1. இருத்தலியல்
இருந்தே ஆக வேண்டும்
என்றெல்லாம்
கூப்பாடவில்லை யாரும்
என்றாலும்
இருக்கிற வரைக்கும்
இருக்கலாமென்றால்
யாரும் கேட்பாரில்லை
என்பதற்காக
சப்தம் போடாது
இருக்கவா வேண்டும்.
2. லூசிஃபெர் மனிதன்
படைத்து
பழங்களை சுவைக்கச் செய்து
சித்தி வீட்டில் கஷ்டப்படுடா
சாவுகிறாக்கி மகனே என தள்ளிவிட்டு
சுவர்க்கத்தில்
நடனமாடி இசைந்து
இன்பத்தில் இருக்கும் பரம மாதாவே
வுலகம் மனிதரால் ஆனது
சரியா
ம் என்கிறீர்
அப்படியெனில் மனிதருக்கானது தானே
ம்ம் என்கிறீர்
தொடர்ந்து ம்களை அளிப்பது
முறையாகுமா ?
இட்டதும் நானே
இயங்குவதும் நானே என்கிறீர்
மெல்லமாய்
ம் < ம் < ம் என்கிறேன்
எல்லாம் அதுவாய் சரியாகிறது.
3. நாற்போர்
மூக்கை நுழைக்க
நாவு துலாவும்
பக்கத்து வீட்டில் குடியேறியிருக்கும்
குமரி யாரவள் அழகாய் இருக்கிறாளா ?
அண்டை நாட்டு அதிபர் நன்றாக
ஆங்கிலம் பேசுகிறாராம்
அவர் பயன்படுத்தும் பற்பசை என்ன ?
அநேகமாக நேற்று இறந்தது
தாத்தா நல்லக்கண்ணா ? செல்லக்கண்ணா ?
ஆமாம்
நண்பணுக்கு மணமாகி ஒரு வருடம் இருக்கும்தானே ?
நமக்கேன் இதெல்லாம்
வெட்டிப் பேச்சு என்கிறீர்
வேறு என்னதான் செய்ய
இப்போது
வேலைவெட்டி இல்லாமல் இருக்கிறேன்
வாருங்களேன்
இலக்கியமாவது பேசலாம்.
00

இயற்பெயர் கார்த்திக்.திருச்சியைச் சேர்ந்தவர்.முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர். முதல் கவிதைகள் கதவு இணைய இதழில் வெளியானது.

