1

விண்முட்டும் மலைக்கு

அடிவாரத்தில் உலவும் பூச்சிகள்

அறைகூவலா?

,

கொட்டும் அருவிக்கு எதிராக

சொட்டும் நீர் சூழ்ச்சியா?

,

வானுயர் மரத்துக்கு முன்னால்

உதிர்ந்த இலைகள் கலகமா?

,

சலவைக் கல்லை உரசி

மண்ணாங்கட்டிகள்

மயில் நடனமா?

,

நீரில் விழுந்த வெளிச்சம்

நிலவை நோக்கி

எள்ளி நகையாடலா?

,

தரையில் உருளும் பந்து

பூமி உருண்டைக்கு

போட்டியா?

,

ஜீவநதிக்கு

சிற்றோடை

எச்சரிக்கை மடலா?

,

தேவ கானத்தை

தேய்ந்த ஓசைகள்

ஏகடியம் பேசுவதா?

,

ஞானிகள் சபையில்

கசடுகளும் அசடுகளும்

கொக்கரிப்பா?

,

எங்கேயோ கேட்ட குரல்

எட்டுப் பட்டி தீர்ப்பா?

செக்கும்

சிவலிங்கமும் ஒன்றா?

,

தந்திரத்தில்

அழுகும் சமூகம்

தானாய் மடியும்

வேகமாக.

2

நேற்று வரை

நீ யாரோ

நான் யாரோ

இன்று

நாம் யாரோ

நாளை

யார் யாரோ

ரோ ரோ ரோ

அழாமல் தூங்கு.

3

நிஜத்திலிருந்து

சற்றே கால்நீட்டிப் படுத்தால்

கனவு

கனவிலிருந்து

சற்றே கால் மடக்கிப் படுத்தால்

நிஜம்

நீட்டாமலும் மடக்காமலும்

படுத்துப் பாருங்கள்

தூக்கமே வராது

இரண்டாலும் செய்யப்பட்டவன்

மனிதன்

எந்த மனிதனின் கதையும்

ஒன்றோடு நிற்பதல்ல.

3

எழுதிய பிறகு

வேண்டாமென்று தோன்றியது

கிழித்துப் போட்டேன்

கிழித்த பிறகு

வேண்டுமென்று தோன்றியது

மீண்டும்

அதேபோல் எழுத முடியவில்லை

எழுதிக் கிழித்தது

போதுமென்று தோன்றியது

தோன்றும்

இல்லையெனில்

தொடர்ந்து எழுதுங்கள்

எழுதிக் குவியுங்கள்

நீங்கள் எழுதுவது என்பதிலிருந்து

நீங்களே எழுத்து என்பதாக

சொல்லப்படுவீர்கள்

நீங்களும் நம்புவீர்கள்

பிறகுதான் இருக்கிறது

இதர கேளிக்கைகள்

4

தனது கடைசி நாள்

வேறு மாதிரியாக

இருக்க வேண்டுமென்று

ஒவ்வொரு மனிதனும்

கனவு காண்கிறான்

கடைசியில்

அவன் கண்ட கனவுக்கு

நெருக்கமாகக்கூட

அந்த நாள் அமைவதில்லை

அதுபற்றிய உணர்வு நிலையின்றி

அவன் விடைபெறுகிறான் என்பதே

அவனுக்கு அளிக்கப்பட்ட

கடைசிச் சலுகை.

அதுவும் இன்றி

இறுதிமூச்சு உள்ளவரை

போராடும் உணர்வுடன்

நீடிக்கும் மனினுக்கு

சுற்றியுள்ளவர்களின்

முழு ஆதரவு நீடிக்குமா என்பது

ரகசிய ஆய்வுக்குரியது

தாமதிக்கும் மரணம்

ஒவ்வொன்றும்

அதற்குரிய மரியாதையை

வேகமாக இழக்கும்

ஆம். மரணத்துக்காக

யாரும்

காத்திருக்கத் தயாரில்லை.

5

விட்டுவிட்டுக் கேட்கும்

தவளையின் சத்தம் போல

நினைவுகளில் ஒலிக்கும்

அந்த அவமானத்தின் குரலை

அவனால்

நிறுத்த முடியவில்லை

அதனிலும் பெரிய

அவமானத்துக்குப் பிறகு

இது நின்றுவிட்டது

பெரிது பெரிதுதான்.


சுகதேவ் – மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் நூறு வாரங்களுக்கு மேல் வெளியான பத்திக் கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், வணிகமணி இதழில் வெளியான பொருளாதாரக் கட்டுரைகள் தனித் தொகுப்பாகவும், தினமணி கதிர் மற்றும் சிறப்பிதழ்களில் வெளியான இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த 65 கருத்தாளர்கள், ஆளுமைகளுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களை குதிர் (@kudhirvirtual) யூ டியூப் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். திரை விமர்சனங்கள் உள்பட தெரிந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகள் (@ElayaperumalSugadev) மையம் விரியும் காலம் என்ற தலைப்பில் அமேசான் கிண்டில் மின்னூலாக (2024) வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுதிகள்: ஒவ்வொரு கணமும் (2019) இன்னொரு திணை மயக்கம் (2024).

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *