”இவ வந்த வேள என் மவன் இப்போ,செயிலுக்கு போயிட்டான்..”
ராமாயி குடிசை வாசலுக்கு வந்து கத்தினாள்.
தன்னைக் கை காட்டி தன் மாமியார் இப்படிப்பேசியதும் ஏற்கனவே பதினைந்துநாட்களாய் கடலுக்கு மீன் பிடிக்கப்போன தன் புருஷன் இருளப்பன் திரும்பி வராத கவலையில் வாடிப்போயிருந்த முத்துமணிக்கு துக்கம் பொங்கி வந்தது. எல்லை தாண்டியதாக அவனோடு சேர்த்து ஐந்துபேரை இலங்கை கடற்கரைக்காவல்படை படகோடு இழுத்துக்கொண்டு போய்விட்டது.
மற்ற மீனவர்கள் எல்லாருமாக சேர்ந்து மனு கொடுத்துவிட்டு நம்பிக்கையோடு காத்திருக்க ராமாயி மட்டும் கூச்சல்போடுவதை நிறுத்தவில்லை.
“மூதேவி முத்துமணீக்கு நாலுவருஷமாச்சி வயிறும் தொறக்கல. வாள வந்த வாள்க்கையும் விளங்கல.”
ராமாயி வார்த்தைகளால் மட்டுமல்ல கோபம் தலைக்கேறிவிட்டால் கைகளால் முத்துமணியை அடித்தும் விடுவாள்.
கண்ணில் நீர்ததும்ப, ”அத்தே அடிக்கறாங்க மாமா” என்று நடுங்கி தன் தோளில் விழும் மனைவியை ஆசையாய் அணைத்து ஆறுதல் சொல்வான் இருளப்பன்.
“பொறுத்துக்க முத்து. என் அப்பன் என் சின்னவயசுல மாரடைப்புல செத்துப்போயிட்டாரு. அதுலேந்து என் ஆத்தா இப்படி கோபக்காரியா மாறிடிச்சி. பேரக்குளந்த பொறந்தா மாறிடுவா கவலப்படாத கண்ணு..”
“அதுக்கும் நான் கொடுத்துவக்கலியே மாமா.. பொறந்த வீட்லயும் எல்லாத்துக்கும் என்னயே திட்டுவாங்க.. குள்ளவாத்துன்னு கிண்டலு செய்வாங்க..அத்தே கூட சொல்லிச்சி நான் குட்டையா இருக்கறதுதான் குளந்தைபொறக்காத காரணமாம்:”
“அதெல்லாமில்ல முத்து. குள்ளமானவங்க பலபேரு பத்து புள்ள பெத்திருக்காங்க.. நமக்கு கடல் தான் தெய்வம் கடலம்மா கைவிடமாட்டா”
இருளப்பனின் ஆசையும் ஆதரவான சொற்களும்தான் முத்துமணிக்கு மாமியாரின் அதிகாரப்பேச்சுக்கு மருந்தாக இருக்கிறது.
.இப்போ அதுக்கும் வழியில்லாம மாமாவை பிடிச்சிபோயிட்டாங்களாமே..
முத்துமணியின் கண்ணில் கடலாய் நீர் வழிந்தது.
‘முத்து முத்து” கூவியபடி குடிசைக்குள் வீரலட்சுமி நுழைந்தாள். பக்கத்துக்குடிசை கருப்பனின் மனைவி. முத்துவைப்போல இருபத்தி நாலு வயசுக்காரி. அவளுக்கும் கல்யாணமாகி குழந்தை பாக்கியம் இல்லை என்பதால் இருவரும் தங்கள் துக்கத்தைப் பரிமாறிக்கொள்வார்கள். ஆனால் வீரலட்சுமிக்கு மாமியார் தொல்லை கிடையாது.
“வந்துட்டாளுக மலடி மாநாடு போடப்போறாங்க” என்று நொடித்தபடி குடிசைக்குள் வந்த ராமாயியை வீரலட்சுமி முறைத்தாள். ”வாடி முத்து… நாம கடலுக்குப் போவலாம். ஒவ்வொருத்தர்மாதிரி வம்பாடிக்கிட்டு நம்மால் இருக்க ஆவுமா? கடல் பாசி எடுக்கப்போவலாம். ராமேஸ்வரம் கடலில் வளரும் கடல் பாசிகளை கொள்முதல் செய்து மதுரைக்கு கொண்டு போறாங்களாம்., ஆயிரம் கிலோ கடல் பாசியை ரூ.25 ஆயிரத்திற்கு வாங்குக்கிறாங்களாம்.நல்ல டிமாண்டுடி”
“அப்படியா சொல்றே?”
“ஆமா முத்து. கடல் பாசிகளை பயன்படுத்தினா உடல் ஆரோக்கியமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்குமாம். மொதல்ல கடல் பாசிகள் பெரிய தொட்டியில் கொட்டப்படுதாம் அதுல சுத்தமாக கழுவப்படுதாம். அப்புறமா சுத்தமான பாசிகளை நீராவி கலனில் வேக வைச்சி வேகவைச்ச பாசிகளில் சாறு எடுத்து வடிகட்டறாங்க. பாசிச்சாறை ஐஸ்பொட்டில வைச்சி ஐஸ் கட்டிகளாக மாத்தி. ஐஸ் கட்டிகளிலிருந்து பாசிகளை பிரித்து எடுக்கறாங்க. ஈரம் போக்க வலைகளின் மேல் வைத்து வெயிலில் காயவைக்கிறத காட்டினாங்க. வெள்ளை ‘ஸ்பாஞ்சு ஷீட்டு’ போல மாறிய பாசிகள் மாறிப்பாக்கவே நல்லா இருந்தது. நாத்தமே வரலடி. அதைத்தான் ‘பேக்கிங்’ செஞ்சி ஏற்றுமதி செய்றாங்க”
“இவ்ளோ விஷயம் தெரிஞ்சிகிட்டியா?”
“ஆமா…நாம் கஷ்டப்பட்டு கடல்ல முளுகி எடுக்கறத என்னா செய்றாங்கன்னு கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன். இப்ப இருக்குற நெலமையில பாசிய வித்தாத்தான் நம்ம வயித்து பசிக்கு சோறு கிடைக்கும்.. நம்ம பொறந்த வீட்டுல இந்த தொழிலைப் பளக்கித்தான் நம்மை அனுப்பி இருக்காங்க, ஒவ்வொருத்தர் மாதிரி தலையவிரிச்சிட்டு கூப்பாடுபோட்டா ஆச்சா?” என்றாள் வீரலட்சுமி இடக்கான குரலில்.
அவ்வளவுதான் ராமாயிக்குக்கோபம் பொத்துக்கொண்டுவர,” வாய அடக்குடி வீரலட்சுமி.. நீச்சல் தெரிஞ்சவ இந்த ராமாயி.. க்கும்..பாசி அள்ள நானும் இந்த அறுவது வய்சிலயும் ரெடியாத்தான் இருக்குறேன்…” என்று வீறாப்பாக பேசியவள் மர அலமாரியைத்திறந்தாள். கண்ணாடி கவசத்தை எடுத்துக்கொண்டாள்.
நீச்சலுக்கு என்று கடல்பாசி அள்ளப்போகும் பெண்களுக்கு தனி உபகரணம் எதுவும் இல்லை. கட்டிய புடவையைக் கச்சம்போல வாரிச் சொருகிக்கொள்கிறார்கள். ஒரு காலில் ரப்பர் செருப்பு மற்றொரு காலில் அலுமினியத்தால் ஆன வட்ட வடிவிலான காலணி போன்ற ஒன்று. மூச்சைப் பிடித்துக்கொண்டு நீந்துவதற்கும் கடலில் கண் தெரிவதற்கும் உதவியாக முகத்தில் சதுரவடிவிலான முகமூடிக் கண்ணாடியை கவசமாக அணிந்துகொள்கிறார்கள்.
முத்துமணியிடம், ”ஏய் உன் கவசம் கயித்துக்கட்டிலுக்குக் கீள கிடக்குது… முன்னெல்லாம் வெரல்ல துணி சுத்திக்குவோம் பாறை கீறிப்பிடுமுன்னு. இப்பத்தான் கிளவுசாமே ஏதோ கடையில கொடுக்கிறாங்களாம்… அங்கபோயி வாங்கிக்குவோம்.. ஏ, வீர்ரா லட்ட்ட்ச்ச்சுமி.. அடிக்கடி இல்லேன்னாலும் அப்பப்ப நானும் கடலுக்குப்போறவ தான்.. தெரிஞ்சிக்கடி க்கும்..” என்று தன் முகவாயை தோளில் இடித்துக்கொண்டாள்.
மூவரும் கடலை நோக்கி நடந்தனர்.
“வீரு.. எனக்கு இந்த கடல் நாத்தமே வயித்தைக்கொமட்டும். வாந்தி வாந்தியா வரும்.. தண்ணிப்பாம்பு கால சுத்தும்.. பாசி எடுக்க எத்தினி ஆளம் கீளபோவணும்.பாறை இடுக்குல கெடக்கற பாசி கைல லேசுலகிடைக்காம வளுக்கும்.. கடலுக்கு கீள இன்னும் நாத்தம் தாங்காது எனக்கு.. நாங்க தண்ணீருக்குள் இருக்கறபோது சில நேரங்களில் தண்ணீ கவசத்துல அதுக்கு என்னவோ இங்லீஷ்ல சொல்வாங்களே… ஆங்… டைவிங் முகமூடி,, அதுல சிக்கிக்கும் கூர்மையா இருக்கற பாறைகளிலும் நடக்க வேண்டியிருக்கும். என்ன வேலைம்மா இதுன்னு நான் கேட்டா அம்மா திட்டும்.. ’ஆம்பிளை பையன் இல்லாதவீடு உங்கப்பாரு குடிச்சிட்டே இருக்காரு கடலுக்குப்போயி மீனு பிடிக்கறதில்ல.. நாம என்ன பாயாசம் வச்சி சாப்பிடவா போறோம்? உன் தங்கச்சிங்களுக்கும் சேத்து வயிறு நிரப்பணும். பொளப்புக்கு நாமதாண்டி போவணும்’பாங்க.. அம்மாகூட நானும் போயிடுவேன். .ஆனா என் புருசன் கல்யாணம் ஆனதுமே சொல்லிட்டாரு ’முத்துக்கண்ணு.. நான் கடலுபோயி மீனுபிடிச்சிவித்து அதுல வர்ர காசுல குடும்பம் நடத்துவோம்’னு சொன்னாரு.. தங்கமான புருசன்.. அவரு மட்டும் இப்ப நான் பிடிக்காத வேலைக்கு போவுறதப்பார்த்தா துடிச்சிப்போயிடுவாரு.”
“கவலப்படாத… எல்லாரையும் சீக்கிரம் விட்டுடுவாங்க… நானும் நம்பிக்கிட்டு இருக்குறேன்..”
எல்லோரும் கடலை நோக்கி நடந்தனர். அவர்களைபோல வேறு சில மீனவப்பெண்களும் புறப்பட்டரகள்.
இடுப்பில் அத்தனை பேரும் வளைப்பை ஒன்றைக்கட்டிக் கொள்கிறார்கள். எடுக்கும் பாசியை இந்தப் பையில்தான் நிரப்பிக் கொள்ளவேண்டும்.
பாசி எடுக்கும்போது பவளப்பாறையால் காயமடைந்துவிடாமல் இருக்க இரண்டு கைகளிலும் க்ளவுஸ் மாட்டிக் கொள்கிறார்கள்.
பாசி எடுக்கும் பெண்கள் எல்லோரும் தங்களுக்கான படகில் ஏறிக்கொண்டார்கள். மீன் பிடிக்கும் படகுகள் எல்லாம் ஏற்கனவே கடலுக்குள் இறங்கியாயிற்று.
”எல்லை தாண்டாதீங்கப்பா மவராசன்களா… பொட்டைங்க நாங்க படற கஷ்டம் ஒங்களுக்குப்புரியாதுடா பாவிகளா..”
வயதான யாரோ ஒருத்தி கரையில் நின்றபடி கெஞ்சலாய்க்கூவினாள்.
குடிசையில் பிறந்து குடிசையில் வாழ்ந்து குடிசையிலேயே வாழ்க்கையை முடிக்கும் ஜீவன்களின் பேச்சு கடலுக்குப்புதிதில்லை என்பதுபோல அதுவும் தன்பங்குக்கு அலைகளை வீசி ஆர்ப்பாட்டக்குரல் கொடுத்தது
கடல் உள்ளே போகப்போக அலைஓசை குறைந்தது.
வீரலட்சுமி தொபுக் என படகிலிருந்து கடலில் குதித்தாள் சீலையை இழுத்து செருகிக்கொண்ட முத்துமணி ‘கடலம்மா… நாலுவருசம் களிச்சி பாசி எடுக்க வந்திருக்கேன்… காப்பாத்திக்கரை சேரு. என்புருசன் மடிலதான் போனா என் உசுருபோவணும்’ என்று வேண்டிக்கொண்டாள்.
தூரத்தில் ராக்காயியும் கடலில் குதிப்பதைப்பார்த்தாள் வயசானாலும் துணிச்சல் ஜாஸ்திதான்.
கண்ணாடி கவசத்தை மாட்டிக்கொண்டு தொபுகடீர் என படகிலிருந்து முத்துமணியும் குதித்தாள்.
கீழே மூழ்க ஆரம்பித்தாள். சின்ன வயசிலிருந்தே நீந்தி மூழ்கி கடலுக்கு அடியில்போன பழக்கம் எதுவும் மறக்கவில்லை. மூச்சை தம் பிடித்து நிறுத்திக்கீழே போனாள். கண்ணாடிக்கவசம் வழியாக கடலடியில் பாறைகள் மீன்கள் பாசிச்செடிகள் தெரிந்தன. இன்னும் கீழே,,கீழே.. மூன்று பனைமர உயர ஆழம். மூச்சை தம்பிடித்து பாசிதேட ஆரம்பித்தாள். மிதந்துகொண்டேதான் எடுக்க முடியும். காலை ஊன்றிவைக்க விடாமல் பாறைகள் வழுக்கிவிட்டன. பாறைகளில் பாசி அதன் இடுக்குகளில் பாசி. பசிக்கு சோறுபோடப்போகிற பாசி.அப்படியே கொத்தாய்ப்பிடுங்கினாலும் கையைவிட்டு பறிக்கும் நீரின் வேகம்.
பாசி நாற்றம் வயிற்றைகுமட்டியது. மெல்ல இழுத்துப்பறித்தாள்.நீர் அடித்துக்கொண்டதுபோக கொஞ்சம் கிடைத்ததை எடுத்து வளைப்பையில் போட்டாள். தான் அதிகம் எடுக்கவில்லை என வீடு வந்ததும் மாமியார் அடிப்பாளோ?
பயத்துடன் மறுபடி கடலுக்குள் மூழ்கினாள் முத்துமணி. சற்று காற்றுவாங்கி மறுபடி பாசிதேடிப்பயணம் என்றாலும் குமட்டல் நிற்கவே இல்லை. வாந்தி எடுத்தால் தேவலைபோல இருந்தது. 90அடி ஆழம் போவதற்குள் கைகால்களுக்கு இருந்தவேகம் மனதுக்கு இல்லை.. புருஷன் நினைவு வேறு. நான்குநாட்களாய் சரியாய் சாப்பிடாதது எல்லாம் சேர்ந்து சோர்வடைய வைத்தது.
ஆனாலும் கைக்குக்கிடைத்த பாசியைப்பிடுங்கினாள், பச்சை வாசனை கையில் படர்ந்து மூக்கை அழுத்தியது.
உவக்.
ஐயோ குமட்டும் நாற்றம்.
மறுபடிகீழே சென்றாள். தண்ணீர்ப்பாம்புகள் காலைச்சுற்ற மீன்கள் நடனம் ஆட கிடைத்தவரை போதும் என்று நினைத்தபோது ராக்காயின் முகம் வந்து மிரட்டியது.
’உனக்கு எதுக்கும் துப்பு இல்ல’ என்பாள். பிள்ளைபெறாததுக்கும் சேர்த்து.
ஐயோ..சேலைமுந்தானையை இறுகக்கட்டிக்கொண்டு மறுபடி கடலில் தேடினாள்.
அதோ அந்தபாறை இடுக்கில் பாசி தெரிகிறது,
கையை நீட்டி பாறை இடுக்கில் விரல்களைவிட்டு பாசியை இழுத்தாள் வழுக்கிக்கொண்டு வருவேனா என்றது. வேகமாய் இழுக்க இடுக்கில் கையைவிட பாசியும் வரவில்லை அவள் கையும் வரவில்லை,,
கை..கை…
இழுத்துப்பார்த்தாள். ம்ஹூம் கை வரவே இல்லை.
ஐயோ..செத்துடுவேனா… மாமா…உன்னையப்பாக்காம செத்திடுவேனா..
அழுகைமுட்டிக்கொண்டு வந்தது. கூடவே குமட்டலும் வர..
பாசி எடுக்கும் வேலைமுடித்து எல்லாப்பெண்களும் படகில் ஏறிவிட ராக்காயி, ”எங்கடி அவளைக்காணம்?” என்று வீரலட்சுமியைப்பார்த்து சீறினாள்.
“க்கும் ஒனக்கு பயந்து செத்தாலும் பரவால்லேன்னு கடல்ல இருக்குற மொத்தப்பாசியையும் பிடுங்கிட்டுத்தான் வருவா”
”ஐயோ அவளுக்கு ஏதாவதுன்னா என் மகன் என்னையைக் கூறு போட்டுடுவாண்டி” அலறிக்கொண்டே கண்ணாடி கவசத்தை மாட்டிக்கொண்டு ராக்காயி படகிலிருந்து கடலுக்குள் குதித்தாள். அங்குமிங்கும் தேடினாள்.
பாறை இடுக்கில், மாட்டிக்கொண்ட கையோடு கிடந்தவளைப் பார்த்துவிட்டாள்.
தன் கையால் முத்துமணியின் கையினைப் பற்றிக்கொண்ட ராமாயி தன்பலம் கொண்ட மட்டும் அவள்கையை பாறையின் இடுக்கிலிருந்து லாவகமாய் இழுத்தாள்.
ஐயோ ஓ ஓ….. முத்துமணி அலறினாள்.
“வெவரம் கெட்டவளே பொறுத்துக்கடி.. கைவரணுமா வேணாமா?”
“வே..வேணும் அத்த..” அழுதபடி வீறிட்டாள்.
கை வந்தது. .”யம்மா ஆ ஆ…..” அலறி மயங்கிக்கிடந்த முத்துமணியை மேலே போட்டுக்கொண்டு நீர்ப்பரப்புக்குவந்தாள். படகில் கிடத்தினாள்.
ஆளாளுக்கு கூச்சல் போட்டார்கள்.
”என்ன ஆச்சி என்ன ஆச்சி”
’ஐயோ இவ பொளச்சதே பெருசு. அவ கையப்பாரு உலக்கைமாதிரி வீங்கிடிச்சி..’
”ராமாயி… ஒன் மருமவள எப்படிக்காப்பாத்தினேடி?”
”அதென்னவோ திடீர்னு அசுரபலம் வந்திச்சு உசுரோட கொண்டாந்திட்டேன் கடலம்மா காப்பாத்திட்டா.. ஆஸ்பித்திரிக்கு உடனே இவளை இட்டுப்போவணும்டி ”
ராமாயியின் பரபரப்பு வீரலட்சுமிக்கே அதிசியமாய் இருந்தது.
ஆட்டோவில் முத்துமணியை ஏற்றி தன் மடியில் தலைசாய்த்து படுக்க வைத்தாள் ராமாயி. கால்பக்கம் வீரலட்சுமி உட்கார்ந்துகொண்டாள்.
ஆஸ்பித்திரிக்குப் போகும்போதே வழியில் இலங்கைக்கடற்படையினர்
இந்திய மீனவர்களை விடுவித்துவிட்ட செய்தி வந்துவிட்டது..
“கடலம்மா கண் தொறந்திட்டா.” என ராமாயி பெருமூச்சுவிட்டாள்.
ஆஸ்பித்திரிக்குப்போனதும் வாந்தி எடுத்த முத்துமணியை சோதித்த பெண் டாக்டர், ”கை வீக்கத்துக்கு ஊசி போட்டுட்டேன். .ஆயின்மெண்ட் தரேன்… ஆமா.. கர்ப்பமாயிருக்கற பொண்ணை கடலுக்கு எப்படிம்மா அனுப்பனீங்க… நல்லவேளை கர்ப்பம் கலையல.. இனியாவது இப்படியெல்லாம் ஆபத்தான வேலைக்கு அனுப்பாதீங்க என்ன?’ என்று அதட்ட, ராமாயி தலையசைத்து விட்டு,”முத்தூ”என்று மருமகளின் தலையை ஆசையாய் வருடிவிட்டாள்.
^^^^^^^^

ஷைலஜா.
இயற்பெயர் மைதிலிநாராயணன். ஸ்ரீரங்கத்து மண். கணவர், மற்றும் இரண்டு மகள்கள். தற்போது வசிப்பது கோவையில். இதுவரை 400 சிறுகதைகளுக்கு மேல் எழுதி இருக்கிறேன். 12 நாவல்கள் வந்துள்ளன. பாடல்கள் பல நான் எழுதுவதை இசை அமைத்து எங்கள் குடியிருப்பில் பாடுகிறார்கள்.
அப்பா ஏ.எஸ்.ராகவன் எழுத்தாளர். சித்தப்பா மகன் இந்திரா சௌந்தர்ராஜன்..
கல்கி அமுதசுரபி தினமலர் கலைமகள் இலக்கியபீடம் குவிகம் மாத இதழ் பெங்களூர் தமிழ்ச்சங்கம் இணையப்பத்திரிகைகள், அமெரிக்கதென்றல் இதழ் முதலியன நடத்திய நாவல், குறுநாவல்,சிறுகதைப்போட்டிகளில் பரிசு பெற்றிருக்கிறேன். விகடன் நடத்திய பவழவிழாப்போட்டியில் 30000 ரூ என் படக்கதை தொடருக்குப்பெற்றது வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்ச்சி. விளம்பரப்படம் குறும்படங்களுக்கு குரல்கொடுத்திருக்கிறேன். எழுத்தாளர் சுஜாதாவின் கையினால் பெங்களூர் நாடகவிழாவில் சிறந்த நடிகை விருது வாங்கினேன். திவ்யப்ரபந்த பாசுரங்களுக்கு உரை நிகழ்த்துகிறேன்.. கலகலப்பான குடும்பப்பெண்மணி.