(1)
மிதக்கும் வீட்டோடு பயணிப்பதில் பாதுகாப்பாக உணர்கிறாள்.
அந்தரமாய் மிதக்கும் குமிழிகளை பிடித்து வர்ணகலவை குழைத்து வரைகிறாள்.
மூடிய சன்னலுக்கு வெளியே ஒளிந்திருக்கும் சூரியனுடன் விளையாட்டு ஒப்பந்தம் செய்து கொண்டு..
(2)
காலடி பாதத்திலிருந்து
பரவத் தொடங்கியது இருள்.
கட்டுவிரியனின் விஷமென மேலேழும்பி
வயிறு, கழுத்து முகமென
வியாபித்து மூளையில்
உறைந்து நின்றது.
கடும் அதிர்வில்
இறகிறகாய் உதிர்ந்து
சரிந்தது உடல்.
அள்ளி குவித்த கிடங்கிலிருந்து ஒற்றை
இறகொன்று மேலேழும்பி விளிம்பை நோக்கி பறக்கத்
துவங்கியது.
(3)
எதுவும் மாறவில்லை.
சதா மாற்றத்தை விரும்பும்
மனம் உட்பட.
(4)
வானத்தை நோக்கி
படிக்கட்டுகளை எழுப்புகின்றனர்.
(5)
ஆடைகளுக்குள் சுழழும் உடல்கள்
சௌகரியத்தின் லாகிரி
எல்லையற்று நீளும் சர்ப்ப முனை.
(6)
எல்லோருடையதும் போலல்ல
என்னுடைய மரணம் எனக்கு.
(7)
குறிப்புகளாய் தேங்கிவிடும் கவிதைகள்
அப்படியே உண்ண முடியாது அனைத்தையும்..
(8)
எப்படி முடியும் கவிதை மட்டும்?
வாழ்க்கை தொடரும்போது!!!
(9)
பெரிய வெங்காய எண்ணச்சுருள்
மணத்தில் மயங்கும் மனம்.
(10)
எண்ணக்கோடுகள் சிறைக்
கம்பிகளென உருக்கொண்டன.
(11)
இருப்பின் நுனிச்சரடு பற்றி
எறும்பென இழுத்துச் செல்லும் எண்ணம்
(12)
இரண்டு சூரியன்கள் உதிக்கத்துவங்கிய போது
அனைத்து மனங்களும் பூமியிலிருந்து பிய்த்தெறியப்பட்டு
ககனவெளியில் சுழன்றதெனவோ சில கணங்கள் தாம்.
பிறகு மொழி நாவின் ஈர்ப்பு பசை கீழிழுத்து
இருண்ட அகல வாய்க்குள் திரும்பவும் வந்து வீழ்ந்தது.
கிழக்கு சூரியன் மேற்கு சூரியன் எனப்பெயரிட்டு
தன் பொய் வாழ்வை தகவமைத்து தொடர்ந்தது.
கால மாற்றம்,இரவு பகல் என விழுமியங்கள் மாறினாலும்
ஈர்ப்பு பசை மிகுந்த மொழி நாவு எந்த திகைப்புமின்றி
வெட்கமற்று இரை உண்ணத் தொடங்கியது.
(13)
உடல்-மன நோய்கள் உருகி
நீராய் கரைந்துவிட வேண்டும்
நெகிழ்விழும் அன்பிலும்.
இசை அதற்க்கான திறப்பு.
000

சுரேசுகுமாரன்
இயற்பெயர் சுரேஷ்குமார்.வீ, கட்டுமானத்துறை பொறியாளர். உடுமலைப்பேட்டை. 2016-ல் ’விஷ ஊற்று’ என்கிற கவிதை நூல் வெளியாகியிருக்கிறது.