1.நித்திரையற்று

சல சலவென்ற சத்தத்துடன்

வீட்டினருகே பாய்ந்தோடும்

சிற்றோடை நீர்

,

எழுப்பிய சத்தங்களை நிறுத்தி

பின் மீண்டும் தொடரும்

விட்டில் பூச்சிகள்

,

மழைக் காலங்களில்

கலவிக்கு அழைத்திடும்

தவளையின் சத்தங்கள்

,

எதையோ பார்த்து விட்டு

பின்னோக்கி வந்து

குரைத்திடும் நாய்கள்

,

தூரத்தில் கேட்கும்

சிறு குழந்தையின் அழுகுரலாய்

குரலெழுப்பிடும் பூனை

,

எங்கோ ஓர் மரத்தில்

இரவெல்லாம் விழித்திருந்து

அலறும் ஆந்தை

,

இவையனைத்தும்

காதில் வாங்கி

முகப்பையே

பார்த்துக் கொண்டு

நித்திரை கிட்டாமல் தவிக்கிறது

ஓர் ஆன்மா…

                             ***

2.ஞாபகம்

அப்போதெல்லாம்

விடுமுறை நாட்களில்

பாட்டியை பார்ப்பதற்கு

ஊருக்குச் செல்வதுண்டு

,

விடுமுறை முடிந்து

வீட்டிற்கு

திரும்பும் வேளையில்

பேருந்து நிலையம் வரை

வருவாள்

அன்பின் நிமித்தமாக

,

அவளின் சுருக்கு பை

பெரும் வரம்

வாங்கியிருக்கும்

எப்பொழுதும்

அவள் இடுப்பிலேயே

தொங்குவதற்கு

,

அதில் வெற்றிலை பாக்கும்

சுண்ணாம்பு டப்பாவின் வாசமும்

வாசனைத் திரவியங்களின்

வாசனையே மிஞ்சி விடும்

,

அப்பையில்

சில்லறைகளுக்கும்

பணத்துக்கும் சேர்த்து

ஒரு இடமும் இருக்கும்

,

அதிலிருந்து

ஒரு ஐம்பது ரூபாய்

நோட்டை எடுத்து

செலவுக்கு வைத்துக் கொள்

என்றுரைப்பாள்

,

வெற்றிலை பாக்கு

வாசத்தோடு

பாட்டியின் வாசமும்

அந்நோட்டில்

கமகமக்கும்

,

இப்போதெல்லாம்

ஊருக்குச் சென்று

திரும்புகிறேன்

,

என் சட்டைப் பை முழுவதும்

பாட்டியின் ஞாபகம் மட்டுமே

நிரம்பி வழிகிறது…

                                ***

3.பாலைவனமாக

தரைப்பாலம் கூட இல்லை

தண்ணீர் வெள்ளம்

பெருக்கெடுத்து ஓடியது

,

இக்கரையிலிருந்து

அக்கரைக்குச் செல்வதே

பெரும்பாடாய் இருந்தது

,

வெள்ளம் அதிகமாக வந்தால்

பல மைல்கள் சுற்றி தான்

செல்ல வேண்டும்

இல்லையேல்

அன்று அப்பயணம்

அதோடு நின்று விடும்

இப்போது மேம்பாலம்

வந்து விட்டது

தண்ணீர் வெள்ளம் தான்

வரவேயில்லை

,

சுட்டெரிக்கும் வெயிலோ

அணைக்கட்டு கற்களின்

உட்புறம் வரை

ஊடுருவிச் செல்கிறது

,

போகும் பொழுதும்

வரும் பொழுதும்

ஒரு வழிப்போக்கனாக

அச்சூட்டை உணர்கிறது

என் தேகம்

,

இன்று

இக்கரையிலிருந்து

அக்கரைக்கு

சுலபமாக

கடந்து செல்கிறேன்

,

ஒரு பாலைவனத்தை கடந்தாற்போல்…

                                            ***

4.வருத்தம்

இருசக்கர வாகனப் பயணம்

கொஞ்சம் வேகம் தான்

சற்று குறுக்கே வந்து

விழுந்தது

ஒரு குயில்

அது பறத்தலை

கொஞ்சம் கொஞ்சமாக

கற்றுக் கொண்டிருக்கலாம்

,

அதன் கால்களில்

அடி பட்டுருக்க கூடும்

சற்று தவழ்ந்தே

சாலையோரமாக வளர்ந்திருக்கும்

செடி கொடிகளுக்குள்

நகர்ந்து சென்றது

 ,

அவ்விருப்பிடத்தை விட்டு

வேறெங்கும் அதனால்

செல்ல இயலவில்லை

,

வாகனத்தை திருப்பி

அதைக் கையிலெடுத்து

அதனின் கால்கள்

உடல்களென வருடினேன்

,

எங்கிருந்தோ பறந்து வந்த

ஒரு காக்கை

அதன் குரலில் கரைந்தது

,

காக்கைக் கூட்டங்கள்

அவ்விடத்தில் வட்டமடித்து

என்னை முழுவதுமாக

சூழ்ந்து கொண்டன

ஒருவேளை அதனின் கூட்டில்

அக்குயில் வளர்ந்திருக்கலாம்.

பறத்தலை கற்றுக் கொள்ள

சாலையோரமும் வந்திருக்கலாம்

,

நீவி விட்ட கால்களோடு

அதை அவ்விடத்திலே விட்டு

நகர்ந்து விட்டேன்

,

கொஞ்ச நேரம்

ஏன் கொஞ்ச நாட்கள்

கூட ஆகலாம்

,

அப்போது

அக்குயிலின் கால்கள்

சரியாகி இருக்கலாம்

பறத்தலையும் கற்றிருக்கலாம்

இரண்டு நாட்கள் கழித்து

அவ்வழியிலே

மீண்டுமொரு பயணம்

,

சாலையோரமாக

ஒரு குயிலின் சத்தம்

என் செவிமடுத்தது

அது அக்குயிலாக

இருந்திருந்தால்

என் வருத்தம் நீங்கும்.

00

கண்ணன்.க,

விருதுநகர் மாவட்டம்.

“தொலைந்து மீண்டவன்” மற்றும் “மௌனத்தின் உரிமைக்குரல்” என இரண்டு கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *