இப்படித்தான் தொடங்க வேண்டும். சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதே தனது குறிக்கோளாகக் கொண்டு, தன் முன்னுரையில் குறிப்பிடுகிற பா.பாரத்தின் நான்காவது புத்தகம், இந்தப் பீப்பீ சிறுகதைத் தொகுப்பு.
இயல்பானவற்றை எழுதுதல் ஒரு கலை – வகை என்றாலும், அந்த இயல்புக்குள் உள்ளார்ந்து கிடக்கும் கேள்விகளைப் பதிவு செய்வதும் முக்கியமானது. தற்காலத்தில் சகித்துக்கொள்ள முடியாத விடயங்களும் சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகளைச் சிறிய தலையாட்டலோடு விலகிக் கொள்கிறோம். அந்த விலகலை மீண்டும் ஒரு முறைக் குத்திக்காட்டுவதாக இதில் இடம்பெறும் கதைகளை அடையாளம் காட்டலாம்.
பத்து சிறுகதைகள் உள்ளடங்கியதில், நேர்கோட்டுத் தன்மையில் எழுதப்பெற்ற ஸ்வரங்கள் கதைப் பின்னலில், சிறுவனை முன் வைத்து, அவன் தன் பெற்றோரிடம் எழுப்பும் கேள்வியும் – பதிலுமாக செல்கிறது. கைஜோசியம், பெண் ஆசிரியரின் நிலைப்பாடு, கண்முன் நடக்கும் சம்பவங்கள், குழந்தைகள் மீதான பார்வைகள் படும் போது அதன் சிரத்தன்மை எப்படி அடிபடுகிறது என்பதை மேலோட்டமாகப் பதிவு செய்கிறது. ஜோதி எனும் கதாபாத்திரம், தனக்கான மனநிலை எண்ணத்தைத் தன் உதவியோடு முருகனை சிலை வடித்து மகிழ்ந்து கொள்கிறாள். ஒருவேளை அவர்கள் மலை ஏறுவதற்குத் தடையை யாரோ விதித்திருப்பார்கள் போல எனும் வியூகத்தையும் மனதிற்குள் உலவ வைக்கிறது.
ஆதிக்குடிக்காக ஒதுக்கப்பட்ட இனம் – பாசித் தொடுத்தல் அவர்களுக்கான பிழைப்பின் வழி – பழனி மலைக்கோவிலின் காட்சித் திரிபுகள் – முருகன், பேச்சியம்மனின் பாகுபாட்டின் வேறுபாடு – வசதிப்படைத்தப் பெண்ணாக இருந்தாலும், களவாடும் துருபிடித்த மனம், போன்ற பல சம்பவங்களைக் காட்சிப்படுத்துகிறார்.
இக்கதைகளில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் தன்னிறைவையே நிறைவேற்றிக் கொள்ளும் சிந்தனையிலேயே உலாவுகிறார்கள். விறகு வெட்டியில் வரும் கோவாலு, தேவதை கதை – பேய்களின் கதையில் வரும் வட்டி குணா, மேஜிக்காரனில் பதினேழு வயது சிறுவனென மனித வாழ்க்கையில் சிதைவுகளைச் சிதறி வைக்கின்றனர். போதையில் ஒரு சமூகம் சீரழிகிறது என்பதை இயல்பான, வெகுச் சுருக்கமான முறையில் எழுதியிருக்கும் வகை இதெனலாம். அச்சிறுவனின் வாழ்வில் போதை, அதனின் தாக்கம், சுய சிந்தனை இல்லாமல் கொலையை நடத்திவிடும் கொடூரம், சிறை வாசத்தின் அகமுகம் அவனின் எண்ணங்களை மேலும் மோசமான மனநிலைக்குத் தள்ளப்படும் வாய்ப்பே அதிகம் எனலாம்.
ராசாத்தி – ராசம்மா – கோவாலு – வட்டிக்குணா இப்பாத்திரங்களின் எதிர்நிலைப் போக்கைக் காணுகையில், துன்பவியலே கதை நெடுகிலும் வலம் வருகிறது. கணவன் சரியில்லாமல் ஊரெங்கும் கடன் வாங்கி, ஒவ்வொரு ஊராக – நாடோடியாக இடம் பெயர்ந்து, பிழைப்புக்கு ஓர் ஊர் அடைக்களமாக வாழ்க்கைக் கொடுத்தது ஒருபுறம் என்றாலும், அவ்வூரிலும் மனைவியான ராசாத்தியை பத்தாயிரத்திற்கு அடமானம் வைத்து ஓடிவிடுகிறான். கடன் கொடுத்தவர் அவளைப் பல நிலைகளில் வற்புறுத்தும் விதமான, அந்தக் கடினமான வாழ்க்கைக்குள் அகப்படாமல், விசம் அவளுக்கு உறுதுணையாகக் கைக்கொடுக்கிறது.
அங்கு வசிக்கும் மக்கள் ஆதரவாக தன்நிலைப்பாட்டை வெளிப்படுத்தினாலும், இதற்கு நேர்மாறான – ஒருவகையில் சமநிலையான ராசம்மாவையும் எதிர்நோக்க வைத்திருக்கிறது.
ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்த அவளின் கூரை வீட்டில் தன் கணவனோடு வசிக்கிறாள். தன் காமத்தைக் கட்டுக்குள் அடைக்க முடியாதவளுக்கு, கணவனும் குடித்துவிட்டுத் துணைவியின் நிலையறியாதவனுக்குக் கடைசிக் காலக்கட்டத்தில் தன் வாழ்வு எங்குச் செல்லக் கூடாதோ அங்கு சென்று மடிந்திருக்கிறது. பாலியல் தொழிலில் தன்னை ஆட்படுத்திக்கொள்ள வலுக்கட்டாயமாக்க கோவாலும் ஓர் அங்கமாய் திகழ்ந்தது வேதனைதான். தன் உடல் இச்சைக்காக அவளின் வறுமையைப் பயன்படுத்தி, அத்தொழிலுக்குத் தள்ளியது மட்டுமல்லாமல், பின் பலரின் சகவாசம் முற்றி, ஊரே விரட்டியது கொடுமை. வேறொரு பெண்ணோடு தொடர்பின் எல்லை நீளும் போது, தன் மனைவிக்கு விசயம் தெரிந்து வேறொரு ஊருக்குப் பயணம். பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்தாலும், ராசாத்தியைத் தேடி இறப்பிற்குப் பின்னான வாழ்வும், ஐம்பது ரூபாயும் அவர்களுக்கு அவலமான கொடுப்பினையாக மாறியிருக்கிறது.
மிருகங்களும் மாமிசமும் – ஒரு வெட்டியான் வாழ்வைச் சுருக்கமாக சித்தரிக்கிறது. தீண்டாமை, ஏற்றத் தாழ்வு மனிதர்களின் மனநிலையை இதிலிருந்து மாற்றுவது கடினம். கல்வியறிவில் ஊறிப்போன சில நபர்களும் வேறுபாட்டைத்தான் முன் வைப்பார்கள். இதில் இடம் பெறும் கருப்புச்சட்டைக் காரனின் ஆறுதலான சில வார்த்தைகள் நடைமுறை மனங்களை ஆழமாக உணர வைக்கிறது. ஒருவேளை எடிசன் அவன் சொன்னது போல நகரத்திற்கு வேலைத் தேடிப் போயிருக்கலாம்.
வெட்டியானின் வாழ்வு பல நிலைகளில் அருவருப்பானதான, அச்சூழ்நிலையைச் சுற்றி இருப்பவர்களே உருவாக்கி விடுகிறார்கள். இரண்டு நாட்களாக உணவில்லாமல் தவிக்கும் தன் குழந்தையான எங்கெல்சுக்காக, டீக்கடையில் அவமானப்பட்டு வாடும் தலைக்குனிவு இன்றும் சில இடங்களில் நிமிரக்கூட இல்லை. மற்றவர்களோடு பழகக் கூடிய உணர்வென்பது தள்ளியேத்தான் நிற்கிறது. இதில் ஒரு முக்கிய விடயத்தைக் குறிப்பிடுகிறார். அங்கே நாய் எளிதாகச் சென்று வடையை எடுக்கிறது. ஆனால், வெட்டியான் எடிசனால் அது முடியவில்லை.
காலரா நோய் வந்து பல பிணங்களை எரித்து அதன் பலனால், தன் மனைவி பாதிக்கப்பட்டு இறந்தும் கூட, தீட்டு எண்ணம் கொண்ட அம்மனிதர்களின் உடல்களை எரிக்கும் அவலச் சூழலுக்கு மதிப்பில்லை. குடும்ப பாரத்தால் தத்தளித்தவனுக்குக் கருப்புச் சட்டை ஆதரவு அளித்திருக்கிறது, இச்சமூகம் அல்ல என்றும் ஒரு முடிவை உள்ளுக்குள் விதைக்கிறது.
அதைப்போன்று பீப்பீயும் இதற்கு விதிவிலக்கல்ல. பாலியல் கல்வியைப் பற்றி முன் வைக்கிறார். ஆண் மீதான பாலியல் ஈர்ப்பென்பதும் தவறானது. பொதுமன வெளியில் சரியான புரிதலோடும், அதன் வழியில் பழகுதலும், புதிய சமூகத்தை விதைக்கும். ஆனால், இதற்கு எதிர்மாறான எண்ண அலைகளைத் திணிக்கும் மனிதர்களைச் சரியான தண்டனைக்கு உட்படுத்துதல் அவசியம்.
ராஜேஷ் – ரமேஷ் – சுரேஷ் இம்மூன்று கதாபாத்திரங்கள் வழியாகக் கதைப் போக்கு அமைகிறது. டியூசன் சொல்லிக் கொடுக்கும் ஒருவர் தகாத உறவில் மாணவர்களோடு இருந்து, அதன் பாதிப்பில் இறந்த அச்சிறுவன், அக்குற்றத்தைக் கண்டறிவதற்கு அவன் மேற்கொள்ளும் விதம், குற்றம் சாட்டப்பட்டவர் என்னதான் கல்வி அறிவுப் பெற்றாலும், சரியான விசாரனை இல்லாமல் பொதுபுத்தித் தன்மையில் சில பரிகார வேலைப்பாடுகள் மட்டுமே நடக்கிறது. அதொரு முட்டாள் தனமான செயல்பாடாக அனுமானிக்கப் படுகிறது.
பாதிக்கப்பட்ட அச்சிறுவனுக்கு நியாயமோ, ஆறுதலோ, முறையான விழிப்புணர்வு இல்லாமல், வேறுப் பெயரைச் சொல்லி சிறுமைப் படுத்துதல் மோசமான அணுகுமுறையாக கதைக்குள் அடிபடுகிறது.
புறக்கணிப்பையும் தள்ளி வைத்துவிட்டு சென்றுவிட முடியாது. பீடிச் சுற்றும் மனிதர்களின் வாழ்க்கை எந்தளவிற்குப் பின்னோக்கி இருக்கிறது என்பதை ஒரு வயதானவர் போராடும் துன்பத்திற்குப் பதில் சொல்ல முனைந்திருக்கிறார். இக்கதையிலும் முன்னர் வந்த அதே கோவாலு இடம்பெறுகிறார். நேர்மறையான சிந்தனைக் கொண்டவராக வலம் வருகிறார். பீடி எப்படிச் சுற்றப்படுகிறது. இலையை எந்தப் பக்குவத்தில் கொண்டு வர வேண்டும். அதற்கான பொருட்கள் என்னென்ன. இது போன்ற பல குறிப்புகளை வரிசைப் படுத்தி வைக்கிறார்.
அவ்வயதானர் ஊர் ஊராகச் சென்று, பீடிச் சுற்றுவதால் ஏற்படும் பாதிப்புகளை, உடல் வாதைகளை, சரியான உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப் படுவதில்லை. நம்முடைய உழைப்பை யாரோ சிலர் சுரண்டி வயிறு வளர்க்கிறார்கள். ஆகவே, இதைப் புறக்கணியுங்கள் என்று தன் கருத்தைத் தினமும் சைக்கிளில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சியினை மேற்கொள்கிறார். அம்முயற்சித் தோற்பதற்கு கணக்குப் பிள்ளையின் வாதமும், அம்மக்களின் சிந்தனையை மழுங்கடித்து விடுகிறது.
அவர் குடும்பம் மெட்ராஸில் நல்ல வசதி வாய்ப்போடு இருக்கிறார்கள். அவர் தொல்லைத் தாங்காமல் இங்கே விரட்டி விட்டதாகவும், உங்களை எல்லாம் குழப்புகிறார் எனும் அடிப்படையில் பேசும் உரையாடலும், கதைக்கு இருநிலைப் பாட்டைக் கொடுக்கிறது. ஒன்று தன்னை நம்பி வருபவர்களை ஏமாற்றுவது. மற்றொன்று தன் இலாபம்.
ஆனால், எந்த இலாபக் கணக்குக்கும் உட்படாதவராக அறியப்படுபவர். பகல் முழுவதும் அலைந்து திரிந்து இரவில் ஊர் அடங்கியப் பின், தன் பெரிய வீட்டிற்கு வருகிறார். சென்னையில் மக்கள் படும் அவதிகளைப் பார்த்து, தன் சொந்த ஊர் மக்கள் இதுபோல் கஷ்டப்படக் கூடாது என்று போராடுகிறார். பணத்தைத் தாராளமாக செலவழிப்பதைக் கண்டு, தன் அடுத்தத் தலைமுறைக்குத் தேவையென, இரத்த உறவுகள் அவரை அப்பெரிய வீட்டில் தனியாகவே விட்டுச் செல்கின்றனர்.
மீதிக் காலக்கட்டத்தை ராசம்மாவுக்கும், மக்களுக்குமாகக் கழிக்கிறார். மறுநாள் அவருக்கு ஒரு பேரதிர்ச்சி ஏற்படுகிறது. இவ்வளவு நாள் போராடிய வார்த்தைகளுக்குத் தான் மதிப்பில்லை. வலுவிழந்த அக்குரலுக்கும் மதிப்பில்லாமல் பீடிக் கடையில் மக்களின் கூட்டம் அதிகமாக நிறைந்து தள்ளியது. தன் மனைவி, குழந்தைகள் வெளிப்படுத்திய சில கூர்மையான சொற்களும் கண்முன் வந்து போனது. அச்சொல் ஏமாளி. ஊருக்காகப் போராடினால் அவர்களுக்குப் பெயர் ஏமாளி என உருவகப் படுத்தி, அதையே பின்னாளில் நிலைத்து நின்றுவிடும்.
இதே நிலையிலேயே மனம் நொந்து, ஒரு வயலில் விழுந்து, அவரைக் காப்பாற்ற வரும் மக்களின் முகங்களைப் பார்க்க வெறுக்கிறார். விழுந்து எழுந்தவர் வீட்டிற்குச் சென்று உயிரை விடுகிறார். இறப்புதான் அங்குள்ளவர்களின் மனநிலையைக் கூனிக் குறுக வைத்திருக்கிறது. புறக்கணிப்பு அவருக்கும் நடந்திருக்கிறது.
கதைக்குள் இடம்பெறக்கூடிய ஒருசில கதாபாத்திரங்கள் மற்றக் கதைக்குள் தங்களின் வாழ்க்கையை உணர வைக்கிறார்கள். ஒருபகுதி இதுவென்றால், மற்றப் பகுதி அடுத்து வரக்கூடிய கதையில் பயணிப்பதாக அமைத்திருக்கிறார். அதாவது, தொடர்ச்சி நிலை. கதையைப் பிரித்து எழுதிப் புதுமையான பார்வைக்கு அடித்தளம் இடுகிறார். எதிர் முரணாகக் காட்சிப்படுத்திய பாத்திரங்கள், அடுத்த கதை பயணத்தில் அவர்கள் மீது விருப்பையோ அல்லது ஒரு கரிசனத்தையோ ஏற்படுத்துகிற தொனியைக் கொடுக்க விழைகிறது.
இவ்வாறாகச் சமூகத்தில் நடக்கும் பல நெளிவு சுழிவுகளைத் தன் படைப்புக்குள் கொண்டு வர முயற்சிச் செய்திருக்கிறார். அதே நேரத்தில் மாற்றம் எனக் கருதிச் சிறுகதைக்கான உள்ளடக்கத் தோரணை இல்லாமல், உரைநடை கவிதை வடிவைப் பயன்படுத்தி இருக்கிறார். அதன் தொடர்நிலைத் தன்மை, செலுத்து நிலை இடர்பாடு இல்லாமல் சுருங்கச் சொல்லி விளக்கியிருக்கிறார். அதற்குள்ளும் காலநிலை வகையை அடையாளம் கண்டுவிடும் அமைப்பை எழுத்திற்குள் கொண்டு வந்ததால், நடைசொல்லல் நம்பிக்கை அளிக்கிறது. மெய்ப்புத் திருத்தத்தை இன்னும் ஆழப்படுத்தி இருக்கலாம்.
முதல் பதிப்பு : ஏப்ரல் 2025
வெளியீடு : கற்கைப் பதிப்பகம், திருச்செங்கோடு, நாமக்கல் – மாவட்டம்.
000

முத்தழகு கவியரசன்
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் சொந்த ஊர். இயற்பெயர் மு.கவியரசன். (20,ஜீலை,1991) விவசாயக் குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரி. மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம். தூய சவேரியார் கல்லூரியில், (பாளையங்கோட்டை) சுப்ரபாரதிமணியன் சிறுகதைகளில் முனைவர் பட்டம். இவரின் முதல் நாவலான “பரிதவிப்பு” 2021 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி யுவபுரஸ்கார் தேர்வு இறுதிப் பட்டியலில் இடம்பெற்றது. “காட்சிகள் சொன்ன காரணங்கள்” குறும்புதினம், சுப்பு லட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில் (மதுரை) பாடத்திட்டத்தில் மூன்று ஆண்டுகளாக இடம் பெற்றது. “மகிழ்ந்திருங்கள்” நாவலைப் பன்முக கலை இலக்கிய மேடை (தேனி) வெளியிட்டது. வாசகசாலை, சுவடு இணைய இதழ், உங்கள் நண்பன், புதிய மனிதன், உயிர் எழுத்து, காணி நிலம், இலக்கியச்சுடர், இலண்டனிலிருந்து வெளியாகும் காற்றுவெளி போன்ற பல்வேறு இதழ்களில் சிறுகதைகள் மற்றும் கதைகள், கட்டுரைகள் வெளியாகி வருகின்றன.