நீங்கள் அடிக்கும் ஆணிகள்

தரம் மிக்கவைகள் தான்.

மிக நேர்த்தியாக இறங்குகிறது.

அதுசரி..

இதுவரை

எத்தனைப் பேரை சிலுவையில் ஏற்றிருக்கிறீர்கள்.

***

உயிர் பிரியப்போகும்

அந்த ஒரு ஆணியை அடிப்பவருக்கு என்னுடைய

ஒட்டுமொத்த நன்றியையும்

அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏனென்றால்

அவரே என்மேல்

அதீத கருணை கொண்டவர்.

***

முள் முடி ஆணி

ஒரே விளாசலில்

தோல் உரிக்கும் சாட்டை 

ஏந்தி வர பாரக் கட்டை என எல்லாமுடனும்

நானும் தயார்.

என்னிடம் இருந்து உங்களை நோக்கி

ஒரேயொரு வேண்டுகோள்தான்.

முந்திக்கொண்டு கூட்ட நெரிசலை ஏற்படுத்திவிடாதீர்கள்

****

உங்களின் கைகளை

கறைப்படுத்திக்கொள்ள வேண்டாம் தயவுசெய்து

அந்த சுத்தியலை என்னிடமே கொடுங்கள்

***

நீங்கள் திருப்தியடையாவிட்டால் கவலைப்படாதீர்கள்

நான் இறந்தப் பின்பும்

என் உடல் இங்கேதான் கிடத்தப்பட்டிருக்கும்

இன்னும் கொஞ்சம்

சிதைத்துப் பாருங்கள்

***

எல்லாம் முடிந்துவிட்டதென்று அவசரப்பட்டு

என் உடலைப் புதைத்து விடாதீர்கள்

பாவம் உங்களின் மாமிசம் உண்ணும்

செல்லப் பிராணிகள்

***

எறி கற்கள் தீர்ந்துவிட்டதே

என்று கவலைப்படாதீர்கள்

வந்த வழியில் என்னுடைய

பற்கள் சிதறிக் கிடக்கிறது

***

எனக்கு ஓர் உயிரும் தலையும் உடலும்

இரு கைகளும் கால்களும் மட்டுமே உள்ளது

பாவம் நீங்கள் துரதிஷ்டசாலிகள்

***

கைகள் வலிக்க சோர்வுற்று தொண்டை வறண்டால்

கவலை வேண்டாம் தண்ணீர் அருந்தி

சற்று இளைப்பாறுங்கள்

உங்களுக்காக இன்னும் கொஞ்ச நேரம்

என்னுயிரை இந்த உடலில்

பிடித்து வைத்துக்கொள்கிறேன்.

***

தயவு செய்து உங்களின் குழந்தைகளை

இந்த இடம்விட்டு அனுப்பிவிடுங்கள் 

நாளை இதே வேடிக்கைக்கு

இல்லாமல் போகப்போகும் என்னைத் தேடுவார்கள்.

***

நீங்கள் எனக்கு எதிராக

எதையும் நிரூபிக்க அவசியமில்லை

ஏனென்றால்

நீங்கள் அடித்துக் கொல்லத்தான் என்னுடைய

இந்தப் பிறவி

000

ரிஸ்வான் ராஜா

சொந்த ஊர் முத்துப்பேட்டை. துபாயில் தபால் நிலையத்தில் வேலை செய்கிறார். தேர்ந்த வாசகர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *