தமிழில் சினிமாங்கிறது பொழுது போக்கு அம்சமாக மட்டுமே இருந்த காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. நாலு படத்தில் நடித்து அதில் மூனு படம் வெற்றிப் படமென்றால் அதன் நாயகனுக்கு அரசியல் ஆசை பூத்து விடும். அடுத்த படத்தில் இருந்து ‘ஏழைகளைக் காக்க வந்த சாமி’, ‘கல்வி கொடுக்க வந்த காமராசன்’, ‘வாழ்வை வளப்படுத்த வந்த ரட்சகன்’ ‘சாதியை ஒழிக்க வந்த தலைவன்’ எனத் துதிபாடும் அரசியல் வசனங்கள் படமெங்கும் சில்லறையெனச் சிதறிக் கிடக்கும். போதாக்குறைக்கு நம் பாடலாசிரியர்கள் ‘நீயே எங்களைக் காக்க வந்த கடவுள்’ என்பதாய் நாயகன் அறிமுகப் பாடலொன்றை எழுதிவிட்டு, அவருக்கு அரசியல் அடித்தளமே என் பாடலால்தான் வந்தது, இந்தப் பாடலிலே… இந்த வரியிலே நான் அதைச் சொல்லியிருக்கிறேன் என மார்தட்டிக் கொள்வார்கள்.

இந்த நாட்டை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது. என்னால் மட்டும் முடியும் எனப் பாட்ஷாவில் ஆரம்பித்துப் படத்துக்குப் படம் அரசியல் பேசி இந்தா வர்றேன் அந்தா வர்றேன் எனச் சொல்லி இறுதியில் வயசாயிப் போச்சுப்பா என ஒதுங்கிய சூப்பர் ஸ்டாரைப் பற்றியோ, திராவிட விஷயத்தை அகற்ற நானே ரட்சகன் என டார்ச் அடித்து ஒளி கொடுத்து விஷம் என்ற வாயில் வாசம் எனச் சொல்லிக் கொண்டு ஒற்றை எம்பி சீட்டுக்காக எம்பிக் குதிக்கும் சூப்பர் ஆக்டரைப் பற்றியோ, எல்லாருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்து உடல் நலம் இல்லாத நிலையில், பொண்டாட்டி கட்சியை பணம் காய்க்கும் மரமாய் பார்ப்பதை பார்த்தும் எதுவும் கேட்க முடியாமலே வாழ்ந்து மறைந்த புரட்சிக் கலைஞரைப் பற்றியோ, கட்சி ஆரம்பித்து முதல் மாநாட்டை நடத்தி முடித்திருக்கும் தளபதியைப் பற்றியோ இல்லை நானும் அரசியல்ல இருக்கேன், நான் அரசியல்ல குதிக்கப் போறேன் எனப் பேசிக் கொண்டு திரியும் புரட்சித் தளபதி உள்ளிட்ட மற்ற நடிகர்களைப் பற்றியோ, நடிப்பே வரவில்லை என்றாலும் சினிமாவிலும் அரசியலிலும் நடித்து இன்று துணையாக இருப்பவரைப் பற்றியோ இந்தக் கட்டுரை இருக்கப் போவதில்லை. ஆம் இதில் நடிக அரசியல், சாதி அரசியல் இவற்றை எல்லாம் கடந்து பொதுவான கருத்துகளைத்தான் இதில் எழுத இருக்கிறேன் என்றாலும் தமிழக அரசியல் என்பது தமிழ் சினிமாவுக்குள்தான் சுருங்கியிருக்கிறது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

துப்பாக்கிக் குண்டு மழைகளுக்கும், ரத்த ஆறுகளுக்கும் இடையில் எப்போதாவது சில அழகான பூக்கள் பூப்பதுண்டு. அப்படித்தான் சமீபத்தில் தமிழில் ‘நந்தன்’, ‘மெய்யழகன்’, ‘லப்பர் பந்து’, ‘ஜமா’, ‘ரயில்’, ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ போன்ற படங்கள் வந்தன. இதில் நந்தனும் லப்பர் பந்தும் சாதீயத்தைத்தான் பேசின என்றாலும் சற்றே அழுத்தமாக, சப்தமாக, நடைமுறையை நறுக்கெனப் பேசின. இப்படியான படங்களை வரவேற்க வேண்டும். இவற்றில் பெரும்பாலான படங்களுக்கு திரையரங்குகளில் குறைந்த காட்சிகளே கிடைத்தன என்றும் சில பெரிய படங்களின் வரவுக்காக இவற்றை திரையரங்கில் இருந்து தூக்கி விட்டார்கள் என்றும் செய்திகளில் பார்க்கக் கிடைத்தது. லப்பர் பந்து மட்டும் விதிவிலக்கு எனலாம். ரத்த ஆறு ஓடணும், வெட்டிச் சாய்க்கணும், உடம்பெல்லாம் ரத்தம் படிய நம் ஆதர்ஷ நாயகன் வசனம் பேசணும், இதுதான் நம் மக்களின் இப்போதைய விருப்பமாகிப் போனபின் வாழ்வியல் பேசும் கதைகள் எப்படி ஓடும்..? அதுவும் முந்தைய படங்களில் எல்லாம் வில்லனை வெட்டினார்கள். சமீபத்திய படங்களில் அண்ணன், தம்பி என எல்லாரையும் போட்டுத் தள்ளுவது எப்படி எனச் சொல்லிக் கொடுக்கிறார்கள். உறவுகளின் உன்னதத்தை அடியோடு அறுத்துச் சாய்க்கிறார்கள்.

நந்தன் மற்றும் லப்பர் பந்து பேசிய அளவுக்குச் சாதிப் பிரச்சினையை, சாதியை வைத்து அரசியல் செய்பவர்களை வேறு எந்தப் படமும் பேசிவிடவில்லை. எனலாம். வலியைப் பகிர்கிறோம்… எங்கள் வேதனையைப் பகிர்கிறோம் என்றெல்லாம் வாய் வார்த்தைகளை அள்ளி வீசி, அந்த மக்களின் அன்பைப் பெற்று தங்கள் பைகளை நிரப்புவோர் மத்தியில் உண்மையில் இதுதான்டா நடக்குது. இதைக் காட்ட அந்தச் சாதியில் இருந்துதான் வரவேண்டும் என்பதில்லை எனத் தைரியமாகச் சொன்ன படங்கள் இவை… பாதிக்கப்பட்டவன் எந்தச் சாதியாக இருந்தாலும் அவனின் வலியை, வேதனையைச் சொல்லும் படங்கள் முழுமையாய் இங்கே வருவதில்லை என்ற குறையைப் போக்கிய படங்களாய் இவை இரண்டும் இருந்தது சிறப்பு.

இதேபோல் ஜமா கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலையும் தான் ஆசைப்பட்ட கதாபாத்திரத்தை எப்படியும் நடித்து விட வேண்டும், தனக்கென ஒரு தனி ஜமா வேண்டும் என ஆசையோடு பயணிக்கும் நாயகனின் நிலையையும் பேசியது. மெய்யழகன் ராவெல்லாம் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் அதுவும் தண்ணி அடித்துக் கொண்டு என எண்ண வைத்தாலும் உறவின் உன்னதத்தை, அவர்கள் பேச்சின் வழியே நாம் மறந்த, மறக்க நினைக்கிற விஷயங்களைப் பேசிச் சென்றது. ரயில் முதலில் வடக்கன் என்ற பெயரில் வருவதாய் இருந்து பின்னர் பெயர் மாறிய போதும் வடக்கன் ஒருவன் எப்படி நம் ஆட்களின் வாழ்வோடு கலந்து போகிறான் என்பதை, அவனின் இறப்புக்குப் பின் நடக்கும் நிகழ்வுகளை மிகச் சிறப்பாகப் பேசியிருந்தது. போகுமிடம் வெகுதூரமில்லையோ மனிதத்தைப் பேசியது. இதுபோல் என் ஞாபகச் சுவற்றில் ஏறாத இன்னும் சில படங்கள் இருக்கலாம். சமீபத்தில் திரைக்கு வந்து என்னைக் கவர்ந்த படங்கள் இவை.

அதென்ன தமிழும் மலையாளமும் அப்படின்னு தலைப்பு வச்சிட்டு வேற எதையோ பேசிக்கிட்டு இருக்கானேன்னு நினைக்காதீங்க… இனி நாம தலைப்புக்குள்ள போவோம்.

தமிழ்ப் படங்கள் ஆரம்ப காலங்களில் தரமானதாய்த்தான் இருந்தது. ‘பா’ வரிசை இயக்குநர்கள், மகேந்திரன் எனச் சிறப்பான இயக்குநர்கள் வாழ்வியலைப் படமெடுத்தார்கள். அப்போதெல்லாம் மலையாள சினிமா ஷகிலா என்னும் சாகசக்காரியின் கரங்களில் சிக்குண்டு கிடந்தது. இந்த ஷகிலாவின் படங்களால் மலையாள சூப்பர் ஸ்டார்கள் இருவரின் படங்கள் ஓடாததும், அதற்காக அவர்கள் பிரச்சினை செய்ததும் வரலாறு. இப்போது ஷகிலா தமிழ் தொலைக்காட்சிகளில் குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்திலும் மலையாள சினிமா திரையரங்கில் வருகிறது என்றால் அது ஷகிலாவோட படம் என்பதாய்த்தான் இருந்தது. இப்போது பான் இந்தியா படங்களாக நம் தமிழிலேயே வருகின்றன. சில மலையாளப் படங்கள் அப்படியே திரையிடவும் படுகின்றன. மக்கள் பார்க்கத்தான் செய்கிறார்கள்.

சமீப காலமாய் மலையாள சினிமா வாழ்வியலை, வலியை மிக அழகாகக் காட்சிப்படுத்தி மேலே உயர்ந்து நிற்கிறது. ஆனால் நம் தமிழ்ச் சினிமாவோ, எங்க ராஜாங்கத்தில் எங்களை யாராலும் வெல்ல முடியாது என மார்தட்டி, இரண்டு நாட்களுக்கு முன்னர் நியூசிலாந்திடம் மண்ணைக் கவ்விய இந்திய அணி போல ஆகிவிட்டது. இதற்கு மாஸ் மசாலா என்னும் நாற்றமெடுக்கும் குப்பைகளும், சாதீயம் பேசுகிறேன் என அள்ளி இறைக்கப்படும் குப்பைகளும்தான் முக்கியக் காரணம். குறிப்பாக தமிழ் சினிமாவில் முன்பு நாயகிகள் மட்டுமே வேற்று மொழியில் இருந்து வந்தார்கள். நாயகர்கள் அத்தி பூத்தாற்போல் வந்ததுண்டு. இப்போது நிலமை வேறு, தமிழில் படம் எடுப்பவர்களில் பாதிக்கு மேல் வேற்று மொழி ஆட்கள். இவர்களால் சினிமா மட்டுமில்லை, தமிழுமே கெட்டு நாசமாய்த்தான் போகும்.

மலையாள சினிமா நல்லாயிருக்கு என்று சொன்னால் உடனே இங்க  எடுக்கிற படம் நல்லாயில்லையா… நாம நல்ல படம் எடுக்கலையா… நாம பாரதிராஜா மாதிரியான இயக்குநர்களை பெற்றவர்கள் தெரியுமா… எனச் சிலர் கேள்வி கேட்பதுண்டு. ஆம் பாரதிராஜா போன்ற ஜாம்பவான்கள் ஒரு காலத்தில் இருக்கத்தான் செய்தார்கள். அவர்களால் கூட இரண்டாயிரத்துக்குப் பின் ஜெயிக்க முடியலையே. மேலும் நாம் ஒரு காலத்தில் இதைவிடச் சிறப்பான படங்களை எடுத்துக் கொண்டிருந்தவர்கள்தான் ஆனால் இப்போது அத்தி பூத்தாற் போல்தான் எடுக்கிறோம். அவர்களோ இப்போது பெரும்பாலான படங்களை இப்படியான கதைகளில்தான் எடுக்கிறார்கள். சமீபத்தில் பார்த்த பல படங்களை இதற்கு உதாரணம் சொல்லலாம். ஒரு சிறிய கதை, அதை வைத்துக் கொண்டு ஒரு அழகான வாழ்க்கையை நம் கண் முன்னே நிறுத்தி விடுகிறார்கள். எல்லாமே எதார்த்தமாய் இருக்கிறது. அவ்வப்போது மோகன்லால், மம்முட்டி போன்றோர் தமிழ் படங்களைப் போல் பத்துப் பேரை ஒற்றை ஆளாய் அடித்து நொறுக்கும் படங்களைக் கொடுத்தால் அது தியேட்டரில் படுத்து விடுகிறது. புதிய நடிகர்களும் புதிய இயக்குநர்களும் அங்கே புதுப்புது கதைகளை நாடிச் செல்வதால் தரமான படங்களை அவர்களால் கொடுக்க முடிகிறது.

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் ஒரு நண்பர் மலையாளப் படங்களில் எப்போதும் குடி… குடி… குடி மட்டுமே. ஆண், பெண் என எல்லாரும் குடிக்கிறார்கள். வீட்டில் வைத்துக் குடிக்க, மீன், சிக்கன் என எல்லாம் பொறித்துக் கொடுத்துவிட்டு அந்தப் பெண்களும் கூடவே உட்கார்ந்து கொள்கிறார்கள். ஒரு படத்தில் குடும்பத்தில் ஆண், பெண் என எல்லாரும் குடிக்கிறார்கள். அந்தப் படங்களை நல்ல படங்கள் என நம் மக்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள், ஏன் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் இல்லைங்கிற ராஜாவின் பாட்டை வைத்துக் கல்லாக் கட்டிய மஞ்சுமெல் பாய்ஸ்ல என்ன வாழுது… குடிதானே என்றார்.

அவர் சொன்னது சரிதான். அங்கே குடியே பிரதானம். சரி அங்கே குடிக்கிறார்கள்… நம் தமிழகத்தில்…? என்றேன்.

இங்கே அப்படிப் படங்கள் எல்லாம் வரலைப்பா… பெண்கள் குடிப்பதாய் நாம காட்டியிருக்கிறோமா…? என்றார். படங்களில் இல்லை… பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் செய்தி பார்ப்பீர்கள்தானே… போதையில்லாத் தமிழகம், போதையை ஒழிப்போம் என்றெல்லாம் யார் பேசுகிறார்கள்ன்னு பாருங்க. இங்கே சினிமாவில்தான் பெண்கள் குடிக்கலை… நிஜத்தில்..? பல இடங்களில் பெண்கள் குடிக்க ஆரம்பித்தாச்சு. மதுரையில் பெண்களுக்கென்றே தனி கடையே திறந்திருக்காங்க. மதுப் பிரியர்ன்னு சொல்லுங்க என அமைச்சரே சொல்கிறார். தீபாவளிக்கு இத்தனை கோடிக்கு விற்கணும் என அரசு நிர்ணயிக்கிறது. அதுக்காக புதிதாக சில கடைகள் திறந்திருப்பார்கள் போலும். இது எப்படியிருக்குன்னா… அழாதேன்னு குழந்தையோட தொட்டியை ஆட்டிக்கிட்டே கிள்ளி விடுற மாதிரி இருக்கு என்றதும் நான் சினிமாவைச் சொன்னேன் என்றார்.

நான் நடப்பைச் சொன்னேன். இங்கயும் சாராயமும் வன்முறையும் சினிமாவில் கொட்டித்தான் கிடக்கு. மெய்யழகன் அருமையான படம்… இரவெல்லாம் பேசுறாங்க. நம்ம வாழ்வோட இணைத்துப் பார்த்துக்கிற மாதிரி நிறைய இடங்கள் இருக்கு. அந்தப் படத்திலும் இரவெல்லாம் குடித்தே தீர்க்கிறார்கள். ரயில் படத்தின் நாயகனும் அவன் நண்பனும் மொடாக் குடிகாரர்கள். மற்ற படங்களிலும் குடி இருக்கத்தான் செய்யுது. தமிழகத்தில் குடி என்பது எல்லாருடனும் கலந்த ஒன்று என்பதாய் காட்ட வேண்டும் என்ற முனைப்பு நம் இயக்குநர்களிடம் இருப்பதாய்த்தான் எனக்குத் தோன்றுகிறது என்றதும் இருக்கலாம்… இருந்தாலும் மலையாளப் படங்கள் அப்படியொன்றும் சுகமில்லை என்பதாய் முடித்துக் கொண்டார்.

என்னதான் சொன்னாலும் தற்போதைய நிலையில் தமிழ் சினிமாவை விட மலையாளச் சினிமா நல்ல படங்களையே கொடுத்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஆசிப் அலி நடித்த ‘அடியோஸ் அமிகோ;, ‘கிஸ்கிந்தா காண்டம்’, ‘தலவன்’, ‘லெவல் கிராஸ்’ என எல்லாமே சிறப்பான படங்கள், இந்த ஆண்டு அவருக்கும் சிறப்பான ஆண்டுதான். அதிலும் லெவல் கிராஸ் மூனு நடிகர்கள்… மூவருக்கும் மூன்று கதைகள்… இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் கதையே. குறிப்பாக படம் முழுவதும் இருவர் மட்டுமே. மூன்றாமவர் இறுதியில்தான் வருவார். இப்படியான கதைகளை இரண்டு மணி நேரப் படமாக எடுக்க அவர்களால் சாத்தியப்படுகிறது என்பதைவிட எடுத்தால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை அவர்களிடம் நிறையவே இருக்கிறது. நம்மவர்களுக்கு குத்து டான்ஸ், நாயகன் நாயகி காதல் பாடல், வன்முறை நிறைந்த சண்டைகள் எனப் படம் எடுப்பதில்தான் நாட்டம் அதிகம் இருக்கிறது. சமீபத்தில் பார்த்த ‘ஆட்டம்’, ‘பிரம்மயுகம்’, ‘துண்டு’, ‘விசேசம்’, ‘உள்ளொழுக்கு’, ‘பழஞ்சான் பிரணயம்’, ‘பாரடைஸ்’, ‘ஆடு ஜீவிதம்’ இப்படி பல படங்களை எடுத்துக் காட்டாய் சொல்லிச் செல்ல முடியும். தமிழில் இவ்வளவு எண்ணிக்கையில் ரத்தம் சிந்தாத படங்களைச் சொல்ல முடியுமா..?

அதாவது தமிழ் சினிமா இருந்த இடத்துக்கு மலையாள சினிமா உயர்ந்த போது தெலுங்கின் ரத்த வாடைக்குள் தமிழ் சரிந்துவிட்டது. இப்போது விரல் விட்டு எண்ணி விடக் கூடிய சில நல்ல இயக்குநர்கள் தங்களது முதல் படங்களில் ஜெயித்திருக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து இவர்களாகவே இயங்கும் பட்சத்தில் தமிழ் சினிமா மீண்டும் ரத்தக் களறியின்றி நல்ல படங்களைக் கொடுக்கலாம். செய்வார்களா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

000

பரிவை சே.குமார்.

இதுவரை எதிர்சேவை, வேரும் விழுதுகளும்,  திருவிழா, பரிவை படைப்புகள், வாத்தியார், காளையன், சாக்காடு என்கிற புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. எதிர் சேவைக்கு தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருது , கேலக்ஸி மண்ணின் எழுத்தாளர்களுக்கான பாண்டியன் பொற்கிழி விருது பெற்றிருக்கிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *