மரணத்தைத் தவிர எல்லாமும் மனிதர்கள் திட்டமிட்டபடி நடக்கின்றன.  சில நேரங்களில் ஒருவரின் மரணத்தை மற்றவர்கள் திட்டமிட்டு நடத்திவிடுகிறார்கள். அது விதி என்று நம்புகிறோம். இன்றைக்கும் அப்படித்தான் நடந்தது. பதினைந்து ஆண்டுகளாகக் குடியரசுத் தலைவராக இருந்த மினிஸ்டிரோ, உலகப் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பதற்குப் போய்க் கொண்டிருந்தார். அவர் புத்தகங்களைப் படித்ததில்லை என்று அவரது பேச்சைக் கேட்டவர்களுக்குத் தெரியும். பாமர மக்களின் தெருப்பேச்சை ஒத்திருக்கும் அவரது மேடைப் பேச்சுக்களில், அவ்வப்போது யாராவது சொல்லிக் கொடுத்திருந்த செறிவூட்டப்பட்ட வார்த்தைகள் நிலக்கரி சுரங்கத்தில் எப்போதாவது கிடைக்கும் வைரக்கல் போலத் தெறித்து ஒளிவிடும். அதுவன்றி மற்ற வார்த்தைகள் வாயிலிருந்து வயிற்றால் போவது போல பெருநாற்றத்துடன் கொட்டி ஓடிக்கொண்டிருக்கும். அதைச் சகிக்க முடியாது என்று சொல்ல வேண்டியதில்லை. ஆனால் எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர் சகல அதிகாரங்களையும் தன்னிடத்தே வைத்திருந்தார். அதனால் சகல வல்லமையும் அவருக்கிருந்தது என்ற பிம்பம் மட்டுமே எல்லோருக்கும் தெரிந்திருந்தது.  அவருக்கு மிகவும் அணுக்கமாக இருந்த – அவர்கள் மிகவும் சிலர் தான் – சிலர் எழுப்பிய மிகவும் சிக்கலான கணினியில் வரைந்த படம் அது. அவர் எந்தப் பொதியையும் வேறு வழியில்லாமல் சுமக்கும் நொண்டிக் கழுதை என்பதும் அதற்குமேல் எந்தச் சிறப்பும் அவரிடம் இல்லை என்பதும் அந்த சிலருக்குத் தெரியும்.

      அவர் ஏறி வந்த மிக நீளமான அடர்பச்சைநிற வெளிநாட்டுக் கார் புத்தகக் கண்காட்சியின் வாசலில் இருந்த அலங்கார வளைவின் முன்னால் வந்து நின்றது. அந்த வளைவின் மேற்புறத்தில் மினிஸ்டிரோ மிகப் பெரிய புகைப்பட பேனரில் ‘திரு திரு’ என்று முழித்துக் கொண்டிருந்தார். காரிலிருந்தே அதைக் கவனித்து விட்டார். அருமையான படம் என்று அவர் மனம் நிறைவடைந்தது. உற்சாக மருந்தை உண்டது போல் அவர் மனம் ஜிவ்வென்று குஷியானது. காரிலிருந்து முதலில் இறங்கிய இரண்டு செக்யூரிடிக்கள், காரின் கதவு திறக்கப் போவதை எதிர்நோக்கி, அதன் முன்னால் அவரை யாரும் குறிவைத்துவிடாதபடி மறைத்துக் கொண்டனர். காரின் இன்னொரு பக்கத்துக் கதவு வழியே இன்னும் இருவர் இறங்கினர். அதற்குள் வரிசையாக பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நின்றன. இந்தச் சில நொடிகளுக்குள் அது நிகழ்ந்து விட்டது. நான்கு முறை ‘டும், டும், டும், டும்’ என்று துப்பாக்கி வெடித்த சத்தம் பலமாகக் கேட்டது. பச்சை நிற மெர்சிடிஸ் காரின் மீதும் ஒரு குண்டு துளைக்க முயன்று தெறித்து விழுந்தது. ஒரு குண்டு மினிஸ்டிரோவின் இடது கண்ணுக்கு மேலாக மூளைக்குள் சென்றிருக்க வேண்டும். இன்னொன்று அவரது இடது கையின் மணிக்கட்டில் உரசிச் சென்றது. காரிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தவர், கார் கதவில் கைவைத்தபடியே சரிந்து விழுந்தார். அருகில் நின்ற செக்யூரிடி அவர் உடல் கீழே சாய்ந்துவிடாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டார். சுற்றி நின்றுகொண்டிருந்த மற்ற செக்யூரிடிகள் குண்டு வந்த திசை நோக்கி இரண்டு நிமிடங்கள் இயந்திரத் துப்பாக்கிகளால் பல முறைகள் சுட்டுக் கொண்டிருந்தனர். வெடிச் சத்தங்களைத் தவிர வேறேதுவும் அங்கே கேட்கவில்லை. புத்தகங்கள் வாங்க வந்து, அங்கங்கே நின்று கொண்டிருந்த பலர் சரிந்து விழுந்தனர். மெர்சிடிஸுக்கு இடப்புறமாக இருபதடி தூரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு வழுக்கைத் தலையன், தன் குண்டுகளில் ஒன்று இலக்கைத் தாக்கிவிட்டது என்ற நிறைவுடன் தன் நெஞ்சில் குண்டு துளைத்த ரத்ததை இடது கையால் அழுத்துக் கொண்டு, வலது கையிலிருந்த ஆட்டோமேடிக் துப்பாக்கியைப் பிடித்தபடி சரிந்து விழுந்தான். அவன் தப்பிக்க முயற்சி செய்யவில்லை. தான் தியாகியாகிவிட வேண்டும் என்பது அவனது குறிக்கோள். அடுத்த ஆட்சியில் அவனுக்கு சிலைவைக்கக் கூடும்.

சில நொடிகள் ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த அனைவரும் பயத்துடன், பதறியடித்துக் கொண்டு ஓடிக் கலைந்தனர்.  குடியரசுத் தலைவருடன் இருக்கும் ஆம்புலன்ஸிலிருந்த, டாக்டர் சிசோதியோ, ஓடிவந்து மினிஸ்டிரோவின் கைகளைப் பிடித்துப் பார்த்தார். உடனடியாக அவரைத் தூக்கி ஆம்புலன்ஸில் வைத்து, இரண்டு செக்யூரிடிகளும் டாக்டரும், ஏறிக் கொண்டதும், ஆம்புலன்ஸ் வெகு வேகமாகச் சென்றுவிட்டது. அங்கே நின்று கொண்டிருந்த மற்றப் போலிஸ்காரர்களும், அரசு அதிகாரிகளும், என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தனர். மூன்று போலிஸ்காரர்கள் சரிந்து விழுந்த வழுக்கைத் தலையனைச் சுற்றி நின்று கொண்டனர். கண்காட்சிப் பந்தலில் இருந்த அனைவரும் பதறியடித்துக் கலைந்து வெவ்வேறு திசைகளில் ஓடிக் கொண்டிருந்தனர். கொஞ்சம் தைரியம் உள்ள சிலர் கீழே விழுந்து கிடந்த வழுக்கைத் தலையனின் அருகில் செல்ல முயற்சித்த போது, தூரத்தில் நின்ற போலிஸ்காரர்கள் அவர்களின் முதுகில் தொட்டு ’வீட்டுக்கு ஓடிப்போய்விடு. இங்கே எதுவும் நடக்கலாம்’ என்று கத்தி விரட்டினர். கொஞ்சம் குண்டாக இருந்த பார்வையாளர்களில் ஒருவன், ’நடக்க வேண்டியது தான் நடந்து விட்டதே. இனி எங்களை விரட்டி என்ன பயன்’ என்று சொல்லிக் கொண்டே சென்றுவிட்டான்.

      குடியரசுத் தலைவரை வரவேற்க, கண்காட்சி அரங்கின் வாசலில் நின்று கொண்டிருந்த ஐ.ஜி, தன்வாரியா, உளவுத் துறையின் தலைவருக்கு நடந்த விஷயத்தைச் சொன்னார். ஒன்று உறுதியாகிவிட்டது. மினிஸ்டிரோவின் கடைசி நிமிடங்கள் பயங்கரமானவை. இறந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். மற்றவர்களின் பயங்கரமான மரணங்களுக்கும், சிறையில் வதைபடுவதற்கும் ஆணையிடும் எந்த சர்வாதிகாரியும் அந்த நிமிடங்களை நினைத்துப் பார்ப்பதில்லை என்றே அவருக்குத் தோன்றியது. அவன் கனவு கண்டது போல அவர் ஆட்சியின் சாதனைகள் வரலாற்றில் குறிப்பிடப்படாமல், அவர் இறந்தது கட்டாயம் குறிப்பிடப்படும் என்று ஐ.ஜி நினைத்தார். மினிஸ்டிரோ மீது கொலை முயற்சி என்று பரவிய செய்தியால் அவரது கட்சிக்காரர்கள் கவலையுடன் அடுத்தடுத்த செய்திகளைக் கேட்பதற்காக ரேடியோவையும், டெலிவிஷனையும் பார்த்துக் கொண்டிருந்தனர். பலர் அவரது அலுவலகத்துக்கு ஓடிச் சென்றனர். அங்கே பெருங் கூட்டம் சேர்ந்துவிட்டது. பலர் குடியரசுத் தலைவரின் மாளிகையின் முன் கூடிப் பேச ஆரம்பித்தனர். ஒரு நாயகனை இழக்கப் போவதை எண்ணிக் கண்ணீர் விட்டவர்களும், எங்கே போவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர். ஆனால் எப்படி என்று யாருக்கும் தெரியாமலே காற்றில் செய்தி பரவிக் கொண்டிருந்தது. 

’ரத்தக்கறை படிந்த அவரது ஆட்சிக்காலத்தில், கலவரங்களில் இறந்துவிட்ட பலநூறு மனிதர்களின் உறவினர்கள் அவரது மரணத்தைக் கொண்டாட வேண்டுமென்று நினைத்தாலும், அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தில் அமைதியாக  இருந்தனர்’ என்று மினிஸ்டிரோவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னாளில் எழுதிய ரிட்டானிஸ்ட் பேட்டி கொடுத்தார். அதே நிகழ்ச்சியின் இன்னொரு பகுதியில் ‘மினிஸ்டிரோ ஒரு தேவதூதன் என்று வெங்கிரோ சொன்னார். ஆனால், வெங்கிரோவை ஒரு மாநிலத்தின் கவர்னராக மினிஸ்டிரோ நியமித்திருந்தார் என்பதை யாரும் அப்போது மறக்கவில்லை. மினிஸ்டிரோவின் மனைவி ’அவர் தேசத்தின் கடவுள்’ என்று பத்திரிக்கைப் பேட்டியில் கூறியபோது, அவரை ‘சாத்தானே வீட்டை விட்டு வெளியேறு’ என்று பல நாள்கள் வசைபாடிக் கொண்டிருந்ததும் ஒவ்வொரு முறையும் ஞாபகம் வந்தது. அவர் பிரதமரானது குறித்து அவர் தோழிகளிடம் பேசிய வார்த்தைகளை, இரண்டாயிரம் கிலோமீட்டர் தள்ளி ஹோட்டலில் செய்தியைப் பார்த்துக் கொண்டே அவரது தோழி எமிலி  மனதுக்குள் நினைவு கூர்ந்தார் ‘நல்ல வேலை இருபது வருடங்களாக நான் படாதபாடு பட்டேன். இனிமேல் அவர் நாட்டுமக்களைப் படாதபாடு படுத்துவார். எனக்குக் கொஞ்சம் விடுதலை கிடைத்தது. அவரது சமையல்காரன் அவர் இறந்ததை நினைத்து, தான் வருத்தப்படுவதா அல்லது வீட்டு எஜமானிக்குக் கிடைத்த விடுதலையைக் கொண்டாடுவதா என்று குழப்பம் அடைந்தான். கணவனை ‘சாத்தானே என்று வசைபாடுவது நாட்டின் அழகிய பண்பாடு. அதையெல்லாம் பெரிதாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை’ என்று கையில் விளக்கமாறுடன் எப்போது அலையும் சூஸன் சமையல்காரரிடம் சொன்னாள்.

      மினிஸ்டிரோ குண்டடிபட்ட செய்தி அடுத்த நிமிடமே அவருடைய நெருங்கிய தோழரும், மிக மோசமான போட்டியாளரும், அதிகாரத்தில் அதுவரை இரண்டாவதாக இருந்தவருமான பேனசாரோவுக்கு, வயர்லஸ் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியும் கோபமும் அடைந்து கொதித்தார். கொஞ்ச நேரம் அறைக்குள் அங்கும் இங்கும் ஒரு பூனை போல அலைந்தார். உள்நாட்டுத்துறையின் அமைச்சராக இருந்த அவர், அலுவலகத்தில் மேஜைமீது பார்த்துக் கொண்டிருந்த ஃபைல்களை மூடிவைத்துவிட்டு, கண்களை மூடி ஏதோ யோசனையில் மூழ்கினார். இது ஒரு ‘வரலாற்றுத் தருணம் என்று உணர்ந்த அவர், தன் உதவியாளருக்குப் போன் செய்து, தான் சொல்லும் வரை யாரும் தன்னைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று உத்தரவிட்டார்.

      அதிர்ச்சியில், கவலையும், வருத்தமும் மிக அதிகமாகிவிட, மனஅழுத்தம் குறைவதற்காக அந்த நேரத்தைச் செலவிடுவார் என்று உதவியாளர் நினைத்தார்.  தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்புக்கள், கைபேசி அழைப்புக்கள் எதையும் உதவியாளர் எடுக்கவில்லை. அவருடைய கைபேசியிலும் மீண்டும் மீண்டும் அழைப்புகள் வந்தன. அவர் இரண்டையும் தொடவே இல்லை. நாடு என்னாகும் என்ற கவலையும், தங்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்குமா என்ற கவலையும் அலுவலகத்தில் இருப்பவர்களிடமும், அரசியல்வாதிகளிடமும் தொற்றிக் கொண்டது. அரசியலில் ஒருவர் இடத்தைக் காலி செய்தால், அதற்கு எத்தனை பேர் முயற்சி செய்வார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். ’அவரவர் வானம் அவரவர்க்கே ஆனாலும் அடியாமல் பிடியாமல் கிடைக்க வழியில்லை’.

      பேனசாரோ அதிர்ச்சியிலிருந்து மீள முயற்சி செய்துகொண்டிருந்தார். அது அவ்வளவு எளிதாக இல்லை. மினிஸ்டிரோ உயிருடன் இருந்திருந்தால், எப்போதும் போல, அவரை ஆட்டி வைத்துக் கொண்டிருந்திருக்கலாம். சமயம் வரும் போது அவர் பதவி விலகினால், அந்த இடத்தை பேனசாரோ பிடித்துக் கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்திருக்கும். இந்தத் திட்டங்கள் சரிந்து விட்டன.  இனிமேல் ஐக்கிய மக்கள் கட்சிக்குள் போட்டிகள் தொடங்கும். அவரும் மற்றவர்களுடன் சமமாக அமர்ந்து பேச வேண்டும். இதுவரை இருந்த இரண்டாமிடம் கேள்விக்குரியதாகிவிட்டது. சதியின் பின்னால் இருப்பது யார் என்று தெரிய வேண்டும்.

      உளவுத் துறை அவரிடம் இருந்தது. அதன் தலைவர் பொலிசாரோ போனை எடுக்கும் போதே பதட்டத்தில் இருந்தார். தனது பதவி பறி போகுமோ என்ற கவலை அவருக்கு. 

      ’என்ன பொலிசாரோ, இப்படிக் கோட்டை விட்டுட்டீங்களே!’

      ’வெரி சாரி சார். ஐ ஆம் வெரி சாரி சார். நீங்கள் அனுமதித்தால், உடனே ராஜினாமா செய்கிறேன், சார். என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வி இது சார்’ இரண்டு முறை அதையே திரும்பச் சொன்னார். நீங்கள் அனுமதித்துவிடக் கூடாது என்று அதன் தொனி இருந்தது. பேனசாரோவின் திட்டங்களை அவர் யூகித்து வைத்திருந்தார்.

      மிகவும் நிதானமான குரலில், பேனசாரோ ‘இப்போதைக்கு நீங்களே தொடர்ந்து இருங்கள். சூழ்நிலை எப்படி இருக்கிறது என்று பார்க்கிறேன்’.

      ’தேசத்துக்காக, நீங்கள் அனுமதித்தால், உங்களுடன் வேலை செய்வேன்’ என்றார் பொலிசாரொ. அதன் பொருள் ‘உங்களுக்கு உதவி செய்வேன்’ என்பது என்று பேனசாரோவுக்குப் புரிந்தது. இது இன்றைய நிலையில் போதுமானது. ‘சரி அப்புறம் அழைக்கிறேன்’ என்று போனை வைத்துவிட்டார்.

      ஏற்கனவே வைத்திருந்த நிரந்தர ஆணைகளின்படி, மினிஸ்டிரோவைச் சுமந்த ஆம்புலன்ஸ் ‘சொசைடி’ மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது.  பேனசாரோவும் அங்கே செல்லத் தயாரானார். மந்திரிகள் அனைவரும் அங்கே வந்துவிடுவார்கள் என்று யூகித்தார். விளையாட்டை எங்கே எப்படித் தொடங்குவது என்று அவரது மூளையின் ஒரு பக்கம் சிந்தித்துக் கொண்டிருந்தது. இன்னும் சில மணி நேரங்களில் ‘நிஸ்ஸீயா’ நாட்டில் இரண்டு தலைவிதிகள் முடிவு செய்யப்படும். ஒன்று நாட்டின் தலைவிதி, இன்னொன்று அதன் முக்கிய தலைவர்களின் தலைவிதி. வெளியே வரும்போது, உதவியாளர் சொன்னார் ‘சார், இன்னும் மரணச் செய்தி வரவில்லை’. பேனசாரோ ‘அது சரிதான்’ என்று சொல்லிவிட்டு வாசலுக்கு விரைந்தார். ‘நான் சொல்லும் வரை செய்தி வெளிவரக் கூடாது’. உதவியாளர் சரியென்று தலையாட்டினார். மந்திரியின் உதவியாளர் மந்திரியைவிடப் பெரியவர் என்று எல்லோருக்கும் தெரியும். அவருக்கு அடிபணிவார்கள். ஏன் அவர் அலுவலகத்தின் கடைநிலை ஊழியருக்குக் கூட வணக்கம் எல்லோரும் சொல்வார்கள்.

      காரில் போய்க்கொண்டிருக்கும் போதே மன அமைதியின்றித் தவித்தார் பேனசாரோ. நேரத்தைப் பார்த்தார். பதினொன்று. இன்னும் இருபது நிமிடங்களில் ‘சொசைடி’ மருத்துவமனைக்குப் போய்விடலாம். அவரது வாழ்க்கையில் இனிமேல் ஒருபோதும் மீண்டும் வராத தருணம். இன்னொரு கவலையும் ஒட்டிக் கொண்டது. இன்னும் எத்தனைபேர் இந்தத் தருணத்திற்காகக் காத்திருப்பார்களோ? ’மருத்துவமனை வாசலில் டெலிவிஷன்காரர்களிடம் என்ன சொல்ல வேண்டும்? கட்சியின் மத்தியக் குழுவில் யார் யார் தன்னை ஆதரிப்பார்? யார் யாரைக் கொஞ்சம் தாஜா பண்ணலாம்? யார் யாரை மிரட்டிப் பணிய வைக்கலாம்?’ என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

எவ்வளவுதான் சிந்திக்க முயற்சி செய்தாலும், மீண்டும் மீண்டும் மினிஸ்டிரோவின் முகம் ஞாபகம் வந்து கொண்டிருந்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக இருவரும் பழகிய நினைவுகள் வந்தன. சண்டைகள் சச்சரவுகள், சந்தோஷமான தருணங்கள்… எல்லாம் ஒரு நொடியில் இரண்டு குண்டுகள் பட்டதில் முடிந்துவிட்டன. தன் கண்காணிப்பில் இருக்கும் துறையில் எங்கே தவறு நிகழ்ந்தது? ’பொக்கிஷமாக இத்தனை ஆண்டுக் காலம் அவரது அரசியல் நடவடிக்கைகளை வடிவமைத்து, ஒன்றுமறியாத ஒரு அப்பாவி மனிதரை பெரும் ஒழுக்கவாதியாக, சிந்தனைவாதியாக, தீர்மானமாக முடிவெடுக்கிறவராக, எதையும் செய்து முடிக்கும் திறனுள்ளவராக வடிவமைத்துப் பொது வெளியில் தோற்க முடியாத ஆளுமையாக வளர்த்தெடுத்த பேனசாரோ கனவு, திடீரென்று கீழே விழுந்துவிட்டது. அத்துடன் நானும் விழுந்துவிட்டேனா?’ உலகத்தில் பெரும் சக்தியுடன் நடமாடிக் கொண்டிருந்த டைனோசர்கள், ஒரே சமயத்தில் அழிந்து போயின என்று படித்தது ஞாபகம் வந்தது. மத்தியக் குழுவில், ’அரசின் தோல்விக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் விலக வேண்டும், அப்போதுதான் மக்களுடைய நம்பிக்கையைத் தக்கவைக்க முடியும்’ என்று வாதிட்டு, அவரைக் கீழே தள்ள ராபர்ட் பயாஸ் முயற்சி செய்யக் கூடும். நடோசிரோ அல்லது ராக்பெரோ இருவரும் தன்னை முழுவதுமாக ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. சிலோண்டிரோ, பைலாந்தினா இருவரும் மதில்மேல் பூனைகள். அவர்களைத்தான் வளைக்க வேண்டும். இருவரும் பெரிய கனவுகளை வைத்திருப்பவர்கள். மற்றவர்கள் மூவரையும் நிலுவையிலிருக்கும் பொய் வழக்குகளை வைத்து அல்லது பதவிகளைக் கொடுத்து அல்லது கோடிகளைக் கொடுத்துப் பணியவைத்து விடலாம்.

      மருத்துவமனையின் வி.ஐ.பி பிரிவின் ஐ.சி.யு வாசலில் டீன் ‘செல்லார்மா’ நின்றிருந்தார். அவர் முகத்திலிருந்து தெரிந்துவிட்டது. ஒன்றும் பயனில்லை.  உள்ளே போய்க்கொண்டே யோசித்தார். யாரும் எதுவும் பேசவில்லை. பேச எதுவுமில்லை.

                              இயல் 2

பத்தொன்பது வயதில் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போதே பேனசாரோ அரசியலில் நுழையவேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். பட்டப் படிப்பு முடிந்ததும் கட்சியில் சேர்ந்தார். ஐக்கிய மக்கள் கட்சியில் சேர்ந்த சில வருடங்களில், கட்சியின் முழுநேர ஊழியராக இருந்த மினிஸ்டிரோ அறிமுகமானார். மினிஸ்டிரோ பள்ளி இறுதித் தேர்வுடன் படிப்பை முடித்துக் கொண்டது பேனசாரோவுக்குத் தோதாக இருந்தது. மினிஸ்டிரோ, நேர்மையான, எளிய, வெளிப்படையான மனிதராக இருந்தார். பேனசிரொ நேர் எதிர். யுக்தி, குயுக்தி, வெல்லும் தந்திரம், இவை இயல்பாகவே இருந்தன. இருவரும் ஒருவருக்கொருவர் ஒத்திசைந்து களமாடலாம் என்று புரிந்து கொண்டனர். மினிஸ்டிரோ பெருங்கனவுகள் கொண்டவராக இருந்தார். மரபான ஒழுக்க விதிகளைப் பேணுகிறவராக இருந்தார். பேனசாரோ, எந்த ஒழுக்க விதிகளையும் பின்பற்றுவது தன்னால் முடியாது என்று அறிந்தவர். ஆனால் அரசியல் விளையாட்டின் விதிகளை அவர் அறிந்திருந்தார். எந்த அறங்களையும் பின்பற்றாமல் முன்னேறுவதே அதன் ஒரே விதி. அவற்றைத் தமக்குச் சாதகமாக எப்படிப் பயன்படுத்துவது என்றும் அறிவார். இதைப்பற்றியெல்லாம் கட்சி கவலைப்படாது. தேர்தலில் வெற்றி பெறுவதே அதன் லட்சியம் அதற்கான யுக்திகளை, குயுக்திகளை பேனசாரோ அறிந்திருந்தார். ஆனால் பொதுவெளியில் தன்னால், ஒரு முரடனாகத்தான் வெளிப்பட முடியுமே தவிர, ஒழுக்கவாதியாக படம் காட்ட முடியாது என்பதைப் புரிந்துகொண்டார். அதற்கு மினிஸ்டிரோ பயன்படுவார். இதனால் இந்த ஜோடி சிக்கெனப் பற்றிக் கொண்டது. கட்சியையும் பிடித்துக் கொண்டது. மினிஸ்டிரோவை முன்னிருத்தி, களமாடத் தொடங்கினார் பேனசாரோ.  

அடுத்த பத்தாண்டுகளில் அந்த ஜோடி கட்சியில் இணையற்ற, தவிர்க்க இயலாத முறையில் அதிகார அடுக்கின் மேல்நிலையை அடைந்துவிட்டது.  அவர்களுடைய எதிரிகளும், கட்சிக்குள் அவருக்குப் போட்டியாக இருந்தவர்களும் ஒவ்வொருவராக ஓரங்கட்டப்பட்டனர். பின்னாளில் பெரிய கோடீஸ்வரராக ஆகி, நாட்டில் பெரும் பணக்காரராகத் திகழும் அடானொ பின்வாரோ, அப்போது சிறு வணிகராகப் பெரும் வெற்றி பெற்று வந்தார். அவர் இந்த ஜோடிக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவிகள் செய்தார். இந்த ஜோடிக்கும் இப்படி ஒரு பணப்பெட்டி தேவைப்பட்டது. அடானொ பின்வாரோ அரசியலில் ஒரு திசைகாட்டியாக அவர்கள் உதவி செய்தனர். காற்று இவர்கள் திசையில் அடிக்கத் தொடங்கிவிட்டது. அது நேற்றுவரை இவர்களுக்குச் சாதகமாகவே அடித்தது. அதில் பேனசாரோவின் உழைப்பும் பங்களிப்பும் மிக மிக அதிகம். முதல் முறையாக அரசியல் வாழ்வில் அவர் புயலில் சிக்கிக் கொண்டார். அது எப்படி வந்தது எப்போது வந்தது என்ற தகவல் கூட இன்னும் அவரிடம் இல்லை.

பேனசாரோவின் மூலதனம் திட்டமிடுதல். ஆனால் அவரது எதிரிகள் அதைச் ‘சதிச்செயல்கள்’ என்றே விவரித்தனர். மினிஸ்டிரோவின் பெரும் மூலதனம் ‘பேச்சாற்றல்’. அதன் மூலம் உலகை மாற்றிவிடலாம் என்று அவர் நம்பினார். மனிதர்களும் அவர் பேச்சுக்களை நம்பினர். ஏனெனில் அது அவர்கள் பாணியில் இருந்தது. அவரது எதிரிகளோ அவர் பொய்களை அள்ளிவிடும் மாய்மாலக்காரர் என்று உரக்கக் கத்தினர். மிகவும் மோசமான பொருளாதாரச் சூழலில் வாழும் மக்களுக்குக் கனவுகளைக் காட்டுவது முக்கியம். அது தரும் சுகம் வேறெதுவும் தருவதில்லை என்று மினிஸ்டிரோ நினைத்தார். உண்மை மிகக் கசப்பானது என்று எல்லோரும் ஒப்புக் கொள்வர். அதையே சொல்லிச் சொல்லி என்ன பயன்? மனிதர்களுக்கு பறக்க வேண்டும். சிறகுகள் வேண்டும். மினிஸ்டிரொ ஆளுக்கொரு சிறகுகள் வழங்கிவிட்டார்.  தரையிறங்க முடியாத, தரையிறங்கத் தேவையில்லாத சிறகுகள். அவை பறப்பதற்கானவை அல்ல. பறப்பது போன்ற உணர்வைத் தருபவை. அந்தச் சிறகுகள் வெண்சாமரம் வீசிய காற்றில் அவர் அரசியலில் உயர உயரப் பறந்து கொண்டிருந்தார். கட்சியின் ஊர்த் தலைவரானதிலிருந்து, வட்டத் தலைவராகி, மாவட்டத் தலைவராகி, மாநிலத்தலைவராகி அதற்கப்புறம் குடியரசுத் தலைவராகிவிட்டார்.  பேனசாரோவும் கட்சியின் இரண்டாமிடத்தைப் பிடித்துக் கொண்டார். 

இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன்னால், கருப்பர்களை ஒழிக்க வேண்டும் என்பதே மினிஸ்டிரோ, பேனசாரோ ஜோடியின் கொள்கை முழக்கமாக இருந்தது. பட்டினியும், பசியும் வேலையின்மையும், பெரும் ஏற்றத் தாழ்வுகளும் தாண்டவமாடும் நாட்டில் மக்களின் கவனம் கருப்பு-வெள்ளைத் தோல்களின் வேற்றுமைகள் வெளிப்படையாகத் தெரிந்தாலும், கருப்புத் தோல் மோசமானது என்றே எல்லோரும் நினைத்தாலும், அதை யாரும் அரசியல் வெளியில் பேசவில்லை. பேசினாலும் அது அடக்கியே வாசிக்கப்பட்டது. ஆனால், பேனசாரோவும், மினிஸ்டிரோவும் தோலின் வண்ணம் வெகு எளிதாகத் தெரியும் வேறுபாடு என்பதாலும், அதன் மூலம் மனிதர்களைப் பிரிவு படுத்துவது எளிது என்பதாலும் அதைக் கையில் எடுத்துக் கொண்டனர். மனிதர்களுக்கு அடுத்தவர்களை விட தான் ஒரு படி மேல் என்று காட்டும் ஆர்வம் வெறியாக மாற வெகுநேரம் ஆகாது. உடலில் எல்லாச் செயல்பாடுகளும் ஒன்றுதான் என்பது எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது. பிரித்துக் காட்ட வேண்டும் என்று முடிவுகட்டிவிட்டால் காரணங்கள் ஆயிரத்தைக் கண்டுபிடித்துவிடலாம்.

ஒரு கூட்டத்தில் மினிஸ்டிரோ பேசும் போது சொன்னார் ‘வெள்ளைத் தோலர்கள் சூரியனிலிருந்து பிறந்தவர்கள். கருப்பர்கள் பாதாள லோகாத்திலிருந்து பிறந்தவர்கள்”. அதற்குப் பலத்த வரவேற்பு இருந்தது. அது பிரச்சார வெற்றியாகிவிட்டது. பத்தாயிரம் கோடி முறை மீண்டும் மீண்டும் அதையே சொன்னார்கள். அதுவே கொள்கையாகிவிட்டது. உலகிலேயே பெரியதாக வெள்ளைத் தோலர்கள் கூடிப் பேச ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. அதில் மினிஸ்டிரொவின் தங்கச் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. ’அது சிலையல்ல உங்கள் மனதில் உள்ள கலை’ என்று விளம்பரம் செய்யப்பட்டது.  பேனசாரோவின் சிந்தனை இந்த இடத்தில் தடைப்பட்டது. கூட்ட நெருக்கடி காரணமாக கார் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.

சொசைடி மருத்துவமனையைக் கார் நெருங்கிவிட்டது. கட்சியின் பல கோடி உறுப்பினர்கள் மருத்துவமனையை நோக்கி வரத் தொடங்கினர்.  மருத்துவமனையின் வாசலில் பெருங்கூட்டம்.  வாசலை இடித்துக் கொண்டு கூட்டம் உள்ளே செல்லத் துவங்கியது. ‘அவர் கடவுள், அவர் சாக மாட்டார், நாங்களே சென்று காப்பாற்றுவோம்’ என்று பல வெறியில் கூச்சலிட்டனர். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவமனைக்குள், அவரைத் தேடி நுழைந்து கொண்டிருந்தது. ஆற்றில் பெரும் வெள்ளம் வரும்போது, எல்லாத் தடைகளும் உடைந்து நொறுங்குவது போல, கதவுகள், வார்டுகள், திருப்பங்கள், தடுப்புகள் எல்லாம் கூட்டத்தின் நெரிசலில் உடைந்து நொறுங்கின. ஐ.சி.யூ.வின் வி.ஐ.பி அறையில் கண்ணாடிப் பெட்டியில் அப்போதுதான் வைக்கப்பட்ட அவரது சடலத்தைக் கண்ட கூட்டம் பெரும் ஆவேசம் அடைந்தது போல் கூப்பாடுகள் போட்டது. ‘டாக்டர்கள் எல்லாம் சேர்ந்து அவரைக் கொன்றுவிட்டார்கள்’. அவர்கள் தங்கள் வாழ்வில் நடப்பதுதான் அவருக்கும் நடந்திருக்கும் என்று நம்பினர். வேறு எப்படி நம்ப முடியும்? தெய்வமாக இருந்தவர், ஒரே குண்டடி பட்டு எப்படி இறந்திருப்பார்? நம்ப முடியாததாக இருந்தது. சினிமாக்களில் பல கதா நாயகர்கள், எத்தனையோ குண்டடிகள் பட்டும் மீண்டு வருவதை பார்த்திருக்கிறார்கள். மினிஸ்டிரோ என்ன, சாதாரணப்பட்டவரா?

அறையில் கூட்டம் பெருகிக் கொண்டே இருந்தது. கண்ணாடிப் பெட்டி வைக்கப்பட்ட அறை முழுவது மனிதர்கள் நெருக்கி அடித்துக் கொண்டு சென்றனர். இடப் பற்றாக் குறையால், கண்ணாடிப் பெட்டியின் முன் நின்றவரகள் அதன் மீது தள்ளப்பட்டார்கள். அதன் மீது விழுந்தவர்களை மீட்க ஒருவன் கைகளை நீட்டி அழுத்திய போது கண்ணாடிப் பெட்டியின் மேல்புறம் கீறி, ‘டப்’பென்ற ஒலியுடன் மூன்றாக உடைந்தது. அவன் கையில் ரத்தம் வழிந்தது. அந்தக் கண்ணாடியை அப்புறப்படுத்த ஒருவன் கைவிட்ட போது, ‘மினிஸ்டிரோவின் கைகளைப் பிடித்துவிட்டான். அது அவர் உடலின் கை என்பது அவனுக்குத் தெரியவில்லை அவனுக்கு முன்னாலும் ஒரு ஆள் மறைத்து நின்று கொண்டு பெட்டியில் சாய்ந்து கொண்டிருந்தான். மினிஸ்டிரோவின் கைகளைப் பிடித்து இழுத்தவன் கிழே விழுந்ததும், அவரை வைத்திருந்த கண்ணாடிப் பெட்டியும் கீழே விழுந்தது. அதற்கப்புறம் ஒரே களேபரமாகிவிட்டது. கண்ணாடிப் பெட்டியை பலர் இழுக்க. நிலைதடுமாறி விழுந்த மூன்று பேர், அவரது உடலை இழுக்க, எல்லோரும் நிற்கத் தடுமாறிக் கொண்டிருந்தனர். என்ன நடக்கிறது என்று தெரியாமலே கூட்டத்தில் இருந்தவர்கள் தாங்கள் விழாமல் இருக்க எதையாவது பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார்கள். கீழே விழுந்துவிட்ட அவரது உடலைச் சிலர் தூக்க முயன்றனர். ஒவ்வொருவரும் வெவ்வேறு திசைகளில் வெறித்தனமாய் இழுத்தனர். தங்கள் தலைவர் கீழே விழுந்துவிடக் கூடாதே என்ற எண்ணத்தில் உடலைத் தொடவும், இழுக்கவுமாக இருக்க, பின்னாலிருந்து பலர் தள்ள, சில அவருடைய உடலைத் தொட்டுப் பார்க்க விரும்ப, அதைச் சிலர் தடுக்க, அவருடைய உடலின் பாகங்கள் ஒவ்வொருவர் கைகளிலும் சிக்கிப் பிய்ந்து கொண்டிருந்தது. எல்லாரும் அவருடைய  விசுவாசமான தொண்டர்கள்தான். விசுவாசம் மிகுந்துவிட்டால் என்ன ஆகும்? அவர் உயிரோடு இருக்கும் போது கனவில் கூட நினைத்துப் பார்த்திராதது நடந்தேவிட்டது. இந்த இழுபறியில் அவருடைய வலது கை ஒருபுறத்திலும், இடது கை ஒரு புறத்திலும், கால்கள் ஒவ்வொன்றும் ஒரு புறததிலுமாக அவர் சிதைந்து போனார். இது அவர்களில் பலருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனைவரும் அவரைக் கடவுளாகக் கருதியவர்கள். அது அவரது உடல் என்றே அவர்களுக்குத் தெரியவில்லை.  அச்செயலை நினைத்து இன்னும் பலர் பல வருடங்கள் வருந்துவார்கள் என்பது அப்போது புரியவில்லை. இந்தக் கூட்டத்துக்குப் பயந்து போய் தூரத்திலிருந்த நாற்காலியின் மேல் நின்று கொண்டு எல்லோரையும் கூச்சலிட்டு, வெளியே போகச் சொல்லிக் கொண்டிருந்த டாக்டர் மன்பரிஸ் இதைப் பின்னாளில் டெலிவிஷன் பேட்டியில் சொன்னார். அப்போது அவருடன் பேசிய மனமருத்துவர், ’மனிதனைக் கடவுளாக்குவதன் விளைவு இது’ என்று விளக்கினார். அது மினிஸ்டிரொ இறந்து பலவருடங்கள் கழித்தே ஒளிபரப்பாகியது.

கொஞ்ச நேரம் டாக்டரின் கூக்குரலைக் கேட்ட கூட்டத்தில் சிலருக்கு விஷயம் புரிந்தது. யாரும் எதிர்பாராதது நடந்துவிட்டது என்று தெரிந்ததும் கூட்டம் ‘ஓ வென்று கூச்சலில் இறங்கியது. முன்னால் நின்றவர்களை சில அடிக்கப் போக, நாங்கள் என்ன செய்வது என்று அவர்கள் கேட்க, குழப்பத்தின் உச்சநிலையில் டாக்டர அப்படியே உட்கார்ந்து விட்டார். அங்கே நின்ற அனைவரும் ஓங்கிய குரலில் அழத் தொடங்கினர்.

நடந்த விபரீதம் பேனசாரோவின் காதுகளை எட்டிய போது அவர் வாசலுக்கு வெளியே இருந்து உள்ளே வர முயன்று கொண்டிருந்தார். எத்தனை செக்யூரிடிகள் வளைத்துக் கொண்ட போதும், கூட்ட நெரிசலில் அவரால் நகரக் கூட முடியவில்லை. அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. நேற்றுவரை உலகத்தின் மிகச் சிறந்த ஆட்சியாளராக வர்ணிக்கப்பட்ட மினிஸ்டிரோ அதே மக்களின் கட்டுக்கடாங்காத மோகத்தின் காரணமாக, உடல் சிதைத்து துண்டு துண்டாகிவிட்டார். அதை நினைத்து பேனசாரோவுக்கு, எல்லாம் கைமீறிப் போவது போல் தோன்றியது. காலையிலிருந்து ஒன்று கூட சரியாக நடக்கவில்லை. இந்த அராஜகத்திலுருந்து தான் மீள எவ்வளவு நாளாகும் என்று யோசித்தார். அவன் மனம் கலங்கியது. அடுத்த குடியரசுத் தலைவராக வேண்டும் என்ற கனவு கண்முன்னாலேயே கலைந்து கொண்டிருந்தது. அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அதற்கு முந்தின நாள்வரை மினிஸ்டிரோவும் இந்த நாடும் தன் திட்டங்களுக்கு ஏற்றபடி ஆடிக் கொண்டிருந்தனர். வலிமை மிக்கதாக முந்தைய கணம் வரை தோன்றிய உடல் வலிமையற்று அசையக் கூட முடியாமல், தொய்ந்து விழுந்தது. அவர் கண்கள் சொருகி, கீழே சாய்வதைப் பார்த்த செக்யூரிடிகளில் ஒருவன் தாங்கிப் பிடிக்க முயன்றான். ஆனால் அவர் கீழே விழுந்துவிட்டார். அவர் மீது கூட்ட நெரிசலில் பலர் சாய்ந்து விழுந்துவிட்டனர். அவர் கண்ட கனவுடன் அவரது உயிரும் போய்விட யத்தனித்துக் கொண்டிருந்தது. இன்றைய நிலையில் இருந்து தன்னால் மீள முடியாது என்று அவருக்குப் புரிந்தது.                                                    

  இயல் 3 

ரேடியோவில் சோகமான இசையை ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள். டெலிவிஷனில் மருத்துவமனை வாசலில் நின்ற கூட்டம் உள்ளே நுழைய முட்டி மோதிக் கொண்டிருப்பதைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். மினிஸ்டிரோ சுடப்பட்டுக் காயப்பட்டுவிட்டார் என்பதற்கு மேல் எதுவும் பொதுமக்களில் யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. தெரியக்கூடாது என்பது உள்துறையின் நிலைப்பாடாக இருந்தது. தகவல் ஒலிபரப்புத் துறையினர் ஒருபுறம் மினிஸ்டிரோவின் பழைய வீடியோக்களை எடுத்துக் கோர்வையாக்கி ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். ஒரு வேளை …!? ஆனால் அவர் சுடப்பட்ட விதம் கொஞ்சம் புனைவுகளுடன் மெதுவாக வதந்தியாகப் பரவிக் கொண்டிருந்தது. மருத்துவமனையில் மினிஸ்டிரோவின் உடல் வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்தவர்களை அப்படியே கூட்டிச் சென்ற போலிஸ் மருத்துவமனையின் இன்னொரு ஹாலின் வைத்துக் காவல் காத்துக் கொண்டிருந்தனர். அவர் உடல் சிதைந்த விதம் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாதென்று அந்த ஆதரவாளர்களிடம் சொல்லி வைத்தனர். வெளியில் தெரிந்தால், அவர்கள் அனைவர் மீதும் கிரிமினல் வழக்குப் போட வேண்டியிருக்கும். சிறைத்தண்டனையும் கிடைக்கும். அமைதியாக அவர்கள் மாலை வரை அடைந்து கிடந்தார்கள். அவர்களுக்கு உணவும், தேநீரும் வழங்கப்பட்டன.

பேனசாரோ குடியரசுத் தலைவராகி விடுவார் என்றே பலரும் அன்று நம்பினர்.  ஊடகங்களில் அந்த சாத்தியம் இருக்கலாம் இல்லாமலும் போகலாம் என்ற விவாதம் நடந்து கொண்டிருந்தது. கூட்டத்தில் நசுங்கிக் கீழே விழுந்த பேனசாரோவை ஆம்புலன்ஸிலிருந்து வி.ஐ.பி. எமெர்ஜென்ஸி வார்டுக்குக் கொண்டு செல்லும் போது அவர் பேச்சு மூச்சற்றுக் கிடந்தார். அடிமட்ட மருத்துவ ஊழியர்கள் அவர் போய்ச்சேர்ந்துவிட்டார் என்றே நினைத்தனர். அவரிருக்கும் அறைக்கு டாக்டர்கள் மட்டுமே போய்வந்தனர். ஆனால் ஏற்கனவே இருக்கும் நடைமுறைப்படி, மருத்துவமனை டீன் உளவுத் துறைத் தலைவருக்குச் சொல்லிவைத்தார். தங்கள் மீது ஏதும் பழி வந்துவிடக் கூடாது என்பதில் அவர் உஷாராகியிருந்தார். தலைவர்களைப் பற்றிய உண்மைகள் தெரிவது தேச நலன்களுக்கு உகந்ததல்ல என்பது அரசின் கொள்கையாக இருந்தது.

இதற்குள் அதிகார அடுக்கில் மூன்றாவதாக இருந்த டீஸ்டிகானோவுக்கு உளவுப் படையினர் தகவல் கொடுத்தனர். அதை சில மணி நேரங்கள் ரகசியமாக வைத்துக் கொளளும் படி அவரைக் கேட்டுக் கொண்டனர். அவருக்கும் புரிந்துவிட்டது. அதிர்ஷ்டம் அவர் கதவைத் திறந்துவிட்டது. உளவுத் துறைத் தலைவரிடம் ‘எவ்வளவு நாள் ஆகும்?’ என்று கேட்டார். ’ஒரு மாதத்துக்கு மேல்’ என்று பதில் கிடைத்தது. ஒரு மாதம் எனபது அரசியலில் மிக நீண்ட காலம் என்று நினைத்தார் டீஸ்டிகானோ. அவர் மினிஸ்டிரோவையோ, பேனசீரோவையோ பார்க்கப் போகவில்லை. நேராகக் குடியரசுத் தலைவரில் மாளிகைக்குச் சென்று, அரசின் தலைமை அதிகாரியை அழைத்தார். ராணுவத் தளபதையையும் வரச் சொல்லிவிட்டுக் காத்திருந்தார். ‘உடனே குடியரசுத் தலைவராக நான் பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்’ என்றார். ’அதுவரை நகரில் எந்த அரசியல்வாதியும் அதிகாரியும் எங்கும் நகர முடியாதபடி போக்குவரத்தைத் தடை செய்யுங்கள். எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது.’ என்றும் ஆணையிட்டார்.

இரவு எட்டரை மணிக்கு ரேடியோவிலும் டெலிவிஷனிலும் டீஸ்டிகானா உரையாற்றினார். ‘நமது நாட்டின் ஒளி மங்கிவிட்டது. மறைந்து விட்டது. நமது நாட்டின் எதிரிகள், துரோகிகள் அவரை நம்மிடமிருந்து பிரித்துவிட்டனர். இந்த இருண்ட நேரத்தில், மாண்புக்குரிய பேனசீரோவும் உடலநலமில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார். வேறு வழியின்றி இன்னொரு குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை தற்காலிகமாக நான் குடியரசுத் தலைவராகப் பணியேற்றுக் கொள்கிறேன்’ அவர் உரையாற்றி முடித்ததும் பெரும் முதலாளிகள் பெருமூச்சுவிட்டனர். அதிகாரிகள் தற்போதைக்கு இந்த ஆட்சி தொடரும் என்று மகிழ்ச்சியடைந்தனர். நாட்டைக் காப்பாற்றி விடலாம் என்று நினைத்தனர்.  ஆனால் பெரும்பாலான மக்களுக்கு, அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய வாக்காளர்களுக்கு எந்த உண்மையும் சொல்லப்படவில்லை. அவர்களுக்குத்தான் எல்லா விஷயங்களும் கடைசியில் தெரியவரும். சில நேரங்களில் தெரியாமலேயே போய்விடும். அவர்களும் அதுபற்றிக் கவலைப் படுவதில்லை. ஏனென்றால் அவர்கள் தான் நாட்டின் மன்னர்கள். எந்தக் கவலையும் இல்லாதவர்கள். ஏழை எளியவர்களுக்கு மாதாமாதம் பல பொருட்களை விலையின்றி வழங்கிக் கொண்டிருந்த கொடைவள்ளல் மறைந்துவிட்டார். அந்தப் பொருள்களில் எல்லாம் மினிஸ்டிரோவின் படம் அச்சடிக்கப்பட்டிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் இல்லை. மக்கள் அவர் கடவுள் அனுப்பிய தூதர் என்று அறிவார்கள் என்று வேறுசில பேசிக் கொண்டார்கள். கள்ளச் சாராயப் பெருமுதலாளிகளும், மினிஸ்டிரோவின் மோசமான சதிக்குத் துணைநின்ற அவரது அடியாட்களும் துதிபாடிகளும், அவர் மூலம் தங்களுக்குக் கிடைத்த பெருமதிப்பிலான சொத்துக்களையும் நிலபுலன்களையும், வியாபாரம் என்ற பெயரில் தாங்கள் அடித்த கொள்ளைகளையும் இழந்துவிட நேருமோ என்று பயத்தில் உறைந்துபோய், அடுத்துக் குடியரசுத் தலைவரகிறவரை எப்படி வளைத்துத் தங்களுடன் சேர்த்துக் கொள்வது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.   

தெருக்களில் வலுவான, பெரிய, பல கட்சிகளின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. மினிஸ்டிரோவின் திறமையற்ற ஊழல் மிகுந்த ஆட்சியைத் தினமும் மிகக் கடுமையாக விமரிசித்துக் கொண்டிருந்த கட்சிக் கொடிகளும் அவ்வாறே பறந்தன. அவர்களுக்கு அரசியல் எதிரியாக மினிஸ்டிரோ இருந்தாலும், அவர்களது நாயகனாகவே அவர் இருந்தார்.  மக்களிடம் அதீத செல்வாக்குப் பெற்ற எல்லாச் சர்வாதிகாரிகளும் செய்யும் எல்லாவற்றையும் அவர் செய்துகொண்டிருந்தார். அவருடைய அரசியல் எதிரிகளூம் தங்கள் கட்சியின் மூலமாக அதையே செய்ய நினைத்திருந்தனர். இறந்தவர்களை வசை பாடுவது நாகரீகமில்லை. தாங்கள் சாகும் போது இவ்வாறு நிகழாமல் இருக்க வேண்டும் என்பதே அவர்களது பிரார்த்தனை. 

நாட்டின் ஆட்சிக் குழுவின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மினிஸ்டிரோவுக்கு அடுத்தது யார்? இதற்குள் பிய்ந்து போயிருந்த மினிஸ்டிரோவின் உடல் பாகங்கள் இணைந்தது போல் அடுக்கப்பட்டு, அவரது தலைமட்டும் தெரியுமாறு உடலில் துணி போர்த்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டுக் கொண்டிருந்ததாக அதிகார வரிசையில் மூன்றாவதாக இருந்த டீஸ்டிகானோ கூட்டத்தில் அறிவித்தார். கொஞ்ச நேரம் நிலவிய அமைதிக்குப் பின் பேசிய சிலொண்டிரோ… அவருக்கடுத்து தான் குடியரசுத்தலைவராக வேண்டுமென்று மினிஸ்டிரோவும், பேனசாரோவும் ஏற்கனவே பேசி முடிவெடுத்து வைத்திருந்தாகச் சொன்னார். அதை மற்றவர்கள் யாரும் எதிர்க்கவோ, மறுக்கவோ, ஆமோதிக்கவோ இல்லை. புதியதாக, தன் சிவபூஜையில் கரடி நுழைந்ததை எதிர்பார்த்திராத டீஸ்டிகானோ, உணர்ச்சி மேலிட அவரை இடைமறித்து, அப்படி எல்லாம் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை என்று உறுதிபடக் கூறினார். டீஸ்டிகானோவுக்குப் பின்னால் நின்றிருந்த யாரையோ பார்த்து சிலொண்டிரோ கையசைத்ததும், சில நிமிடங்களில், உளவுத்துறையின் தலைவர் பொலிசாரோ உள்ளே நுழைந்தார். சிலொண்டிராவின் அருகில் அவர் சென்றபோதே, டீஸ்டிகானோவுக்குப் புரிந்துவிட்டது. அவர் எழுந்து வெளியே செல்ல முயன்றார். ஆனால், பொலிஸாரோ அவரிடம் ‘சார், நாட்டின் மிக முக்கியமான தலைவர் நீங்கள். புதிய குடியரசுத் தலைவர் நியமிக்கப்படும் இந்த நேரத்தில் உங்கள் ஆதரவைத் தெரிவிப்பது நீங்கள் இந்த நாட்டுமக்களுக்குச் செய்யும் சேவை’ என்று உறுதியான குரலில் வேண்டுகோள் வைத்தார். அவருடைய குரலில், ஆணையிடும் தொனி இருந்ததாக டீஸ்டிகானோவுக்குத் தோன்றியது. அதற்குப் பொருள் என்ன என்று அவருக்குத் தெரியும். அதற்கு மேல் யாரும் எதுவும் பேச முயற்சிக்கவில்ல்லை.

சிலொண்டிரோ நாட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய உரையைத் தயார் செய்துகொண்டிருந்தார். எல்லோரும் முக்கியமாக அதிகம் சொத்துக்கள் வைத்திருந்த, பெரும்பாலோனோர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். ‘மக்களாட்சியில் எது நடக்கிறதோ இல்லையோ, ஆட்சியாளர்கள் மாறும் போது வன்முறை வெடிப்பதில்லை. இப்போதும் அப்படி நடந்தால் மக்களாட்சி காப்பாற்றப்பட்டுவிடும் என்று எல்லோரும் மனநிறைவு கொண்டார்கள். இல்லையென்றால், கலவரம் ஏற்பாட்டால், சொத்துக்கள் சூரையாடப்படும் என்ற பயம் இருந்தது. மற்றவையெல்லாம் எப்போதும் போலவே நடந்தன. மக்களாட்சி காப்பாற்றப்பட்டுவிட்டது என்பது அன்றைய செய்திகளில் முதன்மைச் செய்தியாக ஒளிபரப்பானது. எல்லோரும் அவரவர் வேலையைப் பார்த்து கொண்டிருந்தார்கள்.  அவர்கள் நிலையில் ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை என்பது மட்டும் அவர்களுக்குப் புரிந்திருந்தது.

                        *****

வேலு இராஜகோபால்

இதுவரை சுமார் பதினைந்து கதைகள் இணைய, அச்சுப் பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன. உதாரணமாக, நவீன விருட்சம், அம்ருதா, அமுத சுரபி, மயிர் இணைய இதழ் கல்கி ஆன்லைன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *