“கிருஷ்ணா புத்தகத்தை எல்லாம் எடுத்து உன் பையில் வை. பென்சில் பெட்டியையும் எடுத்து வை. பாப்பா எடுக்கிறா பாரு, கிழிஞ்சு போச்சுன்னா …”

“சரிம்மா”

கிருஷ்ணா ரொம்ப மகிழ்ச்சியாகவே தன் புத்தகங்களை எடுத்து உள்ளே வைத்தான். 

இந்த குட்டிப் பாப்பா வந்த பிறகு, அம்மா அப்பா இருவருமே சந்தியா பாப்பாவுக்கு தான் ரொம்ப கவனம் செலுத்துகிறார்கள் என்ற ஆதங்கம் கிருஷ்ணாவுக்கு மிகவும் உண்டு.

ஆனாலும் இந்த ஒரு தருணம் –பாப்பா தன் புத்தகங்களை எடுத்து கிழித்து விட வரும் — இந்த ஒரு தருணம் கிருஷ்ணாவுக்கு ரொம்ப மகிழ்ச்சியான தருணம் .

“வீட்டுப்பாடத்தை முடி. தமிழ் புத்தகத்தை எடுத்து, எழுத்துக் கூட்டி படி” என அம்மா மாலை முழுதும் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பது போய்,  “பாப்பா புத்தகத்தை கிழித்து விடுவாள். எல்லாவற்றையும் உள்ளே வை.” என்று சொல்ல ஆரம்பித்து விட்டார் .

அதனால் தினமும் மாலையில் படிக்கும் நேரம் கணிசமாக குறைந்தது.

“கிருஷ்ணா பாப்பாவோட விளையாடு. இதோ உனக்கு பால் எடுத்துகிட்டு வரேன்!”

“சரிம்மா .”

சந்தியாவை முதுகில் ஏற்றிக்கொண்டு யானை அம்பாரி போவான். மெல்ல ஓடவிட்டு விரட்டி பிடிப்பான்.  பந்து மட்டையுடன் கொஞ்ச நேரம்.

ஆமாம்! கொஞ்ச நேரம் தான்! சந்தியா பாப்பாவோடு கிருஷ்ணாவால் கொஞ்ச நேரம் தான் சண்டை இல்லாமல் விளையாட முடியும்.

“ஏய்! பாப்பா, இங்க உட்காரு!”

“ஏய்! சந்தியா! பந்து இப்படி போடு “

“சந்தியா! ஏய் லூசு !”

பாப்பாவுக்கு அடி உதை கிள்ளு தாராளமாக விழும்.

சந்தியா அழும் சத்தம் கேட்டு அம்மா குரல் கொடுப்பாள்.

“கிருஷ்ணா! சின்ன பாப்பா தானே! நம்ம பாப்பா இல்லையா? அழ விடாத “

“சரிம்மா” என்று சொல்லியபடியே கிருஷ்ணா நன்றாக சந்தியாவின் தொடையில் கிள்ளி விடுவான்.

பாப்பா அழும்போது, “அழாத அழாத” என்று சமாதானம் செய்வதுபோல, நன்றாக நெருங்கி அமுக்குவான் .

அம்மா வந்து சமாதானம் செய்ய வேண்டும் .

இன்றும் அதே காட்சிகள் தான் அரங்கேறிக் கொண்டிருந்தன.

அம்மா சமையலறையில் இருந்து வெளியே வந்தாள்.

இருவரையும் பிரித்து சமாதானம் செய்துவிட்டு, “கிருஷ்ணா! மாமா, அத்தை எல்லாரும் வராங்க இல்ல? வடை செய்யணும், பாயசம் வேற! உனக்கும் பிடிக்கும் இல்ல?”

“அம்மா எனக்கு வட வேணும்மா வடை தாம்மா “

“உனக்குத்தான் முதல்ல தருவேன். பாப்பாவ அழவிடாம பாத்துக்கோ .”

பொம்மைகளை எடுத்து போட்டாள்.

அண்ணனும் தங்கையும் அடுத்த ரவுண்டு விளையாட ஆரம்பித்தார்கள்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் அழுகை ஆரம்பித்தது.

“டேய் ! ஒரு நாள் பொறுமையா விளையாட மாட்டியா ?” என்றபடி வெளியே வந்த அம்மா, கையில் மரக்குதிரை பொம்மையுடன் ஆக்ரோஷமாக நிற்கும் சந்தியாவையும் அடி வாங்கிக் கொண்டு கீழே கிடக்கும் கிருஷ்ணாவையும் பார்த்ததும் திட்டுவதை நிறுத்திவிட்டு வாயை மூடிக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

ஆரம்பித்துவிட்டது அடிதடி 2.0.

++

கமலா முரளி

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர்  திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.

ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். சென்னை, மேக்ஸ்முல்லர்பவன், ஜெர்மன் கல்வியகம், கேந்திரிய வித்யாலயாவுடன் இணைந்து அளித்த திட்டத்தின் கீழ் ஜெர்மன் மொழி பயின்று, ஜெர்மனி, மேன்ஹெய்ம் நகரில் ஜெர்மன் பயின்றார்.கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.

கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி, மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ் நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், இந்து தமிழ்திசையின் மாயாபஜார் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. அவரது “மங்கை எனும் மந்திர தீபம்”  (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ ?” என்ற சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *