1.நீரின்றி அமையாது…

சிற்றோடைகளும் ஆறுகளும்

பெரு வெள்ளமென

பெருக்கெடுத்தோடிய காலமவை – அவை

இப்போது காணாமல் போயின

,

கண்மாய் நீரில்

விளைச்சல் பார்த்த

விளைநிலங்கள் யாவும்

தண்ணீரற்று

வேலி முட்களாய் படர்ந்து

வேரூன்றி வளர்ந்து நிற்கிறது

,

திறக்கப்படாத மதகுகளும்

நீர் பாய்ந்த கால்வாய்களும்

இப்போது வழி மறந்து போயின

,

கரிசல் நிலம் யாவும்

விவசாயி பாத வெடிப்பை போல்

வெடித்து சிதறிக் கிடக்கின்றன

,

தூரத்தில் தெரியும்

கதிரவனின் அனல் காற்றும்

கானல் நீராய்

மறைந்து போகிறது

,

காணாமற் போன

மிச்சமீத கிணற்றிலிருக்கும் நீரே

அவ்வப்போது தெருக்களுக்கு

குடிநீராகவும்

பிற தேவைகளுக்காகவும் பாய்கிறது

,

மூன்று பக்கங்களிலும்

நீர் சூழ்ந்திருக்கிறது

ஆனால் நீர்நிலைகளில்

தண்ணீரில்லை

000

நெடுஞ்சாலைகள் அமைத்தல்

முன்னேற்றமெனில்

மரங்களேன் நிலத்தில்

சரிந்து விழுகிறது

,

இயற்கையின் சீற்றத்தால்

எழுந்து வரும்

கடலலையின் கோவம்

மழைத்துளிகளாகவேனும்

இங்கு கொஞ்சம் சிதறட்டும்

,

பாறையிலும் நீர் சுரக்கும் தான்

இங்கும் சுரக்கிறது – அது

உழைக்கும் எளிய மக்களின்

வியர்வைத் துளிகளாகவே…

,

மனிதன் கருவிலும்

கல்லறை அடையும் முன்பும்

நீரைச் சார்ந்து தானிருக்கிறான்

ஆம் !

நீரின்றி அமையாது உலகு…

                               ***

2.சுயமிழந்து…

ஒதுக்கப்பட்ட பழைய

தண்ணீர்த் தொட்டியில்

நீரைக் கண்டதும்

தாக வேட்கையில்

கீழிறங்கும் காக்கை

,

ஓரிரு நாட்கள் கழித்து

தூக்கி ஊற்றப்படும்

பழைய சோற்றின்

வாசம் பிடித்து

ஓடி வரும் தெருநாய்

,

வதங்கும் கருவாட்டின்

வாசம் பிடித்து

வாலை சுருட்டிக் கொண்டு

அம்மாவின் காலடியில்

வலம் வரும் பூனை

வாடிய வெண்டைக்காயை

வீட்டுக்கூரை மீது

உலர வைத்து

பழைய சோற்றுக்கு தொட்டுக்க

வைத்துக் கொள்ளும் பாட்டி

,

சோற்றுப்பருக்கை பிசைந்து

பூச்சாண்டி சாப்பிட்டு விடுவானென

பயமுறுத்தி

தன் குழந்தைக்கு

ஊட்டிவிடும் அன்னை

,

என்ன நடந்தாலும்

ஏதும் நடக்காதது போல்

அலைபேசியில்

புதிதாய் பேசுவது போன்று

பேசும் காதலர்கள்

,

தாரை தப்பட்டைகளின்

சப்தங்களை

மிஞ்சி விடும் அளவிற்கு

போடப்படும் பக்கத்து வீட்டு

சண்டைகள்

,

இவையனைத்தையும்

செவிமடுத்து

சுயமிழந்து

படுக்கையில் இருக்கிறார் தாத்தா…

                            ***

3.பசுமையற்று…

ஐப்பசி மாத

அறுவடைக்கு காத்திருக்கும்

நெல்மணிகள்

,

பள்ளிக்கு சிற்றுண்டி

உணவாக எடுத்துச் செல்லும்

தட்டாம்பயறு

,

பள்ளி முடிந்து

வரும் வேளையில்

பறித்துண்ணும் பாசிப்பயறு

,

கிளைகளில் மாங்கனிகளாக

தாங்கி விளைந்திருக்கும்

சோளக் கதிர்கள்

,

பகலவனைக் கண்டதும்

கண்விழித்து பார்த்திடும்

சூரியகாந்தி பூக்கள்

செடி கொடிகளாக

தரையில் புதைந்திருக்கும்

கடலைச் செடிகள்

,

கிணற்றில் குளித்து முடித்ததும்

பசியாற்றிட காத்திருக்கும்

மாங்காய் மரங்கள்

,

வெயிலின் தாகம் தணித்திட

ஒய்யாரமாய் வளர்ந்திருக்கும்

தென்னை மரங்கள்

,

பொற்குவியலாய்

குவிந்து கிடக்கும்

கொய்யாக் கனிகள்

,

இவையனைத்தும் விளைந்த

எனது கிராமம் – இன்று

முட்புதர்களால் சூழ்ந்து

தரிசு நிலங்களாய் காணக் கிடக்கிறது…

                                       ***

“தொலைந்து மீண்டவன்” மற்றும் “மௌனத்தின் உரிமைக்குரல்” என இரண்டு கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *