(கவிஞர்கள் வெண்ணிலா, முகுந்த் நாகராஜன் கவிதைகளை முன்வைத்து)
பேருந்துப் பயணத்தில் முன்வரிசையில் இருந்த குழந்தை அழத்தொடங்கியது. அழுகை என்று அதைச் சொல்லக்கூடாது. தூங்கிக் கொண்டிருந்த குழந்தை வீறிட்டுக்கத்தியது. பேருந்தே ஆடிப்போய் என்ன ஆச்சு? எனக் கேட்டது. தாயும் தந்தையும் குழந்தையின் அழுகையை நிறுத்த முயன்று கொண்டிருந்தார்கள். அழுகை நிற்பதாயில்லை. குழந்தையின் தந்தை எழுந்து பேருந்தில் உள்ளவர்களிடம் “யாராவது வெள்ளைக் கைத்துண்டு” ஒன்று இருந்தால் தரமுடியுமா? என்று கேட்டார். அது அங்கு வினோதமாகப் படடது. ஒவ்வொருவரும் தங்கள் கைத்துண்டை உருவினார்கள். ஆனால்,வெள்ளை அகப்படவில்லை. வெள்ளைதான் வேண்டுமா? வேறு வண்ணங்கள் ஆகாதா? எனக் கேட்டனர். தந்தை சொன்னார், “இல்லை, இல்லை, வெள்ளைதான் வேண்டும், அதைக் கையில் கொடுத்துத் தூங்க வைத்தால்தான் அவள் தூங்குவாள். வீட்டில் இருந்து கொண்டுவர மறந்துவிட்டோம். அது இல்லாததால்தான் அழுகிறாள்; இருந்தால் தூங்கிவிடுவாள்” என்றார். இந்த வினோத விளக்கத்தைக் கேட்டு குழந்தையின் அழுகையை அமுக்கிப் பேருந்து சிரித்தது. ஆனால், தம் இளம் குழந்தைகளைச் சமாளிக்க ஒவ்வொரு பெற்றோரும் இப்படிப் பல வித்தைகளைச் சேகரித்தபடியேதான் இருப்பார்கள். அவை வேடிக்கையானவையாக அந்த நேரத்தில் மற்றவருக்கும், காலங்கடந்து அப்பெற்றோருக்கும் தோன்றினாலும் அவை அந்தந்த நேரத்தில் ஆயிரம் அர்த்தங்களையும் ஆசுவாசங்களையும் கொண்டவை.
தாய்க்கும் தகப்பனுக்கும் தம் குழந்தையின் இளம் பருவத்து வளர்நிலைகள் தரும் இன்பம் அலாதியானது; நினைவில் அழியாதவை. அதேபோல் இளம் குழந்தைகளை வளர்த்தெடுக்கும் அந்நாளில் ஏற்படும் பதற்ற நிலை ஒரு நெரிசல் மிகுந்த நகரத்துச் சாலையைக் கண்ணைக் கட்டிக்கொண்டு ஒருவர் குறுக்காகக் கடந்து செல்லும் செயலுக்கு இணையானது. பெற்றவர்களின் இந்த நுட்பமான அவஸ்தைகளை நம் கவிதைகள் பதிவு செய்திருக்கின்றன.
சங்கப் பாடல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் காண நேர்ந்த அந்த உணர்வு நிலைகளைப் பெரியாழ்வாரே தம் பெயருக்கேற்பப் பெரிதாய்ப் பாடினார். அந்தப் பாடல்களில் ஆண்டார் – அடியவரைக் காணாது, ஒரு சுட்டிக்குழந்தையையும் தன் குழந்தையின் செயல்களில் மகிழ்ச்சியையும் துன்பத்தையும் காணும் ஒரு தாயையும் கண்டது தமிழுலகம். குழந்தை வளர்ப்பில் துன்பம் சேர்ந்த இன்பத்தைப் ‘பிள்ளைமை இன்பங்கள்’என்பர் பெரியோர். இந்தப் பிள்ளைமை இன்பங்களின் மறுபக்கமாய் இருக்கும் தாயின் துயரம் ஒரு பருவ காலத்தின் இயல்பைப் போல நிரந்தரமானது.
நவீன இலக்கியத்தில் சிறுகதை, நாவல் வடிவங்களில் இவை நிறைய பேசப்பட்டுள்ளன. தமிழ்க் குடும்பத்தில் வீட்டு வேலைகள் என்பவை பெண்களுக்கே விதிக்கப்பட்டவை. அதிலும் இளம் குழந்தைகளை வளர்க்கும் முழுப்பொறுப்பும் இங்குப் பெண்களுக்கே.
எழுத்தாளர் கி.ராஜநாராயணன், கெங்கம்மா என்ற பெண் காலை எழுந்ததில் இருந்து இரவு படுக்கும் வரை செய்யும் வேலைகளைக் கூறியே ஒரு சிறுகதை எழுதியிருப்பார். அது வேலையே வாழ்வாகக் கொண்ட நம் பெண்களின் ‘ஒரு பானைச் சோற்றுக்கான ஒரு சோற்றுப் பதம்’.
முன்பிருந்த கூட்டுக்குடும்ப நிலையில் குழந்தை வளர்ப்புப் பெண்களுக்கு சுமையாக இல்லாமல் இருந்தது. இன்று அப்படியில்லை. இன்று பெண்ணுக்குச் சுமை கூடியிருக்கிறது. குடும்பத்தில் குழந்தைகள் குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணம். மரபைப் புறந்தள்ளி எழுந்த நவீன கவிதைகளில் பெண்ணின் அக உணர்வுகள் பெரிதாகப் பேசப்பட்டிருந்தாலும், நவீன உலகில் குழந்தை வளர்ப்பில் ஒரு பெண் படும் துயரங்கள் பற்றிய கவிதைகள் குறைவுதான். இதற்கு விதிவிலக்கானவர்களாக இருவரைக் குறிப்பிடலாம்.
நவீன கவிதை மரபில் பெரிதும் குழந்தைகளைப் பாடிய, பாடும் கவிஞர்கள் வெண்ணிலா, முகுந்த் நாகராஜன் ஆகிய இருவரும் குழந்தை வளர்ப்பில் குழந்தைக்கும் பெற்றோருக்குமான நுண்ணிய உணர்வுகளைக் கவிதையாக்கியுள்ளனர். இவை குறித்து நிறையப் பேச நிறையக் கவிதைகள் அவர்களிடம் உண்டு. இருந்தும் ஒன்றைப் பற்றியே மேலெழுகிறது இக்கட்டுரை.
கணவன் மட்டுமே வேலைக்குச் செல்லும் இன்றைய தனிக் குடும்பங்களில் ஒரு பச்சிளம் குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பு ஓர் இளம் தாய்க்கு விடப்படுகிறது. அவள் தாய் என்றாலும் அவளும் சிறு பெண்தான். பெற்றவர்கள் துணையில்லாமல் ஒரு பிஞ்சுக் குழந்தையைக் கையாளும் அவளது நிலை பரிதாபமானது. அவளுக்கான அடிப்படைச் செயலுக்குக் கூட அவளுக்கு நேரமிருக்காது. எப்போதும் விழித்து அழ ஆரம்பிக்கும் என்ற பதற்றத்தை வீட்டில் பரவவிட்டு அமைதியாய்த் தூங்கும் சிறு குழந்தையின் அந்தத் தூக்க நேரமே, ஒரு தாய்க்கு மூச்சு முட்ட அடைபட்ட அறையில் ஒரு சிறுகதவைத் திறந்ததுபோன்ற உணர்வைத் தரும். அவள் மூச்சை நிதானமாக இழுத்துவிட கடவுள் அளித்த தருணமாய் அதைக் கருதுவாள் அம்மா. எந்நேரமும் குழந்தை விழித்துவிடக் கூடும் என்ற புறச்சூழல் தரும் பதற்றம் பெருங்காற்றில் ஏற்றப்பட்ட கைவிளக்கின் சுடராய் மனத்தில் பதற்றத்தைத் தரும்.
ஒரு தாயே அதைப் பெரிதும் உணர்ந்தவளாக இருப்பாள். கவிஞர் அ.வெண்ணிலா ஒரு தாயாகத் தான் உணர்ந்தைக் கவிதை உருவமாக்கியிருக்கிறார்.
/ மிதியடிச் சத்தத்தை
மிதப் படுத்து.
அழைப்பு மணியோ
கதவு தட்டலோ
யோசித்துப் பின்
மெதுவாய் எழுப்பு
யார் வீட்ல எனக்
கேட்கும் முன்
குரலை மென்மையாக்கு
நீ நுழையும்
எந்த வீட்டினுள்ளும்
ஒரு குழந்தைத்
தூங்கிக் கொண்டிருக்கலாம்.
தாயின் பதட்டம் பிறரை எச்சரிக்கிறது. குழந்தையின் தூக்கத்திற்கு எதிராக உயரும் கைகளை அவசர அவசரமாகக் கீழிறக்குகிறது இக்கவிதை. ‘பால் நினைந்து ஊட்டும் தாய்‘2 எனத் தாய்மை அன்பை உலகம் போற்றினாலும் அதற்குப் பின்னுள்ள வலியைத் தாயே அறிவாள். ஆனாலும் தந்தையாக, தம் குழந்தையை ஈன்ற தன் மனைவியை அருகிலிருந்து பார்த்து, அவளது மாற்றத்தை, பொறுப்பை, வலியைப் பேசுகிறார் கவிஞர் முகுந்த் நாகராஜன்.
தாய் மிருகம்
————————
/குழாய் பழுதுபார்க்க வந்தவனைக்
கதவைத் திறக்காமலேயே
திருப்பி அனுப்புகிறாள்.
சாப்பிடும் தட்டுகளை அடுக்குகையில்
மெல்ல ஓசை கேட்டாலும்
முறைத்துப் பார்க்கிறாள்.
கட்டிலின்மேலே காற்றைப்போல் ஏறிப்
படுத்துக்கொள்கிறாள்.
இரவில் சிறுசப்தம் கேட்டாலும்
எழுந்து உட்கார்ந்துகொள்கிறாள்.
பாதி ராத்திரியில்
பாப்பாவின் முகத்தைப்
பார்த்துக்கொண்டே
பாலூட்டுகிறாள்,
பச்சை நிற விடிவிளக்கின் ஒளியில்
பழுப்பு நிறக் கண்கள் மின்ன./
‘குட்டி போட்ட நாய் மாதிரி சுத்திச்சுத்தி வருகிறான்’ என்பது கிராமங்களில் பொதுவாகக் கூறப்படும் வழக்கு. இங்குக் குழந்தை வளர்ப்பே எல்லாமாகிப்போன மனைவியான தாயின் நிலையை விலங்குநிலையில் வைத்துப் பார்க்கிறது கவிதை. குழந்தையின் தூக்கத்தைக் கெடுக்கும் எதையும் தாய் விரும்புவதில்லை. அதனை எப்படியும் தடுத்துவிட வேண்டும் என்ற அவளின் பதற்றம் கவிதை முழுதும் படருகிறது. ஏனெனில் குழந்தையின் சிறுதூக்கம் – தாய்க்கான பெரும் ஓய்வு. ஒரு தொடர் ஓட்டத்தில் அவளுக்கான ஒரு சிறு தங்கல். இன்னும் வேகமெடுத்து அவள் ஓட அது தேவையாக இருக்கிறது.
இதை ஒரு சாதாரண விசயமாக நாம் கருதலாம். ஆனால், பல்லாயிரம் கோடித் தாய்மார்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் கவிதைகளாகவே இவற்றை உணர்ந்தோர் உள்ளுவர்.
குறிப்புகள் :
——————–
1.பெரியாழ்வார் நூலில் வைணவப் பேரறிஞர் ம.பெ.சீனிவாசன்.
2. மாணிக்கவாசகரின் பாடல் வரி.
உதவிய நூல்கள்:
1.எரியத் துவங்கும் கடல் (கவிதைகள்)
– அ.வெண்ணிலா, அகநி வெளியீடு,
வந்தவாசி – 604408
2. முகுந்த் நாகராஜன் கவிதைகள் –
தன்னறம் நூல்வெளி,
சிங்காரப்பேட்டை – 635307
கிருஷ்ணகிரி மாவட்டம்.
3.வேட்டி – கி.ராஜநாராயணன்,
அன்னம் பதிப்பகம்,
தஞ்சாவூர் – 613007.
அழகான பார்வை. சிறப்பு ஐயா. அருமை அருமை. வாழ்த்துகள்