இத்துணை கோபங்களுக்கிடையே

ஒரு அசட்டு புன்னகை இட்டு செல்கிறாய்

தாய்க்கும் மகளுக்குமான

பந்தங்களுக்கிடையில் பரிதவிக்கும் இயற்கை…..

**

உலர்த்தி விட்டு செல்கிறது வானிட்டு

மழையை மெல்லமர்ந்து நகலெடுத்து

செல்லும் சூரியனும் ஒரு

ஒளிப்பதிவாளர் என்று கூறுவதும்

மிகையாகாது

**

சாமியிடம் மண்டியிட்டு

வரம் கேட்கும் பக்தனுக்கு

உடுக்கையுடன் அருள் பாலிக்கிறார் தனக்குரிய

வரத்தை மறந்து பூசாரி

**

உதிர்ந்த மரக்கிளையை

சிறகொடிந்த பறவை தன் தாயென

இறுகப் பற்றி பிடித்துக் கொள்கிறது

**

இடைவிடாது பெய்யும்

மழையில் அடிக்கடி ஓய்வெடுத்து

கொண்டிருக்கிறது

சூரியன்

**

சில பறவைகளின் சப்தம்

பசியோ வலியோ கீதமோ

புரியாமல் தவிர்க்கிறது பெருங்காடு

***

ச. சத்தியபானு

ஆசிரியராக கடந்த நான்கு ஆண்டுகளாக இணையதளத்தில் கவிதை எழுதி வருகிறார். சிறு சிறு குறுங்கவிதைகளை எழுதி அவ்வப்போது முகநூல் வாட்ஸ் ஆப் இணைய தளங்களில் பதிவிடுபவர். இவரது  கவிதைகள் பல இணைய இதழ்களில் வெளியாகி உள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *