1. நின்றதில்லையவன்

என்னுள்

ஆடிக்கொண்டிருக்கும்

பரமன்

படைத்துக்கொண்டே இருக்கிறான்

எல்லாவற்றையும்

பேசாமல்

சிவனேன்னு இருடா என்றால்

சும்மா இருப்பானா

என் சிவன்

எல்லாவற்றுக்கும்.

2. ஆட்டம்Atom

காத்திருக்கிறேன் மலை முகட்டில்

ஒற்றைக் கல்லில்

ஒற்றை ஆளாய்

பற்றுதலின்றி எங்கும் தொங்கும்

பரந்த காற்றில்

ஒரு காற்றை தள்ளி

இன்னொரு  காற்று

நுழைகிறது காத்திருந்து

,

ஊசி துளையுள் நுழையும்

இமைகளின்

கண்ணுள் குறுகிக் கிடக்கும்

கருபிரபஞ்சத்தில்

மொய்க்கும்

சிறு வெண்மை திட்டுகள்

எல்லாம் என் அவையங்கள்

எல்லாம் என் மெய்

எல்லாம் எல்லாம் அலைந்து அமரும்

என் உள்ளங்கையில்.

3. தற்சார்பு

தன்னையே சேமித்துக் கொள்ளும்

நினைவுகளை

இக்கணத்திலிருந்து

அழித்துவிட்டு

அசைவற்ற உடல்

ஆடுகிறது கயிற்றில்

மணிக்கூண்டின் முள்ளென

ஒரு கணம் இயக்கமற்று போகும்

கண்திறந்த அருகாமைகள்

இனிவரும் ஓலங்கள்

எழுப்ப முயற்சிக்கும்

சரிந்த நினைவுகளை

இயங்கும்  நினைவுகளின்

கைப்பிடியிலிருந்து.

இயற்பெயர் கார்த்திக். திருச்சியைச் சேர்ந்தவர், ஜமால் முகமது கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர்.முதல் கவிதைகள் கதவு இதழில் வெளிவந்தது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *