கார்காலக் கிறுக்கல்கள்

பூமிக்கு தந்த மழையில் நனைந்தபடி

தன் வீட்டின் முகவரி

தேடி ஓடுகிறது ஒரு வாழ்க்கை

மேட்டின் முகவரி

தேடி ஏறுகிறது ஒரு வாழ்க்கை

ஏட்டின் முகவரி

ஏறி புரட்டுகிறது ஒரு வாழ்க்கை

கேட்டின் முகவரி

அடைந்து அமர்ந்தும்

தள்ளாடுகிறது ஒரு வாழ்க்கை

பணக்கட்டின் முகவரி

பாதுகாக்கும் கடவுச்சொல் பூட்டின்

திறவுகோலை கைக்குள் ஒழித்தபடி

ஓய்வை கழிக்கிறது ஒரு வாழ்க்கை

இருட்டின் முகவரி

எங்கே என்று

ஏங்கித் தவிக்கிறது ஒரு வாழ்க்கை

பாட்டின் முகவரி

உள்ளே சென்று

வெளியேவர முடியாதபடி

மாட்டிக் கொள்கிறது ஒரு வாழ்க்கை

சுடுகாட்டின் முகவரி

நோக்கி பயணமாகிறது ஒரு வாழ்க்கை

குட்டின் முகவரி

நோக்கி கூட்டமாக

குத்தோடு பாய்கிறது ஒரு வாழ்க்கை

காட்டின் முகவரி

உள்ளே தாக்குப்பிடிக்க முடியாமல்

ஆற்றின் போக்கில்

மிதந்து வருகிறது ஒரு வாழ்க்கை

கூட்டின் முகவரி

அடைய முடியாமல்

அரை உயிரோடு

நடுங்கியபடி நிற்கிறது ஒரு வாழ்க்கை

இவை எல்லாம்

கண்ணில் கொண்டும்

கருத்தில் கொள்ளாது

காற்றின் முகவரி

தேடி அலைகிறது ஒரு வாழ்க்கை

000

ஆதன் ஆரா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதும் க.ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர். ஒரு மாற்றுத்திறனாளியான இவர் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு விசைத்தறி நெசவுத்தொழில் செய்து வருகிறார்.  இவர் தன்னுடைய மகள்களின் பெயர்களான ஆதன்யா, ஆராநிலா என்பவற்றின் தொடக்கச் சொற்களை எடுத்துதான் தன்னுடைய புனைப்பெயரை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *