எட்டு ஜில்லாவுக்கே இளவரசி

அத்தியாயம் 8

கிணற்றில் நீச்சல் அடித்து முடித்து எல்லோரும் மேலே ஏறிக் கொண்டு இருந்த நேரத்தில் “சிட்டுக்குருவி இன்னைக்கு மாட்டினியா?” என்று கத்திக்கொண்டே வெங்கட் கிணற்றை நோக்கி ஓடி வந்தான்.

எங்கே ஓடுவது என்று அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில் ஒடி இளவரசியைப் பிடித்து அப்படியே தூக்கி கிணற்றுக்குள் இறங்கி தண்ணிக்குள் போட்டு அமுக்கினான்.

“எங்க அம்மாட்ட நான் சொல்லப் போறேன். நீங்க எல்லாரும் சேர்ந்து என்னை கொல்ல பார்க்கிறீர்களா? என்று தண்ணீர் இழந்து வெளியே தூக்கிய உடன் கத்திகொண்டே அழ ஆரம்பித்தாள்.

“சொல்லு, போய் நல்லாச் சொல்லு. அதுக்கு நீ உசுரோட இருக்கணும்ல. அவனுகதே அப்படி பண்றானுங்கன்னா நீயும் எப்பாப் பார்த்தாலும் எனக்கு பிடிக்காத பேரச் சொல்லிக்கிட்டு கூப்படறது. இரு இரு இன்னைக்கு நீ என்ன ஆகப் போறேன் பாரு?”

என்ற கூறிக் கொண்டே கிணற்றின் வலது மூலைக்கு இளவரசியை இழுத்துச் சென்று அவளை அங்கேயே விட்டுவிட்டு கிணற்றின் தெற்கு மூலையில் மோட்டார் வைக்கும் திண்டின் மீது ஏறி அமர்ந்து கொண்டான் வெங்கட்.

“எப்படி வர்றேன்னு பாக்குறேன்? செவுத்தப் புடிச்சுட்டு வரக்கூடாது. செவுத்த மட்டும் புடிச்ச மறுபடியும் உள்ள அமுக்கிடுவேன். நேரா என்னை பார்த்து நீந்திவா பாக்கலாம்”

“சொரப்புரடை இல்லாம நான் எப்படி நீந்தி வருவேன்?”

“வந்து தான் ஆகணும். மெக்கானிக்கல் மாணிக்கம்னு கத்துறதுக்கு மட்டும் தெரியுமோ?”

“சரி! நான் நீந்தி வரேன். கொஞ்சம் ரெஸ்ட் குடுங்க. நீங்க தண்ணிக்குள்ள அமுக்குனதுல நானே பயந்து போயி கெடக்குறேன்”

“அடடா! நீ! பயந்து போய்டியா? உனக்கு பயம்னா என்னான்னு கூடத் தெரியுமா? ஊரையே வித்து ஒலைல போட்டுறுவே சதிகாரி. சும்மா நடிக்காத! நடிச்சாலும் விடமாட்டேன்”

“சரி நான் நடிக்கறேன்னே வச்சுக்குங்க. எனக்கு ஒரு சின்ன சந்தேகம். அதமட்டும் தீத்துடுங்க. அப்பறம் நீந்தறேன்”

“நீ கில்லாடி தாண்டி சிட்டு. அப்படியே பேச்ச மாத்தப் பாக்குற பாத்தியா!”

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. இந்த சந்தேகத்தை மட்டும் சொல்லிட்டீங்கனா  நீந்திடுவேன்”

“என்ன சிட்டுக்குருவி சந்தேகம்?”

“உங்களுக்கு ஏன் மெக்கானிக்கல் மாணிக்கம்னு சொன்ன அவ்வளவு கோவம் வருது?”

“அதை மட்டும் கேட்காத. அது ஒரு பெரிய கதை. அதை நினைச்சாலே எனக்கு கோபம் பத்திகிட்டு வருது”

“சொல்லுங்கண்ணா, ப்ளீஸ் அண்ணா” என்று  சொல்லிக் கொண்டே மெதுவாக கிணற்று சுவரை பிடித்துக் கொண்டே வெங்கட்டின் அருகில் வந்து அமர்ந்தாள் இளவரசி.

“ரொம்ப நாளைக்கு முன்னாடி பசங்க எல்லாரும் சினிமா பார்க்கப் போயிருந்தோம். அப்போ அந்தப் படத்துல கவுண்டமணி ஒரு மெக்கானிக்கலா இருப்பார்.

அந்தப் படத்தைப் பாத்துட்டு வந்ததிலிருந்து என்ன மெக்கானிக்கல் மாணிக்கம்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டானுங்க. அது ஏன்னு தெரியல. அப்படிக் கூப்பிட்டா மட்டும் எனக்கு அவ்வளவு கோவம் வந்துருது”

“ஏன் அதுல அவரு மோசமான மெக்கானிக்க வருவாரா? கெட்ட மெக்கானிக்கா வருவாரா?”

“இல்ல சிட்டு. அதுல அவரு மெக்கானிக்னு சொல்வாரே தவிர, எந்த வேலையும் செய்ய மாட்டார். எல்லாரையும் கிண்டல் பண்ணிட்டே திரிவார். நான் என்ன அப்படியா கிண்டல் பண்றே? நீயே சொல்லு சொன்ன கோவம் வரும்ல?”

“நீங்க எல்லாரும் என் பேர வுட்டுட்டு, சிட்டுக்குருவியினு தானே கூப்பிடுறீங்க. எனக்கு கோவம் வரலையே?”

“சிட்டுக்குருவி எவ்ளோ அழகான பேரு. இளவரசிய விட எங்க எல்லாருக்கும் சிட்டுக்குருவியை தான் பிடிக்கும்”

“ஏ.. என்னைய சிட்டுக்குருவின்னு கூப்பிடுறீங்க?”

“அடப் பட்டு இவ்வளவு நாளா உனக்குத் தெரியாதா? நீ சிட்டு மாதிரி பேசுறதும் ஓடுறதும் சிரிக்கிறதும் அவ்வளவு அழகா இருக்கும். ஒரு சிட்டுக்குருவிக்குச் கீச கீச்னு கத்துற மாதிரி இருக்கும். ஒரு குழந்தை மாதிரி இருக்கும். அதனால தான் நாங்க எல்லாரும் உன்னை சிட்டுக்குருவினு கூப்பிடுகிறோம். மொத மொதலா கேசவன்தான் கூப்டான்”

“சரி சரி வெங்கிட்டு அண்ணா மேல போலாம். அம்மா காணோம்னு தேடுவாங்க”

“பாத்தியா வேலையே! உன்னைய அந்த மூலைல தான விட்டிருந்தன். இங்க எப்புடி வந்தே? இப்போ இங்கிருந்து அது வரைக்கும் அடிச்சுக்கிட்டே போற அப்பதான் நான் உன்னை கெணத்திலிருந்து மேலே ஏத்துவேன்”.

வெங்கட் கூறிய பிறகு மெதுவாக தட்டி தட்டி நீச்சல் அடித்து சுவற்றைப் போய் பற்றி பிடித்தாள். அன்று கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேல் வெங்கட்  நீச்சல் கற்றுக் கொடுத்தான். அன்றிலிருந்து இளவரசி சொரப்புரடை இல்லாமலேயே நீச்சல் அடிக்கக் கற்றுக் கொண்டாள்.

ஆனாலும் மேலே ஏறி வந்தவுடன் வழக்கம்போல வெங்கட்டை “மெக்கானிக்கல் மாணிக்கம்” என்று கூறிவிட்டு ஓடினாள்.

யார் மெக்கானிக்கல் மாணிக்கம் என்று கூப்பிட்டாலும் வெங்கட் அவ்ளோ கோவம் வரும் ஆனால் இளவரசி கூப்பிடும் போது செல்ல கோபம் வருமே தவிர, இளவரசி மீது ஒருநாளும் கோபம் வந்ததில்லை. இளவரசியோடு ஓடி விளையாடுவதற்கு அது ஒரு வாய்ப்பாக இருந்ததாகவே வெங்கட் நினைப்பான்.

இளவரசி அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வந்ததும் சைக்கிளுக்காக ஆவலோடு காத்திருந்தாள். தாத்தாவும் அப்பாவும் சைக்கிளோடு வருவார்கள் என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தாள். அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள். ஆனால் சைக்கிளோடு வரவில்லை. சைக்கிள் எங்கே என்று கேட்டதற்கு இன்னும் ஒரு வாரத்தில் வந்துவிடும் என்று தாத்தா கூறியதைக் கேட்டு அழ ஆரம்பித்தாள்.

தாத்தா இளவரசி அழைத்துக்கொண்டு அந்த ஊரில் இருந்த சைக்கிள்  பஞ்சரடைக்கும் கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கே அப்பாவின் பழைய சைக்கிள் நின்று கொண்டிருந்தது.

“என்ன தாத்தா இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க? எனக்கு சின்ன சைக்கிள். செவப்பு சைக்கிள் தான் வேணும்”

“அப்பாவோட சைக்கிள்ல நீ ஒன்னு கவனிச்சியா?” என்று கேட்டார் தாத்தா.

சைக்கிளை உத்து பார்த்தாள். மேலிருந்த கம்பி வளைக்கப்பட்டு இருந்ததைக் கவனித்தாள்.

“என்ன தாத்தா மேல இருக்கிற கம்பியை வளைச்சு வச்சிருக்கீங்க. பார்க்க நல்லாவே இல்ல”

“உனக்கு கால மேல தூக்கி போட்டு ஒட்ட சிரமமா இருக்குது தானே. பாவடை மேல தூக்கிட்டு தூக்கிட்டு வருதுதானே? அதுக்காகத்தான் அந்தக் கம்பியை வளச்சுக் கொடுக்கச் சொல்லிட்டேன்”

“எனக்கு எதுக்குத் தாத்தா இந்தச் சைக்கிள். இது வேண்டா. எனக்கு சின்னச் சைக்கிள் தான் வேணும். செவப்புச் சைக்கிள் தான் வேணும். தேவி சைக்கிள் மாரி தான் வேணும்”

“இப்பதானே அப்பாவுக்கு வண்டி வாங்கி இருக்குது. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். அதுவரைக்கும் நீ இதை ஓட்டு” என்று தாத்தா கூறியதைக் கேட்டு அழுகை அடக்க முடியாமல் அங்கிருந்து வீட்டுக்கு ஓடி வந்து விட்டாள் இளவரசி. கிட்டத்தட்ட இரண்டு மூன்று வாரம் யாரிடமும் பேசாமல் அழுது கொண்டே இருந்தாள்.

ஆறு மாதங்கள் அந்தச் சைக்கிளைக் கையிலேயே தொடாமல் இருந்தாள்.   ஜோசப் சுபா தேவி எல்லோரும் சைக்கிளில் சென்றார்கள். இவள் மட்டும் நடந்தே சென்றாள்.

அவர்கள் அழைத்தாலும் அவர்களோடு செல்வதைத் தவிர்த்தாள்.

அவர்கள் அடிக்கடி சைக்கிளில் போட்டி நடத்துவதைப் பார்த்து தானும் கலந்து கொள்ள ஆசைப்பட்டாள்.  வேறு வழியில்லாமல் அப்பாவின் சைக்கிளை எடுத்தாள். ஆனாலும் பள்ளிக்கு எடுத்துச் செல்வது அவளுக்கு பிடிக்கவில்லை.

நண்பர்கள் எல்லோரும் புது சைக்கிள் வைத்திருக்க, இவள் மட்டும் பழைய சைக்கிளில் செல்வதை அவமானமாக நினைத்தாள்.

நடத்து செல்வதற்கு சிரமமாக இருந்ததால் வேறு வழி இல்லாமல் அப்பாவுடைய சைக்கிளை எடுத்து ஓட்ட ஆரம்பித்தாள்.

அன்று பள்ளிக்கூடத்தில் மாலை நேரத்தில் மரமல்லி மரத்திற்கு அடியில் பள்ளி மாணவர்களை அமர வைத்திருந்தார்கள். வகுப்பறையை தவிர வேறு எங்கு இருந்தாலும் இளவரசிக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் குறிப்பாக அந்த மரமல்லி மரத்தை அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். ஒவ்வொரு முறையும் விளையாட்டு மைதானத்தில் வந்து விளையாடும் பொழுது அந்த இடத்தில் விழுந்து கிடக்கும் பூக்களைப் பார்த்துப் பார்த்து ரசிப்பாள். அந்த நீளமான காம்பில் அழகான ஐந்து இதழ்கள் விரிந்து வெள்ளை நிறத்தில் இருக்கும் அந்தப் பூ அவளுக்கு கொள்ளை அழகாகத் தெரியும். அதே மரத்திற்கு அடியில் அமர வைத்தது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அங்கு கிடந்த பூக்களை எல்லாம் பொறுக்கி கையில் வைத்துக் கொண்டாள்.

வழக்கமான மீட்டிங் நடப்பதற்கான ஏற்பாடுகளாக ஒரு பெரிய டேபிளும் அதில் ஒரு துணி விருப்பம் போடப்பட்டிருந்தது அதற்கு அருகில் நான்கைந்து சேர்கள் போடப்பட்டிருந்தன.

தலைமை ஆசிரியரும் உதவி தலைமை ஆசிரியரும் வந்து கொண்டிருந்தார்கள் அவரோடு டிக் டாப்பாக மிலிட்டரி அப்பாவைப் போல் நல்ல உடல் கட்டோடு நிமிர்ந்தபடியே ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

சம்பிரதாயத்திற்காக தலைமை ஆசிரியர் பேசி அமர்ந்துவிட்டார்.

தற்காப்புக் கலையான குங்ஃபூவைப்பற்றி டிப்டாப் மனிதர் பேச ஆரம்பித்தார்.

அவர் தன்னை குங்ஃபூவில் மாஸ்டர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு

குங்ஃபூ என்பது ஒரு தற்காப்பு கலை. இந்தக் கலையைக் கற்றுக் கொள்வதன் மூலமாக ஒருவர் நம்மை அடிக்க வரும் பொழுது அவரிடமிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.

தேவைப்படும் இடங்களில் திருப்பி அடிக்கவும் முடியும்.

இந்தத் தற்காப்பு கலையை கற்றுக் கொள்வதன் மூலமாக உடல் மட்டுமல்ல மனதாலும் பலமடைய முடியும்.

இந்தத் தற்காப்புகளை உங்களின் மனதை ஒருநிலைப்படுத்தும். மனதை ஒருநிலைப் படுத்துவதன் மூலமாக கல்வியிலும் கவனம் செலுத்த முடியும்.

இந்தக் கலையை கற்றுக் கொண்டால் பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளைப் பெற முடியும்.

உலக அளவில்  இந்தப் போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற முடியும்

இதில் படிநிலைகள் உண்டு.

மஞ்சளில் பச்சையில் பழுப்பில் மூன்று மூன்று பட்டைகள் முடிவாக கருப்பு கருப்பிலும் அடுத்தடுத்த படிநிலைகள் உள்ளன.

கருப்பு பட்டை வாங்கி விட்டால் அவர்கள் அத்துரையின் மாஸ்டர் என்று அழைக்கப்படுவார். கருப்புப் பட்டை வாங்கியவர்கள் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசனாகவும் மாறலாம். நானும் இரண்டு கருப்பு பட்டை வாங்கியவன்.

இந்தப் பயிற்சி வாரத்தில் மூன்று நாட்கள் உங்கள் பள்ளிகள் கொடுக்கிறோம்.

பள்ளி முடிந்து ஒரு மணி நேரம்.

ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகள் யார் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம்.

நீங்கள் தைரியமாக  வேண்டுமென்றால் கண்டிப்பாக இந்தக் கலையைக் கற்றுக் கொள்ளுங்கள்.

எப்பொழுதுமே உங்கள் துணைக்கு ஒருவரை அழைத்துக் கொண்டு செல்வது என்பது இந்த காலகட்டத்தில் முடியாது. உங்களை நீங்கள் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

எங்கு வேண்டுமானாலும் யாரும் தனியாகப் பயணம் செய்யும் காலம் வந்துவிட்டது.

அதுவரை பேசியது மட்டும்தான் இளவரசியின் காதில் விழுந்தது. அதன் பிறகு என்னென்னவோ பேசினார். ஆனால் இளவரசியின் காதில் எதுவுமே  விழவில்லை. ஏனென்றால், புதிதாக இளவரசி வயதை ஒத்திருந்த ஏழு சிறுவர்களும் 7 சிறுமிகளும் மேடைக்கு அருகில் வந்து நின்றார்கள்.  இளவரசியின் கவனம் முழுவதும் அவர்கள் போட்டிருந்த உடையில் மீது சென்றது. அவர்கள் கருப்பு நிற கால் சட்டையும் கருப்பு நிறத்தில் மேல் சட்டையும், மேல் சட்டையில் வெள்ளை நிற கோடுகளும் இருந்த உடையை உடுத்தி இருந்தார்கள். அதை உற்றுக் கவனித்துக் கொண்டே இருந்த இளவரசிக்கு அந்த உடை மிகவும் பிடித்து விட்டது.

அதன் பிறகு அவர்கள் செய்து காண்பித்த கட்டா மற்றும் சண்டைப் பயிற்சிகள் சிலம்பம் சுற்றியது நிஞ்சா மற்றும் வாள் வைத்துக்கொண்டு சுற்றியது, ஓடு உடைத்தது, செங்கல் உடைத்தது, ஓட்டில் தீயைப் பற்றி வைத்து ஓடு உடைத்தது மற்றும் தலைமீது ஓடு உடைத்தது இதை  எல்லாம் பார்க்க பார்க்க இளவரசிக்குப் பரவசத்தைக் கொடுத்தது. அதிலும் குறிப்பாக ஒரு சிறுமி இரண்டு, மூன்று சிறுவர்களை கால்களை தூக்கி சுழற்றிச் சுழற்றி அடிப்பதைப் பார்த்தவுடன் அப்படியே வியந்து வாயைத் திறந்தபடி பார்த்துக் கொண்டே இருந்தாள். தானும் அதுபோலக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அன்று மாலை பள்ளி விட்டு வந்ததும் அம்மாவிடமும் அப்பாவிடமும் தாத்தாவிடமும் அதைப்பற்றிப் பேசிக் கொண்டே இருந்தாள்.

முடிவில் தானும் பள்ளிக்கூடத்தில் குங்ஃபூ பயிற்சிக்குச் சேர வேண்டும்  என்று கேட்டாள்.

“அது எதுக்கு? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ஆம்பளப் பையன மாரி அடிக்கிறதும் குத்தறதும்” என்றார் இளவரசியின் அம்மா.

பள்ளிக்கூடத்தில் இளவரசியின் வகுப்பில் இரண்டு பேரும் மற்ற வகுப்பில்  சேர்ந்தவர்கள் எல்லாம் சேர்த்து மொத்தம் 25 பேர் சேர்ந்தார்கள். மேரி ஜோசப் சுபா தேவி மற்றும் சுந்தர் எல்லோருமே குங்ஃபூ பயிற்சியில் சேர்ந்து இருந்தார்கள்.

ஒவ்வொரு நாளும் மாலை பள்ளிவிட்டு வரும்போது அவர்களுக்கு வழங்கும் பயிற்சியை பார்த்தபடியே நின்று கொண்டிருப்பாள் இளவரசி. அவளுக்கு முதலில் உடையின் மீது இருந்த ஆர்வம் இப்போது அவர்கள் செய்யும் பயிற்சி எல்லாம் பார்த்து பார்த்து அதை எப்படியாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள். சிறுவயதிலிருந்தே இளவரசிக்கு பேண்ட் சட்டை என்றால் கொள்ளை பிரியம். இந்தப் பயிற்சியில் சேர்ந்தால் அவர்களைப் போல் அடிக்கவும் கற்றுக் கொள்ளலாம். அதோடு தனக்குப் பிடித்த பேண்ட் சட்டையையும் அணிந்து கொள்ளலாம் என்று நினைத்தாள் இளவரசி. எப்படியாவது அம்மாவிடம் பேசி வகுப்பில் சேர்ந்து விட வேண்டும் என்று ஆவலோடு நினைத்துக் கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் தான்  ஒரு போஸ்டரை பார்த்தால் அந்த போஸ்டரில் ஒரு பெண்மணி போலீஸ் உடையில் நின்று கொண்டிருந்தார். வைஜெயந்தி ஐபிஎஸ் என்று எழுதப்பட்டிருந்தது.

அவர்கள் ஊரின் டெண்டுக் கொட்டையில் வைஜெயந்தி ஐ.பி.எஸ் படம் போட்டு இருந்தார்கள்.

அந்தப் படத்திற்கு அழைத்துச் செல்ல தொடர்ந்து அடம் பிடித்துக் கொண்டே இருந்தாள்.

இளவரசியின் நச்சு தாங்க முடியாமல் தாத்தா இளவரசியை அவர்கள் ஊரில் இருந்த சித்ராலயா டெண்டு கொட்டாய்க்கு அழைத்துச் சென்றார்.

எப்பொழுதும் இளவரசிக்கு டெண்டுக் கொட்டையில் சினிமாவை பார்ப்பது மிகவும் பிடிக்கும். முதலில் படம் பார்ப்பது இரண்டாவது அங்கு கிடைக்கும் தின்பண்டங்கள்.

தாத்தாவிடம் எப்போதுமே பெஞ்ச் அல்லது சேர் டிக்கெட் வாங்க சொல்வாள். ஆனால், தாத்தா எப்பொழுதுமே தரையில் அமர்ந்து பார்க்கும் டிக்கெட் தான் வாங்குவார். அதுதான் அவருக்கு காலை நீட்டி அமர்ந்து கொள்ள வசதியாக இருக்கும்.

அது இளவரசிக்கு கொஞ்சமும் பிடிக்காது. ஏனென்றால் அங்கு தரையில் அமர்ந்து வெற்றிலை எச்சிலைத் துப்பிக் கொண்டே இருப்பார்கள்.

அது மட்டும் இல்லாமல் பெஞ்ச் சார் என்றால் போனவுடன் மருந்து கொள்ளலாம். தரை என்றால் தோதான இடம் பார்க்க வேண்டும். சுவர் ஓரத்தில் இருக்க வேண்டும். அங்கு கிடக்கும் மணலைக் சிறு குன்று போல கூட்டி அதன் மேல் உட்கார வேண்டும். இப்படி ஏகப்பட்ட சம்பிரதாயங்கள் இருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை.

ஆனாலும் வேறு வழி இல்லாமல் இதையெல்லாம் செய்துவிட்டு மணல் குவியலின் மீது அமர்ந்து படம் பார்க்க ஆரம்பித்தாள். படத்தில் விஜயசாந்தி பாய்ந்து பாய்ந்து அடிப்பதைப் பார்த்தவுடன், அதுவும் பேண்ட் சட்டை போட்டுக் கொண்டு காக்கி உடையில் போலீஸ்சாக வரும்போது தன்னையே விஜயசாந்தியாக நினைத்துக் கொண்டு அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். விஜயசாந்தி சண்டை போடும்போது எல்லாம் தானும் கை கால்களை அசைத்து வலது புறம் இருந்த தாத்தாவையும் இடது புறம் அமர்ந்து இருந்த வயதான பாட்டியையும் மாறி மாறி அடித்துக் கொண்டே இருந்தாள்.

இருவரும் இளவரசி விட்டு இரண்டடி தள்ளி அமர்ந்து கொண்டார்கள்.

இடைவேளை விட்டவுடன் அங்கு கிடைக்கும் முறுக்கு, குடல் பண்ணு மற்றும் முட்டை போண்டா என்று எல்லாவற்றையும் ஒரு பிடி பிடித்தாள்.

“இளவரசி நீ எப்பவுமே சினிமாக்கு வராது இதெல்லாம் வாங்கி திங்கிறதுக்கு தானே?” என்று கேட்டார் தாத்தா.

“ஆமா தாத்தா எப்பவுமே அதுக்கு தான் வருவேன். ஆனா ரஜினி படம்னா எனக்கு ரொம்ப புடிக்கும். அப்ப மட்டும் ரஜினிக்காக வருவேன். அதுக்கு அப்புறம், இந்தப் படத்துக்குத்தான் இந்தப் போலீஸ்காகப் பார்க்க வந்தேன்.  ஏன்னா எனக்கு அவங்கள மாதிரி துணி போட்டுக்கிட்டு போலீஸ் ஆகணும்னு ஆசையா இருக்குது தாத்தா. போஸ்டர்ட்ல பார்த்ததிலிருந்து தினமும் நான் அவங்கள மாதிரியே துணி போட்டு இருக்கிற மாதிரி நினைச்சுக்குவேன்” என்றாள் இளவரசி.

படம் முடிந்து வந்ததில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மாதம்  எல்லோரிடமும் நானும் பெரியவள் ஆனதும் போலீசாகப் போறேன். எல்லாரையும் அடிக்கப் போறேன். எல்லாரும் என்னப் பாத்து பயப்படப் போறாங்க” என்று கூறிக் கொண்டே இருப்பாள்.

பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் எப்போதும் செய்யும் வேலையை விட எல்லோரிடமும் ஓடி ஓடிச்சென்று அவர்களுடைய வேலையை செய்ய ஆரம்பித்தாள். “எலி எப்பவுமே அமலத்தோடு தான் ஓடும். ஆனால் இப்போ 8 மொலவேட்டி கட்டிக்கிட்டு ஓடுது ஏன்னு தெரியலையே”  எனறார் தாத்தா.

“போங்க தாத்தா அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல எனக்கு செய்யணும்னு தோணுது அதனால செய்யறேன்” என்று கூறினாள்.

மெதுவாக அம்மாவிடம் இது பற்றி பேச ஆரம்பித்தாள். ஆனால் அம்மா தொடர்ந்து மறுத்து வந்தார்.

“சாயங்காலம் பள்ளிக்கூடத்தில் இருந்து வரதுக்கு நேரம் ஆகிவிடும் இங்கு வந்து வேலையை பார்க்க முடியாது. டியூசனுக்கு போயிட்டு வரும்போது இருட்டாயிரும். அதுக்கப்புறம் வந்து கடைக்கு போகணும். மொட்டு வாங்க போகணும். உன்னோட வேலையே சாயங்காலம் தான்” என்று அம்மா அனுமதி வழங்க மறுத்தார்.

அந்த நேரத்தில் தான் ஒரு நாள் ஏழு மணி அளவில் அவர்கள் வீட்டிற்கு அருகில் இருந்த மண்டபத்தில் இருந்து  “ஆ ஊ” சத்தம் கேட்டது.

என்னவாக இருக்கும் இப்படி சத்தம் கேட்கிறது என்று நினைத்தபடியே மண்டபத்துக்கு அருகில் நின்று ஜன்னலைத் திறந்து பார்த்தாள். அவளுக்கு பெரும் மகிழ்ச்சி. அதே மாஸ்டர் இங்கு நின்று கொண்டு இளவரசியின் அண்ணன் மற்றும் அண்ணனுடைய நண்பர்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதோடு சுபா தேவி ஜோசப் மேரி சந்திரன் என்று ஏராளமானோர் கற்றுக் கொண்டிருந்தார்கள்.

ஜன்னல் வழியாக முடியும் வரை நின்று பார்த்துக் கொண்டிருந்தவள் யாருமே தன்னிடம் சொல்லாமல் விட்டுட்டாங்களே என்று வருத்தப்பட்டு கொண்டே வீடு வந்தாள்.

அடுத்த நாள் பள்ளிக்கூடத்தில் யாரிடமும் பேசாமல் இருந்தாள். எவ்வளவோ சமாதானம் செய்தும் சமாதானமாக மறுத்தாள். முடிவாக மேரி “இளவரசி எங்களுக்கு அங்க பயிற்சி வைப்பாங்கன்னு தெரியாது.  பள்ளிக்கூடத்தில் வந்து செய்ய முடியாதவங்க இங்க வந்து செய்யுங்கன்னு சொன்னாங்க. அதனாலதான் இங்கு செஞ்சோம் அது மட்டும் இல்லாம மண்டபத்தில் வைப்பாங்கன்னு தெரியாது. வேற எங்காவது வைப்பாங்கன்னு நினைச்சோம். நீ வேற வர வரன்னு சொல்லிட்டு இருந்தியா கேட்டா ரொம்ப மனசு வருத்தப்படுவேன்னு  நினைச்சு தான் சொல்லல” என்றாள்.

மேரி சொன்னது அவளுக்கு ஏற்புடையதாக இருந்தது. இருந்தாலும் இரண்டு மூன்று நாட்கள் வீம்புக்காக பேசாமல் இருந்தாள்.

மீண்டும் அம்மாவிடம் தினமும் நச்சரிக்க ஆரம்பித்தாள். தொடர்ந்து அவளுடைய நச்சரிப்பும் அவள் கற்றுக்கொள்ள அதன் மீது வைத்திருக்கும் பேராசையும் அம்மாவை சரி என்று சொல்ல வைத்தது.

சைக்கிள் விஷயத்திலேயே மிகவும் மன முடைந்து போயிருந்த இளவரசியை இதிலேயாவது தேற்றி விட வேண்டும் என்று நினைத்தார்.

“வீட்டுக்கு பக்கத்துல தானே. ஏழு மணிக்குத் தான் எடுக்குறாங்க. சரி போ” என்றார் அம்மா இளவரசியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வாரத்தில் இரண்டு நாள் நடக்கும் பயிற்சியில் சேர்ந்தாள். முதல் நாள் பயிற்சியில் சேர்ந்து சின்ன சின்ன பயிற்சி ஆரம்பித்த உடனேயே அவளுக்கு கண்முன் விஜயசாந்தி காலை கையை தூக்கி பறந்து பறந்து அடிப்பது நினைவுக்கு வந்தது. முதலில் சுடிதார் அணிந்து கொண்டுதான் பயிற்சியை செய்தாள். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவளுடைய உடை தயாரானது. அவளுடைய வாழ்க்கையில் முதல் முறையாக பேண்ட் சட்டை அணிகிறாள். அந்த உடையை வாங்கி வந்து அணிந்து முகம் மட்டுமே தெரியும் அளவிற்கான சுவற்றில் மாட்ட பட்டிருந்த சின்னக் கண்ணாடியை எடுத்து மேலிருந்து கீழ் வரை வைத்துப் பார்த்தாள். எப்படி பார்த்தும் அவளுடைய முழு உருவத்தை பார்க்க முடியவில்லை என்று வருத்தமாக இருந்தது. அம்மாவிடம் அப்பாவிடம் தாத்தாவிடம் அக்காவிடம் என்று ஒவ்வொருவரிடமும் 100 முறையாவது “எப்படி இருக்கிறது? எப்படி இருக்கிறது?” என்று கேட்டிருப்பாள். தொட்டுத் தொட்டு நீவி பார்த்தாள். கால்களை தூக்கி விசிறிப் பார்த்தாள். கைகளை குத்துவது போல் செய்து பார்த்தாள். இரண்டு கைகளையும் மேலே தூக்கிக் கொண்டு சத்தமாக பலம் கொண்டவரை கத்தினாள். “இவளுக்கு வேற வேலை இல்ல ஏதாவது புடிச்சு போச்சுன்னா ஹேன்னு கத்திட்டு இருக்க வேண்டியது, எதுக்கு புள்ளை இப்ப கத்துற. இனிமேல் ஹேன்னு கத்திட்டு இருக்க கூடாது. ஆமா சொல்லிப்புட்டேன்” என்று அம்மா அதட்டியது அவள் காதில் விழவே இல்லை.

வெளியே சென்று விட்டு திரும்பி வரும் பொழுதும் கத்திக் கொண்டிருந்த இளவரசியைப் பார்த்து “எத்தனை தடவை புள்ளே சொல்றது கத்தக்கூடாதுன்னு” என்று மீண்டும் அதட்டினார் அம்மா.

“சரிமா சரிமா கத்துல கத்துல” என்று பவ்யமானாள் இளவரசி.

-அம்மா எப்ப சொல்லுச்சு

-இப்பதான் சொல்லுச்சு.

’அங்க ஆஆஆ ஊஊஊஊன்னு  கத்திக் கத்திச் சொல்லிக் குடுக்கிறத இங்க வந்து செஞ்சு பாக்கணும். இனிமேல் தான அதிகமா கத்த போறேன். எப்படி கத்தாம இருக்க முடியும்?’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் இளவரசி.

எப்போதுமே ஏழு மணிக்கு வகுப்பு என்றால் 6:00 மணிக்கு அந்த உடையை அணிந்து கொள்வாள். ’எதுக்கு இந்த கரவாட்டக்காரி மாதிரி இதே போட்டுட்டு திரியிற’ என்று அம்மா திட்டிக் கொண்டே இருந்தாலும் அவளுக்கு அந்த உடை மீது அவ்வளவு அவ்வளவு ஆசை. அன்று முதல் முறையாக சண்டை பயிற்சி கற்றுக் கொடுத்து முடித்து, இளவரசிக்கு எதிரில் மேரியை நிக்க வைத்தார் மாஸ்டர். இளவரசி ஒரு காலைத் தூக்கி மேரியின் தலையில் அடிக்க மேரி சுருண்டு விழுந்தாள். பிறகு…

-வளரும்.

சரிதா ஜோ

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரிதா ஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலை பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் பயணத்தை தொடங்கிய இவர் ஏராளமான சிறார் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *