யார் முகமும் காணப் பிடிக்காத
தனியறைக்குள் இருந்தவாறு
யாருக்கும் பிடிக்காத கவிதை
எழுதுவதில் என்னதான் உள்ளது?
oo
எல்லோரும் தீவிரமாக
இயங்கி கொண்டிருக்கிறார்கள்..
பிரியாணி கடையில்
துணிக்கடையில்..
பழக்கடையில்..
ஏதோ ஒன்று
விற்கப்பட்டுக்கொண்டும்
வாங்கப்பட்டுக் கொண்டும்
வெறும் பயன்பாட்டு களமாய்
மாறிவிட்டது உலகம்..
00
மிதித்தழிக்கப்பட்ட கனவுகளை சுமந்தவாறு
பயணம் தொடர்கிறது..
உயிர்ப்புடன் இருந்தபோது லகுவாக இருந்தது
இப்போது கனக்கிறது..
00
எதுவுமில்லாமல் கரைகிறது வானம்..
கோட்டோவியங்கள்
உயிப்பெற்று நடமாடும் பகல்.
மௌனத்தின் மெல்லிய விரல்களில்
நேரம் உருகி சொட்ட,
நிழல்களின் நரம்புகளில்
ஒளி ஓடிக்கொண்டே இருக்கிறது.
பறவைகளின் பறக்காத கனவுகள்
காற்றில் வரைந்த வட்டங்கள் போல
திரும்பித் திரும்பி
அதே வானத்தைத் தேடுகின்றன.
தூரத்தில் மறையும் மேகத் துண்டு
ஒரு சொல்லாத நினைவாய்
இதயத்தின் விளிம்பில்
நீண்டுநிற்கிறது…
00

வீ.சுரேஷ் குமார்
4/281-A,கணேஷ் நகர்,
காந்திபுரம்,
காந்திநகர்(போஸ்ட்)
உடுமலைப்பேட்டை-642154.

