நேற்று நள்ளிரவு கோல்பாக்கில் ஒரு பெண்ணுடன் மௌல்வி பதக் அலி பிடிபட்டார்.
அனைவரும் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். அது உண்மைதானா என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டார்கள். எனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. நான் உண்மைக்கும் பொய்க்கும் இடையே தவித்துக் கொண்டிருந்தேன். இத்தனை பேரும் பொய்யா சொல்லுவார்கள் என்று எண்ணுவேன். மனிதன் வெளிக்கு ஒருவிதமாகவும் உள்ளுக்குள் ஒருவிதமாகவும் இருந்திருக்கிறான் என்று தோன்றியது. முகமூடி அணிந்துள்ள மனிதனுக்கும் நாம் கண்ணெதிரே காணும் மனிதனுக்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்யும்! தொழுகை செய்து தாடியும் தழும்பேறிய நெற்றியும் வெண்ணிறத் உடைய இந்த பதக் அலியிடம் வழக்குகளை தீர்த்துக் கொள்ள ஜனங்கள் வலிய வருவார்கள். போலீசுக்குக் கூட போகமாட்டார்கள். பெரிய இமாம் முன்னிலையில் அவருக்குப் பின்னால் நமாஜ் செய்வார். வீட்டில் ஒரு உத்தமமான மனைவியும் இரண்டு வாலிபப் புதல்வர்களும், கலியாண வயதடைந்த மூன்று புதல்விகளும் இருந்தனர். இந்த நிலையில் இருந்து கொண்டா மௌல்வி பதக் அலி இம்மாதிரி அசிங்கமான விளையாட்டு விளையாடினார். அவருடைய வயதா இம் மாதிரி தீய காரியத்தைச் செய்யத் தூண்டியது? ஏறக்குறைய ஐம்பது வயதிருக்கலாம். சமாதியுள் காலைத் தொங்க விட்டுக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார். சமாதி அருகிலுமா பெண்? ஆண்டவன் செயல்!
விஷயம் தெரு முழுதும் பரவி விட்டது. விஷயம் பல விஷயமாகப் பெருகிவிட்டது. ஜனங்கள் சிரித்தார்கள், ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் இன்று நாள் முழுதும் பதக் அலி ஆபீசுக்கு வராமல் போகவே எனக்கும் என் நம்பிக்கைக்கும் இடையே பிளவு ஏற்பட்டு விட்டது. என்னுடன் வேலை செய்யும் வேறொரு குமாஸ்தா “இந்த விஷயம் பொய்யாக இருந்தால் அவர் ஏன் வீட்டைவிட்டு வெளியில் வராமலிருக்கிறார்? ஏதோ உண்மையாக நடந்திருக்கிறது” என்றார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த இன்னொரு குமாஸ்தா பதக் அலியின் ஸ்தானத்திற்குத் தன்னை உயர்த்தும்படி சூபரின் டெண்டிடம் மனுக்கூடக் கொடுத்தார். இனி மேல் அவர் எப்போதும் ஆபீசுக்கு வரமாட்டார் என்று நினைத்துக் கொண்டார். இம்மாதிரி அசிங்கமான காரியத்தைச் செய்துவிட்டு அவர் எந்த முகத்தைக் கொண்டு ஆபீசுக்கு வருவார்?
ஆபீசில் பதக் அலிக்கு மிகுந்த மதிப்பு உண்டு. அவர் எங்களெல்லோரையும் விட ‘ சீனியர்’ குமாஸ்தா. காலையில் ஏழு மணிக்கு வந்தாரானால் இரவு எட்டு மணிக்குத்தான் வீட்டுக்குப் போவார். அவர் போடும் ‘டிராப்டில்’ ஆங்கிலேய ஆபீசர்கூட ஒரு எழுத்தைக் கூட மாற்ற மாட்டார். பேசாமல் கையெழுத்துப்போட்டு விடுவார்கள். சம்பளம் அதிகம் என்றும் சொல்ல முடியாது. குறைச்சல் என்றும் சொல்ல முடியாது. ஆனால் இந்த உலகத்திலிருந்துகொண்டு மற்ற குமாஸ்தாக்களைப்போல ஒரு பைசாக்கூட பதக் அலி லஞ்சம் வாங்கமாட்டார். ஜனங்கள் லஞ்சம் கொடுக்க முன் வந்தால் அவர் தன் கை ரேகையைக் காட்டிக் கொண்டு, “என் கையில் கத்திரிக்கோல் இருக்கிறது. கையில் ரூபாய் தங்காது. உங்கள் வேலையை அல்லா முடித்துக் கொடுப்பார்” என்பார்.
அதற்கப்புறம் அவரே அந்தக் காரியத்தை முடித்துக் கொடுப்பார்.
இவ்விதம் பதக் அலி லாகூர் டிப்டி கமிஷனர் ஆபீசில் உத்தியோகம் பார்த்துக்கொண்டு இருந்தார்.
ஆனால் அந்த பதக் அலி நேற்று இரவு கோல் பாக்கில் ஒரு பெண்ணுடன் இருந்தார் என்றால்…..
ஆபீசிலிருந்து வீட்டுக்குப் போகும் வழியில் ‘பாகிஸ்தான் டீ ஸ்டால்’ அருகில் குலாம் முகமதைச் சந்தித்தேன். அவன் தன்னுடைய பயங்கரமான மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு, என்னை ரௌடிப் பார்வை பார்த்துக் கொண்டு, “உங்களுக்கு விஷயம் தெரியுமா பாபுஜி? உங்கள் நண்பர் பதக் அலி இப்போது எங்கிருக்கிறார் தெரியுமா?” என்றான்.
நான் பதிலளிக்குமுன் அவனே ‘கடகட’ வெனச் சிரித்தான். அவன் கேள்விக்குப் பதில் அப்படிப்பட்ட ‘கடகடா’ச் சிரிப்பாகத்தான் இருக்க முடியுமாம்!
அவனிடம் பேசலாமென்றுதான் விரும்பினேன். ஆனால் அவன் அதற்குள் ஏதோ ஒரு அனாதைப் பெண்ணைச் சைகிளில் உட்கார வைத்துக்கொண்டு வேகமாகப் போய்விட்டான்.
குலாம் முகமது போனபிறகு பதக் அலியின் இந்த அசிங்கமான காரியத்திற்கும் இவனுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமென்று என் மனத்தில் பட்டது.
குலாம் முகமது, மௌல்வியின் அண்டை வீட்டிலிருந்தான். அது ஒரு பழைய கதை. பாகிஸ்தான் தோன்றுவதற்கு முன் பதக் அலி லாகூருக்கு வருவதற்குமுன் டில்லியிலிருந்தார். அப்போது குலாம் முகமது அவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வந்தான். டில்லியில் அப்போது கலகக்காரர்களின் அட்டூழியத்தால் கொள்ளையும் கொலையும் நெருப்பு வைத்தலும் நகரெங்கும் பரவி இருந்தது. அந்தச் சமயத்தில் தான் யாரோ முகமது கொல்லப்பட்டான் என்ற தகவலைத் தெரிவித்தார். உடனே பதக் அலி குலாம் முகமதுவினுடைய மனைவியையும் குழந்தைகளையும் ஹுமாயூன் பாதுகாப்பு முகாமிற்கு அழைத்து வந்தார். அவர்களை உயிர் உள்ளவரையிலும் காப்பாற்றுவதாக வாக்களித்தார். ஆனால் முகாமிற்கு வந்து பார்க்கும்போது அங்கு குலாம் முகமது உட்கார்ந்து கொண்டு மனைவி மக்களைக் கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தான். பதக் அலியைப் பார்த்தவுடன் அவர் காலில் விழுந்தான். அவன் அந்த வீதியில் மட்டும் ரெளடி அல்ல. டில்லியிலேயே ஒரு குறிப்பிடத்தக்க ரௌடியாக இருந்ததால் போலீசுத் தொல்லைக்குப் பயந்து கொண்டு மௌல்வியை நன்கு பற்றிக் கொண்டான். பிறகு மௌல்வியுடன் சேர்ந்து லாகூர் வந்து சேர்ந்தான். இங்கு வந்தபிறகு பெரிய வீடாக எடுத்துக்கொண்டு அதில் சிறிய இடத்தை மௌல்விக்கும் கொடுத்தான்.
ஆனால் லாகூர் வந்த பிறகு இருவரிடையேயும் உறவு மோசமடைந்து கொண்டு வந்தது. இருவரும் அண்டை வீட்டுக்காரர்களாக இருந்தார்கள் என்றாலே சண்டைக்கு வேறு காரணம் வேண்டியதில்லை அல்லவா? இரண்டாவது காரணம் பதக் அலி மசூதியிலிருந்தால் குலாம் முகமது மதுச்சாலையிலிருப்பான். இங்கு வந்த பிறகு முகமது பழைய ரௌடித்தனங்களைச் செய்ய ஆரம்பித்தான். இந்த ரௌடித்தனத்திற்காக டில்லியில் ஒரு முறை ஜெயிலுக்குப் போயிருக்கிறான். பதக் அலி அடிக்கடி உபதேசித்தார், அன்பு செலுத்தினார், அதட்டினார், உபகாரம் செய்தார். ஆனால் இதற்கெல்லாம் ஒரே அடியாக ஒருமுறை முகமது பதிலளித்து விட்டான்.
ரம்ஜான் பண்டிகை இரவு. பதக் அலி நள்ளிரவில் தொழுகையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கோல்பாக் அருகில் ஒரு பெண் கூச்சலிடுவது கேட்டது. மௌல்வி பதக் அலி கூக்குரல் வந்த இடத்திற்கு ஓடிப் பார்த்தார். அங்கு குலாம் முகமதும் அவனுடைய நாலைந்து தோழர்களுமாகச் சேர்ந்து கொண்டு பதினைந்து பதினாறு வயதுப் பெண்ணொருத்தியைப் பலாத்காரம் செய்து கொண்டிருந்தனர். அந்தப் பெண் மௌல்வியைக் கண்டதும் ஓடி வந்து கட்டிப் பிடித்துக்கொண்டாள்.
“என்னைக் காப்பாற்றுங்கள்! கடவுள் சாட்சியாக இந்தக் குண்டர்களிடமிருந்து காப்பாற்றுங்கள்….” என்று கதறினாள்.
குலாம் முகமது, மௌல்வியிடமிருந்த மதிப்பு மரியாதைகளை எல்லாம் மனத்திலிருந்து அகற்றிவிட்டு முறைத்தான்.
‘இங்கு புதிய நமாஜ் படிக்க வந்தீர்களா? இது பூந்தோட்டம். மசூதி அல்ல. இந்தப் பெண்ணை விட்டு விடுங்கள். இவள் எங்களைச் சேர்ந்தவள்?” என்றான்.
மௌல்வி பதக் அலி அவனை மிரட்டிப் பார்த்தார். ஆனால் ஒன்றும் பலனேற்படவில்லை. அவன் மடியிலிருந்து கத்தியை எடுத்தான். அந்தச் சமயத்தில் டவுன்ஹாலிலிருந்து வந்த ஒரு காரின் வெளிச்சம் பரவியது. குலாம் முகமதுவும் மற்ற குண்டர்களும் ஓடி விட்டார்கள். கார் அருகில் வந்ததும் மௌல்வி அதை நிறுத்தினார். காரில் ஒரு வாலிபத் தம்பதிகளிருந்தனர். மௌல்வி விஷயத்தைக் கூறி அவர்கள் காரிலேயே அந்தப் பெண்ணை வீடு சேர்ப்பித்தார்.
புலி வாயிலிருந்து இரையைப் பிடுங்கியதால் அடுத்த நாள் காலை மௌல்விக்கும் குலாம் முகமதுக்கும் ரகளை ஆரம்பமாகியது. அந்தப் பெண்ணை மட்டும் காப்பாற்றவில்லை. குலாம் முகமதுவினுடைய மனைவியையும் மக்களையும் இரண்டாம் முறையாகக் காப்பாற்றியதாக மெளல்வி சொன்னார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இருவருக்கும் விரோதம் முற்றியது. எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று குலாம் முகமது கறுவிக் கொண்டிருந்தான். நேற்று இரவு மௌல்வி பிடிப்பட்டதுகூட அம்மாதிரி ஒரு சம்பவமாக இருக்கலாம் என்று கூட நினைத்தேன்.
இப்போது என் மனத்துக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. என் வீட்டுக்குப் போவதற்குப் பதிலாக மௌல்வி வீட்டுக்குப் போவதென்று தீர்மானித்தேன். ஏனென்றால் என்னைப் பொறுத்தவரையிலும் இந்தப் பொய்க் குற்றச்சாற்று ஓரளவு அகன்றிருந்தது. இனி அவரைப் பார்ப்பதில் எவ்விதத் தடையும் இருக்கவில்லை. வழியில் ஒளரங்கசீப் ஓட்டலருகில் அப்துல் ரஷீதைப் பார்த்தேன். மௌல்விக்கும் எனக்கும் அவர் நெருங்கிய நண்பர். நாங்கள் மூவரும் ஒளரங்கசீப் ஓட்டலில் டீ குடித்துக்கொண்டே மாலை வேளைகளில் ரேடியோ செய்திகளைக் கேட்டுக் கொண்டிருப்போம். அப்துல் ரஷீத் இன்று சற்று நேரத்திலேயே வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் அவர் கூப்பிட்டார்.
”வாருங்கள்! வாருங்கள் ! உங்களுக்கு ஒரு விநோதமான விஷயம் சொல்கிறேன்” என்றார்.
உள்ளே நுழைந்ததும் அவர் சாயா கொண்டு வரும்படிச் சொல்லிவிட்டு “நான் என்ன சொல்லட்டும்? நேற்று இரவு மௌல்வி அவமானத்திற்கு ஆளாகி விட்டாரே! உங்களுக்குத் தெரியுமா?”
“நானும் கேள்விப் பட்டேன். ஆனால் அது பொய் என்று நினைக்கிறேன். இது குலாம் முகமதுவினுடைய சூழ்ச்சியாக இருக்குமென்று நினைக்கிறேன்.”
‘’இல்லை. இதில் யாருடைய சூழ்ச்சியும் கிடையாது. நான் இப்போதுதான் ஒரு போலீஸ்காரனைச் சந்தித்தேன். அவன்தான் நேற்று இரவு மௌல்வியை ஒரு பெண்ணுடன் பிடித்தானாம். மௌல்வியும் அந்தப் பெண்ணும் இரவு முழுவதும் கைதியாக இருந்தார்களாம்.”
”அந்தப் பெண் யார்?”
”அவள் யாரோ யாருக்குத் தெரியும்? ஆனால் ஒன்றுமட்டும் சொல்லலாம். ஒன்றும் கதியில்லாதவளாகத்தான் இருப்பாள். இல்லாவிட்டால் ஐம்பது வயதுக்கு மேலான கிழவனிடம் வருவாளா?”
”இன்று நீங்கள் மௌல்வியைச் சந்தித்தீர்களா?”
‘’அவரை எப்படிச் சந்திப்பது? அவர்தான் நம்மை எப்படிச் சந்திப்பார்?”
”இல்லை. வாருங்கள், அவரைப் போய்ச் சந்திப்போம். நம்மை அவர் பார்க்கத்தான் விரும்புவார். உண்மையாக நடந்தது என்ன என்பது தெரிந்து விடும். எனக்கு நம்பிக்கை இல்லை. நான் நம்ப வேண்டும். அப்போதுதான் நீங்கள் சொன்னது உண்மை. அப்புறம் சந்தேகமே இருக்காதே…. இப்போதுகூட என்னால் இதை உண்மை என்று நம்ப முடியவில்லை.”
‘இப்போது அவரைப் போய்ப் பார்ப்பது வீண் காரியம் என்று நினைக்கிறேன். அவரும் நம்மைச் சந்திக்க மாட்டார்” என்றார் அப்துல் ரஷீத்.
“நீங்கள் வாருங்கள். சந்திப்பதும் சந்திக்காததும் அவர் விருப்பம்” என்றேன்.
நாங்களிருவரும் ஒளரங்கசீப் ஓட்டலிலிருந்து வெளியில் வந்தோம். எதிரில் பதக் அலியின் மகன் மருந்துப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வந்தான். அவனுக்குப் பின்னால் டாக்டர் மன்சூர் அலி வந்துகொண்டிருந்தார். நான் ரபியிடம், “என்ன ரபி? என்ன விஷயம்?” என்று கேட்டேன்.
அவன் என்னைப் பயம் கலந்த கலக்கத்துடன் பார்த்தான்.
அம்மா….அம்மாளுக்கு….” என்று மட்டும் அவன் சொன்னான்.
இதைக் கூறி விட்டு அவன் மெளனமாகப் போய் விட்டான். அப்துல் ரஷீத் இதைக் கேட்டுவிட்டு என்னிடம் “ஐயோ பாவம்! மௌல்வியின் இந்த வெட்கம் கெட்ட நடத்தையை அந்த உத்தழியால் சகிக்கவில்லை போலும்!” என்றார்.
நாங்களிருவரும் மௌல்வியின் வீட்டை அடைந்தோம். கதவைத் தட்டினோம். டாக்டர் வீட்டுக்குள்ளிருந்தார். ரபி வெளியில் வந்து “இருங்கள், அப்பாவைக் கூப்பிடுகிறேன்” என்றான்.
ரபி மறுபடியும் மருந்து வாங்கிவர டாக்டருடன் சென்று விட்டான்.
மௌல்வி கதவைத் திறந்தார். நாங்கள் வீட்டுக்குள் நுழைந்தோம். அந்த அறையில்தான் குளிப்பு துவைப்பு சமையல் எல்லாம். ஒரு பக்கத்தில் அடுப்பு இருந்தது. இன்னொரு பக்கத்தில் குழாய் இருந்தது. பெட்டியும் பாத்திரங்களும் அங்கே வைக்கப்பட்டிருந்தன. மௌல்வி என்னை பெட்டிமீது உட்காரச் சொன்னார். நான் சுருட்டி வைக்கப்பட்டிருந்த படுக்கை மீது உட்கார்ந்து கொண்டேன். அவர் குனிந்த தலை நிமிரவில்லை. முகம் வெளுத்துப் போய் இருந்தது. சிறிது நேரம் வரையிலும் நாங்கள் மௌனமாக இருந்தோம்.
‘’இப்போது அண்ணி ஆபத்திலிருந்து தப்பி விட்டார்களல்லவா?” என்றேன்.
மௌல்வி தாழ்ந்த குரலில், ‘ஆமாம்! தப்பித்துக் கொண்டாள்” என்றார்.
“ஏன் அண்ணா! இது எப்படி நடந்தது?” என்று ரஷீத் கேட்டார்.
நான் கோபத்துடன் ரஷீதைப் பார்த்தேன். நேற்று இரவு நடந்தது சம்பந்தமாக ஏதாவது கேட்பார் என்று எனக்குக் கவலையாக இருந்தது.
மௌல்வி ரஷீதைப் பார்த்தார். பிறகு என்னைப் பார்த்துக் கொண்டு நீங்கள் என் வீட்டைப் பார்க்கிறீர்கள் அல்லவா? பெரிய வீடாக ஒன்றும் கிடைக்க வில்லை. இது….இந்த இரண்டு அறைகள் தான். இதை அறை என்று சொல்ல முடியுமா?” என்றார்.
அவர் எங்களிருவரையும் கூர்ந்து பார்த்தார். நாங்கள் ஏதாவது சொல்லுவோம் என்று நினைத்தார் போலும். நாங்கள் எப்படி பதிலளிக்க முடியும்? புனர்வாழ்வு அளிக்கும் ஆபீசர்கள் அல்லவா பதிலளிக்க வேண்டும்!
“நான் பாகிஸ்தானுக்கு வந்து இரண்டு வருடங்களாகின்றன. இரண்டு வருடங்களாக நானும் எனது மனைவியும் இரண்டு பையன்களும் மூன்று பெண்களும் இங்கு அடைந்து கிடக்கிறோம். நான் எத்தனை நாளைக்கு கைதியாக இருக்க முடியும்?
“நானும் மனிதன்தான். எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும். என்னை இந்தக் கைதிக் கூண்டிலே விட்டு விட்டுப் போங்கள்! இங்கிருந்தே போய் விடுங்கள்! போங்கள்” என்று கூறிவிட்டு அவர் எழுந்து உள்ளே போய்விட்டார். நாங்கள் இரண்டு மூன்று நிமிஷம் அங்கே உட்கார்ந்திருந்து விட்டு எழுந்து வெளியில் வந்து விட்டோம்.
வழியில் ரஷீத் ஒன்றும் பேசவில்லை. என்ன பேசுவது என்று எனக்கும் ஒன்றும் புரியவில்லை. நாங்கள் மறுபடியும் ஔரங்கசீப் ஓட்டலுக்கு வந்து உட்கார்ந்தோம். அங்கு போலீஸ் அதிகாரி சாயா குடித்துக் கொண்டிருந்தார். அவர் எங்களைப் பார்த்ததும் சாய் குடிக்கும்படி வேண்டினார். நாங்கள் அருகில் போய் உட்கார்ந்ததும் அவர் மீசையை நன்கு துடைத்துக் கொண்டு, “உங்கள் நண்பர் பதக் அலி ஒரு விசித்திரமான மனிதர் ஐயா! தன் மனைவியை அழைத்துக் கொண்டு கோல்பாக்கிற்கு நடு ராத்திரியில் வந்திருக்கிறார். இம்மாதிரி காரியத்திற்கு வீட்டில் கொஞ்சம் இடமில்லாமலா போச்சு!….”
நானும் ரஷீதும் ஒரே சமயத்தில் ஆச்சரியத்துடன் “என்ன? அது அவருடைய மனைவிதானா?” என்றோம்.
போலீஸ் அதிகாரி அதைக் கவனியாமல் “ஐயோ கடவுளே! மனிதன் மிருகத்தை விடக் கடை கெட்டவனாகப் போய்விட்டான். இவ்வளவு நீண்ட தாடிக்காரர்கள்கூட பாகிஸ்தானின் கௌரவத்தைக் கவனிக்காவிட்டால் வேறு யார் கவனிக்கப் போகிறார்கள்?.. என்ன நான் சொல்வது?” என்றார்.
ஆனால் நாங்கள் புனர்வாழ்வு அளிக்கும் இலாகா ஆபீசர்போல மெளனமாக உட்கார்ந்து கொண்டிருந்தோம்.
000
மொழிபெயர்ப்பு – ஆர்.ஷண்முகசுந்தரம்
(நன்றி – இந்தியமொழிக் கதைகள்- தொகுப்பு)
