அழுகை என்றால்
குழந்தை தான்
ஞாபகத்திற்கு வரும்
,
அவர்களுக்கு மட்டுமே
முழு உரிமை உண்டு
அழுக
,
அருவி போல்
கண்களில் நீர் உதிர்க்க
குதிக்காமல் ஓடி
மறைந்து விடும் துளிகள்
,
காரணம் இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
,
குழந்தை ஒன்று அழுதது
என்ன செய்வது
,
காரணங்கள் கேட்டு
கண்களை மேலும்
சிவக்க வைக்க வேண்டாம்
,
மழையை வரவழைக்க
நிறுத்த பின்பு
வழியனுப்பி வைக்க
சடங்குகள் செய்வது போல்
ஏதாவது செய்யலாம்
,
நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு வண்ணத்தில்
பலூன் ஒன்று
வாங்கி தரலாம்
,
நீண்ட குச்சியில்
பொம்மை மிட்டாய்
உருண்டு திரண்டு இருக்கும்
அதனை
கயிறு போல்
திரித்து பல வடிவங்கள்
கொண்ட கை கடிகாரம்
வாங்கி தரலாம்
,
மர பெட்டியில்
பீபீ ஓசையுடன்
வரும் ஐஸ் வண்டியில்
உருகி வழிந்து
ஓட
காத்திருக்கும்
பால் ஐஸ்
வாங்கி தரலாம்
,
வட்டமான எந்திரத்தில்
ஒரு சத்தத்துடன் சுழலும்
சீனி வலைகள்
மூங்கில் குச்சியில்
தொட்டால்
சுருண்டு வந்து ஒட்டி
கொள்ளும்
பஞ்சு மிட்டாய்
வாங்கி தரலாம்
,
இவை யாவையும்
வாங்கி தராமல்
ஒரு விளையாட்டு
விளையாடியும்
நிறுத்தி விடலாம்
,
இல்லை என்றால்
மறதியே முழுநிலவு
போல் வந்து
எல்லாம் மறந்து போகும்
***

சோழன்
சொந்த ஊர் தஞ்சாவூர். இவர் தஞ்சாவூரில் பள்ளியில் கணிப்பொறி அறிவியல் துறையில் பணிபுரிந்து வருகிறார். சொல்வனம், மயிர், பூபாளம் மற்றும் காற்றுவெளி இதழ்களில் கவிதைகள் வெளிவந்துள்ளன. சொல்வனம், மயிர் மற்றும் சிறுகதைகள்.காம் இணைய இதழ்களில் சிறுகதைகள் வெளிவந்துள்ளன.