‘நீ என்ன முடிவுலதான் இருக்கே..?’ என்று சாமிநாதப் பெரியப்பா கேட்டபோது எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தேன்.
‘ஆம்பள தலயத் தொங்கப் போட்டுக்கிட்டு இருக்கது அழகில்லடா இவனே… இங்க பாரு… ஒனக்கும் வயசு ஏறிக்கிட்டே போவுது. ஒன்னோட அப்பனாத்தா இருந்தா இன்னேரம் ஒனக்கொரு கால்கட்டு போட்டிருப்பாக. யாருமில்லாத பயதானே அதான் பெரியப்பஞ் சித்தப்பனெல்லாம் கண்டுக்காம விட்டுட்டாங்கன்னு ஊரும் ஒறவும் பேசும் தெரிஞ்சிக்க.’
‘இல்ல பெரிப்பா… அது…’
‘என்னடா நொள்ள… பெரிய புடுங்கிமாரி பொண்ணு பாக்கணுமின்னு சொன்னப்பல்லாம் இப்ப வாணாம்… இப்ப வாணாம்ன்னு சொல்லிக்கிட்டே போனே. இப்ப என்னாச்சு…? ஒண்ணு வயசாயிருச்சுன்னு சொல்றாக… இல்லன்னா பொண்ணுக ஒன்னயப் புடிக்கலன்னு சொல்லுதுக… எங்க போனாலும் ஏதோ ஒண்ணால தடபடுது’
‘பெரிப்பா… அதுக்கு நா என்ன பண்ணட்டும்… அப்ப எனக்குக் கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு தோணல. அதுபோக நல்ல வேலயிலயும் இல்ல. அந்தச் சமயத்துல கல்யாணம் பண்ணி….’
‘சரி அப்பத் தோணல… இப்பத் தோணுதுல்ல பொண்ணு கிடக்கிதா பாத்தியா… எதுக்குப் பெரியவுக காலத்தோட அறுவட செய்யணுமின்னு சொல்லியிருக்காக’
‘இப்பவும் எனக்கு விருப்பமெல்லாம் இல்ல… இப்படியே இருந்துடலாம்ன்னுதான் தோணுது’
‘அடச்சீ… இப்புடியே இருக்காராமுல்ல… இங்கேருடா இது அந்தக்காலமில்ல அன்னக்கி ரத்த ஒறவுன்னு எதுவுமில்லன்னாக்கூட ஊரும் ஒறவும் சேந்து பாத்து தூக்கிச் செம்மிட்டு வரும். இன்னக்கி பெத்த நாத்தாநப்பனப் பாக்குறதுக்கே யோசிக்கிற காலமாயிப்போச்சு. இதுல வயசு காலத்துல முறுக்குல குடும்பம் வேண்டாம், குட்டி வேண்டான்னு இருந்துட்டு கடேசிக் காலத்துல ஒன்னப் பாக்க யாரு இருப்பா சொல்லு’
பெரியப்பா எப்பவும் உலக நடப்புக்களை வைத்துத்தான் எதையும் யோசிப்பார், பேசுவார். ஊருக்குள் பெரியப்பாவின் பேச்சுக்கு எனத் தனி மரியாதை உண்டு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இவரே மூத்தவர். இவருக்கு அடுத்து அப்பா. அவருக்குப் பின் மூணு சித்தப்பாக்கள். என்னோட சின்ன வயசுல ஒரு விபத்துல அப்பா, அம்மா ரெண்டு பேரும் போய்ச் சேர, பெரும்பாலும் எங்கப்பத்தாவோட அரவணைப்புலதான் வளர்ந்தேன்.
பெரியப்பா, சித்தப்பாக்களோட பெண் பிள்ளைகளுக்கெல்லாம் கல்யாணம் ஆகட்டுமென்பதால்தான் என் கல்யாணத்தைத் தள்ளிப் போட்டு வந்தேன். எல்லாக் குடும்பத்துக்கும் என்னாலான பண உதவியைச் செய்து இருக்கிறேன் என்றாலும் எங்க பெரியப்பா மட்டும் எப்பவுமே ‘இங்கேரு ஒனக்குன்னு ஒரு குடும்பம் வேணும். ஒனக்கு நீ சேமிச்சி வச்சிக்கப்பாரு. அக்கா, தங்கச்சிக்கு கொடுக்கிறதெல்லாம் ஒரு அளவோட வச்சிக்க’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு.
எங்கப்பத்தா இருக்கும்போது இப்பல்லாம் கல்யாணம் வேண்டான்னு சொன்னவனை வலுக்கட்டாயம பொன்னத்தியில ஒரு பொண்ணு இருக்கு. நமக்குத் தூரத்துச் சொந்தம்தான்னு சொல்லிக் கூட்டிப் போச்சு. அப்ப பெரியப்பாவும் சித்திகளும் எங்கூட வந்தாங்க.
பொண்ணப் பாத்ததும் எனக்குப் புடிச்சிப் போச்சு. அவ்வளவு கலரில்லன்னாலும் கருப்புல அவ அழகியாத்தான் இருந்தா. பேச்சு என்னப்பத்திப் போயிக்கிட்டு இருந்துச்சு. ‘அவனாரு… அவனப்பனாத்தா என்ன ஆனாங்க… இப்ப அவனுக்கு நாங்கதான் எல்லாமேங்கிறதெல்லாம் ஒனக்கு நல்லாவே தெரியுமப்பு. அதப்பத்தி மறுக்கா பேசுனாலும் ஒண்ணும் ஆவப் போறதில்ல. இப்ப இவனு கோப்ரேட்டிவுல ஆப்பீசரா இருக்கான்… அரசாங்க ஒத்தியோகந்தான். நல்லாச் சம்பாரிக்கிறான். கொணத்துல எம்மூத்த மவன்மாரி. வேற என்ன வேணுங்கிறேன்’ என்றாள் அப்பத்தா தனது தண்டட்டி ஆட.
‘ஆத்தா… எதுவுந் தெரியாமயாப் பொண்ணு பாக்க வரச் சொல்லியிருக்கோம். எல்லாந் தெரியும். பொண்ணு காலேசு ரெண்டாவது வருசம் படிச்சிக்கிட்டு இருக்கு. படிக்கிற புள்ளயில்ல அதான் மாப்ளக்கிட்ட பேசணுங்கிது.’
‘ஒரு முடிவு தெரியாம பொண்ணு மாப்ள பேசுறதா..? இது என்ன புதுப்பழக்கம்..? எதாயிருந்தாலும் சபயில சொல்லச் சொல்லுப்பேன்’ அப்பத்தா படக்கெனச் சொன்னாள்.
‘ஆத்தா… ஒங்காலமாட்டம் நெனக்காதே… இப்ப இதுலாம் சகஜமாயிருச்சு. இப்பல்லாம் ஒரு வருசத்துக்கு முன்னாலயே பேசிப் பூவு பொட்டு வக்கிறமுன்னு பாதிக் கலியாணத்த முடிச்சிட்டு, போன் நம்பர வாங்கிக் கொடுத்து போன்ல குடும்பம் நடத்த விடுறானுங்க. நீ என்னடான்னா பேசக் கூடாதுன்னு சொல்லிக்கிட்டு. டேய் போடா போயி பேசிட்டு வா’ எனப் பெரியப்பா சொல்லவும் அப்பத்தா பேசாமல் அமர்ந்திருந்தது.
‘அப்படிப் பேசுறோமுன்னு கண்டது கழியதப் பேசி கல்யாணத்தயும் நிறுத்திப்புடுதுக’ கூட்டத்தில் யாரோ சொல்ல, ‘பேச்சைக் குறைங்க’ எனக் கத்தினார் பெரியப்பா. பேரமைதியில் என்னைப் பார்த்து ‘ம்’ எனச் சைகை செய்தார்.
தனியே நாங்கள் இருவரும்…
எனக்கு உதறல் எடுக்க அவளோ ஒரு நண்பனிடம் பேசுவதைப் போல் பேசினாள். இறுதியாக உங்க வயசயும் என்னோட வயசயும் கொஞ்சம் ஒத்துப் பாருங்க. இது சரி வரும்ன்னு நினைக்கிறீங்களா…? என்றாள்.
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வாங்க போகலாம்… எனக்கு இப்பக் கல்யாணம் வேண்டாம் என்றவனை எல்லாரும் எதுவும் புரியாமல் பார்த்தார்கள்… பெரியப்பா மட்டும் புரிந்தது போல் எதுவும் சொல்லாமல் எழுந்தார்.
நடந்தது எதையும் நான் சொல்லலை என்றாலும் ‘எனக்குத் தெரியும் அந்தக் குட்டி இந்தக் கல்யாணத்தை நிறுத்தத்தான் ஒங்கிட்ட தனியாப் பேசியிருக்கா.’ என அப்பத்தா கத்திக் கொண்டே இருந்த ஒரு மதியவேளையில் நான் ஊருக்குக் கிளம்பிப் பின் பலமுறை பெண் பார்க்க வா என்ற அழைப்பு வந்த போதெல்லாம் அந்தப் பக்கம் போகவேயில்லை… அப்பத்தா சாவுக்குத்தான் போனேன். உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்க்க முடியலையேன்னுதான் அதுக்கு வருத்தம். அதே புலம்பல்தான் எப்பவும் என எல்லாரும் சொன்னபோது என்னால் கண்ணீரைத் தவிர வேறு எதையும் பதிலாய் சொல்லத் தெரியவில்லை.
‘இங்கேரு… சக்கந்தியில ஒரு பொண்ணு இருக்கு. ஒங்க சித்தப்பனுக்கிட்ட சொல்லியிருக்காங்க. போயி பாத்து, முடிச்சிட்டு வர்றே. நாங்க யாரும் வரல. பொன்னாத்தா மவன் பாண்டிதானே ஒங்கூட்டாளி… கூட்டாளின்னு சொன்னா ஒலகஞ் சிரிக்கும் போ. அவம்புள்ள பிளஸ்டூ படிக்கிது. நீ பொண்ணு பாத்துக்கிட்டுத் திரியிறே. செரி செரி… அவனக் கூட்டிக்கிட்டுப் போயிப் பாத்துட்டு ஒரு முடிவு பண்ணிட்டு வா. வர்ற தையில ஒனக்கு கலியாணத்த முடிக்கணும். அதுக்கப்புறம் வெயாள நோக்கமில்லன்னு நம்ம சொர்ணமூர்த்தி கோவிலு அய்யரு சொன்னாரு. பாத்துக்க. சும்மா பொண்ணு எங்கிட்ட அதச் சொன்னுச்சு, இதச் சொன்னுச்சுன்னு எல்லாம் சொல்லிக்கிட்டு வந்து நிக்காத. புரியிதா’ என்ற பெரியப்பாவிடம் இனி எதாவது சொன்னால் கோபத்தில் காச்மூச்சுன்னு கத்த ஆரம்பிச்சிருவாரு என்பதால் பூம்பூம் மாடாய் தலையாட்டிவிட்டு எழுந்தேன்.
நாலு மாசம் முன்னால முப்பனேந்தல்ல ஒரு பொண்ணு பாக்கப் போனப்போ, ஒரு கெழவி மாப்ளக்கி எள நர போல… இப்பத்தான் சொவத்துக்கு கலரடிக்கிறமாரி முடிக்கும் கலரு அடிக்கிறாகல்ல. அப்புடி எதாச்சும் நீயும் அடிக்கலாமுல்லப்பான்னு சொன்னப்போ கூட வந்த ஒரு சொந்தக்காரனே அது எள நரயில்ல ஆயா… கெள நரயின்னு சொல்ல, கெழவனுக்கு கட்டுற அளவுக்கு நாங்க ஒண்ணும் வக்கத்துப் போவலன்னு கத்தி, விரட்டாத குறையாய் வெளியில் போகச் சொன்னாங்க. அதை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா..?
இன்னொரு இடத்துல ‘இதுக்கு மேல கல்யாணம் பண்ணி நீங்க என்ன பண்ணப் போறீங்க. உங்க சொந்தக்காரங்களுக்காக என்னயப் பலி கொடுக்க நினைக்கிறீங்க’ என அந்தப் பெண் சொன்னதும் அப்படியெல்லாம் இல்லை என என்னை நான் நிரூபிக்க நினைத்தாலும் அவள் சொல்வதில் உண்மை இருக்கத்தானே செய்கிறது என்பதால் அங்கிருந்து பேசாமல் வந்துவிட்டேன்.
இப்ப இன்னும் நரை கூடித்தான் இருக்கிறது என்றாலும் டை அடித்து அதையும் கருப்பாக்கி வைத்திருந்தேன். மீசையில் நரை கூடி விட்டது என்பதால் தங்கைகளின் விருப்பத்தின் பேரில் மீசையையும் எடுத்துவிட்டேன்.
‘இந்த இடம் ஒனக்கு அமயும்டா’ என்ற பெரியப்பா மாடத்தில் இருந்து துணூறை எடுத்துப் பூசிவிட்டார்.
குடும்பமே எனக்காக வேண்டிக் கொண்டது.
பாண்டியின் யமாஹாவில் பயணித்தோம்.
பெரியவுங்க யாரும் வரலயா என்று கேட்ட குடும்பத்திடம் விபரம் சொல்லி, பெரியப்பாவுக்குப் போன் போட்டு பேசச் சொன்னேன். பெண்ணைக் கூட்டி வந்து காட்டினார்கள். இப்ப அழகியா…. சிவப்பா… என்னோட உசரத்துக்கு ஒத்து வருமா… குரல் இனிமையா இருக்கா… அப்படின்னு எதுவுமே பாக்குற மூடுல நானில்ல. எப்படிப் பொண்ணா இருந்தாலும் இதுதான் கடேசியா இருக்கணுங்கிறதுல முடிவா இருந்தேன்.
பாண்டி என்னிடம் கேட்டதற்கு சிரிப்பில் பதில் சொல்ல, ‘பொண்ணு பிடிச்சிருக்காம். மேக்கொண்டு பேசுறதுக்கு நீங்க வந்தாலும் செரி, இல்ல இவுக பெரியப்பாவோ சித்தப்பாவோ இங்க வரணுமின்னாலும் செரி. எதாயிருந்தாலும் கலந்து பேசிக்கங்க’ என்றான் பாண்டி பெரிய மனுச தோரணையில்.
எல்லாரும் ஒத்துக் கொள்ள, ‘பொண்ணு மாப்ளக்கிட்ட பேசணுமாம்’ என உள்ளிருந்து ஒரு பெண் குரல் கேட்டது.
‘டேய் போடா’ எனப் பாண்டி சொன்னபோது ‘இல்ல வேணாம்… வாடா போலாம்’ என்றேன்.
மீண்டும் ஒருமுறை ‘எனக்கு அப்பாமாரி இருக்கீங்க. என்னயக் கட்டிக்கிறேன்னு பொண்ணு பாக்க வரலாமா..?’ங்கிற கேள்வியை என்னால் எதிர் கொள்ள இயலாது என்பதை எப்படி அவனிடம் சொல்வேன்.
எல்லாரும் சொல்லியும் என்னோட மனசை மாத்திக்கல. இனிக் கல்யாணங்கிற பேச்சே இல்லை என எனக்குள் சபதமிட்டுக் கொண்டேன்.
எனக்கு விதிச்ச வாழ்க்கை இதுதான் என்பதாய் மனசைத் தேத்திக்கிட்டு வண்டிக்குப் போகும் போது, கைக்குழந்தையுடன் எதிரே வந்த பெண்ணைப் பார்த்து ‘ஒனக்கென்ன இப்ப அவசரம். அங்கன இருக்கறதுக்கு என்ன… நீயிருந்தா ராசியில்லன்னுதானே அங்கிட்டுப் போயி இருக்கச் சொன்னோம். அதுக்குள்ள ஏறிக்கிட்டு வர்றே… இந்தா வந்தே… பாக்க வந்த மாப்ளயும் கெளம்பிட்டாரு’ எனப் பெண்ணின் அப்பா அவளைப் பார்த்துக் கத்த, அழும் குழந்தையை அணைத்தபடி அந்தப் பெண் கண் கலங்க நின்றாள்.
பாண்டி வண்டி எடுக்க, அவன் முதுகில் தட்டி நிறுத்தச் சொன்னேன்.
பக்கத்தில் நின்ற கிழவியிடம் ‘இதாரு ஆயா’ என்றேன்.
‘அவரு மயேம் பொண்டாட்டிதான். புள்ள பொறக்க ரெண்டு மாசம் இருக்கயில சவுதியில தீ வெபத்து நடந்துச்சுல்ல… அதுல பொயிட்டான் மவராசன். இவ பொறந்த வூட்டுல அப்பனாத்தா செத்துப் போயிட்டாவ. அண்ணந்தம்பிய இவள ஒட்டி வச்சிக்க முடியாது நீங்களே வச்சிக்கங்கன்னு சொல்லிட்டாவ, பொறந்த வீடு போன்னு சொல்ல, இங்க இவபாடு தெனந்தெனம் ரோதனதான்… எல்லாத்துக்கும் திட்டுவாக. இந்தூர்ல இவ பெரியாத்தாக்காரி ஒருத்தி இருக்கா அவதான் இதுக்கு ஆறுதலு. அவ கூட்டிக் கொண்டேயி வச்சிப்பா. அங்கயும் இருக்க விடமாட்டாவ. வேலக்காரிமாரி கைப்புள்ளய வச்சிக்கிட்டு இவ படுற பாடிருக்கே… சொல்லிமாளதுய்யா… இப்ப நீ பாக்க வந்தியே பொண்ணு அத ஏழெட்டு மாப்ள பாத்தும் எதுவும் அமயல. அதுக்கு இவதாங்காரணமுன்னு சொல்லிக்கிட்டுத் திரியிறாவ… மகாலெட்சுமின்னாலும் ஆம்பளத் தொண இல்லன்னா ஊரு மூதேவின்னுதான் சொல்லும்’ என்றாள்.
அவளையும் அந்தக் குழந்தையையும் பார்த்தேன்.
மனசுக்குள் ஏதோ நினைத்தவனாய் பெரியப்பாவுக்குப் போன் செய்து ‘பொண்ணப் புடிச்சிருக்கு’ என்றேன்.
பாண்டி எதுவும் புரியாமல் என்னைப் பார்த்தான்.
++

பரிவை சே.குமார்.
இதுவரை எதிர்சேவை, வேரும் விழுதுகளும், திருவிழா, பரிவை படைப்புகள், வாத்தியார், காளையன், சாக்காடு என்கிற புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. எதிர் சேவைக்கு தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருது , கேலக்ஸி மண்ணின் எழுத்தாளர்களுக்கான பாண்டியன் பொற்கிழி விருது பெற்றிருக்கிறார்.