வெளிச்சம் தேடி வாடும் விழிகள்
கனவுகளுக்குள் சிக்கி
மீளும் வாழ்க்கையில்
மீட்சியின் போது
தொலைந்து போகலாம்
சிலருக்கு கனவுகளும்
சிலருக்கு வாழ்க்கையும்
,
எது தொலைந்தாலும்
தொலைந்ததைத் தேடுபவன்
மனிதன்
அப்போதும் கூட
வெளிச்சத்தைத் தேடுபவன்
மாமனிதன்
,
தேடுவதை அடைந்துவிட்டால்
மாமனிதன்
உலகிற்கு ஒரு மருந்து
அடையாமல் போனால்
அவன்
உலகின் பார்வைக்கு
ஒரு நோயாளி
அவ்வளவுதான்
00

ஆதன் ஆரா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதும் க.ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர். ஒரு மாற்றுத்திறனாளியான இவர் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு விசைத்தறி நெசவுத்தொழில் செய்து வருகிறார். இவர் தன்னுடைய மகள்களின் பெயர்களான ஆதன்யா, ஆராநிலா என்பவற்றின் தொடக்கச் சொற்களை எடுத்துதான் தன்னுடைய புனைப்பெயரை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

