அவன் ஒரு புத்தகம். கணக்கில் அடங்காத பக்கங்கள் விரிந்தபடியே இருந்தன. சில எழுதியவை. சில இழந்தவை. சிலர் படித்தவை. சிலர் கடந்து சென்றவை.

முகப்பு மெதுவாக பளபளப்பிழந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு விரல் தொடுவிலும் ஒரு துளி அழுக்கேதும், ஒரு தடம் வைக்கப்பட்டிருந்தது. அதற்கிடையில், நன்றிப் பக்கங்களில் சில பெயர்கள் வரைந்து மிதந்தன. அவன் தாயின் தாலாட்டைத் தொலைவிலிருந்து கேட்டான். தந்தையின் கண்டிப்பு இன்னும் சில வார்த்தைகளில் படர்ந்து நின்றது.

ஒரு பக்கம் மடிந்திருந்தது. அது பௌர்ணமி இரவில் நிலவுக்குச் சோறு ஊட்டிய பக்கம். ஆனால் நிலவு, பூனைக்காகத் தனது ஒளியைப் பகிர்ந்துவிட்டதாகத் தோன்றியது. அந்த பக்கம் படித்தவர்களால் முறுக்கப்பட்டு மறுபடியும் திடீரென்று திறக்கப்பட்டிருக்கலாம்.

வெள்ளைப் பக்கங்களில் கனவுகள் ஓடியவண்ணம் இருந்தன. எதிர்பார்ப்புகள் நீராகி வடிந்து போனதால், வானம் வெருண்டு வெறுமையாக இருந்தது. சில பக்கங்களில் புழுக்கள் உட்கார்ந்திருந்தன. அவன் அவற்றைப் பிரித்துப் போட்டான். பக்கங்களுக்குள் காய்கின்ற மரங்களை விட, நட்டு வளர்க்கும் மரங்களையே விரும்பினான்.

இன்னும் சில பக்கங்கள் வெற்றியே. ஆனால் அவை வெறுமையாக இல்லை. அவை எதிர்காலத்திற்கு ஒதுக்கப்பட்டவை. குழந்தைகளுடன் சேர்ந்து எழுத முடியுமென்ற நம்பிக்கையில் வைக்கப்பட்டவை.

அவன் புத்தகமாக இருந்தாலும், ஒரு காவலனாகவும் இருந்தான். பக்கங்கள் விஷத்தால் நிறையாது என. அவை கொடிய மிருகங்களின் வசப்படாதிருக்க அவன் உறுதியாக இருந்தான்.

நூலின் முன்னுரை இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறாள் அவனுடைய மனைவி. அது தான் அவன் எதையும் சமாளிக்கக் காரணம். அவன் வாசிக்க, வாசிக்க, புதிதாக விரிவடையும் முன்னுரை. அவன் புத்தகமானான். இன்னும் வாசிக்கப்படாமல் இருந்த கதையாய்.

அவன் புத்தகம். ஆனால் ஒரு முழுமையான முடிவற்ற கதையாகவே இருந்தான். பக்கங்கள் தொடர்ந்து எழுதப்பட்டுக்கொண்டே இருந்தன. அவனே அவற்றைப் புரட்டிப் பார்த்தான். சிலவற்றில் முன்பே படித்த வரிகள். சிலவற்றில் புதிதாய் எழுதப்பட்ட வார்த்தைகள். சில வெறும் இடைவெளிகள்.

ஒரு நாள், அவன் நூலின் முன் அட்டையைத் திறந்தபோது, ஒரு பழைய ஒலியைக் கேட்டான். பிறந்த குழந்தை ஒன்று முதன்முறையாகக் குரல் கொடுத்தது. அதன் பின் அடுத்த அட்டைப் பக்கம் தாயின் கண்ணீர் விழுந்திருக்கும் பக்கம். ‘உன் சிரிப்பை முதன்முறையாகக் கேட்டேன்’ என்று ஒரு வரி மட்டும் இருந்தது.

அவன் தொடர்ந்து வாசித்தான். தந்தையின் கடினமான குரலின் கிழிந்து போன பக்கம் வந்தது. ‘நீ வாழ்க்கையில் ஏதாவது ஆகணும்!’ என்று எழுதியிருந்த வரிகள் அசைவற்று நின்றன. ஆனால் அவற்றுக்குப் பின் எழுதியிருந்தது—’நீ ஏற்கனவே ஏதோ ஆகிவிட்டாய். அதனைக் கண்டுபிடிக்க எனக்கு நேரமில்லாமல் போனது. ‘இந்த வரிகளை ஒருவேளை தந்தையே மறுபடியும் திரும்பிப் பார்த்து எழுதியிருக்கலாம்.

ஒரு பக்கம் அழுகிப்போயிருந்தது. கனவுகள் வறண்டு போன பக்கம். கனவுகள் ஒரு காலத்தில் இங்கே ஓடியதற்கான அடையாளம் மாத்திரம் இருந்தது. அடுத்த பக்கம் மீண்டும் பிரகாசமாய் இருந்தது—அவன் ஒரு விதை நடும் காட்சி. ஏதோ ஒரு சிறு பசுமை அதிலிருந்தே முளைத்திருந்தது.

அவன் புத்தகம். அவன் வாசித்துப் பார்த்தபோது, மனைவியின் எழுத்துக்கள் ஓரிடத்தில் தொடர்ந்திருந்தன. அவன் வாசிக்காத பக்கங்களில் அவள் எழுதிக் கொண்டே இருந்தாள். அவள் எழுத்துகளில் அவன் வாழ்க்கையின் மறைந்த பாகங்கள் தெரிந்தன. அவள் தான் அவனை முழுமைப்படுத்தும் வாசகி.

அவன் புத்தகமானான். ஆனால் அவன் எழுதியது போல் மட்டுமல்ல, அவன் வாசித்ததைப் போல் தான் அவன் வாழ்ந்தான். இன்னும் ஒரு பக்கம் எழுதப்பட வேண்டியதாய் அவன் எதிர்நோக்கினான்.

“நான் ஒரு புத்தகம். நான் வாசிக்க, வாசிக்க, என் சொந்தக் கதையை நான் புரிந்து கொண்டேன்.”

அவன் புத்தகமானான். பக்கங்கள் எப்போதும் எழுதப்பட்டுக்கொண்டே இருந்தன. அவனுக்குத் தெரியாமலேயே சிலர் வாசித்துப் போயிருந்தனர். சிலர் அவன் பக்கங்களை அலட்சியமாகப் புரட்டிப் பார்த்து முடிந்துவிட்டதாகக் கூறிவிட்டுப் போயிருந்தனர். சிலர் இன்னும் வாசித்துக்கொண்டிருந்தனர்.

ஒரு நாளில், அவன் வாசிக்கத் தொடங்கியபோது, ஒரு மங்கலான பக்கம் கிடைத்தது. எழுத்துக்கள் அதில் அழிந்துவிட்டன. அது ஒரு பழைய இரவு. மழை வெள்ளிக்குள் மிதந்த ஓர் அந்தரங்கமான பக்கம். ஆனால் அடுத்த பக்கம் எதிர்பாராத விதமாக வெள்ளை.

“எங்கே போயிற்று அந்த இரவு?”

அவன் நூலின் மடிப்பு தொடங்கும் இடத்தில் எதையோ தேடினான். அந்த இரவு அவனுடையதா? இல்லையா? அது அவனிடம் இருந்ததா? இல்லை, அவன் நினைத்ததா?

மறுபக்கம் வந்து கொண்டிருந்தது.

பாடசாலை. ஆசிரியர் கணக்கெடுக்கிறார். பெயர் கேட்டவுடன், அவன் எழுந்து நின்றிருக்கிறான். அந்த வரிகளைப் படிக்கையில், அவனுக்குத் தன்னுடைய சிறுவயது தோன்றியது. ஆசிரியர் ஒரு வார்த்தை கூறினார்.

“உன் பெயர் நல்லவார்த்தை. ஆனால் அது நீ நடக்கவல்ல பாதையை நினைவூட்டுகிறதா?”

அவன் புத்தகம். அவன் வாசிக்கின்ற ஒவ்வொரு வரியுமே ஒரு பழைய கண்ணாடி.

அவனுக்குத் தன் குழந்தைப் பருவம் திரும்பி வருவதை உணர்ந்தான். அவன் முதல் முறை மரத்தடியில் அமர்ந்து, ஒரு புறாவைத் தொட்டபோது, அது பறந்து போனது. ஆனால் இந்த பக்கத்தில்,

“அது திரும்பிப் பார்த்தது.”

அவனைப் பார்த்து ஒரு கணம். அவனது அந்த குழந்தைப் பருவம் திரும்பிப் பார்த்தது.

அவன் புத்தகம். அவன் வாசிக்க, வாசிக்க, சில பக்கங்கள் விரிவடைந்து சென்றன. சில மறைந்துவிட்டன. சில, அடுத்தவர்களின் கையில் எழுதப்படுவதற்காக வெற்றிடமாக இருந்தன.

அவன் முடிவடையாத புத்தகம். அவன் வாசிக்கின்ற ஒவ்வொரு நாளும், அவன் எழுதப்படுகிறான்.

முன்னுரை இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறாள் அவனுடைய மனைவி.

“நான் ஒரு புத்தகம். நான் வாசிக்க, வாசிக்க, என் சொந்தக் கதையை நான் புதிதாய் எழுதிக்கொண்டே இருக்கிறேன்.”

அவன் புத்தகம். அவன் வாசிக்க, வாசிக்க, சில பக்கங்கள் தானாகவே மடங்கி மறைந்தன. சில துடிப்பாகத் திரும்பித் திறக்கப்பட்டன. சிலர் அவனைக் கிழித்து எறிய நினைத்திருந்தாலும், சிலர் அவனில் தங்கள் பெயரை எழுத முயன்றிருந்தாலும், அவன் புத்தகமாகவே இருந்தான்.

ஒரு நாள், அவன் முன்னுரையில் மனைவியின் எழுத்துக்களை வாசித்தான். அவள் எழுத்துக்கள் மென்மையானவை. ஆனால் அவை அவன் வாழ்ந்த தருணங்களை மீட்டெடுக்க முயன்றவையாக இருந்தன.

“நூல் ஒருநாள் மூடப்படும். ஆனால் அதற்குள் அதை முழுமையாக வாசித்திருக்க வேண்டும்.”

அவன் சில நாட்கள் வாசிக்காமலிருந்தான். அவன் புத்தகத்தை வைத்திருந்த இடத்தில் தூசி படிந்தது. காற்றில் சில பக்கங்கள் தானாகத் திரும்பின. அவன் மீண்டும் வாசிக்கத் தொடங்கியபோது, அடுத்த பக்கம் பசுமையாக இருந்தது.

அவன் நடுத்தர வயதில் இருக்கும் பக்கம் அது. அவன் குழந்தைகளைச் சுற்றி அமர்த்தியிருக்கிறான். அவன் கதைகள் சொல்லிக்கொண்டிருக்கிறான். ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் அவன் சொற்கள் பிரதிபலிக்கின்றன.

அடுத்து வந்த பக்கம் கனமானது. ஒருநாள் அவன் தனியாக இருக்கிறான். ஒரு பழைய மரத்தடியில் இருக்கிறான். அவன் முதுகுக்குப் பின் நூலின் சில பக்கங்கள் ஒழிந்து போயிருக்கின்றன. அவன் தன் விரல்களால் அந்த மறைந்த பக்கங்களைத் தேடினான். ஆனால் அவை எங்கும் இல்லை.

“நூலின் சில பக்கங்கள் எப்போதும் மறைந்தே போய்விடுகின்றன.”

அவன் புத்தகம். சிலர் முழுவதும் வாசிக்காமல் முடிவு சொல்லிவிட்டுப் போகலாம். சிலர் கடைசி பக்கம் எது என்று தெரியாமலேயே பயணிக்கலாம். சிலர் புதிய முன்னுரையை எழுதலாம்.

மறுபடியும் ஒரு பக்கம் திரும்புகிறது.

அவன் முதியவனாகி இருக்கிறான். அவன் கதைகள் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. ஆனால் அவன் எழுத்துக்களைப் பார்ப்பதற்காகச் சிலர் வருகிறார்கள்.

மனைவி இன்னும் முன்னுரையை எழுதிக்கொண்டிருக்கிறாள்.

அவன் புத்தகம். ஆனால் அவன் வாசித்துவிட்டுப் போகும் புத்தகம் அல்ல. இன்னும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும் புத்தகம்.

“நான் ஒரு புத்தகம். என் இறுதிப் பக்கம் இன்னும் எழுதப்படவில்லை.”

அவன் புத்தகம். ஆனால் எத்தனை பக்கங்கள் இருந்தாலும், நூலுக்கு ஒருநாள் முடிவிருக்கும். அவனுக்குப் புரிகிறது.

மறுபடியும் ஒரு பக்கம் திரும்புகிறது.

இப்போது, அவன் தனியாக இருக்கிறான். பழைய நினைவுகளின் இடையில் ஒரு இருக்கை. அவன் விரல்கள் மெதுவாக நூலின் பக்கங்களைத் தடவுகின்றன. அவன் எழுதியவை, அவன் வாழ்ந்தவை, அவன் பார்த்தவை—எல்லாம் ஒரே நேரத்தில் ஒளிருகின்றன.

சில பக்கங்கள் அழுக்காகியிருக்கலாம். சில பக்கங்கள் அழகாகப் பசுமையாக இருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் அவனுடையவை.

நூலின் முன் அட்டையில் மெல்லிய கீறல். அதிலிருந்து வழியும் ஒளியில் அவன் மனைவியின் எழுத்துக்கள் தெளிவாகத் தெரிகின்றன.

“இந்த நூல் முழுமையாக வாசிக்கப்படுமா?”

அவன் முகத்துக்கு ஒரு மெல்லிய புன்னகை வருகிறது. ஏன் என்றால், அவன் புரிந்து கொண்டான். ஒரு புத்தகம் முடிந்துவிடாது. அது ஒருவன் வாசித்தபடி, வாழ்ந்தபடி, மறைந்தபோது கூட, இன்னும் ஒருவன் அதைத் தொடர்வான்.

அவன் புத்தகம். அவன் வாசித்துப் பார்த்தவர்களின் கண்ணாடி. ஆனால் அவன் ஒரு தனிப்பட்ட நூலாக மட்டுமல்ல, பலர் தொடரும் வாசிப்பாகவும் இருக்கிறான்.

மறுபடியும் ஒரு பக்கம் திரும்புகிறது.

முன்னுரை எழுதியவள் இனி எழுதுவதில்லை. அவள் எழுத்துக்கள் நிறைவு பெற்றிருக்கின்றன. அவன் நூலின் கடைசி பக்கத்தைத் திறக்கிறான்.

அந்த பக்கம் வெறுமையாக இருக்கிறது.

இப்போது, அவனது விரல்கள் அந்த வெறுமையில் மெல்ல ஓர் எழுத்தை எழுதுகின்றன.

“நான் ஒரு புத்தகம். என் கதையை நீயே தொடரலாம்.”

••••

டீன் கபூர்

ஓய்வு நிலை ஆசிரியர். இலங்கை கிழக்கு மாகாணம் மருதமுனை எனும் ஊரில் 1963 இல் பிறந்தேன். 1987 களில் இருந்து பத்திரிகை, சஞ்சிகைகள் மற்றும் இணைய சஞ்சிகைகளிலும் எழுதி வருகிறேன். இதுவரை நான்கு கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறேன். குரோட்டான் அழகி (1994), திண்ணைக் கவிதைகள் (2007), சொற்களில் சுழலும் பிரபஞ்சம் (2019), வேரினிடை  (ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதை நூல் 2023). அத்துடன் எண்ணிம ஓவியங்களையும் வரைந்து வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *