உச்சி மலையில்
அதன் உயரத்தைவிடவும் உயர்த்தி நீங்கள் என்னை
சிலுவையில் ஏற்றியப்பின் எனக்கும்
ஏழாவது வானத்தில் இருக்கும் இறைவனுக்கும்
இடையேயான தூரம் சற்று குறைந்தது நன்றி
+++
தொலைத்தூரத்தில் எனக்காக துடித்தழும் ஒரு குரல் கேட்கிறது
அது என்னை கடவுளாக்குகிறது
+++
நான் கடவுளாக ஆக்கப்பட வேண்டுமென்று உயிர்த்தெழவில்லை
என் இறுதி தாகத்திற்கு நீர்கொண்டு வந்த
கைகளை முத்தமிட்டு நன்றி சொல்லவே வந்தேன் சத்தியமாக
+++
எனக்கான அடிகளில்
சிலவற்றை
தன் தலையில் வாங்கிக்கொண்டது ஆணிகள்
நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் அவைகளுக்கு
***
நான் பாக்கியவான்
இறந்தப் பின்பும் விழித்திருக்கும்
என் கண்கள் முழுதும் சிரித்த முகங்கள்.
***
இன்னொருமுறை கூட உயிர்த்தெழுகிறேன் பாவம்
அந்த ஆட்டுக்குட்டியை மட்டும் விட்டுவிடுங்கள்.
***
எல்லாவற்றுக்கும் பிறகு
எப்போதாவது நீங்கள்
சஞ்சலப்படக்கூடும்
வேண்டவே வேண்டாம்
என்னுடைய இந்தப் பிறவி சிதைவுக்கானதுதான்.
***
உங்களின் சந்தோஷத்திற்காக இன்னொருமுறை கூட
சிலுவையில் ஏறுவேன்
என் அன்பர்கள் அல்லவா நீங்கள்.
***
உங்களின் மீது கோபமோ
வெறுப்போ சாபமோ இப்படி எதுவுமில்லை
எனக்கு இப்போது இருப்பதெல்லாம்
கைகளை விரித்து எப்போதும்போல்
தன்னை அணைப்பதற்காக நிற்கிறேன் என்று நினைத்து
ஓடி வந்த ஆட்டுக்குட்டியை ஏமாற்றிவிட்டோமே
என்ற குற்ற உணர்ச்சி மட்டும்தான்.
***
என் மீது அதீத அன்பும் வெறுப்பும் கொண்டவர்கள்
ஒன்றுக்கூடி உள்ளனர் எப்போதும்
நான் யாரையும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை.
***
காலங்கள் உருண்டோடிவிட்டன
கருணையையும் அன்பையும் மட்டுமே
போதிக்கின்றவர்களின் வீட்டின் புகைப்படத்தில் கூட
இன்னுமும் சிலுவையில்தான் அறையப்பட்டுள்ளேன்.
000

ரிஸ்வான் ராஜா
சொந்த ஊர் முத்துப்பேட்டை. துபாயில் தபால் நிலையத்தில் வேலை செய்கிறார். தேர்ந்த வாசகர்.