கடிவாள நார்கள் இற்று வீழும் …
தொலைதூர குழம்படி ஓசை
இடிமுழக்கமென கேட்கும்..
புவி மூடிய இருள் படுகை
மீதொரு ஒளிகீற்று..
0
சிலர் புதைக்கப்பட்டனர்
சிலர் எரிக்கப்பட்டனர்
சிலர் மாயமாகிப்போயினர்
எஞ்சிய சிலரோ
காத்திருக்கின்றனர்..
0
ஒரு துளி விஷம் போதும்தான்..
பலவீனமான மனித உடலுக்கு..
எத்தனை வகை உணவுகள்..
எத்தனை மனிதர்களின் கைவண்ணம்..
ஒன்றில் கூட மறதியின் அலட்சியம் இல்லை..
இதுவே சமூகம்..
இதுவே அறம்..
0
மரணம் ஒரு விளையாட்டு
அவ்வளவுதான்..
நீண்ட ஆயுளும் அற்ப ஆயுளும்
புதிர் கணக்கின் விகிதாச்சார
வேறுபாடுகள் தாம்..
0
புதைக்கப்பட்டவர்களின் நிழல்
இன்னும் அலைந்தவாறுதான் இருக்கின்றன..
எரிக்கப்பட்டவர்களின் சாம்பல்
காற்றில் மிதந்தவாறுதான் உள்ளன..
மாயமானவர்களின் அமைதி
பின்புலத்தில் நிரந்தர ஓசையென
எப்போதும் ஒலித்த வண்ணம்..
0
முறிபடும் சடவுகளிலிருந்து
எழுச்சியுறுகிறது உடல்.
இள வெய்யில் நாவு தடவ
மஞ்சள் துகள்கள் மின்னும்..
வானம் திறக்கப்பட்டு
வெளியில் இன்னுமொரு
மூடப்பட்ட வானம்..
0


