இடைத்தங்களில் இளைந்து.
,
மழையாக வந்து
எதுவாகவோ மாற
நினைத்து
சொட்டாக நின்றது
நீர்
இலையில்.
,
இலையில்
இளைந்தபொழுது
சிலிர்த்த மரம்
ஆதி வேர்வரை
சில்லிட்டு
அசைந்தது.
,
வாகாக
வழிவிட்டு
வெட்கிய இலையில்
வழுக்கியோடிய
நீர்
பூமிக்குள் நிறைந்து
காணாமல் போனது
வழித் தடம்
தேடி.
***
நிலைக்காத கணங்கள்.
,
தெருவில்
விளையாடிய குழந்தைகளிடம்
தின்னக் கொடுத்துக் கொண்டிருந்தேன்
என் கவலைகளை.
திடீரென வந்த
மழை
என்னைத் திக்குமுக்காட வைத்துவிட்டது.
குடைகள்
பிடித்தாவது
குழந்தைகள்
விளையாடினால்
தேவலாமெனத்
தோன்றியது.
பாதகர்கள்
நிறைந்த உலகில்
சாத்தியமில்லையென
என்னையே
தின்னக் கொடுத்துவிட்டேன்
என்
கவலைகளிடம்.
***
காரண விலங்குகள்.
,
காணாமல் போன
சொற்களைப் பற்றி
கவலைகள் பட்டபொழுது
கரைந்து கொண்டிருந்தது
காலம்
நாட்களாக நகர்ந்து.
முண்டியடித்து
முந்திக் கொண்டிருக்கும்
சொற்களை
விடுவிக்காமல்
வேறு வேலைக்குச் செல்கிறேன்
வெறுப்பாக.
ஊதிவிட்டு
உறங்கும்போது
அவைகள்
கனவிற்குள்ளும்
காத்திருக்கிறது
என் கைகள் பட்டு
விமோச்சனமடைய.
***
காவியப் பொய்.
,
பாதுகாத்த ஆசைகளை
மீட்கும் பொழுது
அரும்பு மீசை
வெண்மையைத் தாண்டி
விருப்பம் கொண்டு
துளிர்க்கிறது.
எதேச்சையாக
எனக்கு முன்
உலவும்
மதுரத்தில்
அசலாக
அப்படியேத்தான்
இருக்கின்றாய்
சேலையாக்கி
சிருங்காரித்து.
சட்டை மாற்றிய
சர்ப்பமென
யாவும்
மறந்து
நெளிகிறது
தருணம்
உமிழ் நீர் சுரந்து.
பின்
சுழன்று
முன்
வந்த
காலச்சக்கரம்
கண்களில்
பிரகாசம் கூட்டுகிறது.
அறக்கோடு
தாண்டவிடாத
அசலின் நகலொன்று
திரை விலக்கி
இடை புகுந்து
இன்றைய நாளிற்குள்
நான்
யாரெனவும்
அவள்
யாரெனவும்
நமட்டுச் சிரிப்பிற்குள்
இருவரையும்
நாகரீகமாக
தள்ளி
நல்லவர்களென்ற
போர்வைக்குள்
நிதானப்படுத்தியது.
***