நவீன கவிதைகளின் வீச்சு என்பது எல்லை கடந்த ஒன்றாக மாறிவிட்டது. சொல்லும் கருத்தைவிட அதன்மூலம் பெறப்படும் அர்த்தங்கள் நிறைய விஷயங்களை எடுத்துச் சொல்லும். உவமையாக தான் கூறும் கருத்திலிருந்து வாசகர்கள் பெறும் உவமேயங்களையே இதன் வழியே கவிஞன் எழுதுகிறான் அதை ரசிக்கிறான். இன்றைய காலத்தில் ஒழுக்கப் பண்புகள் அறச்செயல்கள் அன்பு கருணை போன்ற விழுமியங்கள் மனித மனங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்ந்து வரும் சூழலில் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்ற கூட்டுக்குள் தனக்கான பாதுகாப்பு வளையத்திற்குள் பத்திரமாக வாழும் மனிதனுக்கு பொருளாதாரமும் வசதிவாய்ப்புகளும் முதன்மையானவையாக மாறிவருகின்றன. இத்தகு மனங்களுக்குள் பேரன்பையும் பெருங்கருணையையும் விதைத்திடவும் தானியங்கி இயந்திரங்களாக மாறிவரும் மனிதர்களிடம் மனிதத்தை வளர்த்திடவும் ஜெயக்குமார் இத்தொகுப்பை ஆக்கியிருக்கிறார் என்பதே சாலப் பொருத்தம்.
பல கவிதைத் தொகுப்புகள் அதன் வழயே பல விருதுகள் பெற்றிருக்கும் கவிஞர் ஜெயக்குமார் படிகள் படிப்பகம் நிறுவி மாணவர்களை வாசிப்பின் பக்கம் ஈர்த்து வருகிறார்.அவரது நவீன கவிதைகளின் தொகுப்பாக தானியங்கி இயந்திரங்கள் வெளிவந்துள்ளது.
இன்றைய அவசர யுகத்தில் பொறுமையும் சகிப்புத்தன்மையும் குறைந்து வரும் சூழலில் சாலையில் நடைபெறும் இயக்கங்களில் எல்லோரது மனநிலையும் உயர் ரத்த அழுத்தத்திற்கு உட்பட்டுவிடுகிறது.பெருகும் வாகனங்கள் குறைந்துவரும் சாலைப்பரப்பு வேகவேகமான வேலையின் நகர்வு என மனிதர்களின் ஓட்டம் தடைபடுகையில் ஏற்படும் நெருக்கடியில் மனிதனின் எண்ணங்களை படம் பிடிக்கிறது கவிதை.இதை வாழ்வின் நகர்வுகளோடு ஒப்பிடுகையில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போக்கில் நமது நிலையையும் படம்பிடித்து விடுகிறது.
**ஒலிப்பான்
,
ஒரு வாகனமும்
வழி கொடுக்கவில்லை
காற்று ஒலிப்பானை இயக்குகிறேன்
முழுசாலையும் அதை எதிரொலிக்கிறது
சூரியன் அஸ்தமித்து விட்டது.
பகையோ அன்போ நமது பாதையைத் தொடர்ந்து அலங்கரிக்கும் சக்திகளாகின்றன. வளர்த்துவிடும் பகைமையால் அடுத்தவர் வாழ்வல்ல நமது முன்னேற்றமுமே தடையாகக்கூடும். எப்போதும் மலர்களை தரிசிக்கும் மனதில் மொட்டுகளுக்கும் இடம் கொடுத்தால் அன்பே பிரதானமாகிவிடும்.
**சமாதானம்
,
ஆட்டோக்காரர்கள் சண்டையிடுகிறார்கள்
அல்லது
பெரும்பாலும் சமாதானம் ஆகிவிடுகிறார்கள்
பகையானது சாலையில் கடந்து சென்று கொண்டே இருக்கிறது உதிர்ந்து போகும் மலர்களுக்கு முன்பாக
கைகூப்பும் மொட்டுக்கள் உலகை வணங்குகின்றன.
ஒன்றைப் பின்பற்றுதல் என்ற வட்டத்துக்குள் நுழைந்து விட்டால் அதுவே நமக்குப் பாதுகாப்பு என்ற மனப்பான்மையின் விளைவே நம்மையும் செம்மறியாட்டுத்தனத்தில் மாட்டிக் கொள்வது. மந்தை மனப்பான்மை பெருகிவரும் தருணத்தில் சிந்தனை தொலைந்துவிடுகிறது. அதன் வழியே செயல்பாடுகளின் இலக்கோ வீரியமோ காணாமல் போய்விடுகிறது.
**மந்தை
,
அடைக்கப்பட்ட பாதையில் சென்று திரும்புகிறேன்
என்னைத் தொடர்ந்து மற்றவரும் வந்து திரும்புகிறார் செம்மறி ஆடுகள் வயலில் மேய்ந்து கொண்டிருக்கின்றன.
விளம்பரங்களின் நம்பகத்தன்மை என்பது அந்தப் பொருள்களின் விற்பனைத் தன்மையை மாற்றி விடக் கூடிய ஆற்றலுடையது. இன்றைய சூழல் எவற்றையும் விளம்பரத்தின் மூலம் மக்களிடையே திணித்துவிட முடியும் என்ற நிலையை ஏற்படுத்திவிடுகிறது. பொருளுக்கு தொடர்பே இல்லாத ஆள்களைக் கொண்டு (ஆண்களின் உபயோகப்பொருள் பலவற்றிற்கு பெண்களே விளம்பரப் பிரதிநிதிகள்) செய்யப்படும் விளம்பரங்கள் சமயங்களில் நம்மையும் அசட்டுத்தனங்களுக்குள் தள்ளிவிடுகின்றன.
**கலை மயக்கம்
பழமுதிர் நிலையத்தில் விளம்பரப் பதாகையில் பல்வேறு பழங்களைக் காட்சிப்படுத்தியவர்
பழச்சாறுக்குப் பதிலாக
பீர் பொங்கும் குவளையை காட்சிப்படுத்தி விட்டார்
காட்சிப் பிழை தான் வடிவமைப்பாளருக்கு பழச்சாறை
மதுவாக்கும்
கலை தெரிந்து இருக்கிறது.
“யாரும் இல்லாத சூழலில் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோ அதுவே உங்களின் குணநலன்” என்பார் சுவாமி விவேகானந்தர். கண்காணிப்புக் கருவிகள் நம்மை எல்லாப் பொழுதிலும் சுற்றிப் படமெடுக்கும் இன்றைய காலத்தில் எப்போதாவது ஏற்படும் ஒரு நொடி நேர சலனம் நம்மை நமக்கே சோதனை வைத்துப் பார்க்கிறது. யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்ற மனநிலையில் நமக்கான சலனம் சிலசமயங்களில் நம்மை இடரவைத்து விடுவதையும் கவனிக்கச் செய்கிறது கவிதை.
**சலனம்
,
கடை வீதியில்
அனைத்துப் பண்டங்களும்
எடை பார்க்கும்
இயந்திரத்தின் மீது வைக்கப்படுகிறது.
நம் மனச் சாய்வை
யாரிடமும் சொல்ல முடியவில்லை.
வீடு சேர்ந்த பண்டங்கள் அல்லது
இன்னொரு நாள்
விடிந்து தான் விடுகிறது.
கவனக்குறைவோ சிந்தனையற்ற நேரமோ விபத்துகளுக்கான காரணமாகிவிடுகின்றன. முழுமையான சிந்தனையோடு இயங்கிடும் எந்தவொரு செயலும் நமக்கான பயனை முழுமையாக்கிவிடும். தன்னை உணர்ந்து விடும் ஒவ்வொரு பயணியும் விதியின் மீதான குற்றச்சாட்டை ஒருபோதும் வாசிப்பதில்லை. இயல்பை உணராத போதும் கவனத்தை குவிக்காத போதும் பணியாகும் போது விதியின் நுழைவை ஏற்றுத் தான் ஆகவேண்டியுள்ளது.
**பயணி
,
சாலையில்
சிறு குழியைப் பார்க்கிறேன் விலகிச் செல்ல இயலாமல் நேரம் கருதி
அக்குழி மீது
வாகனத்தை விட்டு ஓட்டுகிறேன் நங்கென்று முதுகில் ஒரு வலி வாகனத்திற்கும் சாலைக்குமான விதியில்
நான் ஒரு பயணி.
மொழியைத் தாண்டிய உணர்வுகளும் சைகைகளும் மனதில் நிலைத்திருக்கையில் வார்த்தைகளும் பேச்சும் வாயடைத்துப் போய்விடுகின்றன. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கணியனின் மனதை இன்றைய அறிவியல் முகத்தோடு எழுதிச் செல்கிறது இந்த வரிகள்.
**ஊர்கள்
,
நமது மொழி
தெரியாத ஒருவனிடம்
வழி கேட்கிறேன்
மொழி தெரியாதவன்
வழி சொல்கிறான்
மொழியைக் கடந்து செல்கிறது ஊர்கள்.
வாழ்வின் நகர்வென்பது வெற்றி தோல்விகளின் கணக்குகளில் லிடைதேடுவதல்ல. வாழ்க்கையெனும் பயணத்தில் ஒவ்வொருவரும் பிறரைப் சார்ந்தும் பிறரது வாழ்வோடு பிணைந்துமே வாழ வேண்டியிருக்கிறது.அத்தகு சூழலில் வெற்றிக்கான கொண்டாட்ட மனநிலையோ தோல்விக்கான துவண்டுவிட்ட தைரியமோ எப்போதுமே காலத்தின் கரங்களுக்குள் ஒன்றாகத்தான் சிக்கிக் கொள்கின்றன. ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யும் மனநிலையை ஏற்றுக்கொள்ளும் போதே மனிதனுக்குள் அமைதியின் கதவுகள் திறக்க ஆரம்பிக்கின்றன.
**சமம்
,
வெற்றி பெற்றவன்
விளம்பரம் செய்கிறான் தோல்வியுற்றவன்
அமைதி காக்கிறான்
வெற்றியையும்
தோல்வியையும்
சமன் செய்கிறது காலம்.
எவ்வுயிரும் தன்னுயிராய் எண்ணும் மனதில் எல்லா உயிர்களுக்கும் சமமான மதிப்பும் மரியாதையுமே விளைந்து நிற்கும்.அதனதன் உயிருக்கு அதனதன் குருதி பெரிது தானே.அதனதன் பிரச்சனை அதனதனுக்கு பெரிய விளைவு தானே. பிறகெப்படி நாம் உயிர்களை சிறிதென்றும் பெரிதென்றும்
பிரித்துப் பார்க்க முடிகிறது? அழகியலை ரசிக்கும் மனம் வாய்த்திருக்கும் எல்லோருக்குள்ளும் முளைத்து விடுகிறது எல்லா உயிர்களையும் பேரன்போடு பார்க்கும் அகம்.
**உயிர்
,
ஒவ்வொரு நாளும்
என் வாகனத்திற்கு
முன்பாக
அணில் கடக்கிறது
அதற்கு நான் என்ன கொடுத்தேன்?
உயிர் தடுத்தேனா? கொடுத்தேனா?
உயிரோடு உலவும் உயிர்களின் இயக்கத்தை விட கடவுளின் மீதான பற்று என்ன செய்து விடக்கூடும்? உதவியோ தினசரி நகர்வோ உடனடித் தேவையோ சக மனிதனால் கைகொடுத்து உயர்த்திவிடப்படுவதைவிட
மனிதனின் அன்புக்கு வேறென்ன பயன் கிடைத்துவிடப்போகிறது? காணும் உயிர்களிடத்து கருணையை விதைக்கும் வள்ளலாரின் வரிகளாகவே நம்மை வினாவிற்குட்படுத்துகிறது கவிதை.
**மனிதாபிமானம்
,
வாகனத்திலிருந்து விழுந்துவிட்டது வெங்காய மூட்டை
அக்கம் பக்கம் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும் சிறார்கள் சேர்ந்து
மூட்டையைத் தூக்கி
அவசர அவசரமாக
வாகனத்தில் வைக்கிறார்கள். இன்னும் சிலர்
அவசர அவசரமாக
கோவிலுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
அவரவர் உள்ளே ஒளிந்திருக்கும் இறைவனை அடையாளம் காணாமல் இடங்களிலோ ஆலயங்களிலோ தேடித் திரியும் மனங்களைப் பற்றி திருமூலரைவிட யாரால் சிறப்பாகப் பேசிவிடமுடியும்? இறைவனின் பெயரில் இன்னல்களை விளைவிக்கும் எல்லோருக்கும் இந்தக் கவிதை திருமூலரை திரும்ப அழைத்து வருகிறது.
**பிரார்த்தனை
,
நீண்ட தூரம் சென்று
கடவுளைப் பிரார்த்திக்கிறார்கள் என்ன அவசரமோ
திடீரென
ஒரு கடவுள்
வாகனத்தில்
அடிபட்டு விட்டார்.
எளிய சொற்களும் உணர்வுக்கு நெருக்கமான காட்சிகளின் ஊடாக எழும்பி நிற்கும் அறமும் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்த நூலின் பக்கங்கள் எங்கும் நிறைந்திருப்பது சிந்தனையில் விளைந்திருக்கும் அன்பின் வழித்தடங்களே. சில வரிகள் வெறுமனே உரைநடையென கடந்துசென்ற போதிலும் அவையும் சமூகத்தின் போக்கில் நடக்கும் நேர்மறைச் செயல்பாடுகளையே இனம் காட்டுகின்றன.உட்கருத்தோடு வாசிப்போரின் உளக்கருத்தையும் இணைக்கும் இக்கவிதைத் தொகுப்பில் நமக்குள் ஒளிந்திருக்கும் அறச்சித்தனைகள் வெளிப்பட வழி கிடைக்கிறது.
000
தானியங்கி இயந்திரங்கள் , கவிதைத் தொகுப்பு , புன்னகை பூ ஜெயக்குமார் , வெளியீடு பொள்ளாச்சி இலக்கிய வட்டம் , முதல் பதிப்பு டிசம்பர் 2024 , பக்கம் 96 , விலை ரூ 200

இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர். பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி தினபூமி மனித நேயம் புதிய உறவு, புதிய ஆசிரியன், உரத்த சிந்தனை போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. நூல் விமர்சனங்களில் நிறைய பரிசுகளைப் பெற்றுள்ளார். சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. 1.மின்மினிகள்(1999)
2.தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022)
3.தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது)
4.அன்பு மொழி(2024)
5.மீன் சுமக்கும் கடல் (2025)
என ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.