.

சுற்றியிருந்தவர்கள் – இந்துக்களும், சீக்கியர்களும், ஏன் சில முஸ்லிம்களும் கூட – இவர்களை வெறுப்புடன் பார்த்தனர். 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொதுவாக இந்து – முஸ்லிம் சமூகங்களிடையே நல்லிணக்கமே நிலவுகிறது. இருப்பினும் சில சமயங்களில், குறிப்பாக பண்டிகை ஊர்வலங்களின்போது அல்லது அரசியல் ரீதியாகத் தூண்டப்படும்போது, மத மோதல்கள் எழுகின்றன. சமீப காலங்களில் ராம நவமி, ஹனுமான் ஜெயந்தி போன்ற இந்துப் பண்டிகைகளின்போது மத ஊர்வலங்கள் மசூதிகளுக்கு அருகிலோ, முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளிலோ செல்லும்போது பதற்றம் ஏற்படுகிறது.

இந்து – முஸ்லீம் கலவரம் என்கிற விஷயத்தில் இந்த மாநிலத்துக்கும் சில வரலாற்றுப்  பெருமைகள் இருக்கவே செய்கின்றன. 1967 ராஞ்சி – ஹாடியா கலவரத்தில், உருதுக்கு எதிரான மாணவர் ஊர்வலத்தின் மீது கல் வீசப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. 184 பேர் கொல்லப்பட்டனர், இதில் 164 முஸ்லிம்களும், 19 இந்துக்களும் அடங்குவர். 195 கடைகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. அதுதான் மாநிலத்தின் மாபெரும் கலவரம். அப்போது இந்த வீரர்களின் தந்தையர்களில் ஓரிருவர் குழந்தைகள்; மற்றவர்கள் பிறந்திருக்கவில்லை.

2022 ராஞ்சி வன்முறை, இவர்கள் நன்கு அறிந்தது. அதன் காரண காரியமோ, இவர்களின் ரத்தத்தை அமிலமாகக் கொதிக்கச் செய்தது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே ஊரில்மகா சிவராத்திரி கொடிகள் மற்றும் ஒலிபெருக்கிகளை நிறுவுவது தொடர்பாக இரு சமூகத்தினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. கற்கள் வீசப்பட்டு வாகனங்கள் எரிக்கப்பட்டன. அதில் இவர்களில் கைசர், ஜவாஹிருல்லா, தாரிக் மூன்று பேருக்கும் பங்கு உண்டு.

அப்படிப்பட்ட நிலையில், பெஹல்காமில் இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்.

அதன் எதிர்வினையாக இந்தியா பாகிஸ்தான் மீது மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கைகள், பாகிஸ்தானிலும் காஷ்மீரிலும் நடத்திய பயங்கரவாதிகள் வேட்டை, பாகிஸ்தான் தொடர்ந்து செய்துவந்த அத்துமீறல் தாக்குதல்கள் யாவும் இந்தியாவில் உணர்ச்சிக் கொந்தளிப்பான அதிர்வலைகளை ஏற்படுத்தின. அரசியல், சமூகம், ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் பலத்த பரபரப்பு.

போர் நடந்த நாட்களில் இந்து மக்கள் இரவு முழுக்க விழித்திருந்து யூ ட்யூபில் செய்திகளும், நேரலை செய்திகளும் பார்த்து, பாகிஸ்தானுக்கு எதிராகவும், இந்திய ராணுவம் மற்றும் இந்திய அரசுக்கு ஆதரவாகவும் கமென்ட் இட்டுக்கொண்டிருந்தனர். முஸ்லீம்கள் ஒருவர் கூட கருத்துத் தெரிவிக்கவில்லை. இது பலராலும் சுட்டிக் காட்டப்பட்டது. இஸ்லாமியர்களின் தேசப் பற்றின்மை, தேசப் பற்றாளர்களான இந்துக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த ஜின்னா நகரில் சில  இந்துக்கள்,  “இஸ்லாமியர்களுக்கு மதப்பற்றும் மதவெறியும்தான் இருக்கும். தேசப் பற்று இருக்காது. முஸ்லீம் நாடா இருந்தா மட்டும்தான் தேசப்பற்று இருக்கும்” எனப் பேசியது இவர்களுக்குத் தெரியவந்தது.

பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமியர்களான இந்த ஐவரும் டீக்கடை, சலூன், மற்றும் தெருவோரப் பகுதிகளில் இருந்தபடி பொதுவெளியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுவது, பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கம் இடுவது ஆகியவற்றைச் செய்யலாயினர். யாரோ போலீஸுக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள் வந்து லாடம் கட்டி, முட்டி உடைத்து, உடலெங்கும் லத்தி ஒத்தடம் கொடுத்துவிட்டனர்.

 ஐந்து பேரில் குண்டானவனும், மூத்தவனுமான கைசர், வலியால் முனகியபடியே சொன்னான். “எந்தக் காஃபிர் பன்னிக போலீஸுக்குப் புகார் சொல்லுச்சுன்னு தெரியல. நாம திரும்பி வந்ததும் அவனுகள சும்மா விடக்கூடாது!”

தாரிக், குரலைத் தணித்துக்கொண்டு சொன்னான். “இந்துக்கள் யாருமல்ல, பாய்;  இப்ப நம்ம கூடவே வேடிக்கை பாத்துட்டு வந்துட்டிருக்கற நம்ம ஆளுகதான்!” 

ஜவாஹிருல்லாவின் கண்கள் கோபத்தில் சிவந்தன. “அப்படியா? எதிரிகளைக் கூட மன்னிக்கலாம். துரோகிகளை உயிரோடவே விடக்கூடாது!” என்றான் கொலைவெறியோடு. 

எல்லை கடந்த மனிதாபிமானம்

இரு வாரங்களாக இந்தியா – பாகிஸ்தான் நாடுகளைச் சூழ்ந்திருந்த போர் மேகங்கள், பலத்த இடி மின்னல்களோடான கன மழை பொழிந்து, சூறாவளியைக் கிளப்பியிருந்தன. மே 7, 2025 அன்று இந்திய முப்படைகளால் நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதலான ஆப்பரேஷன் சிந்தூர் ஏற்படுத்திய அதிர்வலைகள் இந்தியாவெங்கும் இன்னும் நீடித்திருந்தன. மறுபுறம், பாகிஸ்தான் ராணுவம் அதற்குப் பதிலடியாக இந்தியப் பக்கத்தில், குறிப்பாக ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச், ராஜோரி, குப்வாரா, பாரமுல்லா, ஊரி, அக்னூர் போன்ற பகுதிகளில் எல்லை தாண்டிய ஷெல் மற்றும் மோட்டார் (Mortar) தாக்குதல்களை நடத்தியிருந்தது. இதில் 13 முதல் 16 இந்திய அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், சுமார் 40 முதல் 60 பேர் காயமடைந்தனர்.

இந்த முறையற்ற தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் உடனடியாகவும், வீரியமாகவும் பதிலடி கொடுத்தது. மே 9, 2025 அன்று இரவு சுமார் 9 மணிக்கு, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய அனைத்து எதிரிப் படைகளின் நிலைகளையும் இந்திய ராணுவம் அழித்தது. இதில் எதிரிகள் தங்கள் நிலைகளை விட்டு ஓடியதாக இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோவில் பதிவாகியிருந்தது. இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய உள் கட்டமைப்புகளையும், பயங்கரவாத முகாம்களையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (PoK) லீபா பள்ளத்தாக்கில் உள்ள ராணுவ உள் கட்டமைப்புகளையும் தாக்கியது. சினார் கார்ப்ஸ் அதிகாரிகள் அளித்த தகவல்களின்படி, இந்தப் பதிலடித் தாக்குதல்களில் குறைந்தது 64 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 96 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய பதட்டமான சூழலில், இந்திய ராணுவ வீரனும்,  மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவனுமான  தௌஸீஃப், இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள வனப் பகுதியில்ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தான். அடர் வனத்தின் காய்ந்த சருகுகள் காலடியில் நொறுங்கும் ஒலியையும், காட்டுப் பறவைகளின் பலவித கானங்களையும் தவிர வேறு சத்தமில்லை. திடீரென, ஒரு பெருத்த அடிமரத்தின் பின்னாலிருந்து பலவீனமான முனகல் ஒலி கேட்டது.

தௌஸீஃப் உஷாரானான். இயந்திரத் துப்பாக்கியைத் தயார் நிலையில் பிடித்தபடி, சருகோசை எழுப்பாமல் பதுங்கி முன்னேறினான். அங்கே, பாகிஸ்தான் ராணுவச் சீருடையில் ஒரு வீரன் அடிமரத்தில் சாய்ந்த வாக்கில், நிலத்தில் கால் நீட்டியபடி தளர்ந்து கிடந்தான். அவனது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கக் கூடும் என்பது, அங்கிருந்த காய்ந்த ரத்தக்களறியால் தெரிந்தது. அவனது ஆயுதம் கையருகிலேயே கிடந்தாலும், இப்போது அவனால் அதை எடுத்து சுட முடியாது என்பது உறுதி.

தௌஸீஃப் ஒரு கணம் தயங்கினான். எதிரி நாட்டவன், அத்து மீறி நம் நாட்டுக்குள் நுழைந்திருக்கிறான், என்றாலும் அந்த நொடியில், அவன் கண்களுக்கு அது தெரியவில்லை. வேதனையில் தவிக்கும் ஒரு சக மனிதன் என்பது மட்டுமே தெரிந்தது.

“அல்லாஹ்… யா அல்லாஹ்…” மெல்லிய முனகலோடு அந்த வீரனின் உதடுகள் அசைந்தன.

தௌஸீஃப் நெருங்கிச் சென்றான். தயக்கத்துடன், “உனக்கு அடி பலமா?” என்று உருதுவில்  கேட்டான். 

பாகிஸ்தானி வீரன் திடுக்கிட்டு நிமிர்ந்தான். இந்திய வீரனைக் கண்டதும் அவனது கண்களில் பதற்றமும், பயமும், ஆத்திரமும் ஒருசேர மின்னின. வலது கரம் துப்பாக்கியை எடுக்க முற்பட்டது.

தௌஸீஃப் பொறுமையாக, “பயப்படாதே! நான் உனக்கு உதவுகிறேன்” என்றான்.

“காஃபிர் நாய்களின் உதவி எனக்குத் தேவையில்லை. நாங்கள் சிங்கங்கள். பாகிஸ்தான் ஜிந்தாபாத்!” துப்பாக்கியை இறுகப் பற்றிக்கொண்டு அவன் வலியிலும் ஆவேசமாகக் கத்தினான்.

தௌஸீஃப்பின் உதடுகளில் பரிகாசப் புன்னகை நெளிந்தது. “நீ எதிரி நாட்டவன் என்றாலும், நான் உன்னையும் என்னைப் போல ஒரு நாட்டின் ராணுவ வீரன் என்று மதிப்புடன் பார்க்கிறேன். ஆனால் நீயோ, என்னை மதவாதக் கண்களில் பார்க்கிறாய். இதுதான் இந்திய வீரர்களுக்கும், பாக் வீரர்களுக்கும் உள்ள வித்தியாசம்…”

“நாங்கள் ராணுவ வீரர்களோ, காய்கறி வியாபாரிகளோ, அரசு ஊழியர்களோ, உயர் அதிகாரிகளோ, தலைவர்களோ, சாமானிய மனிதர்களோ – யாராக இருந்தாலும் சரி; முதலில் நாங்கள் முஸ்லீம்கள். பிறகுதான் மற்றதெல்லாம்!” அவன் மூர்க்கமாக பதில் கொடுத்தான்.

தௌஸீஃப் அமைதியாகச் சொன்னான்: “நானும் முஸ்லீம்தான். ஆனால், அது எனக்கு இரண்டாம்பட்சம். எங்கள் நாட்டில் ராணுவச் சீருடைக்குத் தேச அடையாளம் மட்டுமே உண்டு. மதம் இல்லை.”

இப்போது பாக் வீரனின் வறண்ட உதடுகளில் இளக்காரச் சிரிப்பு.

“உனது வாய் அப்படிச் சொன்னாலும், இதயம் இஸ்லாமியன் என்பதால்தானே எனக்கு உதவ முன்வந்தது?”

“இதயத்துக்கு மதம் கிடையாது. இதயம் உள்ளவர்களுக்கு மதம் இருந்தாலும் மதவாதம், மத அடிப்படைவாதம், மதத் தீவிரவாதம் இருக்காது. நான் உனக்கு உதவ முன்வந்தது கருணை, மற்றும் மனிதாபிமானத்தின் அடிப்படையில்தான். நான் ஒரு இந்தியன் என்பதால், மனிதாபிமானத்தோடு உதவுகிறேன். உனக்குத் தாகமாக இருக்கும், தண்ணீர் குடி!”

பாட்டிலை நீட்டினான். பாகிஸ்தானி சந்தேகத்துடன் அவனைப் பார்த்தான். பிறகு வாங்கிக்கொண்டு, காயத்தின் வேதனையோடு, தண்ணீரைப் பொறுமையற்று மடக் மடக்கெனப் பருகினான்.

இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில்  அவனது வலது காலில் காயம்பட்டு இரண்டு நாட்களாகின்றன. பலத்த காயம் என்பதால்  நடக்க இயலாத நிலை. தௌஸீஃப் அவனுக்குத் தன்னிடமிருந்த ரொட்டிகளை உண்ணக் கொடுத்தான். அவன் பசி வெகாறியோடு அதைத் தின்று, மீண்டும் தண்ணீர் குடித்தான்.

அடுத்த நாளும் தௌஸீஃப் ரகசியமாக அந்த இடத்திற்குச் சென்று அவனுக்கு உணவு கொடுத்தான். காயங்களுக்கு மருந்திட்டு, கட்டிவிட்டான்.

பாகிஸ்தான் வீரன் தெம்படைந்து, சற்றே குணமடைந்தான். எனினும் அவனுக்கு நடக்க சிரமமாக இருந்தது. தௌஸீஃப் அவனைத் தாங்கிப் பிடித்து மெதுவாக நடக்க உதவினான். அடர்ந்த மரங்கள், முட்கள் நிறைந்த புதர்கள், கரடுமுரடான பாறைகள் என அந்தக் காட்டுப் பகுதி அவர்களுக்குச் சவால்விட்டது. கஷ்டப்பட்டு பாகிஸ்தான் எல்லையை  அடைந்தனர். 

“நீ எனக்குச் செய்த உதவிக்கு என்னால் எந்தக் கைம்மாறும் செய்ய இயலாது. அல்லாஹ் உனக்கு உரிய கூலியைக் கொடுப்பான்!”

பாகிஸ்தானி வீரன் உணர்ச்சியற்ற குரலில் ஒப்புவித்துவிட்டு  தனது நாட்டின் எல்லைக்குள் விந்தி விந்தி நடக்கத் தொடங்கினான்.

தௌஸீஃப் சற்று நேரம் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான். தான் செய்தது ராணுவ சட்டப்படியும், பொது நீதிப்படியும் குற்றம் என அவனுக்குத் தெரியும். எனினும், ஒரு சக மனித உயிரைக் காப்பாற்றிய பெருமிதத்தோடும், மனநிறைவோடும் அவன் கம்பீரமாக தனது படைத்தளத்தை நோக்கி நடக்கலானான். 

அப்போது, பின்னால் இயந்திரத் துப்பாக்கியின் சத்தம் கேட்டது.

திரும்பிப் பார்ப்பதற்குள் பின்னந்தலையில் குண்டுகள் துளைத்து, தலை சிதறி, ரத்தம் தெறிக்க, நிலை குலைந்து தரையில் குப்புற வீழ்ந்தான். அவனது கண்கள் இருண்டன. பின்னந்தலைத் துளைகளிலிருந்து ரத்தம் பீறிட்டது. கவிழ்ந்து கிடக்கும் அவனது உதடுகள் தாய் மண்ணை அழுத்தி முத்தமிட்டன.

*******

ஷாராஜ்

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.

சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். 2023-ம் ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *