பகுதி – 3
வண்டி ஃபேக்டரியின் வாசலையடைந்ததும் அதுவரை ஓடிக்கொண்டிருந்த காட்சிகள் யாவும் ஒருங்கிணைந்து, ஒரு புகைப்படமாய் சுவற்றில் உறைந்து நின்றது போல் திகைத்துணர்ந்தேன். அங்கேதான் தங்குமிடமும் என்றார்கள். உள்ளுக்குள் மூடுபனி விலகியதொரு இளங்காலை மனநிலை. வருவதை ஆமோதிக்கும் பொருட்டு குவிந்துக் கொண்டிருந்தது இதழ்களில் குறுஞ்சிரிப்பு.
ஒரு தட்டி போல சாத்தப்பட்டிருந்த அந்த சல்லடைக் கதவை திறந்து உள்ளே நாங்கள் நுழைந்தபோது, அந்த சாம்பல் நிற வளாகம் பார்க்க நம்ம ஊர் ரைஸ் மில் போல பரந்து விரிந்து காட்சியளித்தது. கிட்டத்தட்ட கால் ஏக்கருக்கு நிகர் சுற்றளவு இருக்கும்.
அங்கேயிருந்த இரண்டு பிராதான கட்டிடங்களில் ஒன்று மட்டும் ஷீட்டால் கூரையமைக்கப்பட்டும், மற்றொன்று முறையாகக் கட்டப்பட்ட வீடு போலும் தோற்றமளித்தன. தெருவை ஒட்டிய பனையோலை வேலிக்கும் அக்கட்டிடங்களுக்கும் இடையே பெரியதொரு மைதானம் போன்று நான்கு நீள் சதுர சிமெண்ட் முற்றங்கள், ச்சோவென சுத்தம் செய்யப்பட்டு எதற்கோக் காத்துக் கிடந்தன.
பக்கவாட்டில் எழுப்பப்பட்ட சுற்றுச்சுவரொன்றில் காகமொன்று எதையோ கொத்தித் தின்றபடி அங்குமிங்கும் கழுத்தை திருப்பிக் கொண்டிருந்த காட்சி, பார்க்க மஞ்சள் வெய்யில் பட்டும் நிறம் மாறாத அதிசய நிழல் போல அதன் உருவம் அங்கே அசைந்துக் கொண்டிருந்தது.
மீண்டும் அந்த வளாகத்தின் மேல் என் பார்வைப் படர்ந்தது.
குண்டூரு, விஜயவாடா மற்றும் ராஜ மந்திரி பகுதிகள் மிளகாய், மஞ்சளுக்கு பேர் போனவை. அதையொட்டி இது போன்ற தொழிற் சார்ந்த கட்டுமானங்கள் ஆங்காங்கே எழுப்பப்பட்டு, வாடகைக்கு விடுவார்கள் என்று கண்டபோதே விளங்கிக் கொள்ள முடிந்தது. இதுத் தவிர்த்து வந்துக் கொண்டிருந்த வழிகளில் கூட முன்னே சொன்னது போல பெரியப் பெரிய குடோன்கள் தென்பட்டன. எல்லாமே இது போன்ற பணிகளுக்கே பயன்படுத்தப்படும் என்பது எனது அப்போதைய அனுமானமாக இருந்தது.
ஷீட்டால் போடப்பட்டிருந்த அந்த நீண்ட கொட்டகை, கிராமபுறங்களில் காணும் கல்யாண மண்டபங்களை நினைவூட்டியது. அங்கே அரைவை மில்லைப் போல் ஆங்காங்கே மெஷின்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதையொட்டிய தாழ்வார நிழலில் பத்து, பதினைந்து பெண்கள் வசதிக்கேற்ப வளைந்து, நெளிந்து, கவனங்கள் பெறும் வகையில் நின்றுக்கொண்டிருந்தார்கள். இளம் வெயில் அவர்களை இடுப்பளவில் தழுவிக்கொண்டிருந்தக் காட்சி தங்கக்கடலொளி வீசி தகதகக்கும் தென்னை மரங்களை ஞாபகப்படுத்தியது. என்ன செய்வது, வர்ணனைகள் செய்ய கடற்கரைக்காரனுக்கு இப்படிதான் ஒப்பீடுகளும் வந்து விழுகின்றன.
நெருங்கியதும் அனைவரும் பிரசாத்திற்கு “நமஸ்காரமண்டி.. நமஸ்காரமண்டி!” என்று இரு கைகளையும் கூப்பி வணக்கம் வைத்தார்கள். என்னைப் பார்த்து வணக்கம் வைப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் சிலர் சிநேகமாய் சிரித்தார்கள். நானும் பதிலுக்கு புன்னகைத்தபடி பிரசாத்தை தொடர்ந்தவனாக அவர் பின்னாடியே தொடுத்துச் சென்றேன்.
“ஜருகண்டி! ஜருகண்டி!” என்று குரலெழுப்பியபடி எங்களை முந்திக்கொண்டு ஜலபதி ராவ் லக்கேஜ்களை சுமந்தவனாய் மாடிப்படிகளில் விறுவிறுவென ஏறினான். அவனது உடல்வாகிற்கு, அவன் விரைந்துச் சென்ற கோலத்தைக் கண்டு ஏதோ எங்களை ஒரு காளைதான் கடந்து ஓடுகிறதோ என ஒதுங்க வைத்தது.
கீழ்தளம் முழுக்க கிடங்குப் போல ஒதுங்கிக் கிடக்க, மாடியின் முகப்பிலேயே எட்டுக்கு பத்து அளவில் ஒரு சிறிய அறையிருந்தது. அதுதான் அலுவகம் என்று பரத்தப்பட்டிருந்த ஃபர்னிச்சர் மற்றும் பேப்பர், பைல் போன்ற இத்யாதிகளைக் கொண்டு ஊகித்துக் கொண்டேன். அதைத் தாண்டிப் போனால் வடக்கிற்கும் தெற்கிற்குமாய் கண்ணாடிக் கூண்டை போல் ஒரு ஹால். அதில் ஒரு புறம் சமையற்கட்டும் மறுபுறம் ஒரு சிறிய அறையும் இருந்தது. தரை பளிங்கு போல சுத்த பத்தமாய் பராமரிக்கப்பட்டிருந்தது. அதில் சுவர்களும், சுற்றிருந்த பொருட்களும், கதவு, ஜன்னல்களும் குளத்தில் விழுந்த மரங்களைப் போல தலைகீழாய் நின்றுக்கொண்டிருந்தன.
ஆள் நடமாட்ட சத்தத்தைக் கேட்டு, சூரியகாந்திக்கு சிநேகிதிப் போல சிரித்தமுகமாய் ஒரு நாற்பது வயது மதிக்க தக்க ஒரு பெண்மணி தங்கச் சுடர்விட்டபடி வெளியே வந்தார். அவர்தான் சீதம்மா. பிரசாத்திற்கு ஷாஷ்டமான ஒரு வணக்கத்தை வைத்தார்.
“நம்ஸ்காரம் சீதம்மா காரு, பாகுன்னாரா?” பிரசாத்தின் மரியாதையைப் பார்த்துவிட்டு நானும் ஒரு வணக்கம் வைத்தேன். அவரும் கைகளைக் கூப்புவது போல கொண்டு வந்தார். புன்னகை இயல்பாகவே அவரது இதழ்களில் அச்சடிக்கப்பட்டது போல் கண்களுக்கு அத்தனை அணுக்கமாகத் தெரிந்தார்.
“பாகுன்னாண்டி, மீரூ பாகுன்னாரா?” குரலில் தாய்மை வழிந்தது. மீண்டுமொருமுறை எனக்கு எங்கேயோ பரியச்சயப்பட்டிருந்தது போல் அவரது பேச்சு நெருக்கமானதாகத் தோன்றிற்று.
அவர் வாய் திறந்து சிரித்துப் பேசுகையில் மேல் தாடை பற்களில் ஒன்று சொத்தை போல் காட்சியளித்தது. முத்துக்களுக்கு மத்தியில் கருப்பு ரத்தினம் போல அதுவும் அவருக்கு கூடுதல் அழகுச் சேர்ப்பது போலிருந்தது. வாசனைப் பொங்கும் சந்தன நிறத்தில், ஊர்வசி-கல்பனா வகையறா முகவாட்டத்தில், கொஞ்சம் உயரமான தோற்ற எடுப்போடு மரியாதைக்குரியவராய், மானசீகமானவராய் தெரிந்தார். சிறு வயதில் இன்னுமே கூட தேவதை போல் இருந்திருக்க கூடும். ஆனால் அவருடைய வசீகரங்களை மீறிய மென்சோகமும், வறுமையும், அவரது உடைகளிலும், உடல் மொழிகளிலும் ஒரு அழகான இரவில் சற்றே சிவந்து வீசும் நிலவை போல, பார்ப்போரின் கண்களை பட்டெனக் கொஞ்சம் தாழ்த்தவும் வைத்தன.
“ஈ பாபு பேரு சந்(த்)ர ஷேகரு.. வீடே இக்கட கொத்த சூப்பர்வைசரு, ச்சூஸ்கோண்டி!” பிரசாத் என்னை அறிமுகப்படுத்தி வைத்திருக்க வேண்டும். மீண்டுமொருமுறை வணக்கம் வைத்தார். நானும் வைத்தேன். சிரித்தார். அந்த சிரிப்பை ரசித்தவனாய் நானும் சிரித்தேன். சிரிப்பு ஒரு தொற்று நோய் என்று சும்மாவா சொன்னார்கள்!
“அலாகே! மனவாடா?”
“அறவாடே, சென்னை நிஞ்ச்சி ஒச்சாடு”
‘அவுனா!’ என்று மெலிதாய் முறுவலித்தபடி “காப்பி தாகுத்தாரா?” எனக் கேட்டார்.
அந்த கூடத்தையடுத்து ஒரு குளியலறையும், வெளியே ரெஸ்ட் ரூம் ஒன்றுமிருந்தன. கடன்கள் முடித்து, முகம் கழுவி வரவும், சுடச்சுட காப்பியும் வந்தது. அப்போதும் அதே சிரிப்பு, அதே சாந்தம். ஏதோ ஒரு ஈர்ப்பு அவரிடம். அந்தச் சிரிப்பு எப்போதும் இப்படியே இருப்பாரோ என்று வியக்க வைத்தது. ஏழைத்தாய் என்றாலே மனதில் ஒரு பரிவு துளிர்த்துவிடும், அதிலும் இவர் பீய்ந்த கூரைக்குள் விழுந்த நிலவு போல் இருக்குமிடத்தில் இல்லாமைகளை செல்லாதவைகளாக்கிவிடும் சூட்சமங்களையல்லவா அவரது ஒளி வீசும் பொன்முகத்தில் வைத்திருக்கிறார்! சீதம்மாவைக் கொண்டு என் கதையொன்றில் ஒரு தாய் பாத்திரம் தீட்ட வேண்டுமென அச்சமயம் நினைத்துக் கொண்டேன்.
குளியலறையிலிருந்து அறுபது வயது மதிக்கத்தக்க தகதகவென பவள நிறத்தில் ஒரு பெரியவர் அங்கே இன்னொரு கதாப்பாத்திரமாக தரித்தபடி எங்களோடு இணைந்து கொண்டார். எங்களைக் கண்டதும் பரபரத்த வண்ணம், “நம்ஸ்காரமண்டி!” என்று அவரும் ஒரு வணக்கம் வைத்தார். அவரது தோற்றமும் பேச்சும் மிகவும் சுறுசுறுப்பானவர் போலிருந்தது. பிரசாத் என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். முகத்தில் ஒரு புன்முறுவல் தென்பட்டாலும், அதுவும் மின்னல் போலதான் குறிப்பாக பிரசாத்திடம் பேசும்போது மட்டும் வந்து வந்து மறைந்தது. அவரது உடல்மொழிகள், கொஞ்சம் கண்டிப்பானவரோ! என நினைக்கத் தூண்டிற்று.
அங்கே அவர்தான் கிட்டத்தட்ட மேனேஜர் போல என்று நினைத்துக் கொண்டேன். சென்னை பிளாண்ட்டில் ரொம்ப வருடமாக பணியாற்றியவராம். வெற்றிவேல் சார் எனக்கு ரொம்ப பழக்கம் என்று பெருமைப் பொங்க பேசத் துவங்கினார். வெற்றிவேல், அண்ணா நகரிலிருக்கும் சந்தன் லால் அன் சன்சோட ஃபவுண்டர், சந்தன் லாலோட மருமகன். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? சந்தன் லால் மகளும் வெற்றிவேல் சாரும் கல்லூரியில் படிக்கும் காலங்களில் காதலித்து கைப்பிடித்துக் கொண்டவர்கள். வெற்றிவேல் ஐயா ஈரோட்டுக்காரர்.
அவருடைய பூர்வீக அரண்மனை வீட்டில்தான் தொண்ணூறுகளில் வெளிவந்த சின்னத் தங்கம், வானவராயனும் வைதேகிஸ்வரியும் உட்பட பல வெற்றித் திரைப்படங்கள் எடுத்திருக்கிறார்கள். நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிரண் சாரையும் பெரியவர் வெற்றிவேல்தான் வளர்த்து ஆளாக்கி விட்டதாம். கிரண் சாருடைய இன்னொரு சகோதரி மகன் கூட அப்போது ஹிந்தி சினிமாவில், கோகுல் ராம் வர்மா படங்களில் அறிமுகமாகி பிரபலமாகிக் கொண்டிருந்தார்.
சுனாமி நேரத்தில் அந்த நடிகர் வந்து, மக்களோடு மக்களாக இருந்து தங்கி உதவிகள் புரிந்ததையெல்லாம் சந்தன் லால் சன்ஸின் ஒவ்வொரு ஊழியர்களும் அப்போது பெருமை படச் சொல்லிக் கொள்வார்கள். சினிமா என்றாலே மக்கள் மத்தியில் கூடுதல் ஈர்ப்பும் கவனமும் சேர்ந்துவிடுகிறது அல்லவா? இவற்றையெல்லாம் பிரசாத்துதான் மற்ற மற்ற தருணங்களில், நாங்கள் வெளியேச் செல்லும் சந்தர்ப்பங்களில் ஒவ்வொன்றாக பின் நாட்களில் என்னோடுப் பகிர்ந்துக் கொண்டார்.
பாருங்கள் அந்த பெரியவரைப் பற்றி பேச்செடுக்க இவையெல்லாம் அடுக்கடுக்காக வந்துவிட்டன. சொல்ல மறந்து விட்டேனே அந்த பெரியவர் பெயர் கோவிந்தம். கோவிந்தம் சார் என்றுதான் பிரசாத் உட்பட எல்லோரும் அழைப்போம். குலத்தில் பிராமணர் இல்லை என்றாலும், பேச்சிலும், தோற்றத்திலும் பிராமணரைப் போலவே தெரிவார்.
சிறு உரையாடல்களுக்கு பின்னர் மற்றவர்களும் குளித்து தயாராகி வந்தோம். சீதம்மா செய்திருந்த இட்லி மற்றும் சட்னியோடு கடையிலிருந்து தருவிக்கப்பட்ட பூரிக் கிழங்கையும் பிரித்து வைத்து சாப்பிடச் சொன்னார். வாயில் வைக்க உதிரி உதிரியாய் இட்லி கொஞ்சம் வித்தியாசமாக உடைந்ததை உணர்ந்தேன். ரவை சேர்த்திருப்பதாக பிரசாத் சொன்னார். சட்னியிலும் பிரதானமாக வேர்க்கடலை வாசனையடித்தது. ஒன்றுக்கு மேல் செல்லவில்லை. பூரியை சாப்பிட்டுப் பார்க்க சொன்னார்கள். நன்றாக இருந்தது. அதற்காகவே வெளியிலிருந்து தினமும் ஒரு செட் பூரியும் எனக்காக வரவைக்கப்பட்டது வேறு கதை.
ஜலபதிதான், சீதம்மாவை அதட்டி, அதட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தான். அது வலிந்துக் காட்டிய அதிகாரத்தோரணை இல்லை என்றாலும், அவனது முதலாளி விசுவாசத்தை நிரூபிக்க பிரசாத் முன் அவன் அப்படி ஆடிக்கொண்டிருந்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சீதம்மா, அவனது கட்டளைகளுக்கேற்ப அப்பாவியாய் அங்குமிங்கும் அலைந்துக் கொண்டிருந்த நிலையைக் கண்டு வருந்தத் தொடங்கினேன்.
அதுவும் அவரது நிறத்திற்கு, கழுத்தில் அது போல ஒன்றுக் கிடப்பது தெரியாமலே ஒட்டி, உறவாடிக் கொண்டிருந்த அந்த மங்கிய மஞ்சள் தாலிக் கயிறும், கருப்பாய் தாயத்து போல் கட்டித் தழுவிக்கொண்டிருந்த சாய்பாபா டாலரும் பின்னியபடி ஆறுதல் சொல்லிக்கொள்வதுப் போலிருந்தாலும், மனதைக் கவ்விக் கொள்ளும் ஒரு இனம் புரியாத பரிவோடு அவரையே அவ்வப்போது அவதானித்துக் கொண்டிருந்தேன். கதாநாயகியின் தாய் அல்லவா!
***
மேல்தளத்தில் முக்கால்வாசி இடம் மொட்டை மாடியாகவே அறைகள் ஏதும் எழுப்பப்படாது, வெறுமினே விட்டு வைத்திருந்தார்கள். தரை சமன்படுத்தப் பட்டிருக்காமல் சொர சொரப்பாகக் கிடந்தது. தெற்கேப் பார்த்தவாறு ஒரு மூலையில் கிணறொன்றிக்கு பக்கத்திலேயே நின்றுக்கொண்டு துணி துவைப்பதற்கு எதுவாக சிமெண்ட் தூணில் சாய்வாக பொருத்தப்பட்ட ஒரு நீள்சதுர கல் சிறிய ஸ்தூபி போல் காட்சியளித்தது. அதைச் சுற்றி இரைந்து, பாம்பு நெளிந்துச் செல்வது போல் தாழ்வான பகுதிக்கு விரைந்திருந்த நீரை, பெரிதான நெல்மணிகள் போன்ற சிட்டுக்குருவிகள் பருகிக் கொண்டிருந்தன.
சற்று தூரம் வரை மரங்கள் என்று எதுவும் அதிகமாக கண்ணில்படவில்லை. ஒரே ஒரு பூவரசை ஒரு நூறு மீட்டர் தொலைவில் நின்றுக்கொண்டிருந்தது. அதற்கும் ஃபேக்டரிக்கும் இடையே வற்றியது போல் கிடந்த குட்டையை மக்கள் குப்பை, கூலங்களால் நிறைத்துக்கொண்டிருந்தனர். அதைச் சுற்றி எருமை மாடுகள் ஆங்காங்கேத் திரிந்துக் கொண்டிருந்தன. மாடியின் கைப்பிடி சுவரெங்கும் அங்குமிங்கும் பறவைகளின் எச்சங்கள் சுண்ணாம்பு வெண்மையுமாய், கரும்பச்சையுமாக காய்ந்துக் கிடந்தன. அங்கிருந்து எல்லாவற்றையும் ஒரு நோட்டம் விட்டேன். மீண்டும் எனது பார்வை அந்த சொரசொரப்பான தரையின் மீது படிந்தது. ஏன் இவ்வளவு இடத்தை சும்மா விட்டு வைத்திருக்கிறார்கள், இங்கேயும் கூட மஞ்சளைக் காயப் போடக் கூடுமென நினைத்துக் கொண்டேன்.
கழுகுப்பார்வையில் கீழே கண்ட காட்சிகள் யாவும் பிரமாண்டமாக, மங்களம் கொஞ்சும் பூரணத்துவத்தோடு காட்சியளித்தன. சமீபத்திலேயே அறுவடை செய்யப்பட மஞ்சள் கிழங்குகளை சுமந்தபடி சற்று தூரத்திலிருந்து புகை விட்டவாறு ஒரு ட்ரக் ஃபேக்டரியை நோக்கி வந்துக் கொண்டிருப்பதையும் கவனித்தேன்.
மீண்டும் எனது பார்வை கீழ்த்தளத்தில் படிந்தது. வேலைக்கு வந்த மற்ற பெண்கள் ஒரு மூத்த பெண்ணைச் சுற்றி நின்றபடி மெலிதான சத்தங்களோடுப் எதையோ விவாதித்துக் கொண்டிருந்தனர்.
இப்போது வெயில் சற்று மேலே உயர்ந்திருந்தது. அந்த மூத்தப் பெண் மற்றவர்களுக்கு ஏதோ கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டும், இடையிடையே வந்த கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டும், அவர்களை குழு குழுவாக பிரித்துக் கொண்டுமிருந்தார். விவாதங்கள், சத்தங்கள் ஓய்ந்து அவரவர் தத்தம் பணியிடங்களுக்குச் செல்ல பத்து, பதினைந்து நிமிடங்களானது.
“இன்னைக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறீங்களா சார்? நைட் ட்ராவல் செஞ்சிங்க வேற.. “
அப்போதுதான் கவனித்தேன், பிரசாத் என் பின்னால்தான் நின்றுக்கொண்டிருந்தார் போலும். ஆனால் அந்த கேள்வி சம்பிரதாயமாகக் கேட்டதாகவே உணர்ந்தேன். பிழைப்பிற்காக ஒன்றும் தெரியாத ஊருக்கு வந்துவிட்டு ஓய்வெடுக்க எப்படி மனசு வரும்? அப்போதே கீழே சென்று எனக்கான பொறுப்புகளை கேட்டறிந்து, வேலையைத் தொடங்க எனது கைகளும் கால்களும் பரபரத்தன.
பிரசாத் வரவும், அவ்வேகம் மேலும் கூடிவிட்டது. இளம் வெயில், பிப்ரவரி இளங்காற்று எல்லாம் எனக்குள் கூடுதல் ஆக்சிஜனை செலுத்திக் கொண்டிருந்தன. குளிரினில் மலர்ந்த செம்பருத்தியை நினைவூட்டும் வெண்ணிறப் பூவொன்று சுள்ளென வெயில் பட்டு சுறுசுறுப்பாவது போல் தும்பியின் இறக்கைகள் முளைத்தவனாய் பாதங்கள் ஓரிடத்தில் நிலைக்கொள்ளவில்லை.
பிரகாசம் உட்புகுந்தவனாய் ஆனந்த மூச்சொன்றை உள்ளிழுத்து விட்டேன். அதில் காற்றுக் கூட புத்துணர்வு பெற்றதென நான் எழுதுவதை நீங்கள் தற்புகழ்ச்சியாக நினைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. மகிழ்ச்சியில் புதிய இடம் அப்படியொரு ஆகிருதியை இயல்பாகவே அமைத்துக் கொடுத்தது என்பதுதான் உண்மை.
“இல்ல சார், எனக்கு ஓகே!” என் குரலின் தயார் நிலையைப் பாராட்டும்விதமாக, பிரசாத், திருப்தியான முகபாவனையை வெளிப்படுத்தினார்.
“ஓகே சந்திரா அப்ப வாங்க, கீழேப் போகலாம்!” என்று சிநேகிதமாய் என் தோளில் கையைப் போட்டபடி என்னை அழைத்துச் செல்வதற்கு முற்பட,
“காப்பி தாகுத்தாரா?” என்று மீண்டும் வாஞ்சைப் பொங்க சீதம்மா அங்கே அவதரித்தார். பிரசாத் என்னைப் பார்க்க, பிறகு என்றேன்.
“வெல்லி வஸ்த்தாமு!” கொஞ்சம் கீழே சென்று வருகிறோம் என்று பிரசாத், சீதம்மாவிடம் செப்பவே.. ஸாரி, சொல்லவே, சைகையால் எனக்கு டீ என்று சொன்னேன். சீதம்மா, ‘அலாகே பாபு!’ அப்படியே என்று சிரித்தார்.
நானும் முகம் மலர்ந்தேன்.
அதுவரை சாவகாசமாய் வெள்ளை நைலான் பின்னல் நாற்காலியில் அமர்ந்தபடி, அன்று வந்திருந்த ‘ஈநாடு’ நியூஸ் பேப்பரை மேலோட்டமாகப் படிப்பதுபோல் தனது மூக்குக்கண்ணாடியை மீறி மேய்ந்துக் கொண்டிருந்த கோவிந்தம் எங்களைக் கண்டதும், “கிந்த வெல்த்தாமா?” கீழே போவாமா என்றுக் கேட்டுக்கொண்டே அவசர அவசரமாக எழுந்தவர், சுதாரிப்பாய் எங்களோடு இணைந்து கொண்டார்.
ஆள் அரவத்தின் சத்தம் கேட்டு மரப்பொந்தினுள் ஒளிந்துக் கொள்ளும் பெயர் தெரியாத அழகிய சிறு பறவையாய், நாங்கள் மாடியிருந்து இறங்குவதைக் கண்ட ஒரு பெண், மேலே வந்தவள் சடசடவென கீழிறங்கி குடோன் பக்கம் சட்டென மறைந்துக் கொண்டாள். எனது பார்வை சரியாக கவனித்திராத அவளது முகம் பார்க்க ஓடியது.
அந்த முப்பது வினாடிகளில் கைக்கடிகாரத்தின் நொடிமுள் மெல்லிய கொலுசொலியோடு நகர்ந்ததுப் போன்றுணர்ந்தேன். பிரசாத் அடி ஆள் மாதிரி எனக்கு முன் சென்றுக்கொண்டிருந்ததால், அப்போது ஊன்றி எதையும் கவனிக்க முடியவில்லை.
அது என்னவோ தெரியவில்லை, வந்ததிலிருந்து என்னுடைய ஒவ்வொரு அசைவையும் பிரசாத் கூர்ந்து கண்காணிப்பது போலவே உணர்ந்துக்கொண்டிருந்தேன். எனது கண்கள் தேடிய அந்த பைங்கிளி அங்கே எங்கோதான் ஒரு ஓரமாக நாங்கள் கடந்து செல்லும் வரை காத்திருக்கக் கூடும்.
“சீதம்மா கூத்துரு க்கதா?” சீதம்மா மகள்தானே? என பிரசாத் கேட்க, “அவுனண்டி” ஆமாம், என்று மின்னல் வேகத்தில் கோவிந்தம் பதிலளித்தார். நான் தயக்கங்களோடு அறையும் குறையுமாக பின் திரும்பி, பார்வையை அவள் மீது மீண்டும் செலுத்தினேன். அவள் வெட்கத்தோடு முகம் தாழ்த்திக்கொண்டாள்.
அவளது அளவான சிவப்பு பொட்டும், தலையில் சூடிய மல்லிகைச் சரமும் திவ்யமாக மணத்தன.
முதன்முதலில் ஓரக்கண்ணால் மேகத்தைப் பார்த்தவன் நானாத்தான் இருப்பேன். அதையும் அரைகுறையாகதான் செய்தேன் என்றாலும், எனக்குள் பதிந்த அந்த கோணங்களை புகைப்படங்களாக்கியிருந்தால் நிச்சயம் பல விருதுகளுக்கு பரிசீலிக்கப்பட்டிருக்கும்.
தாவணியில் வந்திருந்தால் எப்படியிருந்திருப்பாள் எனத் தெரியவில்லை, சுடிதாரில் 7G அனிதா போல பார்த்ததும் பதிந்துப் போனாள். அதே சிறு சோகம் கூட அவள் முகத்தில்! தாழ்ந்தப் பார்வையில், அவளின் அந்த கண்கள் அனிதாவை போலில்லாமல் தீட்சண்யமாய் சுடர்விட்டன; அகல் விளக்குகள் போல!
அடடா! அவளைக் கடந்த போது மகிழம் பூவினை நினைவூட்டும் வெண்சிறுபூக்கள் தெளிக்கப்பட்ட அவளது மஞ்சள் நிற ஷால் அந்த காற்றில் பறந்து வந்து, என் கைகளைத் தொட்டுச் செல்வது போன்றிருந்தது. அச்சமயம் எனது சுடும் மூச்சுக்காற்றும் அவளைத் தீண்டியிருக்க கூடும்.
ஆட்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். ஏற்கனவே சில லோடுகள் வந்திறங்கியிருக்கும் மஞ்சள் கிழங்குகள் குன்று குன்றாகக் குவிக்கப்பட்டிருந்தன. இந்த பிளாண்ட்டில் மஞ்சள்தான் பிரதானம். மஞ்சள் மட்டுமே என்றும் கூட சொல்லலாம்.
சந்தன் ஸ்பைசஸிற்கு இந்தியாவில் என்று மார்க்கெட் ஏதும் கிடையாது, எல்லாமே ஏற்றுமதிகள்தான். அதிலும் இந்த டர்மெரிக் ஸ்லைசஸ், அதாவது மஞ்சள் சீவல்களை எக்ஸ்போர்ட் செய்வது இதுதான் முதல்முறை. அதுவும் இது பிரத்யேகமாக ஜப்பானுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படவிருக்கிறது. அதனால் அவர்களது மற்ற தயாரிப்புகள் போலில்லாமல், கையெழுத்திடப்பட்ட வணிக ஒப்பந்தத்தின் படி, இந்த குறிப்பிட்ட ஏற்றுமதி சார்ந்த எல்லாவற்றவையும் கூடுதல் சிரத்தையும், தனி அக்கறையெடுத்துதான், இந்த ப்ரொஜெக்ட்டை வெற்றிகரமாக பூர்த்தி செய்ய வேண்டும்!
தர நிர்ணய அளவில் இதில் கோளாறுகள் ஏதும் ஏற்படும் பட்சத்தில், அவர்கள் இழப்பீடு கோருவார்கள், வரும் கணிசமான லாபமும் குறைந்துவிடும். சில சமயம் நஷ்டம் ஏற்படவும் கூட வாய்ப்புண்டு. இதற்கான கட்டமைப்புகள் சென்னையில் இல்லாத காரணத்தினால் இங்கே நிறுவப்பட்டுள்ளது. கூடவே தொழிலாளர் கட்டணம் மற்றும் மூலப்பொருட்கள் எல்லாம் ஒப்பீட்டளவில் ஆந்திரத்தில் மிகவும் மலிவு.
பிரசாத் மற்றும் சகோதரர்கள் நடத்தி வரும் நாயுடு ஸ்பைசஸ்தான் அங்கேயும் சந்தன் ஸ்பைசஸிற்கு பிரதான சப்ளையர். அதுமட்டுமல்லாது, இந்த பிணைப்பு, பிரசாத் தந்தை காலத்திலிருந்தே இரு தரப்பிற்குமிடையேத் தொடர்ந்து வரும் ஆரோக்கியமான தொழிமுறை பாரம்பரியமும் கூட! அதனால்தான் இந்த வாய்ப்பை குறிப்பிட்டு இவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். பிரசாத்திடம் சிறிது நேரம் பேச்சுக் கொடுத்தால் போதும், அல்லது அவர் சொல்வதை கேட்டால் போதும் இப்படி நிறைய சுவாரசியமான தகவல்கள் பேச்சு வாக்கில் கிடைத்துவிடும். என்னதான் சற்று சிரத்தையான ப்ராக்ஜெக்ட் என்று தோன்றினாலும், எல்லாவற்றையும் கணக்கிட்டுப் பார்க்கும்போது இது அவர்களுக்கு பல மடங்கு லாபத்தை ஈட்டித் தரும் நல்லதொரு ஒப்பந்தமாகவே எனக்குப் பட்டது.
‘இன்’ எல்லாம் செய்து, டை கட்டிக் கொண்டு சென்றதில் என்னை அங்குள்ளவர்கள் பெரும் ஆபிசர் என்று நினைத்திருக்க கூடும். பிரசாதுதான் அப்படியொரு தோரணையில் வரச் சொன்னார். சந்தன் ஸ்பைஸஸில் எங்கள் முதல் அறிமுகமே அப்படி அமைந்திருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். அதற்கு காரணமாக இன்னொரு கதையும் இருக்கலாம் என்று என் அனுமானத்தில் வேறொன்றையும் தொடர்புப்படுத்திக் கொண்டேன். அதை பிறகுச் சொல்கிறேன்.
இப்போது எல்லா பெண்களுமே எனக்கும் வணக்கம் வைத்தனர். அதில் ஒரு பெண் மட்டும் தனியாக தெரிந்தார். பெயர் கோட்டேஸ்வரியம்மா. அவர்தான் நான் மாடியிலிருந்துப் பார்த்தபோது மற்ற பெண்களை ஒழுங்குப் படுத்திக்கொண்டிருந்தது. அங்கிருந்தவரை அவரை கோட்டேஸ்வரி காரு என்றே மரியாதையோடு அழைப்பேன்.
அப்போதே வயது நாற்பத்தைந்தைக் கடந்திருக்கும். நல்ல ஆளுமையானத் தோற்றம்! மேலும் வசீகரமானக் குரலும், கண்டிப்பானப் பேச்சும் அதற்கு பக்கபலங்களானத் தென்பட்டன.
அவர்தான் இங்கே மேஸ்த்திரி என்று பிரசாத் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். எனது வருகையும், வயதும், கடமையுணர்வு மிகுந்தவன் போன்ற பாங்கும் அவருக்கு பிடித்திருக்க வேண்டும், தனது வயதை மீறிய மரியாதையை என்னிடம் காட்டினார். அதில் அதீத பிரியமும் தோய்ந்திருந்தது. மற்ற பெண்களையெல்லாம் அழைத்து என்னுடைய வருகையைப் பற்றி அவர்களிடம் பயங்காட்டும் முகபாவனைகளோடு விவரித்தது எனக்கு சிரிப்பை வரவழைத்தது. சிலர் அதை ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் கவனித்தனர். சிலர், யார் வந்தா எங்களுக்கென்ன என்பது போல் கடமைக்கென்று பார்வைகளை இங்குமங்கும் மனம் போன போக்கில் குவித்துக் கொண்டிருந்தனர்.
பதினைந்து பதினாறு முதல் முப்பது முப்பத்தைந்து வரை வயதுள்ள பெண்கள் ஒரு பதினைந்து பேர் வரையிருந்தார்கள். அவர்களைத் தவிர்த்து, லோடு இறக்குவது, ஏற்றுவது, மஞ்சளை ஜல்லி மணல் கலக்கும் எந்திரம் போல் இயங்கிக் கொண்டிருந்த வாஷரில் விட்டு அலசி சுத்தம் செய்துவிட்டு, அவிக்கும் வரை உள்ள கடின வேலைகளை சில ஆண்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். மற்ற வேலைகளோடு, அவர்களையும் சேர்த்து மேய்க்கும் வேலையும் ஜலபதியோடது.
அவித்து, சற்று ஆற வைக்கப்பட்ட மஞ்சள் கிழங்குகளை குண்டான் குண்டானாக கொண்டு வந்து அரிசி மெஷினில் போல் இங்குள்ள கூம்பு எந்திரங்களில் கொட்டப்படும். அதை பஜ்ஜிக்கு வாழைக்காய் சீவுவது போல் நீளவாக்கில் துண்டு துண்டாக வெட்டப்பட்டப்பின் வெளியில் வந்து விழும். அவைகளை அன்னக்கூடை சட்டிகளில் சேகரித்து, அந்த பரந்து விரிந்திருந்த சிமெண்ட் தரைகளில் நெல் காய வைப்பது போல இடைவெளிகள் விட்டு, விட்டு நீள் வாக்கில் கொட்டிப் பரத்த வேண்டும். தேவையான பதத்திற்கு காய இரண்டு மூன்று நாட்கள் வரை பிடிப்பதுண்டு. அது பிப்ரவரி என்றதால் அவ்வளவு தாமதமானது. இதுவே ஏப்ரல் மே என்றால் அரை நாளே போதுமானது. அவ்வளவு சூடு அங்கே!
நன்றாக காய்ந்த மஞ்சள் துண்டுகள் சிப்ஸ் போலவும், சிறியச் சிறிய ரிப்பன் பக்கோடா போலவும் காட்சியளிக்கும். அதை நமது நிறுவனம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த விபரங்கள் அச்சடிக்கப்பட்ட சாக்குகளில் மூட்டைக்கட்டி குடோனில் வைத்து செல்லும் வரை பாதுக்காக்க வேண்டும். இதில் மிகவும் முக்கியமான தகுதி காய்ந்த மஞ்சளில் இருக்கும் பாக்டீரியா கவுண்ட் அதாவது எண்ணிக்கை. குறிப்பாக ஹீட் ரெசிஸ்டெண்ட் பாக்டீரியா சுருக்கமாக எச்.ஆர்.பி என்பார்கள் அவை கட்டுக்குள் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஷிப்மென்ட் திரும்பி வந்துவிடும்!
அதனால் இங்கே சுத்தம் சார்ந்த கட்டுக்கோப்புகளும், கெடுபிடிகளும் சற்று அதிகம்தான். தர உறுதியை சோதித்து ஊர்ஜிதம் செய்துகொள்ள அவ்வப்போது சாம்பிளை லேபிற்கு அனுப்ப வேண்டும். இதில் மழையேதும் வந்துவிட்டால் அவ்வளவுதான்! கதை கெட்டுவிடும்! இந்த குறிப்பிட்ட ஏற்றுமதி ஜப்பானில் மருத்துவ தேவைகளுக்களுக்காக பயன்படுத்தப்படுகிறதாம்.
சற்று சுற்றிப் பார்த்தேன் பெண்கள், பெண்கள், பெண்கள்! கடலோரத்தில் ஒதுங்கும் கிளிஞ்சல்களை போல் பெண்களே அங்கே வரிசைக் கட்டி நின்றனர். பெண்களை மட்டும் வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டு சுகபோகமாய் திரியும் அவர்கள் வீட்டு ஆண்களை எண்ணி கோபப்பட்டேன். ஏனென்றால் எனது கண்களுக்கு அந்த பெண்கள் அனைவருமே தேவதைகளாகத் தெரிந்தனர். தேவதைகள் சிரமப்படுவதை யாரால்தான் தாங்கிக் கொள்ள முடியும்?
ஆமாம், வரும்போது என் முதுகில் சிறகுகள் பூட்டிய அந்த தேவதை என்ன ஆனாள்? என்று பரவசத்தோடு அவளை மீண்டும் நினைவுக் கூர்ந்தவனாய் மேலே… மாடியைப் பார்த்தேன்…
***
தொடரும்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி எனும் ஊரைச் சார்ந்த இத்ரீஸ் யாக்கூப் நுண்ணுயிரியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று தற்சமயம் பணி நிமித்தமாக அமீரகத்தில் வசித்து வருகிறார். இவரது முதல் நூலான ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ – நாவல் பிப்ரவரி 2024ல் கோதை பதிப்பகம் வெளியீட்டுள்ளது. இவரது சிறுகதைகள் கீற்று, சொல்வனம், வாசகசாலை, கலகம், நடுகல் போன்ற இணைய இதழ்களிலும் மற்றும் கேலக்சி தளத்திலும் வெளியாகியுள்ளன.