அத்தியாயம் 6
காட்டை ஒட்டிய வீட்டுக்கு வரும் வழியில் நாங்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். வெய்யில் கால ஆரம்பம். பதினோரு மணிக்கெல்லாம் நல்ல உறைப்பு. ரன் எடுக்க ஓட வேண்டி இருந்ததால், உடலெல்லாம் வேர்வை வழிந்தது. எங்கள் மூவருடன் சேகரும் விளையாட வந்திருந்தான்.
நான் மட்டையைப் பிடித்திருக்க, சேகர் பந்து வீசினான். கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து வைத்து, மட்டை, கார்க் பந்து, ஸ்டம்ப் எல்லாம் வாங்கியிருந்தோம்.
அண்ணன் சந்துரு ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியின் போதும், ஒரு நோட்டில் இரண்டு அணிகளின் ஸ்கோர்களையெல்லாம் எழுத ஆரம்பித்திருந்தான்.
விளையாட்டின் இடையில் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்த இருவர் வீட்டுக்கு வந்தனர். ஒருவர் சற்றே வயதானவர். மற்றொருவர் அவரை விட சற்று வயது குறைவாக காணப்பட்டார்.
வயதானவர் என்னிடம் வந்து,”ஒங்க தாத்தா இருக்கானாடா?” என்றார். “ இருக்காரு தாத்தா”.
தாத்தாவிடம் ஓடிப்போய் “தாத்தா, ஒங்களப் பாக்குறதுக்கு யாரோ வந்திருக்காங்க” என்றேன்.
தாத்தா ஒரு துண்டை எடுத்துப் போர்த்திய படியே வெளியே வந்து,”எப்பவும் வராதவங்க வந்திருக்கீங்க. வா, மகாலிங்கம், பழனிச்சாமி”.
அன்று விடுமுறை நாள் என்பதால் அப்பாவும் வீட்டிலிருந்தார். “வாங்க பெரியப்பா. உட்காருங்க” என ஒரு கட்டிலை எடுத்துப் போட்டார்.
“செங்கான், நல்லதா ரெண்டு எளநியப் போடுப்பா” என்றார்.
“ சொக்கலிங்கம், தெவம் ரெண்டு வாரத்துல வருதில்ல. அதுதான் பத்திரிகை வச்சுட்டு ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போலாம்னு வந்தோம்”.
“அவ இருந்திருந்தா, சந்தோஷப்பட்டுருப்பா. போயி ஒரு வருஷம் ஆகிப்போச்சு”.
“என்னப்பா பண்றது, நம்ம கையிலயா எல்லாம் இருக்குது. அவன் கிட்ட ஒப்படைச்சிட்டு ஆக வேண்டிய வேலையப் பாக்க வேண்டியது தான். இந்த தடவ, ஒரு தலக்கட்டுக்கு, ஐநூறு ரூபா. பூசக் கூட மட்டும் வாங்கிட்டாப் போதும். வேட்டி சட்டை பையி குடுத்துருவம். பிரசாதத்துல ஒரு கூறு. பூசக்கூடைக்கு தாழம்பூவும், எடுக்கற பொம்பளங்களுக்கு மாலையும் குடுத்துருவம்.
மொத நாளு தீர்த்தக் கொடம். இரண்டாவது நாளு, பொடவ படைச்சி, பூசக் கூடயோட ஊரச்சுத்தி வந்து, சாமிக்குப் பூஜை. ரெண்டு நாளும் நேரமாவே வந்துடுங்க”.
“ஐநூறு கொஞ்சம் அதிகமா இருக்குதேடா மகாலிங்கம்?”. “வெல வாசி ஏறிப்போச்சில்ல. எல்லாம் செய்யுனுமில்ல”.
“சரி சரி எளநியக் குடிங்க. இந்த டேஸ்ட் எங்கேயும் வராது. இருந்து மதியம் சாப்பிட்டுட்டுப் போலாம்”.
“அட நீ வேற. நாலு எடம் போவனுமில்ல. லீவு நாள்ள வச்சிட்டா, நேர்ல பாத்த மாதிரியும் இருக்கும். அப்ப நாங்க கெளம்பறம்”
அம்மாவும் அப்பாவும் கும்பிட்டு வழியனுப்பி வைத்தனர்.
அன்றிரவு சாப்பிட்டு முடித்ததும், கட்டிலிலும், திண்ணையிலும் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தோம். தாத்தா,”ஏண்டா அப்பு, திடீர்னு ஐநூறு செலவு. கையில ஏதாவது இருக்குதா.எங்கிட்ட நீ குடுத்த, எரநூறு இருக்குது”.
“மாசம் ஆரம்பிச்சு பதினஞ்சு நாள் ஆகிப்போச்சு. சம்பளம் வாங்கின மாதிரியேயில்ல. எங்கதான் போகுதுன்னுத் தெரியல”.
அம்மா,”எங்க போவுது. எல்லாம் இந்தக் காட்டுக்குத் தான் போடுறிங்க. பூசக்கூட வாங்கனும். முப்பூச. நம்மகிட்ட வளர்ற சேவலயே அறுத்திடலாம். ஆனா நாலஞ்சு பெட்டக் கோழிங்களுக்கு ஒரு சேவலாவது வேணும். யோசிச்சுப் பண்ணுங்க. அப்புறம் பஸ் செலவு இருக்குது”.
“அம்மா, அந்த வாரம் எங்களுக்கு தமிழ் பரிட்சை இருக்குது. செவ்வாய் புதன் ரெண்டு நாளு லீவு போடனும். தமிழய்யா லீவு போட்டா அடிப் பின்னிடுவாரு”.
“முழுப் பரிட்சை கெடயாதில்ல. அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்கடா”.
“எதுக்குத் தான் இந்த ஆடு கோழிங்கள வெட்டறானுங்களோ. பெரிய பாவமில்லையா” என்று சலித்துக் கொண்டார்.
அன்றிரவு தாத்தாவுக்கு சரியாக தூக்கம் வரவில்லை. விடிகாலையில் சத்தமாக உளர ஆரம்பித்தார். எல்லோருக்கும் தூக்கம் கலைந்து விட்டது. அப்பா தான், கதவைத் தட்டி,”என்ன ஆச்சு” என்றார். “ஒன்னுமில்லப்பா, ஏதோ கனவு. போய் படுங்க”.
அடுத்த நாள் இரவில் தான், தாத்தா கனவைப் பற்றிச் சொன்னார். பெரியாண்டிச்சி அம்மன் நாக்கைத் தொங்க போட்டபடி, நாலு பனை உயரத்திற்கு நின்றபடியே,”சொக்கலிங்கம். ஆடு கோழிங்கள வெட்டறது காலங்காலமா இருந்து வர்ற வழக்கம். அதுங்கள வெட்டாமயே விட்டாலும், பூமியில அதுங்க பெருகிப் போய்டும். மனுஷனுக்குச் சாப்பாடு இருக்காது. ஒன்றுக்கொன்று சமமாவதற்குத் தான், இந்த வழக்கமெல்லாம். போட்டுக் கொழப்பிக்காத”.
நடுங்கியபடி கண்களில் கண்ணீரோடு கைகூப்பிபடியே,”சரி தாயி. நான் ஏதோ தப்பாப் பேசிட்டேன். மன்னிச்சிடு தாயே” என்று சொல்லி கும்பிட்டவுடன், கனவு கலைந்து விட்டதாம். கனவைப் பற்றிச் சொல்லும் போது, தாத்தா வேறொரு உலகில் இருந்தது போலிருந்தது.
“நம்ம சேவலயேக் குடுத்துடலாம்ப்பா. அடுத்த மாசம் வேணும்னா, வேற ஒன்னு வாங்கிக்கலாம்” என்றார்.
எனக்கு இப்போது தமிழ்த் தேர்வை விட, சேவலை வெட்டப் போகிறார்கள் என்ற கவலை அதிகமானது. அம்மாவுக்குப் பூசக் கூடை எங்கே வாங்குவது என்று கவலை. அப்பாவுக்கு இந்த திடீர் செலவை எப்படி சமாளிப்பது என்று கவலை. இதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த, கண் தெரியாத சரோஜினி அத்தை, “நான் ஒரு இருநூறு ரூபாய் சேத்து வச்சு இருக்கேன். அது செலவுக்கு வச்சிக்கப்பா” என்றது. பெருமாள் தாத்தாவும்,”நானும் ஒரு நூறு ரூபாய் தர்றேன் அப்பு” என்றார். இப்போது அப்பாவுக்கு ஓரளவுக்கு நிம்மதி.
அடுத்தடுத்த நாட்களில் எப்போது பண்டிகை வரும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்தோம். அப்பா எப்படியோ பணம் புரட்டி விட்டார். அம்மா ஒரு லீவு நாளில், சந்துருவை பக்கத்து காட்டுப் பெருமாள் கவுண்டருடன், மின்னாம்பள்ளி சந்தைக்கு அனுப்பி, பூசக்கூடை வாங்கி விட்டது.
நாங்களும் லீவுக்கு முன்னரே அனுமதி வாங்கி விட்டோம். தமிழ்த் தேர்வு நன்றாகவே எழுதினோம்.
எனக்குத் தான், சேவலைப் பிரியப் போகிறோம் என்ற கவலை அதிகமானது. பள்ளி விட்டு வந்ததும், அதனுடன் அதிக நேரம் விளையாடினேன். தண்ணீரும் தீனியும் நிறைய கொடுத்து நன்றாக கவனித்துக் கொண்டேன்.
பண்டிகை நாளும் வந்தது. அம்மா எங்களை நேரமாக எழுப்பி விட்டு, தயார் செய்தார். சேவலின் காலைக் கட்டி, ஒரு மஞ்சப்பையில் போட்டு, எடுத்துக் கொண்டோம். தீர்த்தக் குடத்துக்கு, நானும் சந்துருவும் இரண்டு பெரிய கொம்புகளை எடுத்துக் கொண்டோம். ராஜ் நானும் எடுப்பேன் என்று அடம் பிடித்து அழ ஆரம்பித்தான். “ஒன்னால சொம்பத் தூக்கிக் கிட்டு, அவ்வளவு தூரம் நடந்து ஊரைச் சுத்தி வர முடியாது. காலு வலிக்கும். அப்பப்ப ஒன்னோட தலையில வைக்கச் சொல்றன்” என்று அம்மா சமாதானம் செய்தாள்.
அது ஒரு நீண்ட பயணம். ரோட்டுக்கு நடந்து போய், எழுபத்து நான்கு பிடித்து, பழைய பேருந்து நிலையம் அடைந்து, அங்கிருந்து ராசிபுரம் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தோம். தாத்தா களைப்பாக இருந்தாலும் சமாளித்துக் கொண்டார். நான் நன்றாக தூங்கி விட்டேன்.
ராசிபுரத்தில் இறங்கி மீண்டும் சீராப்பள்ளி செல்லும் பேருந்தில் ஏறினோம். சற்று நேரத்தில், சீராப்பள்ளியை அடைந்தோம்.
இறங்கியவுடன் தாத்தாவுடன் பலரும் பேச ஆரம்பித்தனர்.
சாமி வீட்டுக்குச் சென்று அமர்ந்தோம். மதியம் மூன்று மணி ஆகிவிட்டது. பசிக் களைப்பு. தாத்தா கொஞ்ச நேரம் படுக்கிறேன் என்று சாமி வீட்டுத் திண்ணையில் படுத்துக் கொண்டார்.அப்பாவும் அங்கேயே அமர்ந்து யாரோடோ பேசிக்கொண்டு இருந்தார்.
அருகிலிருந்த தெய்வானைப் பாட்டி வீட்டுக்கு அம்மா அழைத்துச் சென்றார். சின்ன அத்தையும் பள்ளிப் பாளையத்தில் இருந்து வந்திருந்தது.
அவ்வளவு பெரிய வீட்டை அப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன். தரையெல்லாம் வழவழ என்று நைசாக இருந்தது. வழுக்கி விடுமோ என்று பயந்த படியே நடந்தேன்.
தெய்வானைப் பாட்டி எங்களைப் பார்த்தவுடன்,”தண்ணி குடிக்கறீங்களா?. கல்யாண மண்டபத்துல பொதுச் சாப்பாடு போடறாங்க. சீக்கிரம் போங்க. பந்திய நிறுத்திடப் போறாங்க” என்றது.
சின்ன அத்தை ஏதோ சொல்ல ஆரம்பிக்க, அம்மா தான் தடுத்து, “சரிங்க. அங்கேயே சாப்புட்டுக்கறம்” என்றபடியே எங்களை இழுத்து வந்தது. மீண்டும் சாமி வீட்டுக்கு வந்து, அப்பாவையும் தாத்தாவையும் அழைத்துக் கொண்டு, கல்யாண மண்டபம் சென்று, ஏகப்பட்ட கும்பலுக்கு இடையே, எப்படியோ இடம் பிடித்து, மதிய உணவு சாப்பிட்டோம். பசியில் எனக்கு மயக்கமே வந்து விட்டது.
லட்டு மிகவும் சுவையாக இருந்தது. சாமி வீட்டுக்கு வந்தால், ஏற்கனவே எல்லோரும் தீர்த்தக் குடத்துடன் வரிசையில் நின்றிருந்தனர்.
அவசர அவசரமாக, அம்மா இரண்டு சொம்பையும் மீண்டும் ஒரு முறை துணியால் துடைத்து விட்டு, திருநீறு பூசி, குங்குமம் வைத்து, கிள்ளி சரம் பூவைச் சுற்றி எங்களிடம் கொடுக்க, நானும் சந்துருவும் வரிசையில் நின்றோம். ராஜும் எங்களுடன் நின்றான்.
எல்லோரும் சிறுவர் சிறுமியர். வரிசை நகர ஆரம்பித்தது. சாமி வீட்டிலிருந்து, கிணற்றுக்கு எல்லோரும் நடந்தனர். அம்மாவும் அத்தையும் கூடவே வந்தனர். அப்பா சற்று தள்ளி நடந்து வந்தார். தாத்தா சாமி வீட்டிலியே அமர்ந்து கொண்டார்.
கிணற்றை அடைந்தோம். ஏற்கனவே நிறைய அண்டாக்களில் தண்ணீர் சேந்தி நிரப்பி வைத்திருந்தார்கள். எல்லோரின் சொம்புகளிலும் தண்ணீர் நிரப்பப்பட்டது. தண்ணீர் குறையக் குறைய, தண்ணீர் சேந்தி நிரப்பிக் கொண்டே இருந்தார்கள்.
எல்லோரும் நடக்க ஆரம்பித்தோம். ஒவ்வொரு தெருவாக தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலம் நகர்ந்தது. வரிசைக்கு முன்னர், சிலர் தொடர்ந்து வாண வெடி போட்டார்கள்.
நடக்க நடக்க தண்ணீர் வழிந்து உடம்பெல்லாம் நனைந்தது. கடைசி தெருவில் நடக்க ஆரம்பிக்கையில், குளிரில் நடுங்க ஆரம்பித்தேன். அம்மா தான், சொம்பை வாங்கி ராஜ் தலையில் சிறிது நேரம் வைத்து விட்டு எனது தலையை நன்றாகத் துவட்டி விட்டு, மீண்டும் சொம்பைத் தலையில் வைத்தது.
ஆங்காங்கே நின்று நின்று நடந்ததால், மீண்டும் சாமி வீட்டுக்கு வந்து சேர, நீண்ட நேரமானது. எல்லா சொம்புகளையும் வரிசையாக இறக்கி வைத்தனர்.அனைவரும் சாமி கும்பிட்டனர். அத்துடன் முதல் நாள் முடிவுக்கு வந்தது. எனக்கு தலை மிகவும் வலித்தது. கால்களில் சரியான வலி.
தாத்தா எனக்கும் சந்துருவுக்கும் கை கொடுத்தார். ராஜ் அவர் மடியில் உட்கார்ந்து கொண்டான். மண்டபத்திலேயே இரவு உணவு அனைவருக்கும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நடந்த களைப்புக்கு ஒரு இட்லி சேர்த்து உள்ளே போனது.
மிகவும் லேட்டானதால், மண்டத்திலேயே இரவு தங்குவது என்று முடிவானது. சின்ன அத்தை எப்படியோ சில பெட்சீட்களை சேகரித்து எடுத்து வந்தது.
வெளியூரில் இருந்து நிறைய பேர் வந்திருந்ததால், இடம் கிடைப்பது சிரமமாக இருந்தது. மீண்டும் சின்ன அத்தையே இடம் பிடித்தது.
புது இடமென்பதாலும், விளக்கு எறிந்து கொண்டே இருந்ததாலும், யாராவது ஒருவர் நடந்து கொண்டே இருந்ததாலும், நீண்ட நேரம் தூக்கமே வரவில்லை.
நள்ளிரவு தாண்டி மிகவும் அவசரமாக ஒண்ணுக்கு வந்தது. அப்போதும் யாரோ ஒருவர் நடந்த கொண்டேதான் இருந்தார்கள். சந்துருவை எழுப்பி, கழிப்பறை சென்று வந்த பிறகு தான் தூக்கமே வந்தது.
காலையில் கணபதி ஹோமம் என்பதால் சீக்கிரம் எழுப்பி விட்டாள் அம்மா. கழிப்பறைக்கும் குளியறைக்கும் நீண்ட வரிசை. எப்படியோ இடம் பிடித்து, காலைக் கடன்களை முடித்து விட்டு, குளித்து விட்டு, ரெடியாகி விட்டோம்.
சாமி வீட்டுக்குச் சென்றால், கணபதி ஹோமம் ஆரம்பித்திருந்தது. நீண்ட நேரம் புகையிடையே அமர இயலவில்லை. இப்போது சாமி வீட்டு வாசலில், சிறிய மேடையமைத்து மூன்று அம்மன் சிலைகளை வைத்து இருந்தனர். சிறப்பான அலங்காரங்களுடன் அம்மன்கள் ஜொலித்துக் கொண்டிருந்தனர்.
கணபதி ஹோமம் முடிந்ததும், அம்மன்களுக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப் பட்டது.
சின்ன அத்தை மகாலிங்கம் தாத்தாவிடம் பேசிய பிறகு சொன்னது: “அடுத்து புடவை படைக்கிறது. மதியம் மூன்று மணிக்கு மேல் ஆகிடுமாம்.பூசக்கூட எடுக்கறதுக்கு எப்படியும் ஏழு மணிக்கு மேல் ஆயிடும். நாம் மண்டபத்தில சாப்புட்டு ரெஸ்ட் எடுத்துட்டுப் பொறுமையா நாலு மணிக்கு மேல வரலாம்”.
அப்பாவும் தாத்தாவும் மிகவும் பிஸியாக இருந்தார்கள். யார் யாரோ வந்து தாத்தாவிடம் பேசியபடியே இருந்தனர். தாத்தாவுக்குச் சொந்த ஊர் என்பதால், நிறைய பேருக்குத் தெரிந்திருந்தது. அதுவுமில்லாமல் சீராப்பள்ளியிலிருந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
மதியம் வரை நன்றாக தூங்கி விட்டேன். அம்மாவும் அத்தையும், சந்துருவிடம் சொல்லி விட்டு, பராசக்தி முனுசாமி வீட்டுக்குச் சென்றனர். நாங்கள் ஒரு முறை, அவர் வீட்டிற்குச் சென்று இருக்கிறோம். அவரின் மகன் செந்தில் எங்களுக்கு அண்ணன் முறை. அவர் தீவிர ஆதிபராசக்தி பக்தர். வீட்டில் பூஜை அறை மிகவும் பெரிதாக இருக்கும். பாம்பு போன்ற வடிவம் செய்யப்பட்டிருக்கும். பாம்பு வந்து விடுமோ என்று எங்களுக்கு மிகவும் பயம். பெரியசாமி எப்போதும் பூஜையிலேயே இருப்பார். அவர் சென்னையிலிருக்கும் சாமியாருக்குப் பினாமி என்றும் அவர் அடிக்கும் நோட்டுகள் உனக்கு இவரும் ஒரு பாதுகாவலர் என்றும் பலமான வதந்தி இருந்தது. அவர் வீடு மிகப் பெரியதாக இருக்கும். நெற்றி முழுவதும் விபூதி பூசியிருந்தார். காவி வேட்டி அணிந்திருந்தார். யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. அவரைப் பலரும் வணங்கினார்கள். அதற்குப் பிறகு அங்கு சென்றதில்லை.
நாலு மணிக்கு மீண்டும் சாமி வீடு. வேட்டி புடவைகளை அம்மனுக்கு முன்னர் அடுக்கி வைத்திருந்தார்கள். பூஜை முடிந்ததும் ஒவ்வொரு குடும்பமாக அழைத்து, தலைக்கட்டுக்கு ஒரு வேட்டி, சேலை எல்லோருக்கும் வழங்கப்பட்டது. பெரியசாமிதான் முன்னால் நின்று செய்து கொண்டு இருந்தார்.
மண்டபத்துக்குச் சென்று, அப்பாவும் அம்மாவும் புது வேட்டி, சேலை மாற்றிக் கொண்டார்கள். அப்பா இன்னும் கம்பீரமாகவும் அழகாகவும் இருந்தார். சின்ன வயதில் இன்னும் அழகாக இருப்பாராம், சின்ன அத்தை சொல்லும். நாடகங்களில் போலீஸ் வேடம் போட்ட புகைப்படம் இன்னும் மர பீரோவுக்குள் இருக்கிறது.
அம்மாவுக்கு அடர்த்தியான பிரௌவுனில் சேலை. அம்மா அவ்வளவு அழகாக இருந்தாள்.
ஐந்து மணியிலிருந்தே உறவினர்கள் வந்து கொண்டேயிருந்தனர். ஆறு மணியிலிருந்து சாமி வீட்டுக்கு முன்பு, பூசக்கூடையுடன் வரிசையாக அனைத்து பெண்களும் அமர வைக்கப்பட்டனர்.
அம்மாவும் சின்ன அத்தையும் வரிசையில் அமர, அவர்களின் பின்னால் நாங்கள் நின்று கொண்டு இருந்தோம். அப்பாவும் தாத்தாவும் வாசலில் எங்கோ சேர்களில் அமர்ந்திருந்தார்கள். பூசிக் கூடைகளில் பொங்கல் வைக்க தேவைப் படும் சிறிய பாத்திரம், அதற்குரிய தட்டு, கரண்டி, கற்பூரம், தீப்பெட்டி, அரிசி ஆகிய சாமான்கள் இருந்தது.
பழனிசாமி எல்லா கூடைகளுக்கும் தாழம்பூ வைத்துக் கொண்டே வந்தார். செந்தில் எல்லோருக்கும் மரிக்கொழுந்து வைத்தார். முனுசாமியையும், அம்மன்களையும் வணங்கிய பின், பூசக்கூடை தூக்க வந்த அனைத்து பெண்களும் மாலைகளை வாங்கி கழுத்தில் போட்டுக் கொண்டார்கள்.
பம்பையும் மேளமும் வாசிக்கப் பட்டது. வாசித்தவர்களில் ஒருவர் பெரியாண்டிச்சி அம்மன் கதையைப் பாடலாகப் பாட, மற்றவர்கள் அவரைத் தொடர்ந்துப் பாடினார்கள். சத்தம் அதிகமாக அதிகமாக, பெண்களில் பலருக்கு சாமி வரத் தொடங்கியது. ஒவ்வொருவருக்கும் தனியே வாசித்து, எலுமிச்சை தின்னக் கொடுத்து, மலையேற வைத்தார்கள். பூஜை வெகு நேரம் நடந்தது. கற்பூர ஆர்த்தி காண்பிக்கப் பட்டதும், பூசக்கூடையுடன் ஊர்வலம் தொடங்கியது. மூன்று அம்மன்களையும் ஒரு வண்டியில் வைத்து, முதலில் அழைத்துச் சென்றார்கள்.
ஒவ்வொரு பெண்களுடனும் அவர் குடும்பத்தினர் கூடவே நடந்தனர். நாங்கள் அம்மாவுடனும் சின்ன அத்தையுடனும் நடந்தோம்.
மேளச்சத்தத்தால் பலருக்கும் சாமி வரத் தொடங்கியது. ஒவ்வொருவராக மலையேற, முதல் தெருவைத் தாண்டவே வெகு நேரமானது. பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது.
இரண்டாவது தெருவில் நடக்க ஆரம்பித்தோம். அம்மாவிடம் இருந்து வித்தியாசமான ஒரு சத்தம் வந்தது. அம்மா சன்னதம் வந்தது போல் பற்களைக் கடித்தபடியே அங்கும் இங்குமாக ஆட ஆரம்பித்தாள். “எனக்கு முப்பூசை வேணுன்டா. இல்ல, எல்லோரையும் அழிச்சிடுவன்”. வாசிப்பவர்கள் அம்மாவிற்கு முன்னால் நின்று பாட்டுப் பாடி, மலையேற்ற முயற்சி செய்தார்கள். அம்மாவைப் பார்க்க மிகவும் பயமாக இருந்தது. அப்பா எங்கிருந்தோ வந்து, நக்கலடித்தபடியே, சிரித்துக் கொண்டு அம்மாவின் அருகில் நின்றார்.
சின்ன அத்தை, சந்துருவிடம் ஏதோ சொல்ல, அவன் பாக்கெட்டிலிருந்து எலுமிச்சை ஒன்றை அம்மாவிடம் கொடுத்தான். வாங்கியவள், ஆவேசமாக வாயிலிட்டு மென்று சாற்றைக் குடித்த பின், சற்றே ஆவேசம் தணிந்தாள். பிறகு தண்ணீர் வாங்கிக் குடித்து விட்டு, நடக்க ஆரம்பித்தாள். அம்மாவைப் போலவே பலரும் சாமி வந்து ஆடினார்கள். ஒவ்வொருவரையும் மலை ஏற்றுவது சிரமமாக இருந்தது. இதனால் ஊர்வலம் நத்தையைப் போல ஊர்ந்தது. வீடுகளில் இருந்து இந்த ஊர்வலத்தைப் பார்க்க நின்றிருந்த சிலருக்கு சாமி வந்து ஆடினார்கள்.
ஏறக்குறைய இரண்டு மணி நேரம் கழித்து, நான்கு தெருக்களைச் சுற்றிய பின்னர், மெயின் ரோட்டுக்கு வந்தோம். சிறிய சாலை ஆனால் மிகவும் பிஸியான ஒன்று. சரியான போக்குவரத்து நெரிசல்.
அம்மா எங்களை கூப்பிட்டு,”சந்துரு, நீங்க மண்டபத்துப் போயி சாப்புட்டுட்டு, வரும்போது அப்படியே கோயிலூட்டுல இருந்து அந்த சேவலப் புடிச்சிக்கிட்டு வந்திருங்க. பத்திரமா புடிச்சிக்கிட்டு வாங்க, ஓடிறப் போவுது” என்றாள்.
இந்த முறையும் சாப்பிடுவதற்கு மண்டபத்தில் சரியான கும்பல். எப்படியோ இடம் பிடித்து சாப்பிட்டு விட்டு எழுந்தோம். இந்த முறை, இட்லியோடு ஒரு சிறிய தோசையும் கிடைத்தது. சாமி வீட்டுக்கு நடந்து வந்தோம். சந்துரு ராஜின் கையைப் பிடித்துக் கொண்டு, என்னிடம் கத்தினான்;”பாத்து கிராஸ் பண்ணு”.
கோவில் வீட்டில் வயதானவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள். தாத்தா முன்னரே காட்டில் இருக்கும் பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்குச் சென்று விட்டார். கோழியை மெதுவாக கம்பத்திலிருந்து அவிழ்த்து, சந்துரு கையில் வைத்துக் கொண்டான். கால்கள் கட்டப்பட்டு இருந்தாலும் துள்ளியது. நன்றாக நெஞ்சோடு அணைத்துப் பிடித்துக் கொண்டு அவன் முன்னால் நடக்க, நானும் தம்பியும் பின்னால் நடந்தோம்.
ரோட்டில் இருந்து உள்ளே ஒரு அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது பெரியாண்டிச்சி அம்மன் கோவில். எங்கள் குலதெய்வம். சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலிலிருந்து புத்து மண் எடுத்து வந்து, பதி போட்டது. மேற்கூரை ஏதுமில்லை. மழை வந்தால் சற்று சிரமம் தான்.
அம்மன் சற்று உயரமான மேடையில் படுத்த வாக்கில் இருந்தாள். பெரிய முட்டைக் கண்களுடன் நாக்கை வெளியே நீட்டியபடி இருந்தது சற்றே பயமாகத்தான் இருந்தது. முன்னதாக சிறிய திட்டில் பெரியாண்டவர்.
இரும்பு கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் பொங்கல் வைக்க இடம். விறகு சேகரித்து வைத்திருந்தார்கள். இடம் கிடைப்பது சிரமமாக இருந்தது. அரைமணிநேரம் கழித்து இடம் கிடைத்தது. அம்மாவும் சின்ன அத்தையும் பொங்கல் வைக்க ஆரம்பித்தனர். ஆடு, கோழி நேர்ந்து விட்டவர்கள் வெறும் பொங்கலும் மற்றவர்கள் சர்க்கரைப் பொங்கலும் வைத்தனர். ஒரே புகை மண்டலம். வரிசையாக இருமல் வந்தது. கண்கள் எரிந்தது. இட நெரிசல் வேறு. ராஜ் அழ ஆரம்பித்தான்.
“நீங்க போயி அந்த திட்டுல உட்காருங்க. சாமி கும்படறப்போ சொல்லறோம்” என்றாள் அம்மா.
நாங்கள் திட்டில் அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம். அப்பாவும் தாத்தாவும் வழக்கம் போல, யாருடனோ பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது தான், பெரிய அத்தையின் பெரிய பையன் மோகனசுந்தரம் பக்கத்தில் வந்தான். “தாத்தா, நல்லா இருக்கிறிங்களா? மாமா, எப்படி இருக்கீங்க?” என்றான். “ஏண்டா அப்பா அம்மா வரலியா?” என்றார் தாத்தா.
“இல்ல தாத்தா. அம்மாவுக்கு உடம்புக்கு சுகமில்ல. அவளைப் பார்த்துக் கொள்ள அப்பாவும் அங்கேயே இருந்துட்டார். அம்மாபேட்டையிலிருந்து நாங்க ஜெயங்கொண்டம் போயி ஆறு மாசத்துக்கு மேல இருக்கும். நாளைக்கு காட்டுக்கு வர்றன் தாத்தா” என்றான் பதிலாக. ஏனோ எனக்கு அவனைப் பிடிக்க வில்லை.
இதற்குள் அம்மாவும் சின்ன அத்தையும் பொங்கல் வைத்து விட்டு, சாமிக்கு முன்னால் வரிசையில், பாத்திரங்களை வைத்து விட்டு நின்றார்கள். சின்ன அத்தையைப் பார்த்தவுடன், வாங்க என்று சொல்லி விட்டு, காணாமல் போனான்.
இதற்குள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து, அலங்காரங்கள் நடந்து முடிந்திருந்தது. முனுசாமியும் பழனிசாமி மற்றும் செந்தில், மகாலிங்கம் தாத்தாவுடன் திட்டின் மீதிருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டனர்.
அனைவருக்கும் சுக்குக் காப்பி கொடுத்தார்கள். பொங்கல் வைத்து முடிந்ததும், சந்துருவும் சின்ன அத்தையும் மண்டபத்துக்குச் சென்று சாப்பிட்டு விட்டு, அம்மாவுக்கு வாங்கி வந்து விட்டார்கள். அலங்காரம் நடந்து கொண்டு இருக்கும் போது, அம்மா டிபன் சாப்பிட்டு விட்டாள்.
மணி பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. கண்களைத் திறக்க இயலாத அளவிற்கு தூக்கம் வந்தது. சுக்குக் காப்பி குடித்ததும் ஓரளவு தூக்கம் தெளிந்தது.
இடையில் யாரோ ஒருவர்,”முடிக் காணிக்கை கொடுக்கறவங்கெல்லாம் வாங்க” என்று சொல்லியபடியே இருந்தார்.
பலி கொடுத்தல் ஆரம்பித்தது. ஒவ்வொருவராக தங்களின் ஆடுகளை கொண்டு வந்தார்கள். அம்மன் முன்பு நிறுத்தி, தீர்த்தம் போட்டார்கள். சிலிர்த்ததும், பெரியாண்டவர் அருகே படுக்க வைத்து, தலையை துண்டித்துப் பலி கொடுக்கப்பட்டது. ரத்தம் பீய்ச்சி அடித்தது. எனக்கு மயக்கம் வந்ததால், பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.
ஆடுகளைப் பலியிட்டப் பின்னர், கோழிகளின் முறை. சந்துரு சேவலை இறுக்கமாக பிடித்துக் கொண்டான். தீர்த்தம் தெளித்ததும், உடனே, தலையைச் சிலுப்பியது. பெரியாண்டவர் அருகே வைத்து, பலி கொடுக்கப்பட்டது. எனக்கு அழுகை வந்தது.
கோவிலின் வெளியிலிருந்து விபரீதமான சத்தம் கேட்டது. பக்கத்தில் அமர்ந்து இருந்தவர்கள் சொன்னார்கள்:”பன்னியப் பலி கொடுக்கறாங்கப்பா”. வெளியே சென்று பார்க்கும் அளவுக்குத் தைரியம் இல்லை.
பம்பை, உடுக்கை சத்தத்துடன் முப்பூசை ஆரம்பமானது. ஆங்காங்கே கட்டப்பட்ட மணிகளை அடிக்க ஆரம்பித்தார்கள். பூஜை செய்தவர்கள் அனைவரும் வாயைச் சுற்றி முகத்தையும் மறைத்துத் துண்டால் கட்டியிருந்தனர்.
பல பெண்களுக்கும் சாமி வந்தது. அனைவரையும் மலை ஏற்றிவிட்டு, கற்பூர ஆரத்தியுடன் முப்பூசை முடிந்தது. யாரையும் சாமி படுத்திருக்கும் திட்டில் ஏற விடவில்லை. வாசலிலேயே நின்று கும்பிட்டோம். எலுமிச்சை மற்றும் பூக்கள், திருநீறு எல்லாருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
முனுசாமி,”பூசக்கூடயோட எல்லோரும் சாமி வீட்டுக்குப் போயி காத்திருங்க” என்றார்.
எல்லோரும் நடக்க ஆரம்பித்தோம். இரவு ஒரு மணியைத் தாண்டி விட்டது.
பூசக்கூடை தூக்கியவர்கள் அனைவரும் சாமி வீட்டுக்கு முன்பு, வரிசையாக மீண்டும் அமர்ந்தனர். ஏறக்குறைய ஒரு மணி நேரம் கழித்து, மகாலிங்கம் தாத்தாவுடன் முனுசாமி, பழனிசாமி ஆகியோர் வந்தனர். முப்பூசைப் பிரசாதத்தை வான் நோக்கி வீசிவிட்டு, திரும்பிப் பார்க்காமல், வந்து சேர்ந்திருந்தார்கள்.
அமர்ந்திருந்த அனைவருக்கும், கூறு பிரிக்கப்பட்ட கறி கொடுத்தார்கள். மூன்று துண்டுகள் கூட இல்லாததைப் பார்த்து, சின்ன அத்தை சொந்தமாகவே அனைவரையும் திட்டியது.
சேலம் வரை, ஜம்புலிங்கம் சித்தப்பாவின் மெட்டடார் வேனில் அடைந்த கொண்டு வந்து, பழைய பேருந்து நிலையத்தில் டீ குடித்து விட்டு, வாழப்பாடி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தோம்.
நாங்கள் மூவரும் தூங்கி விட்டோம். அம்மாதான்,”ஸ்டாப்பிங் வந்திடுச்சு, எந்திரிங்க” என்று உலுக்கி எழுப்பி விட்டாள்.
இறங்கி மீண்டும் நடை. வீடு வந்து சேர்ந்தபோது, விடியற்காலை ஐந்து மணி. இன்று கறிநாள். பள்ளி செல்வதை மறந்து விட்டு, நன்றாகத் தூங்கி விட்டோம்.
-வளரும்.

கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.