தேசிய நெடுஞ்சாலையில் இடது பக்கம் வலது பக்கம் நடுவில் சிமெண்டில் கட்டப்பட்டு இருக்கும் சென்டர் மீடியன் கட்டைகளுக்கு கருப்பு வெள்ளை பெயிண்டை அடித்துக் கொண்டிருந்தான் வேணு.
உச்சி வெயிலில் அவன் கட்டியிருந்த சரத்தில் உப்பு பூத்து வெள்ளை கோடுகளாக அங்க அங்கே இந்திய வரைபடத்தில் இருப்பது போல வரைந்திருந்தது. மேல் சட்டையும் வேர்வையில் ஊறி தோளோடு தோளாக ஒட்டிபோயிருந்தது. வேகமாக குனிந்து நிமிர்ந்தால் சட்டையின் முதுகுபகுதி நேராக கோடு விழுந்து கிழிந்து விடக்கூடும், நிதானத்தில் வேணு கவனமாக வேலை செய்து கொண்டிருந்தான். இந்த நிதானமும் இதுபோன்று இரண்டு சட்டைகள் கிழிந்த பின்பு தான் பெற்றிருந்தான்.
சாலையில் அவனை பொருட்படுத்தாத வாகனங்கள் இடது புறமும் வலது புறம் பறந்த வண்ணம் இருந்தது. குனிந்து பெயிண்ட் அடித்து அடித்து இடுப்பு கடுத்தது. சிறுநீர் கழிப்பது போல சென்று ஏதாவது மரநிழலில் சில நிமிடங்கள் கழித்தால் நன்றாக இருக்கும் . சிறுநீர் கழிக்க சாலையை கடந்து தூரத்தில் இருக்கும் மரத்தை நோக்கி சென்றான். சிறுநீர் வெளியேற்ற முயற்சி செய்ய சில வினாடிகள் வருவது போல் உணர்வில் காத்திருந்து சொட்டு சொட்டாக வடிய ஆரம்பித்தது. சிவம்பும் மஞ்சளும் கலந்து வெளியேறியது. புங்க மரத்தின் நிழல் கடும் வெயிலுக்கு மாற்றாக குளிர்ச்சியை அளித்தது.
வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன. நாளை மறுநாள் முதலமைச்சர் மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதால் சாலையில் இருபுறம் கட்டையை ஓட்டி உள்ள மண்களை அள்ளுவதும் சாலையில் அங்கங்கு காணப்படும் பள்ளங்களை பஞ்சர் ஒட்டி தற்காலத்திற்கு சரி செய்து கொண்டிருந்தனர்.
ஜட்டி பாக்கெட்டில் இருந்த ஹான்ஸை எடுத்து கையில் கொட்டி, கட்டை விரலை வைத்து நன்றாக கசக்கி, உருண்டையாக்கி உதட்டை திறந்து உள்ளே வைத்த ஆசுவாசபடுத்திக் கொண்டிருந்தான் வேணு. மரத்தின் நிழலும், ஹான்ஸின் மதமதப்பும் அந்த நேரத்தில் நிம்மதியை அளித்தது.
தூரத்தில் இருந்து சூப்பவைசர் கையால் சைகை காட்டி அழைப்பது தெரிந்தது. இன்றுடன் சாலைக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை முடிந்துவிடும் என்பதால் எப்பொழுது மாலை ஆகும் என்று நினைத்து கட்டைகளுக்கு மீண்டும் பெயிண்ட் அடிக்கத் துவங்கினான்.
மாலை ஆறு மணிக்கு சம்பள பணத்தை வாங்கி அவனும் அவனின் நண்பனும் பேருந்து நிலையத்துக்கு அருகில் இருந்த ஓயின் ஷாப்க்கு சென்று 135 ரூபாய் டைமண்ட் ரம் வாங்கி யாரோ குடித்து வைத்துவிட்டு போன பிளாஸ்டிக் கப் இரண்டை எடுத்து இருவருக்கும் சமளவில் பகிர்ந்தனர். இருவரின் நடவடிக்கைகளை கவனித்த மற்றொரு குடிகாரர் அவரிடம் மீதி இருந்த தண்ணீரை அவனிடம் கொடுத்தார். போலி புன்னைகையோடு வாங்கி கொண்டு தேவையான அளவு தண்ணிரை ஊற்றி ஒரே மடக்கில் குடித்தார்கள்.
பேருந்து நிலையத்தில் உள்ளிருந்த ஸ்வீட் கடையில் மனைவிக்கும் பிடித்த அசோகா 100கிராம் வாங்கி கொண்டு மூதாட்டியிடம் ஒரு முழம் முல்லை பூ வாங்கி ஊருக்கு செல்லும் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தான் வேணு. அவன் கை விரல்களில் தொங்கிய கேரி பையில் இருந்த பூவும் அசோகவும் காற்றில் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தது. சாரத்தை மடித்து கட்டியிருந்த கால்களில் கொசு கடித்து கொண்டும் காதுகளின் பக்கத்தில் ரீங்காரம் பாடிக் கொண்டு இருப்பதை பெருட்படுத்தாமல் மரத்து போன கால்களில் நின்று பேருந்து வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான்.
என்றும் இல்லாத அளவுக்கு வேணுவின் வருகைக்கு காத்திருந்த புவனா அவன் மீது அளவு கடந்த அன்பை வெளிக்காட்டியபடி ஆச்சிர்யத்தை ஏற்படுத்தினாலும், வேணு வெளிகாட்டாமல் பூவையும் அசோகவையும் கொடுத்துவிட்டு குளிக்க சென்றான். திறந்த வெளியில் குளிக்க பெயிண்ட் வாளியில் இருந்து தண்ணீரை தலையில் ஊற்றும் போது புவனா இதற்கு முன் தன்னை கரப்பான் பூச்சியைபோல அணுகுவது ஞாபகத்திற்கு வந்து போனது. இன்றுமட்டும் அப்படி என்ன ஆகிவிட்டது. என்றும் போல மண் சுவரில் கட்டிய சுதை சுவர் அதிக மழைக்கு வீடே நனையும். பாதி கரையான் அரித்த கீற்று கல்யாணத்தின் போது வாங்கிய நனைந்து போன பாய். எண்ணெய் பிசுபிசுப்பு ஏறிய தலையணை. எதனால் புவனாவிடம் இன்று மட்டும் மாற்றம் என யோசித்தபடியே குளித்து முடித்துவிட்டு வீட்டுக்குள் சென்றான்.
நெத்திலி கருவாட்டு குழம்பு வாசனை குடிசையை நிரப்பி பசியை தூண்டியது. சுடச்சுட வடித்த சோற்றை தட்டில் போட்டு நெத்திலி குழம்பை ஊற்றி பரிமாறினாள். சோற்றில் இருந்து மேலே எழும் ஆவி மூக்கிற்கு இதமாக இருந்தது. ஆசையாக சில வார்த்தைகளை தொட்டு தொட்டு பேசி அந்த இரவு அவனது இளமை காலத்தை மீட்டுகொடுத்தது. கீரியும் பாம்புமாக இருந்த புவனாக்கு இன்று ஒரு நாளில் என்னதான் நடந்துவிட்டது. பாயில் படுத்து கொண்டு நாளைய பொழுதை எதிர் கொள்ளுவதை யோசித்து அவன் அருகில் நெருங்கி படுத்திருந்தவள் வலது கையை மார்பு மீது போட்டுக் கொண்டு அவன் தலையை விரல்களால் வருடி விட்டு அவள் ஆழ்மனதில் உள்ள கோரிக்கைகளை முன் வைக்க தயார் ஆனாள்.
-யோ… வேணு
-என்ன…
-நா ஒன்னு சொல்லட்டுமா?
-என்னத சொல்ல போற,சொல்லு?
-வெளிநாட்டு வேலைக்கு போறியா?
-உங்க கொப்பன்னா வானு திறந்து வச்சியிருக்கான்
கெஞ்சும் குரலில், ’இல்ல சித்திரகுடில கட்டிகொடுத்த மாமா பொண்ணு வீட்டுகாரரு வெளிநாட்டுல வேலை செய்யுறாறம். நம்ப மாதிரி இருந்தவ இப்ப பார்க்குறேன் ஆளே அடையாளம் தெரியல. வீடு கட்டி நகையலாம் போட்டு ராணி மாதிரி இருக்கா’.
-வெளிநாட்டுக்கு வேலைக்கு போகுறது அவ்வளவு ஈசியா? பணம் கட்டி போகணும் . அவ்வளவு பணத்துக்கு எங்க போகுறது?
-இல்லயா அவள்ட்ட சும்மா பேச்சுவாக்குல கேட்டேன். டவுன்ல ஒரு ஏஜெண்ட் ஆபிஸ் இருக்காம் அங்க போய் விசாரிக்க சொன்னா. நாளைக்கு போயிட்டு பார்த்துட்டு விசாரிக்கலாம்.
-நா போயிட்ட நீ மட்டும் தனிய இருந்துப்பியா?
-எங்க அம்மா வீட்டுலயும், இங்கையும் மாறி மாறி இருந்துப்பேன். நீயும் ஒரு மூணு வருசத்துல சம்பாரிச்சிட்டு வந்த இங்கயே சுயமா ஒரு கடைய வச்சி வாழ்க்கைய ஓட்டிக்கலாம்.
-சரி. எனக்கு தூக்கம் வருது
-நாளைக்கு போயிட்டு வந்துருவோம் சரியா?
-பார்ப்போம்…
கண்களை இறுக மூடிக்கொண்டான்.
புவனா எதிர்நோக்கி இருந்த அந்த விடியல் விடிந்தது.
இருவரும் முதல் வேலையாக டவுனுக்கு சென்று, ஏஜெண்ட் ஆபீஸ் காலை பத்து மணி கடந்தும் திறக்காமல் இருந்ததால் காத்துக் கிடந்தனர். அதற்கு இடையில் புவனா காவல் காத்த அய்யனாரை ஐம்பது முறையாவது வேண்டியிருப்பாள். வேணு ஹான்ஸை மூன்று முறை போட்டு துப்பியிருந்தான். ஆபிஸ்க்கு வெளியே ஒட்டிருக்கும் விளம்பர பலகையில் இருக்கும் விமானத்தை நிமிடத்திற்கு ஒரு முறையாவது புவனா பார்த்திருப்பாள்.
புவனாவின் மனதிற்குள் வேணு வெளிநாடு போயிவிட்டது போல் கை நிறைய சம்பாதிப்பது போல கற்பனையை ஓடவிட்டுட்டு இருந்தாள். ஷட்டர் திறக்கும் சத்தத்தை கேட்டு இருவரும் திரும்பி பார்த்தனர். வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்த அந்த நபர் நெற்றியில் இருக்கும் சந்தனப்பொட்டு அவருக்கு எடுப்பாக இருந்தது. அவரின் முகம், தோற்றமும் பார்ப்பவர்களுக்கு நம்பிக்கையை அளிப்பதாக இருந்தது.
-உங்களை காக்க வைத்ததற்கு மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பத்து நிமிடம் மட்டும் பொறுத்து கொள்ளுங்கள். ஆபீஸை கூட்டிவிட்டு சாமி கும்பிட்டுவிடுகிறேன்.
அவரின் தெய்விக அடக்கமான பேச்சு நம்பிக்கை இல்லாத வேணுக்கும் நம்பிக்கை விதைத்தது.
தயங்கி தயங்கி பேசிய புவனாவின் கோரிக்கையை புரிந்து கொண்ட ஏஜெண்ட் பெயிண்டர் வேலைக்கு துபாயில் வேலைவாய்ப்பு இருப்பதாகவும், விசா டிக்கெட் தனக்கான கமிஷன் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் வரும் என்று தெளிவு படுத்தினார். பணத்தை தயார் செய்துவிட்டால் இரண்டு மாதத்தில் துபாய்க்கு அனுப்புகிறேன்.
-எதாவது குறைத்து கொள்ள முடியுமா? புவனா கேட்டாள்.
-என் கமிஷன்ல வேணும்னா கொஞ்சம் குறைச்சிக்க முடியும். வேற ஒண்ணும் பண்ண முடியாது.
-சம்பளம் எவ்வளவு சார் வரும்?
-நாப்பது ஆயிரம் ரூபாய் வரும். போகப்போக சம்பளம் அதிகப்படுத்துவாங்க. முதல்ல பாஸ்போர்ட் அப்ளை செய்து வாங்குங்க. அதுக்கு அப்பறம் பணத்த ரெடி பண்ணிட்டு சொல்லுங்க.
வேணுக்கு பணத்தை தயார் செய்ய முடியும் நம்பிக்கை துளியும் இல்லாமல் வெளியே வந்தான். எப்படியும் தயார் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் ஆபிஸில் இருந்து வெளியே வந்த புவனா மீண்டும் அய்யனாரை நினைத்தாள்.
முழு வீச்சில் இருந்த புவனா எல்லா உறவினர்களிடம் பணத்தை கடனாக கேட்டு பார்த்தாள். அவளுக்கு பதிலாக வந்தது எந்த உதவியாக இருந்தாலும் பணத்தை தவிர வேற உதவி வேண்டும் என்றால் கேளு, இந்த பதில் அவளுக்கும் தெரிந்ததுதான். இருந்தாலும் கேட்டு வைப்போம் என்று கேட்டு வைத்தாள். இந்த காலத்துல பணம் உதவின்னா மட்டும் தான் மத்தவன தேடி வராங்க. ஜாடைமடையாக சொல்லுவது அவள் காதில் விழவும் செய்தது.
வேணு கேட்டு பார்த்ததில் அந்த ஊரில் பணம் படைத்தவன் இதையே தொழிலாக கொண்டவன் வட்டிக்கு பணம் தருவதாக சொன்னான்.
வேணுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை, கடன் தருவதாக ஒப்புக் கொண்டவன் வேணுக்காக தரவில்லை. புவனாக்காக தருகிறான். அதும் ஐம்பது ஆயிரம் தருவதாக ஐந்து காசு வட்டி. சரியான நேரத்தில் வட்டியை கொடுக்கணும் அழுத்தமாக சொல்லியிருந்தான்.
புவனாவிடம் தெரிவித்தான். அவனை பற்றி அரசபுரசலாக புவனா கேள்விப்பட்டு இருந்தாலும் முதலில் பணத்தை வாங்கு, மீதி பணத்துக்கு என்ன செய்ய போகிறோம். கடைசி முடிவாக யோசித்து வைத்திருந்ததை புவனா சொன்னாள். மீதி பணதுக்கு வீட்டு பட்டாவை பேங்கில் அடகு வைத்துவிடலாம்.
முதலில் தயக்கியவன் புவனா தொடர்ந்து அழுத்தம் தந்ததில் சரி என ஒப்புக் கொண்டான்.
வேணு பாஸ்போர்ட் ஆபீஸ் சென்றிருந்த நேரத்தில் ஐம்பது ஆயிரம் பணத்தை எடுத்து வந்து வீட்டு வாசலில் வந்து நின்றான். வீட்டினுள் குளித்துவிட்டு உடைமாற்றிக் கொண்டிருந்தவள் வாசலில் அவன் நிற்பதை பார்த்து அவசர அவசரமாக புடவையை சுற்றி வெளியே வந்தாள். குளித்த தலை மூடியில் இருந்து சிந்திய நீர் பின் முதுகில் சொட்டு சொட்டாக வழிந்து ஜாக்கெட்டை நனைத்தது.
அவன் மேனியின் மீது வந்த நறுமணம் புவனாவின் மூக்குக்கு இதத்தை கொடுத்,தாலும் அவனின் பார்வை புவனாவின் மார்பகத்தை, இடையை உடல் முழுவதும் பரிசோதிப்பதை புரிந்துக் கொள்ள முடிந்தது.
சிரித்த முகத்துடன், ’பணத்தை கொடுத்துவிட்டு போகலாம்னு வந்தேன்’. பணத்தை எடுத்து கொடுக்கும் போது அவனின் ஆள்காட்டி விரல் அவளின் சுண்டு விரலை தொட்டு பார்த்தான்.
ஏதோ பேச அவன் முற்பட பணத்தை வாங்கி கொண்டவள் நன்றியை தெரிவித்துவிட்டு வீட்டினுள் வேகமாக சென்றாள்.
அவனின் கூர்மையான பார்வை அவளின் மேனியை ஆராய்ந்ததை கை விரல் தன் விரலை தொட்டதையும் சில வினாடி மனதில் காட்சிகளாக வந்து போனது. பணத்தை பார்த்து எண்ணி பார்க்கையில் மனதில் ஓடிய காட்சிகள் கரைந்தது.
அடுத்த நாள் ஏஜெண்டை பார்த்து முன்பணமாக நாற்பது ஆயிரம் கொடுத்துவிட்டு துபாய் செல்லுவதற்கான வேலைகளை ஆரமிக்கும்படி சொல்லிவிட்டு வந்தார்கள். மீதி இருந்த பத்து ஆயிரம் ரூபாயில் கடனுக்கு வட்டியாக இரண்டு மாத பணம் ஐந்து ஆயிரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு வீட்டு பட்டாவை தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சத்து இருபது ஆயிரத்துக்கு அடகு வைத்து பணம் பெற்றனர்.
வேணு வெளிநாடு செல்லயிருக்கும் சேதியை உறவுகாரர்களுக்கும் நண்பர்களிடம்சொல்லி புவனா பெருமை அடைந்தாள்.
முதல் மாத வட்டி பணத்தை ஊர் கடன்காரனிடம் கொடுத்துவிட்டு வந்தான் வேணு.
ஏஜெண்டுக்கு முழுமையான பணத்தை கொடுத்து பயணத்திற்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள். மருத்துவ பரிசோதனையும் முடிந்து பயணம் சொல்லுவதற்கான தேதி நிர்ணக்கபட்டது.
தினந்தோறும் டிக்கெட்டை பார்த்து மகிழ்ச்சி கொண்டிருந்தாள் புவனா.
வேணு பயணம் செய்யும் வரையிலும் வீட்டின் உள்கதவு பூட்டிய வண்ணமேயிருந்தது. வேணுவை வெளியே எங்கேயும் அனுப்பாமல் வீட்டுலே இருக்கும்படியும் அவனுக்கு பிடித்தமான உணவை தினந்தோறும் சமைத்து கொடுத்து ஒரு நாளுக்கான வேலையாக உணவு உண்ணுதல், கலவி கொள்ளுதலே வேலையாக மாற்றியிருந்தார்கள். தன் மனதிற்குள் முடங்கி கிடந்த வர்ணனை வார்த்தைகளை இருவரும் மாறி மாறிபேசி அன்பை வெளிபடுத்தி கவலையற்று துன்பங்கள் மறந்து இருவரும் ஒரு தொட்டிலில் பிறந்த குழந்தைகளாய் வீட்டின் பாயினில் கிடந்தனர்.
நான்கு மணி நேர பயணத்திற்கு பிறகு துபாய் அடைந்தான். துபாய் நேரப்படி மாலை நான்கு ஆகியிருந்தது. ஜனவரி மாசம் என்பதால் குளிர் காற்று அளவுக்கு அதிகமாக இருந்தது. வேணுவை அழைத்து செல்ல கம்பெனி ஆள் காத்திருந்து வரவேற்று அறிமுகப்படுத்திக் கொண்டான். சொகுசாக இருந்த காரில் ஏறி துபாயில் உள்ள தேரா பகுதிக்கு அழைத்து சென்று இருப்பிடத்தில் அறையில் இருந்த பாகிஸ்தான் பங்களதேஷ் நேப்பாள் சேர்ந்தவர்களை அறிமுக செய்தான். ’நாளை காலை ஆறு மணிக்கு அழைத்து செல்ல வண்டி வரும் அதற்குள் சாப்பிட்டு தயார் நிலையில் இருக்கவும். ஜெபல் ஜெய்ஸ் பகுதிக்கு செல்ல வேண்டும். இங்கிருந்து அங்கு செல்ல இரண்டு மணி நேரம் ஆகும்’ கேரளத்தான் சொல்லிவிட்டு போனான்.
பயண அசதியில் நல்ல உறக்கத்தில் இருந்தான். விடியகாலையில் ரூம் பரபரப்பாக காணப்பட்டது. பாகிஸ்தானை சார்ந்த அந்த நபர் தட்டி எழுப்பினார். திடுக்கிட்டு எழுந்து பணிக்கு கிளம்ப வேண்டும் என கடிகாரத்தை காட்டி செய்கை செய்தான். அரை தூக்கத்தில் எழுப்பி வெளியில் காத்திருந்த வாகனத்தில் ஏறியதும் கடும் குளிரில் மங்கலாக இருந்த சாலையில் முகப்பு ஒளி வெளிச்சத்தில் வாகனம் இயங்கியது.
மலைகள் நிறைந்த பகுதியின் உச்சத்தை அடைந்ததும் வாகனத்தின் இயக்கம் நின்றது. தூக்கத்தில் இருந்த அனைவரும் உடல் முறுவலுடன் கிழே இறங்கினார்கள். குளிரும் காற்றும் உடலை உலுக்கிய வண்ணமாயிருந்தது.
அங்கு இருந்த கேரளத்தை சார்ந்த மேல் அதிகாரி அவர்களுக்கான வேலைகளை பிரித்து கொடுத்து கொண்டிருந்தார். பெயிண்ட் அடிக்கும் வேலை என நினைத்தான். அங்கு பெய்ண்ட் அடிக்கும் சாத்திய கூறுகள் இல்லாத இடம்.
முழுவதும் மலைகளும் பள்ளதாக்குகளுமாக இருந்தது. சில மணி துளிகளிலே அவனால் என்ன வேலை என யுகிக்க முடிந்தது. சாலை போடும் பணி நடைபெறப்போகிறது. அதில் அவனுக்கும் ஏர் கம்பெரேசர் கொடுத்து மண் தரையில் அடித்து புழுதிகளை வெளியேற்ற வேண்டும். மேல் அதிகாரியிடம் வேணு போய் எனக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு அனுப்புவதாக அங்கு இருக்கும் ஏஜெண்ட் சொல்லி அனுப்பினார் .
கேரளத்து அதிகாரி சிரித்து கொண்டு காண்ட்ராக்ட் வேலையில் எல்லா விதமான வேலைகளும் இருக்கும். பில்டிங் கட்டும் போது பெயிண்ட் அடிக்கும் வேலை இருக்கும். இப்ப நமக்கு ரோடு போடும் வேலை வந்திருக்கு. போன மாசம் பெயிண்ட் அடிக்கும் வேலை இருந்தது.
வேலைகள் வேகமாக நடைபெற தொடங்கியது.
வேணுக்கான வேலைகளை ஒருவன் முன்மாதிரியாக செய்து காட்டிவிட்டு வேலையை அவன் பொறுப்பில் ஒப்படைத்தான். மண் தரையில் ஏர் கம்பரேசரை வைத்து அடிக்கையில் தரையில் இருந்து மேலே கிளம்பும் புழுதிகளும்,காற்றில் இருந்துஅடித்து கொண்டு வரப்படும் புழுதிகளும் உடல் முழுவதும் புழுதியாகி நாசியின் வழியாக நுரையிரலுக்குள் புழுதிகள் தஞ்சம் அடைய தொடங்கியது. அடையாளம் தெரியாத அளவுக்கு தூசியில் மூழ்கியிருந்தான்.
நகர முடியாத அளவுக்கு வேலை கண்காணிப்புடன் நடைபெற்றது. டீ குடிக்கும் இடைவெளியில் அருகில் இருந்த கார் கண்ணாடியில் முகத்தை பார்த்துபோது யாரும் கண்டு பிடிக்காதபடி தோற்றம் மாறியிருந்தது
டீயை வேகமாக குடித்தான் மேலும் இன்னொரு டீ குடித்தால் நல்லா இருக்கும். கேட்க அவனுக்கு தயக்கம். அவனின் ஆவலை உணர்ந்துக் கொண்ட கேரளத்து அதிகாரி மேலும் டீயை வாங்கிக் கொடுத்தான்.
வேலை இயந்திரம் போல் இயங்கியது. காலில் போட்டிருக்கும் செருப்பு உருககி போகும் அளவுக்கு மதிய வெயில் அடித்தாலும் ஹான்ஸ் இல்லாமல் வேலை செய்வது சலிப்பை ஏற்படுத்தி வேலையை செய்ய விடாமல் மண்டைக்குள் வலி கொடுத்தது.
கொதிக்கும் தார் தரையில் தெளித்து சுட சுட தாரை தரையில் பரப்பி வாகனத்தை ஓட்டி மட்டபடுத்தும் போது வீசும் அனல்காற்றின் வெக்கையில் நெஞ்சு முடியை பொசுங்கிவிடும் அளவுக்கு இருந்தது. இந்த நாளை கடந்துவிட்டால் போதும், அருகில் இருந்தவனிடம் நேரத்தை கேட்டு மீதி வேலை செய்யும் நேரத்தை கேட்டு கணக்கிட்டான்.
முதல் நாள் வேலை வெற்றிகரமாக முடித்து வாகனத்தின் ஜன்னல் ஓர சீட்டில் உட்கார்ந்து காலணிகளை கழட்டி குதிங்காலை பார்த்தால் அடிபாதம் சிவந்து கொப்பளித்து எரிச்சலை கொடுத்தது. இந்த எரிச்சலோடு நாளைக்கு வேலை செய்தால் சதை பிஞ்சி காயம் பெரிதாகிவிடும். ரூமிற்கு போய் மஞ்சளில் பத்து போட்டு நாளை காலைக்கு கால்களை சரியாக்க வேண்டும் என்று நினைத்தான்.
மாலையில் கடும் குளிருக்கு இடையில் மலையில் இருந்து வாகனம் கீழே இறங்கி சமதள சாலையில் சென்று ரூமை அடைந்தது. முகங்கள் துவண்டு போயிருந்தது. சுடுதண்ணீரில் குளித்துவிட்டு வந்து முதல் வேலையாக உறவினர்களுக்கு போன் பேசி சிரித்து மகிழ்ந்தனர். சாப்பாடு நேரம் வரும் வரைக்கும் அந்த ரூமமே சிரிப்பு சத்ததோடும், பல மொழிகளில் பேசிக் கலகலப்பாயிருந்தது.
கை வைத்தியம் செய்துவிட்டு படுத்தவனுக்கு, படுத்தவுடன் விடிந்து விட்டது போல் தூக்கம் கலையாமல் அசதியோடு விழித்தான். காலின் எரிச்சல் அதிகமாகயிருந்தது. தரையில் கால்களை கீழே ஊன முடியாதபடி வேதனையை அளித்தது. துணியை இரு கால்களிலும் சுற்றி அடுத்த நாள் வேலைக்கு தயார் ஆனான்.
நீண்ட நேரம் ஆகியும் அழைத்து செல்லும் வாகனம் வரவில்லை. காத்திருந்த சில பேர் உட்கார்ந்த வாக்கில் தூங்க செய்தனர். காரின் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த கூட்டம். காரில் இருந்து இறங்கி கேரளாத்து அதிகாரி வெளியே வந்தான். பல மொழிகள் பேச கூடிய ஆளுமையும் அவர் பேசும் தமிழ் மொழி கேட்க இனிமையாகவும் இருக்கும்.
அதிர்ச்சியான தகவல் சொல்ல ஆரமித்தான். ’நம்ப கம்பெனி ஓனர்ங்ககுள்ள பிரச்சனை. அதுனால வேலைகள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கு. பிரச்சனை முடிவுக்கு வந்து மீண்டும் நிலைமை திரும்ப கொஞ்ச காலம் எடுக்கும். அது வரைக்கும் இங்கே வேலையும் இல்ல சம்பளமும் இல்ல. இருப்பவங்களுக்கு என்னால கம்பெனில பேசி மூன்று வேலை சாப்பாடு மட்டும் தர ஏற்பாடு செய்ய முடியும். அவங்க அவங்க நாட்டுக்கு போகணும் நினைச்சா போறதுக்கு டிக்கெட் போட்டு அனுப்புறேன். போனா திரும்ப வேலை ஆரமிக்கும் போதும் கூப்பிடுகிறேன்’.
சில நேரம் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. வேலை நிரந்தரமாக இருக்காது ஊருக்கு போயி வேற வேலைக்கு தயார் செய்வதுதான் நல்லது என பலர் முடிவு எடுத்தனர். அவர்கள் நீண்ட காலமாக இந்த கம்பெனியில் வேலை செய்பவர்கள். ’திரும்ப வேலை ஆரம்பிக்க எவ்வளவு காலம் ஆகும்?’ என்று வேணு கேட்டான்.
கேரளாத்தான் உதட்டை பிதிக்கி தெரியாது என தெரிவித்தான்.
ஊருக்கு செல்ல முடிவு செய்தனர் வேணுவை தவிர.
சில நாட்கள் இங்கேயும் அம்மா வீட்டில் சில நாட்களும் இருந்து புவனா நாட்களை ஓட்டினாள். உறவுகள் ஊர்காரர்கள் முன்னே கணவர் வெளிநாட்டில் வேலை செய்வது பெருமையாக உணர்ந்தாலும். தானும் எதாவது துணி கடைக்கோ மளிகை கடைக்கோ வேலைக்கு போனால் என்ன யோசித்து முடிவு செய்து நகரத்தில் உள்ள பெரிய துணிகடையில் வேலைக்கு கேட்டு சேர்ந்தாள்.
சில நாட்களாக சமாளிக்க முடிந்த வேணுக்கு அங்கு உள்ள நிலைமையை புவனாவிடம் விவரித்தான். நீண்ட நாட்களாக வேலை இல்லை சம்பளம் இல்லாமல் உணவு மட்டும் மூன்று வேலை கிடைப்பதாக என்னோடு ரூமில் இருந்தவர்கள் ஊருக்கு போயிவிட்டர்கள். நான் மட்டுமே இருக்கிறேன். புவனாவிடம் இருந்து ஆறுதலான வார்த்தைகளுக்கு பதிலாக அழுத்தமான ம்ம்ம்… ஒலியை வெளிகாட்டி போனை வைத்தாள்.
வேலை முடிந்து இரவு பேருந்துக்காக பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தாள். எண்ண ஓட்டம் முழுவதும் தன் சம்பளத்தை கடன்காரன்களுக்கு வகுத்து பார்த்தால் கடனை கட்டவே மேலும் சில ஆயிரங்கள் தேவைப்பட்டது. பேருந்தில் ஏறியவளுக்கு வீடு வந்தது தெரியாமல் யோசனையில் அடுத்த ஸ்டாப்பில் இறங்கி நடந்து வந்தாள். மனம்,கடனை எப்படி அடைப்பது பற்றியே இருந்தது.
இயலாமை அதிகம் ஆகும் போது கோபம் ஏற்படுகிறது. கோபத்தை வேணு மீது நூறு சதவிகிதம் கொட்டி அந்த நேரத்தில் பாரத்தை குறைத்தாலும்,மாதம் மாதம் கடன்காரன்களின் தொல்லையும் அதிகமாகியது.
ஒவ்வொரு நாளும் கடன்காரர்களின் பார்வையும் வார்த்தையின் வெளிப்பாடும் புவனாவை இழிவுபடுத்தி சிறைபடுத்தியது.
இரவில் தூக்கம் இழந்து விடியலுக்கு பயந்து வீட்டின் ஒரு மூலையில் குத்துகாலிட்டு உட்கார்ந்து இருப்பாள்.
உள்ளூர் கடன்காரன் தூரத்தில் வருவது அவன் மேனியில் இருந்து வரும் நறுமணத்தை வைத்து வீட்டின் உள்ளே இருந்து அறிந்து கொள்ளுவாள். சில நாட்கள் தள்ளி வட்டியை தருவதாக கூறினாள். அதை அவன் நீண்ட நேரம் பேசுவதற்கு வாய்ப்பாக எடுத்து இடை இடையில் கர்ச்சனையாக பேசுவதாக சில ரெட்டை அர்த்த வார்த்தைகள் பேசி அவள் செய்கைகாக கிளம்ப மனமில்லாமல் காத்திருந்து ஆமை போல் நகருவான்.
ஒருவரிடம் இருந்து வாங்கப்படும் பணம் தர முடியாத பட்சத்தில் அவர்கள் மீது அதிகாரத்தை செலுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. சில நேரம் யோசித்தால் இதே பெண்களிடம் கடன் வாங்கியிருந்தால் அவர்கள் என்னலாம் செய்துயிருப்பார்கள். அவள் மானத்தையும் அவளின் அம்மாவின் மானத்தையும் ஊரு முழுக்க கூறு போட்டு விற்று வேசியாக்கி ஒழுக்கமற்ற குடும்ப வரலாறை உருவாக்கி சமுகத்தின் பார்வையை அவள் மீது செலுத்தி அருவருக்க செய்துயிருப்பார்கள். ஒரே பாலினம் என்ற இரக்கம் கூடயில்லாமல். அதற்கு ஆண்களே எவ்வளவோ மேல்.
கடன் தொல்லையால் வேணு மீது இருந்த ஈர்ப்பு குறைந்து அவன் செத்தால் கூட கவலையில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாள்.
அவனிடம் இருந்து வரும் அழைப்பை எடுக்காமல் தவிர்த்தால் ஒருவேலை போனை எடுத்தால் -என் போனை எடுக்கமாட்டேன்குற -கடையில வேலை. -போனை எடுத்து பேசுனா ஓனர் சம்பளம் தருவானா? -கடன்ன கட்ட வேணா?
போனை கட் செய்தாள்.
வீட்டு பட்டாவை அடமானம் வைத்திருந்த ஃபைனாஸ்காரன் ஒருநாள் காலையில் வீட்டு வாசலில் உட்கார்ந்து கடனை கட்டினால் தான் நகர்வேன் என்று பைக்கை நடு ஸ்டாண்ட் போட்டு உட்கார்ந்தான். ஒரு வாரத்தில் கட்டிவிட்டுவதாக கெஞ்சியும்,காலில் விழுந்து சொல்லியும் எடுபடவில்லை. பிடிவாதமாக கடனை இன்னைக்கு கட்டினால் போவேன் என்று தீர்மனமாக சொல்லிவிட்டான்.
செய்வது அறியாது புவனா உள்ளுரில் கடன்கொடுத்தவனை தேடி செல்ல அவன் வயலில் இருந்தவனிடன் நிலையை எடுத்து கூறி பணத்தை பெற்று அன்றைய தவணையை கட்டினாள்.
உறவுகாரர்கள் ஊர்காரர்கள் இவள்படும் பாடுகளை அறிந்தும் உதவி செய்யவோ பேசவோ தவிர்த்தனர். இவளை எதேச்சையாக பார்த்தாலும் பணம் எதும் கேட்டுவிட போகிறாள் என்று முன்கூட்டியே அவர்களும் பணக்கஷ்டங்கள் அதிகமாக இருப்பது போல கட்டிக் கொண்டனர்.
பசி,அவமானம்,கடன் தொல்லைகளை சமாளிக்க முடியாமல் மனம் உடைந்து ஒருநாள் இரவில் ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து எறும்பு மருந்தை கலக்கி குடித்துவிட்டு படுத்தாள். கண்கள் சொக்குவதாக உணர கண்களை மூடினாள்.
வேணுவிற்கும் வாரத்திற்கு ஒருநாள் இரண்டு நாள் வேலை மட்டுமே கிடைந்தது. கிடைக்கும் பணம் அங்க இருக்கும் செலவுக்கே சரியாகயிருந்தது. நாட்கள் இப்படியே கடந்து ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது.
ஓனரின் பிரச்சனைகள் ஒரு தீர்வுக்கும் வந்து இனி முப்பது நாட்களும் வேலை இருக்கும் என்று கேரளத்து மேல் அதிகாரி தெரிவித்தார். அந்த அதிகாரிக்கு வேணு எல்லா விதமான எடுபிடி வேலைகள் செய்து நற்பெயரை பெற்றான். அவர் அதிகமாக பெண்கள் போதை லாட்டரி விஷயங்களில் பணத்தை இழந்தார். அருகில் இருக்கும் மாசாஜ் செண்டரில் இருந்து இவரது வாட்ஸ் ஆப்க்கும் புகைபடங்கள் வரும் புகைபடத்தை பெரிதுபடுத்தி பார்த்து அதில் ஒன்றை தேர்வு செய்வார். வேணுவிடமும் புகைபடத்தை காட்டி உனக்கு எது பிடித்திருக்குதுனு பாரு டா போனை கொடுப்பார்.போட்டோவை பார்த்துவிட்டுஆர்வம் இல்லாதவன் போல் கொடுப்பான். போதையில் இருக்கும் போது ஆன்லைனில் லாட்டரி வாங்குவார். அதிக அளவில் லாட்டரியில் இழந்த பணமே அதிகம்.
காலையில் புவனா வழக்கம் போல எழுந்தாள் .இரண்டு மூன்று முறை உடலை கிள்ளிபார்த்தாள். எறும்பு மருந்து குடித்து சாகவில்லையே யோசித்தாள். வயிறு கலக்குவது போல தெரிந்து கருவைகாட்டிற்கு சென்று உபதைகளை கழித்துவிட்டு வந்தாள் அன்று தொடந்து நான்கு ஐந்து முறை போயிருந்தாள். உடல் தளர்ந்து போய் வேலைக்கு லீவு சொல்லிவிட்டு வீட்டில் படுத்து இருந்தாள்.
தலைக்கு அருகில் இருந்த போன் கத்தும் சத்தம் கேட்டு போனை காதில் வைத்து ஹாலோ…தளர்ந்த குரலில் சொன்னாள். வேணுவிடம் வந்த அழைப்பு ,இனி மூப்பது நாட்களுக்கு வேலையிருக்கும் நம்ப கஷ்டங்கள் தீரப்போகிறது என்று சொன்னதை கேட்ட புவனாவுக்கு மேலும் ஒருமுறை அடிவயிற்றை கலக்கி எழுந்து மேட்டு கருவை காட்டுக்கு போக வேண்டியதாயிற்று.
தமிழ்நாட்டை விட இங்கே வேலை கஷ்டமாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேணு பெற்றான். படிபடியாக தொடர்ந்து வேலைகள் தினந்தோறும் கிடைத்தது. சம்பள நாளில் மொத்தமாக பணத்தை பார்த்த குஷியில் ஒரு நாள் மட்டும் கேரளத்தனாக தன்னை பாவித்து மாசாஜ் சென்டர்க்கு சென்று விருப்பப்பட்ட பெண்களோடு இருந்து முழு போதையில் ரூமிற்கு வந்து நாற்காலியில் உட்கார்ந்தான். இன்றைய ஒருநாள் வாழ்க்கையில் இருந்த சுகம் பிடித்தது. பொறுப்புகள் இல்லாமல் யாருக்கும் பதில் சொல்லாமல் கேரளத்தான் எவ்வளவு பெரிய ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்கிறான்.
அப்படியே சரிந்து விழுந்து தூங்கியவன் அரை போதை தெளிந்த விடியகாலையில் எழுந்து எல்லா பணத்தை செலவு செய்துவிட்டோமே என்று கதிகலங்கி புவனா பற்றிய கவலைகள் உள்ளுக்குள் காய்ச்சலாய் கொழுத்தியது. ஒருநாள் ஆசைக்கு புவனாவை கஷ்டத்தில் மூழ்க அடித்துவிட்டோமே என்று தன்னை தானே வெறுத்துக் கொண்டான்.
சம்பளத்தை கேட்ட புவனாவிடம் இன்னம் போடல. கொஞ்சம் லேட் ஆகும் என்றான்.
உள்ளூர் கடன்காரன் புவனாவிடம் தினந்தோறும் தொந்தரவு செய்வது, புவனாக்கு அவன் கடனை கேட்டு தொந்தரவு செய்வதை விட அவன் அவள் மேனியை அங்குலம் அங்குலமாக பார்க்கும் பார்வை சேலைக்குள் ஊரும் அட்டை பூச்சியை போல் அருவருப்பாக உணர்ந்தாள். பேச்சுவாக்கில் கையை தொடுவதும் அவளுக்கும் இதில் இருந்து ஒவ்வொரு நாளும் சமாளித்து தப்பிப்பது பெரும்பாடாய் போயிற்று.
இரவு காலை சாப்பிடாத பசியில் கண்கள் பங்குவது போல கால்கள் வெட வெட என நடுங்க துணிகடையில் வாடிகையாளகளுக்கு சேலைகளை எடுத்து காண்பித்தாள். சற்று நேரம் உட்கார்ந்தால் தேவலை போல் இருந்தது. இந்த வாடிக்கையாளரை முடித்துவிட்டு பாத்ரூம் போவதாக சொல்லிவிட்டு அங்க சிறிது நேரம் உட்கார முடிவு செய்திருந்தாள். அவளின் நிலைமையை அறியாத வாடிக்கையாளர்கள் அடுக்குகளில் இருந்த சேலைகளை ஒவ்வொன்றாக எடுக்க சொல்லி நிதானமாக பார்த்தார்கள். ஒரு சேலையை எடுத்தார்கள். சேலையை பில் போட அனுப்பி சேலைகளை அடுக்கி வைத்துவிட்டு தளர்ந்த உடலுடன் பாத்ரூம்மை நோக்கி சென்று அங்கு இருந்த படிகட்டின் சுவரில் சாய்ந்தவாரு உட்கார்ந்தாள்.
காலையில் வரும் டீக்கும் பதினைந்து நிமிடங்கள் இருந்தது. சற்று நேரம் கண்ணை மூடி சாய்ந்து இருப்பது உடலுக்கு சமாதானத்தை அளித்தது.
அவள் மார்பில் வைத்திருந்த கைப்பேசி சைலன்டில் அதிர்ந்து கொண்டிருந்தது. அந்த அதிர்வு மார்புக்கு சுகத்தை கொடுத்தது.
மூன்று முறை முழுமையாக அடிக்கவிட்டு நான்காவது முறை அடிக்கும் போது மார்புக்குள் கையைவிட்டு போனை எடுத்தாள். அதிகமுறை போனை எடுக்காமல் இருந்தவள், கடன்காரனின் போன்களாக இருக்கும் என்று. அரை மயக்கநிலையில் ஆன் செய்து காதில் வைத்தாள்.
காதே கிழிந்து விடும் சத்ததில் வேணுவின் குரல். -இரண்டு கோடியே மூப்பத்தி ஐந்து இலட்சம் லாட்டரியில் பரிசாக விழுந்து இருக்கு.
-இன்னோரு வாட்டி சொல்லு என்று நிதானமாக அவள் கேட்க அவனும் பொறுமையாக லாட்டரியில பரிசு விழுந்திருக்கு .
கேட்டவுடன் அவளுக்கும் பசி மயக்கம் எங்கே போனது என்று தெரியவில்லை.
-எப்ப வாங்குன.
இவ்வளோ நாளாக சம்பளம் வரவில்லை என சமாளித்தவன் உண்மையே சொன்னான். ஒருநாள் வாங்கிய சம்பளத்தை குடித்து செலவு செய்தேன் அன்னக்கி இரவு போதையில ரூம்க்கு வந்து நற்காலியில உட்கார்ந்து கேரளத்துகாரன் எப்பவும் லாட்டரி வாங்குவான். அவன் எப்படி வாங்குவானு பார்த்திருக்கேன். அதே மாதிரி போதையில போன் மூலமா லாட்டரி வாங்கியிருக்கேன். அன்னைக்கு எனக்கே தெரியல பரிசு விழுந்திருக்குனு மெசேஜ் வந்த போதுதான் தெரிந்தது.
-யோ… இனி நம்பளும் கோடீஸ்வரனா,எப்ப பணம் தருவாங்க?
-முப்பது நாளுக்குள்ள தருவாங்க.
யாரோ வருவது போல் தெரிந்து ’வீட்டுக்கு போயிட்டு பேசுறேன்’.
டீ ரெடியாக இருந்தது. இவள் மட்டும் தனியாக சிரித்தாள். வேற லோகத்தில் இருப்பதாக உடல்மொழியை காட்டினால் உடன் வேலை பார்பவர்களுக்கும் வித்தியாசம் தெரிந்தது.
இன்றுடன் இந்த வேலைக்கு முடக்கு போட்டுவிட முடிவு செய்தாள்.வேலை மீது ஏரிச்சல் ஏற்பட்டது. இதலாம் ஒரு வேலையா காலைல இருந்து இரவு வரைக்கும் நின்னுகிட்டு இருக்கனு. மனதுக்குள் ஆதங்கப்பட்டு இனி இந்த சல்லி மக்களிடன் சவகாசம் வைக்கவே கூடாது.
அன்று முழுவதும் வேலையில் கவனம் செலுத்தாமல் கர்வத்தில் இருந்தாள். கூட வேலை செய்பவர்களும் இவளுக்கு ஏதோ பேய் எதும் பிடித்துவிட்டதா என்ற சந்தேகத்தில் புவனாவை அணுகினார்கள்.
அவளிடம் இருந்து ஒரு வார்த்தைகள் கூட வெளிவரவில்லை
பரிசு விழுந்த விஷயம் துபாய் நாளிதழில் செய்தியாக வந்தது
புகைப்படத்துடன் தகவலும் இடம் பெற்றிருந்தது.
செய்தியை பார்த்த கேரளத்தான் ஓடி வந்து வேணுவிடம் விசாரித்தான்.
வேணு இவனுக்கு தகவல் தெரிய கூடாது என்று எச்சரிகையாக இருந்தான். அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.
செய்தி நாளிதழில் தகவல் வந்திருப்பது பரிசு விழுந்ததாக பட்டும்படாமல் தலையை ஆட்டி வைத்தான். அவன் வாயில் இருந்து வரும் பதிலை ஏற்று கொள்ள முடியாத கேரளாத்தான் இவனுக்கு போயி இவ்வளவு பணம் விழுந்துயிருக்கே எரிச்சலுடன் பரிசு வந்ததும் எனக்கு பத்து லட்சம் கொடு என்று அதிகாரமாக கட்டளையிட்டான்.
சமையலுக்கு காய்கறி வெட்டிட்டு இருந்த வேணு கோபத்துடன் ’அதல்லாம் ஒரு பைசா கூட தரமுடியாது’.
முதல் முறையாக எதிர்த்து பேசுவதை பார்த்த கேரளாத்தானுக்கு தலைக்கு மேல் கொம்பு வளர்ந்தது மாதிரி தோன்றி வேணுவை அடித்து கீழே தள்ளினார்.
பதிலுக்கு வேணுவும் அடித்து மல்லுகட்டிக் இருவரும் புரண்டனர். தெருவில் இரு வெறிபிடித்த நாய்கள் குலைத்து சண்டையிடுவதை போல அவன் மீது ஏறி நெஞ்சில் உட்கார்ந்த வேணு முகத்தை பார்த்து நான்கு குத்து விட்டான்.
அதில் ஒரு குத்து தரையில் விழுந்து விரலுக்கு அதிக வலியை கொடுத்தது. சண்டையில் இருவரின் சட்டை கிழிந்து எழுந்து மாறி மாறி முறைத்து கொண்டு பணத்தை எப்படி எடுத்துட்டு போகுறனு பார்க்குறேன்டா என்றான் கேரளத்தான்.
அந்த நாளைக்கு பின் புவனா வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டாள். சில நாட்களில் ஊருக்குள் எப்படியோ தகவல் தெரிந்தது. அம்மா குடும்பம், உறவினர்கள்,ஊரில் உள்ளவர்கள் அனைவரும் தன் மீது அதீத அக்கரை காட்டுவதும் அவளை பார்த்தால் புன்சிரிப்பு வெளிகாட்டி கடந்து சென்று நலம் விசாரிப்பவர்களாகவும் இருந்தனர் . அவர்களின் எதிர்பார்ப்புக்கு பிடி கொடுக்காமல் விலகி செல்லவே முயன்றாள்.
புவனாவை பார்க்கும் பலர் அவர்களின் பணக்கஷ்டங்களை எவ்வளவு வலி மிகுந்த கதையாக சொல்லி எவ்வளவு சோகத்தை ஏற்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு சொன்னார்கள்.
எதற்கும் மசியாமல் தனக்கு கீழ் இருக்கும் அடிமைகளை போல் கடுமையான சொற்களை பயன்படுத்தி அவர்கள் மீண்டும் தன்னை அணுகமுடியாதபடி பார்த்துக் கொண்டாள்.
தினந்தோறும் உள்ளுக்குள் பய உணர்வோடும் இரவில் தூங்கமால் யாராவது என்னை கொலை செய்ய போகுகிறார்கள் என்ற அச்சத்தில் தூங்கமே இல்லாத ஆந்தையாக மாறியிருந்தான்.
அவனை யார்வது சாதாரணமாக பார்த்தால் அவன் அந்த இடத்தில் நகர்ந்து புதிய இடத்தை நோக்கி செல்வான். எதிரே வரும் வாகனத்தை பார்த்தால் தன் மீது மோத வருவதாக நினைத்து பயத்தின் உச்சத்திற்கே போயிவிடுவான். ரூமில் தனியாக இருக்கும் போது ஒன்றுக்கு இரண்டு முறை ரூமமை நோட்டம் விட்டு கதவை பூட்டிவிட்டு எதோ யோசனையில் இருப்பான்.
மனம் மரண பயத்தில் எதை பார்த்தாலும் அதற்கு கதை உருவாக்கி மனநோயாளியாக மாற்றி அவன் இயல்பில் இருந்து விடுபட்டு போனான்.
அவனின் நம்பிக்கை பாத்திரமாக புவனாயிருந்தாள். அவளிடம் மட்டுமே பேசினான். லாட்டரி பணத்தில் யாருக்கும் ஒரு ரூபாய் கூட கொடுக்க கூடாது நினைத்திருந்தான்.
அதை உறுதி செய்வது போல புவனாவும் ஆதரித்தால்.அப்ப அப்ப ஒரு சந்தேகம் அவளுக்குள் தோன்றுவதை கேட்டாள்.
பரிசு பணத்தை ஏமாத்திர மாட்டங்களே?
இது இங்க உள்ள அரசாங்கம் நடத்துறாங்க அப்படியலாம் பண்ண மாட்டாங்க எனக்கு பரிசு விழுந்துயிருப்பத இங்க இருக்கும் நியூஸ்ல வெளி வந்துயிருக்கு.
இந்த லாட்டரில எப்படி பரிசு விழுந்தது தெரியும்?
அப்படிலாம இல்ல ஒரு லாட்டரி வாங்கணும்னா நம்ப ஊர் காசுக்கு 1600 ரூபாய் பரிசு விழும். அன்னக்கி ஒரு கண்ணாடி குடுவைல பால் மாதிரி மாசத்திற்கு முப்பத்தி ஒரு நாள் இருக்க அதுல முப்பத்தி ஒரு நாளுக்கான முப்பத்து ஒண்ணு பால் இருக்கும் ஒன்னுல இருந்து மூப்பத்தி ஒன்று நம்பர் எழுதி.அந்த குடுவைல மெசின் மாதிரி இருக்குறதுல பால் எல்லாம் கொஞ்ச சுற்றும் அதுல இருந்து ஒரு பால் உள்ள நம்பர் மேலே தனியா தூக்கி வரும் .அது மாதிரி ஆறு தடவ சுற்றி ஆறு நாள்க்கான பாலுல உள்ள நம்பர் தெரியும். அப்பறம் மாசம் பனிரெண்டு ஒன்னுல இருந்து பனிரெண்டு நம்பர்ல இருக்குற பால்ல ஒரு நம்பர் பால் அது மாதிரி சுற்றி மேலே வரும்.
-மொத்தம் மேல வந்த ஏழு பால்ல ஏழு நம்பர் இருக்கும் யார் சரியா அந்த நம்பர தேர்ந்து எடுத்திருக்கோ அவங்களுக்கு பரிசை அறிவிப்பாங்க.
-அப்ப அதே நம்பர் ரெண்டு பேர் எடுத்துயிருந்தா?
-பரிசு பணத்த ரெண்டு பேருக்கு பிரிச்சி கொடுப்பாக.
பரிசுக்கான நிகழ்ச்சியில் கலந்துகிட்ட வேணுக்கு பணத்தை அவனது துபாயில் இருக்கும் பாங்க் அக்கவுண்டுக்கு வரவு வைக்கப்பட்டது. துபாய் அக்கவுண்டில் இருந்து இந்தியா பேங்க் அக்கவுண்டுக்கு வரவு வைக்க மூப்பது சதவிதம் வரி பிடித்தது போக வரவு வைக்கப்பட்டது.
வேணுவின் கைபேசிக்கு புது புது நம்பர்களில் இருந்து அழைப்பு வந்துக் கொண்டேயிருந்தது.
பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பண உதவி செய்யும்மாறு அவங்க கஷ்டங்களை சொல்லி வழியுறுத்தினார்கள்.
நண்பகள் உறவினர்கள் தொல்லை தாங்க முடியாமல் கொஞ்ச நாட்களில் நம்பரை மாற்றிவிட்டு ஊருக்கு கிளம்பினான்.
புவனாவையும் சென்னைக்கு வரும்படி சொல்லியிருந்தான்.
இருவரும் சென்னைக்கு வந்து அங்குள்ள லெமன் ட்ரீ ஹோட்டலில் ரூம் போட்டு இரண்டு நாட்கள் தங்கி அமைதியாக தூங்கி எக்மோர் இரயில் நிலையத்திற்கு சென்று அந்த நேரத்தில் வடக்கு நோக்கி செல்லும் ரயிலுக்கு டிக்கெட் வாங்கி கண்ணுக்கு தெரியாத அறிமுகம் இல்லாத மொழி தெரியாத ஊரில் குடியேறினார்கள்.
புவனாவின் கைபேசி சிம்கார்டும் எக்மோர் இரயில் நிலையத்தில் புதிய நம்பராக மாற்றபட்டிருந்தது…
புது ஒளி
புது காற்று
புது நிலம்
புது சமூகம்
********

தமிழ் கணேஷ்
தஞ்சையில் வகிக்கிறார். தொடர்ந்து சிறுகதை எழுதுகிறார். வாசக சாலை, சொல்வனம், நடுகல் இணைய இதழில் வெளிவந்த இருக்கின்றது.