“அப்பா, நான் இந்த கோயிலுக்கு முன்னாடியே நிறைய தடவை வந்து இருக்கேன்” என்ற சுவாதியை ஆச்சரியத்துடன் பார்த்தான் கணேஷ்.

டெல்லி, பாம்பே என்று வேலையில் இருந்தவன், சமீபத்தில்தான் மாற்றலாகி, சென்னைக்கு வந்திருக்கிறான். பிறந்தது முதல் வட இந்தியாவில் தான் வாழ்க்கை. முதல் முறையாக இந்த ஊருக்கு -சென்னையிலிருந்து நான்கு மணி நேரப் பயணத்தில் இருக்கும் இந்த டவுனுக்கு –  வருகிறான். மனைவி கமலா, ஒரே பெண் சுவாதியுடன்  கூகிள் வழி சொல்ல வந்திருக்கிறான். பத்து வயதே ஆன சுவாதி, ஒரு முறை கூட இங்கு வந்திருக்கும் வாய்ப்பே இல்லை. 

அழகிய சிவன் கோவிலும் சுற்றிலும் வயல்வெளிகளும் நிறைந்த அழகிய  டவுன் அது.  இங்கே இருக்கிற சிவன் கோவில் உலகம் முழுதும் பிரசித்தம் என கூகிள் சாமி சொன்னதைக் கேட்டு வந்திருக்கிறான்.

பிறந்தது முதல் வட இந்தியாவிலேயே இருக்கும் சுவாதி, எப்படி இந்த ஊருக்கு வந்திருக்க முடியும்?

“அப்பாவே இப்பதான் முதல் தடவையா இந்த ஊருக்கு வரேன். நீ எப்படி இங்கே வந்திருக்க முடியும்? ஏதாவது கனவில் பார்த்தியா?” என்று கணேஷ் சுவாதியை கேலி செய்ய கமலாவும் புரியாமல் விழித்தாள்.

“இல்லப்பா, இந்த ஊருக்குள்ள வரும்போது அந்த மசூதியில கேட்டக் குரலை தினமும் இங்கு இருக்கிற ஒரு வீட்டிலிருந்து அதிகாலையில கேட்டிருக்கேன். மார்கழி மாசத்துல அது மாதிரியே எம் எல் வியோட திருப்பாவையும் கேட்டிருக்கேன்”

“எம் எல் வி திருப்பாவையா?” கமலாவுக்கு ஆச்சரியம். இவளுக்கு எப்படி திருப்பாவை எல்லாம் திடீர்னு தெரியும்? அதுவும் மார்கழி மாதம் என்கிறாள்?

சுவாதி ஏதோ கனவு கண்டிருக்கலாம் என நினைத்த கணேஷ் அவள் கையைப் பிடித்துக் கொண்டு கோயிலுக்குள் நுழைந்தான். அங்கிருந்த  21 படிகளைக் கடந்து நேராகச் சென்றான்.

“அப்பா, நேரா போகக் கூடாது. இடது பக்கம் வாங்கோ. அங்கே இருக்கிற சித்தி விநாயகரை வணங்கி, மூன்று தோப்புக்கரணம் போட்டுட்டு தான் உள்ள போய் சிவனைப் பார்க்கணும்”.

இடது பக்கத்தில் வெளிப்பிரகாரத்தில் சுவாதி குறிப்பிட்ட சித்தி விநாயகர் அருகம்புல் மாலையுடன் அமர்ந்திருந்தார். கன்னத்தில் போட்டுக் கொண்டு, காதை பிடித்து மூன்று முறை தோப்புக்கரணம் போட்டாள் சுவாதி. மிகவும் பரிச்சயமான இடத்தைப் பார்ப்பது போன்று, முகத்தில் ஒரு மகிழ்ச்சி.

 “சரி வா,  நேராகப் போய் வலது பக்கம் சனீஸ்வரர் சன்னதியைத் தாண்டி, உள்ளே போனா, சிவன் சன்னதி வந்துடும் –  காலைத் தூக்கி ஆடிக்கொண்டிருக்கும் அழகை தரிசிக்கலாம் வா” – ஒரு தேர்ந்த கைடு போல சுவாதி அழைத்துச் சென்றாள்.

அவள் சொன்னதுபோலவே, மூலஸ்தானத்தில் நடராஜர் சிவதாண்டவம் செய்து கொண்டிருந்தார். கணேஷுக்கு இப்போது வியப்புடன் அச்சமும் சேர்ந்து கொண்டது.

“சிவ..சிவா…  தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று கன்னத்தில் போட்டுக் கொண்ட சுவாதியை பார்த்து கணேஷும் கமலாவும்  சிறிது பயந்து தான் போனார்கள்.

“ஸ்கூல்ல இதெல்லாம் கத்துக் கொடுத்தாளா?” கமலா கேட்டாள்.

“ம்..க்கும்,  நீ வேற;  இப்ப ஸ்கூல்ல இதெல்லாம் எங்க சொல்லித் தராங்க?” என்று கேட்க நினைத்த கணேஷ் அமைதியாக இருந்தான்.  சுவாதிக்கு என்ன ஆயிற்று?

அதுபோலவே துவஜஸ்தம்பம், கால சம்ஹார மூர்த்தி, மூல நாதர் சன்னதி, தூணில் தோன்றிய முருகர் சன்னதி என எல்லா இடங்களையும் தெளிவாகச் சொல்லிக் கொண்டு வந்தாள் சுவாதி. பல வருடங்கள் இந்தக் கோயிலைச் சுற்றி வந்தவர்களுக்கே இவ்வளவு தெளிவாகவும் சரியாகவும் சொல்ல முடியும். இவள் எப்படி..? அவர்களுக்குப் புரியவில்லை.

பிரகாரத் தூண் ஒன்றில், எண்ணை தடவி, சிவப்புப் புடவையுடன், ஒரு கால் மடித்து அமர்ந்திருக்கும் துர்க்கைக்கு அருகில் ஒரு நிமிடம் நின்ற சுவாதி, “இங்கே ஏதோ எரியற நாத்தம் வருது” என்று மூக்கைப் பிடித்துக்கொண்டாள். யாரோ ஏற்றி வைத்திருந்த ஊதுவத்தி வாசனையைத் தவிர வேறு ஒரு வாசனையும் இல்லை – கண்களில் மிரட்சியுடன், வேகமாக நடந்தாள் சுவாதி. கணேஷும், கமலாவும், ஓட்டமும் நடையுமாக அவள் பின்னால் சென்றனர்.

வெளிப்பிரகாரத்தில் நிற்கும் சில கல் தூண்களைத் தாண்டி, அங்கிருக்கும் கோவில் தீர்த்தம் செல்ல வேண்டுமென்றாள் சுவாதி!  20 – 25 படிகள் கீழே இறங்கினால் நான்கு புறமும் தாழ்வாரம் போல இருந்தது அதிலிருந்து ஏழெட்டு படிகள் கீழே  இளம் பச்சை நிறத்தில் குளத்தீர்த்தம்! மிகவும் இயல்பாகப் படிகளில் இறங்கி தண்ணீரில் கால்களை நினைத்து கைகளால் தீர்த்தம் எடுத்து தலையில் தெளித்துக் கொண்டாள்.

 இதை கவனித்து வந்த கணேஷுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“சுவாதி இதெல்லாம் புத்தகம் எதிலேயாவது படிச்சியா? எப்படி தெரியும் உனக்கு? யாராவது சொல்லிக் கொடுத்தாங்களா? என்று வியப்பும் பயமும் கலந்த குரலில் கணேஷ் கேட்க சுவாதி, ”நான் இங்கு அடிக்கடி வந்து இருக்கேன் பா… சில விசேஷங்களுக்கு இங்கே வந்து குளிச்சிட்டு ஈரப் புடவையோட கோயிலுக்குப் போய் இருக்கேன்” என்றாள் சுவாதி.

“புடவையா?” –  கமலா அதிர்ந்தாள்.

சுவாதிக்கு என்ன ஆயிற்று என்று இருவரும் கவலைப்பட ஆரம்பித்தார்கள் கணேஷும் கமலாவும் விரைவாகக் கோவில் தரிசனத்தை முடித்துக் கொண்டு, சன்னதித் தெருவுக்கு வந்தார்கள்.

சுவாதி, ”இங்கே சன்னதித் தெருவில்  ஒரு சின்ன ஹோட்டல் இருக்கும். அதில் பூரி மசால் ரொம்ப நல்லா இருக்கும்.  நான் வந்ததில்ல.. ஆனால் யாராவது வாங்கிட்டு வந்து தருவாங்க”  என்றாள். பூரி சப்ஜி என்றுதானே சொல்லுவாள், பூரி மசால் எங்கிருந்து வந்தது? சுவாதி காட்டிய இடத்தில் ஒரு ஜூஸ் கடையும், ஒரு வளையல் கடையும்  இருந்தன.

“அட,  ஐயங்கார் மளிகைக் கடை இந்த பக்கம் வந்துடுச்சா? எதிர்ப் பக்கத்திலேதானே  இருந்தது?” 

ஆர்வம் அதிகரிக்க, கணேஷ் அந்த மளிகைக் கடைக்குச் சென்றான். ஒல்லியாக, மேல் சட்டை இல்லாமல், நெற்றியில் ஒற்றை சிவப்பு நாமத்துடன் இருந்த  பில் போடுபவரிடம் சென்று  கேட்க., ”ஆமாம்,  எதிர் சாரியில்தான் இருந்தது ரொம்ப வருஷமா. அந்த இடத்துக்கு லீஸு முடிஞ்சி போச்சு. இந்த இடம் சல்லிசா வரவே, விலைக்கு வாங்கிட்டோம். நம்ம கஸ்டமர் எங்கே இருந்தாலும் வந்துருவாங்க” என்றார் பெருமையுடன்.

“எதிர்க்க ஒரு.. ஹோட்டல் இருந்ததே…”

“ஆமாம்,  ‘காமாட்சி கபே’ன்னு இருந்தது.  நாராயணய்யர் போனதோட, ஹோட்டலோட பேரும் போய்டுச்சு” என்றார் நாமக்காரர்.

“அவரோட மருமகன் கொஞ்ச நாள் நடத்தலையோ?”  என்று பெரிய மனுஷி போல் சுவாதி கேட்க, “ஆமாம், அவனுக்கு ஹோட்டல் நடத்தத் தெரியல.. மூடிட்டான்”

“இந்தக் குழந்தைக்கு எப்படி இந்த விஷயமெல்லாம் தெரியும்? இங்க உங்க உறவுக்காரர் யாராவது இருக்காங்களா?” என்று கேட்டார் நாமக்காரர்.

கணேஷுக்கு பதில் சொல்லத தெரியவில்லை. சிரித்தபடி கடையின் உள்ளே இருந்த சாக்கு மூட்டைகளையும் கண்ணாடி பாட்டில்களையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

“மாசாந்திரம் மளிகை சாமான் வாங்கினால் ஒரு சின்ன பொட்டலத்தில் உலர் திராட்சை ஃப்ரீயா கொடுப்பீர்களே, இப்பவும் தருகிறீர்களா?”

பில் போடுபவர் சிலிர்த்துக்கொண்டார். “ உனக்கு எப்படிம்மா இந்த விஷயம் தெரியும்? உங்க வீட்டிலயும் இங்க தான் வாங்குவாங்களா?”

‘எங்க வீடா…?’ கணேஷுக்கும் கமலாவுக்கும் ஏதோ விபரீதமாக பட்டுவிட, “இல்ல, அவ கிட்ட யாரோ சொல்லி இருப்பாங்க.. அந்த காலத்துல இப்படி தருவாங்கன்னு, அதுதான்”

“அட சமத்தே” என்று சிரித்து, உள்ளிருந்து ஒரு சின்ன பாக்கெட் திராட்சையை சுவாதியிடம் கொடுத்து, ”நல்லதை எல்லாம் பேசுற குழந்தைகள, இப்பல்லாம் பார்க்க முடியரதில்ல. ரொம்ப சந்தோஷம் சார்” என்றார் அவர், ஆதங்கத்தோடு.

 வேறெங்கும் போக மனம் இல்லாமல், மதியம் தேர் வீதியில் இருந்த கிருஷ்ணா விலாசில் சாப்பிட்டு விட்டு, சென்னை திரும்பி விட்டனர்.

வரும் வழி எங்கும் சுவாதி எதுவும் பேசவில்லை. காரிலேயே தூங்கிவிட்டாள். 

கணேஷும் கமலாவும் இது ஏதாவது வியாதியாக இருக்குமோ என்று பயந்தார்கள். கல்லூரி நாட்களில், புதிய இடங்களுக்குப் போனால் அவை முன்பே தெரிந்த இடம் மாதிரியும்,  முன்பே தெரிந்த இடங்களுக்கு போனால், அவை புதிய இடங்கள் போலவும் தெரியும் ‘டிஜாவு’ பற்றி கேள்விப்பட்டிருக்கிறான் கணேஷ்; ஒருவகை வலிப்பு நோயுடன் இப்படி வருமாம்! அது மாதிரி,  சுவாதிக்கும் ஏதாவது வலிப்பு நோயோ? இருந்தாலும் இவ்வளவு துல்லியமாக எல்லாவற்றையும் எப்படி சொல்ல முடியும்? இந்த ஊருக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்? புரியாமல் குழம்பினார்கள்.

 சென்னையில் ஒரு புகழ் பெற்ற மனோதத்துவ  நிபுணரிடம் கலந்து ஆலோசித்தனர்.

“கணேஷ்,  இது ஒன்றும் புதியதல்ல. உங்களோட பொண்ணுக்கு, பூர்வ ஜென்ம நினைவுகள் வந்திருக்கலாம். பிறப்பு இறப்பு சுழற்சியில் சிலருக்கு இது ஏற்படலாம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சென்ற ஜென்மத்தில் நடந்த சில கசப்பான அனுபவங்கள் இந்த பிறப்பில் ஒருவரை ஆட்டி வைக்கக்கூடும். ஏதாவது விபத்து போன்றவற்றில்,  இறந்து போயிருந்தால் இந்த நினைவுகள் அடுத்த பிறப்பில் தொடரக் கூடும். தண்ணீரில் விழுந்து அகால மரணம் அடைந்தவர், மறுபிறவியில் தண்ணீரைக் கண்டாலே பயப்படுபவராக இருக்கலாம் இந்த மாதிரி மறுபிறவி அனுபவங்கள் அறிவியல் பூர்வமாக ஆராயப்பட்டுள்ளன. சுவாதி வளர வளர அந்த எண்ணங்கள் மறைந்து விடும் வாய்ப்புகள் உள்ளன. அதனால் கவலைப்படத் தேவையில்லை”  என்றார் அந்த மனோதத்துவ  நிபுணர்.

சுவாதி ஊரிலிருந்து திரும்பியதில் இருந்து மிகவும் அமைதியாகிவிட்டாள். திரும்பத் திரும்ப கணேஷிடம், அந்த ஊரில் அவள் வாழ்ந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். சுவாதியின் மனக்குழப்பமும் கவலை தோய்ந்த முகமும் கமலாவைப் பெரிதும் வருத்தின.

‘ஒருவேளை, அப்படிப்பட்ட வீடு ஏதும் அந்த ஊரில் இல்லை என்றால், சுவாதி பழைய நிலைக்கு திரும்பக்கூடும்’ என்று நினைத்து மீண்டும் ஒரு விடுமுறை நாளில் அந்த ஊருக்குச் சென்றனர்.

“வாசலில் காவியும் வெள்ளையும் அடித்திருந்தது. நீல நிறச் சட்டம் போட்ட வீடு. திண்ணைகள், தாழ்வாரம், ஆளோடி எல்லாம் உள்ள  ஒரு அந்தக்கால வீடு. வீட்டின் பின்னால் இருந்து பார்த்தால் கோவில் கோபுரம் தெரியும். எதிர் வீட்டுத் திண்ணையின் தூணில் ஒரு சிவப்பு தபால் பெட்டி கம்பியால் கட்டப்பட்டிருக்கும். தெருவில் இரண்டு வீடு தள்ளி அடிபம்பு ஒன்று இருக்கும். எதிர் வீட்டில் குடுமி வைத்த  ஒரு கறுப்பு மாமா தினமும் பட்சணங்கள் செய்து வண்டியில் கொண்டு செல்வார் விற்பனைக்கு. அவர் வண்டி சந்திவேளையில் கோவிலின் கிழக்கு வாசல் பக்கம் நிற்கும்” என்பது வரையில் சுவாதி கூறினாள். இந்த தடயங்களை வைத்துக்கொண்டு அந்த வீட்டை எப்படி கண்டுபிடிப்பது? 

ஊருக்குள் சென்றவுடன், கோவிலின் கிழக்கு வாசல் கடைகளில் விசாரித்ததில் ஒரு வயதானவர், அந்த வண்டிக்கு பெயர்

”அம்பி ஸ்டால்”  என்றும், அவர் வீடு புதுத் தெருவில் உள்ளது என்றும், அடையாளம் சொன்னார். “ஆனால், அவர் இப்போ இல்லையே”  என்றார்.

பெயர்தான் புதுத் தெரு. ஆனால் டவுனிலேயே மிகப் பழமையான தெருவாக இருந்தது அது. மண்ணும் தாரும் கலந்த, மிகச் சிறிய தெரு. இரண்டு பக்கமும் திண்ணை வைத்த வீடுகள். நடு நடுவே மாடிக் கட்டிடங்கள் –  நவீன முன்னேற்றத்தின் அடையாளங்களாக!

“ரொம்பத்தான் மாறிப் போய்விட்டது” என்றாள் சுவாதி.  சில வீடுகளை அடையாளம் சொல்லி, அங்கு இருந்தவர்களின் பெயர்களைச் சொன்னாள். “இந்த வீடு கோவில் மடைப்பள்ளி சீமாச்சு மாமாவோடது. இது கல்யாணி மாமி வீடு- மாடி வைத்த ஒரே வீடு இதுதான், இப்ப நாலைந்து வீடுகள் மாடியுடன் வந்து விட்டன!” 

அடிபம்பு இருந்த இடத்தில் சிமெண்ட் மேடை மட்டும் இருந்தது. இரண்டு வீடு தள்ளி இருந்த வீட்டை பார்த்து,” இதுதான் என் வீடு” என்றாள் சுவாதி.

“யார் வேணும் உங்களுக்கு?” 60 வயது மதிக்க தகுந்த முன் வழுக்கை மாமா ஒருவர் கேட்டபடி வெளியே வந்தார்.

 சுவாதியின் முகத்தில் மலர்ச்சியுடன் ஒரு புன்னகை. ”நான் தான் உங்க”ஜானு”  வந்திருக்கேன்”

“எந்த ஜானு?”  

“ உங்க மனைவி  ஜானு.”  மாமாவின் முகத்தில் கொஞ்சம் குழப்பம் தெரிந்தது.

“என்ன பேத்தல் இது? பத்து வயசுக் குழந்தை நீ. என் பேத்தி வயசு. என் மனைவி என்கிற?  என்ன சார் ஏதாவது மனோவியாதியா குழந்தைக்கு?” என்றார் சிறிது கோபமாக.

உள்ளே எட்டிப் பார்த்து, சுவாதி, ”இங்கே மாட்டி இருந்த கிருஷ்ணன் படம் எங்கே? எங்க அம்மா கொடுத்தது. அது முகத்தில் தானே நான் தினமும் விழிப்பேன்?”

 இப்போது கொஞ்சம் தடுமாறித்தான் போனார் அந்த வீட்டு மாமா. கிருஷ்ணர் இருந்த இடத்தில் மாலையுடன் ஒரு மாமியின் படம் மாட்டியிருந்தது.

“காலையில படிச்ச நியூஸ் பேப்பர் ஊஞ்சல்ல அப்படியே கிடக்கு… இன்னும் மடிச்சு வைக்கலையா… ஜானகி தான் போய்ட்டாளே… யார் மடிச்சு வைப்பா?” ஓடிச் சென்று பேப்பரை மடித்து ஓரமாக வைத்தாள்.

 சுவற்றில் மாட்டி இருந்த இரண்டு போட்டோக்களைப் பார்த்து ஒரு நிமிடம் நின்றாள். ”இரண்டு பேருமே போயிட்டாளா? எனக்கு அப்பா அம்மா இல்லாத குறையே தெரியாமல் என்ன பார்த்துண்டவாளாச்சே.”

கொல்லைப்புரத்திலிருந்து கொம்பு வைத்த அரை டவுசர் போட்டு ஓடி வந்த சிறுவனைப் பார்த்து, ”குமாரா இது? எவ்வளவு வளர்ந்திருக்கு? ஒரு வயசுல பார்த்தது! நான் தான் உன் ‘ஜானு’ப் பாட்டி” என்றாள் சுவாதி.

“தாத்தா இந்த பொண்ணு யாரு? என் பாட்டிங்கறாளே… பாட்டி தான் சாமிகிட்ட போயிட்டான்னு நீ சொன்னியே” என்றது குமார். ஆசையாக அணைத்துக்கொள்ள ஓடிய சுவாதியைத் தள்ளிவிட்டு, தாத்தாவின் பின்னால் ஓடிப் போய் மறைந்து கொண்டது.

“இங்க பாரம்மா, குழந்தை..”  மாமாவின் குரலில் ஒரு குழைவும் இருந்தது.

“நீ சொல்றது எல்லாம் சரியாத்தான் இருக்கு. ஆனாலும் நீ யாருன்னு தான் எனக்குப் புரியலெ”. கணேஷைப் பார்த்து அவர்,

”சார், என் பெயர் ஜானகிராமன். 10 வருஷம் முன்னாடி ஒரு தீ விபத்துல என் மனைவி ஜானகி இறந்து போயிட்டா.  இந்த குழந்தை யாரு? இதெல்லாம் இவளுக்கு எப்படித் தெரியும்?”  என்று கேட்டார்.

கணேஷ் முதன் முதலில் கோவிலுக்கு வந்ததிலிருந்து சுவாதியை பற்றி எல்லா விவரங்களையும் சொன்னான்.  “எங்களுக்கும் ஒன்றும் புரியவில்லை சார்” என்றான்.

சுவாதி, ஜானகிராமனை ஒரு நிமிடம் பார்த்தாள். ”எனக்கு விபத்து ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன் நீங்கள் ஒரு கவர் கொடுத்து உள்ளே பெட்டியில் வைக்கச் சொன்னது நினைவிருக்கிறதா? அதில் 2000 ரூபாய் பணம் இருந்தது” என்றாள்.

 ஜானகிராமனுக்குத் ‘திடுக்’கென்று இருந்தது. உண்மைதான், ஆபீஸ் பணம் ரூபாய் இரண்டாயிரத்தை,  ஜாக்கிரதையாக உள்ளே வைக்கச் சொல்லிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. ஜானகியை தவிர வேறு யாருக்கும் இது பற்றி தெரியாது.

“ஜானு..”

“தீ விபத்து எப்படி ஏற்பட்டது தெரியுமா?  கோயில் பிரகாரத்துத் தூணில் இருந்த துர்க்கைக்கு ‘ராகு கால’ விளக்கேற்றும் போது எனது புடவையில் தீப்பிடித்துக் கொண்டது. யாரோ சொன்னான் என்று என்மேல், என் நடத்தையின் மேல் அபாண்டமாகப் பழிசுமத்தி, என்னைச் சந்தேகப்பட்டீர்கள். ‘என் மனைவி அப்படிப்பட்டவ இல்லையடா”  என்று அவன் முகத்தில் அறையாமல், வீட்டுக்கு வந்து, என்னைக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு, வார்த்தைகளால் அடித்துக் கொன்றீர்கள். நினைவிருக்கிறதா?  மனது உடைந்து நடைப்பிணமாக இருந்த எனக்கு தற்கொலை செய்து கொள்ள மனமில்லை, அது கோழைகளின் முடிவு. ஆனால் துர்க்கை எனக்கு அந்த விடுதலையைக் கொடுத்ததாக நினைத்துக் கொண்டேன்.  எல்லோரும் நெருப்பினை அணைக்கவும், தண்ணீரை மேலே கொட்டவும் அருகில் வந்தபோது கூட நான் தடுத்து விட்டேன். அப்படியே உடம்பும் மனதும் எரிய, எரிய வீடு வந்து சேர்ந்தேன்” சுவாதியின் சிவந்த கண்களில் நீர் கசிந்தது.

“ஜானு, ஏதோ கோபத்தில் பேசினத நீ இவ்வளவு தூரம் மனசுல எடுத்து இருப்பேனு  நான் நினைக்கல.  சந்தேகப்பட்டது தப்பு தான்,  ஆனா நீ இல்லாம பத்து வருஷமா நான் தினமும் புழுங்கி புழுங்கி செத்துக் கொண்டிருக்கிறேன் ஜானு…”

சுவாதி  பதில் ஒன்றும் கூறவில்லை.  மெதுவாக நடந்து சென்று, பூஜை அறையில் இருந்த காமாட்சி விளக்கை ஏற்றினாள். ஜானகிராமனின் பெற்றோர் படங்களுக்கு நமஸ்காரம் செய்தாள்.

“இந்த ஜென்மத்துல நான் இவாளோட குழந்தை தான். உங்களையும் குழந்தைகளையும் பார்க்க தோன்றும் போதெல்லாம், நினைவு வரும் போதெல்லாம் நான் வந்து போவதற்கு மட்டும் எனக்கு அனுமதி கொடுங்கள், அது போதும்…உடல் மறைந்தாலும், ஜென்மங்கள் தாண்டி உயிர்த்திருக்கும் அன்பிற்கு என்றுமே அழிவில்லை… குமார் ரொம்ப அழகா இருக்கு..”

விடு விடு என்று திரும்பி, கணேஷ் கமலா கைகளைப் பிடித்துக் கொண்டு, வீட்டுக்கு வெளியே வந்தாள் சுவாதி. தெருவின் இருபுறமும் பார்த்தாள். தான் வாழ்ந்த வீட்டைப் பார்த்து ஒரு முறை பெருமூச்சு விட்டுப் புன்னகைத்தாள்.

வாசலில் நின்று கொண்டிருந்த ஜானகிராமனைப் பார்த்தபடியே காரில் ஏறினாள்.  டிரைவர் வண்டி ஓட்ட, கனவுகள் ஏதுமின்றி, அம்மா அப்பா மடியில் படுத்து உறக்கத்தில் ஆழ்ந்தாள் இந்த ஜென்மத்து சுவாதி. 

டாக்டர். ஜெ.பாஸ்கரன்

பத்திரிக்கைகளில் ஏராளமான சிறுகதைகள் எழுதியவர் கட்டுரை, சிறுகதை தொகுப்புகளையும், மருத்துவ புத்தகங்களையும்  வெளியிட்டிருக்கிறார். பல பரிசுகளையும் வென்றிருக்கிறார். தொலைக்காட்சிகளில் மருத்துவம், இலக்கியம் சமபந்தமான நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். சென்னையில் வசிக்கிறார்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *