வேகத்தடைகள்
வரிசையாக ஒவ்வென்றாய்
மேல் கீழ் இடது வலது
உள் வெளி சரிபார்த்து அடுக்கி வைக்கிறேன்
திடீரெனப் புயலாய் வருகிறார்கள்
எல்லாவற்றையும் களைத்துப்போட்டுவிடுகிறார்கள்
மீண்டும்
அடுக்கி வைப்பதற்குள்
வாழ்வின் வேரில் பூச்சிபிடித்துவிடுகிறது
ஒவ்வொரு இலையாய் உதிர்ந்து
கிளைகள் பட்டுப்போய்விடுகின்றன
000
நான் யார்
இப்போழ்தைக்கு 74 கிலோ எடை
புதுவையில் இருக்கிறேன்
முன்பக்கம் முடி உதிர்ந்த சிறு வழுக்கைத்தலை
வளர தொடங்கியிருக்கும் சிறிய தொந்தி
அவ்வப்பொழுது திக்கிப்பேசும் குரல்
தோல் பழுத்த மஞ்சள் நிற இலையின் நிறம்
பிறந்ததிலிருந்து 28 ஆண்டுகளின் நினைவுகளைச் சுமப்பவன்
மேலும் ஒவ்வொரு நாளும்
நினைவுகள் வழி
காணும் காட்சிகளின் ஈர்ப்பு வழி
வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் வாழ்பவன்
000
அன்பிற்காக உழைத்தல்
ஒன்று கொடுத்தால்
இரண்டு கொடுப்பது
இரண்டு கொடுத்தால்
நான்கு கொடுப்பது
நான்கு கொடுத்தால்
எட்டு கொடுப்பது
எட்டு கொடுத்தால்
பதினாறு கொடுப்பது
கொடுக்கக் கொடுக்கக் கொடுப்பது
பெற பெற திருப்பியளிப்பது
நிலம் நனைத்து ஊற்றெடுக்கும்
மழையெனக் கொடுப்பது
வாங்கிய கடனென வட்டியுடன்
கேட்கும் முன்பே திருப்பியளிப்பது
000
பசி
தேட வேண்டும் என்றானபிறகு
யாரிடம் வழி கேட்டாலென்ன
யாரைச் சந்தேகித்தாலென்ன
எங்கு இளைப்பாறினாலென்ன
எங்குத் தோண்டினாலென்ன
எங்குச் சென்றாலென்ன
எப்படி பேசினாலென்ன
எப்படி ஓடினாலென்ன
எவ்வளவு நேரம் காத்திருந்தாலென்ன
பசிக்குக் காத்திருப்பவனின் வயிறென
எப்பொழுதும் வேண்டியதெல்லாம் பதில்களும்
தேடும் பொருளும்தான்
000
நெரிசல்களால் குறுகும் பாதை
நான் மட்டுமே
காடுகளில் பாலை வனங்களில்
அலைந்து திரிய தொடங்கினேன்
எல்லோரும் அவரவர் பாதையில்
வேக வேகமாகச் செல்கின்றனர்
நான் மட்டும்
இவர்கள் பாதையில் சில பல நேரம்
அவர்கள் பாதையில் சில பல நேரம்
இவர்கள் வீட்டில் சில பல நேரம்
அவர்கள் வீட்டில் சில பல நேரம்
இவர்கள் வாகனங்களில் சில பல நேரம்
அவர்கள் வாகனங்களில் சில பல நேரம்
இவர்கள் வெளிச்சத்தில் சில பல நேரம்
அவர்கள் வெளிச்சத்தில் சில பல நேரம்
திரும்பிப் பார்த்தேன்
என் பாதையில் சுவடுகளே இல்லை
இன்னும் சிறிது தூரம் சென்றுபார்த்தேன்
என் பாதையெங்கும்
யார் யாரோவின் பாதைகள் இருக்கின்றன
000
உலகை உட்செரித்தல்
எது நடந்தால்
எங்கிருந்தால்
எப்பொழுதாயிருந்தால்
என்ன இருந்தால்
எப்படி இருந்தால்
யார் உடனிருந்தால் என்ன
உயிரோடிருக்க வேண்டும்
இதற்குப் பிறகும்
இனியும்
உயிரோடிருக்க வேண்டும்
எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்
கிணறு வெட்டி ஊற்றுக்கண் கண்டெடுத்து
நீர் நிரப்புவதாய்
அகத்தின் நிலத்தில் அவ்வப்பொழுது
கிணறு வெட்டி பலம் நிரப்பி
உலகை ஒரு நூறு முறை வலம்வர வேண்டும்
000

இரா.இராகுலன்
செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் பகுதியைச் சேர்ந்தவர்.தமிழை விருப்பக் கல்வியாகத் தேர்வு செய்து இளங்கலைத் தமிழ் படிக்கும் காலத்தில் கடவுளின் கடவுள் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். முதுகலைத் தமிழ் படிக்கும் பொழுது பாதியில் நிறுத்தப்பட்ட ஓவியம் என்ற தலைப்பில் மற்றுமொரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர்.சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் படிப்பை முடித்து தற்பொழுது புதுவைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.தளம்,உயிர் எழுத்து,காற்றுவெளி, கொலுசு,கீற்று,பேசும் புதிய சக்தி என இதழ்களில் கவிதை எழுதி வருபவர்…