1) சிறுமலைப்பயணம்
———————————————-
நான் அத்தனை அசிங்கமாக
மண்ணில் வீழ்ந்தபோதும்
உன் கண்களில் துளி
வெறுப்புப் படரவில்லை
அதற்கு முதல் நாளைப் போலவே
நீ என்னை அம்மு என்றழைத்தாய்
என் குறை வயிறு குறித்துக்
கவலைப்பட்டாய்
நல்ல பதத்தில் வெந்த
ஊன்சோறு ஊட்டிவிட்டாய்
கன்னத்தில் படிந்திருந்த
தூசியைத் தட்டிவிட்டாய்
தோளில் இடமளித்தாய்
நீராவியில் வெந்த கப்பக்கிழங்கும்
பொடி உப்புடன் மிளகாய்த்தூள் சேர்த்த
மாங்காய்ப் பிஞ்சும் வாங்கித் தந்தாய்
எல்லாவற்றுக்கும் மேலாக
சிறிய பெட்டிக்குள் பொதியப்பட்ட
பொன்னைப் போல பதனமாக
என்னைப் பழனிக்கு அனுப்பி வைத்தாய்
மொத்த இயலாமையையும்
முழுதாகச் சுகித்து
தற்கொலை முனையில் நின்ற
முதல் கையாலாகாதவனின்
நீண்ட பெருமூச்சுடன்
பேருந்து நிலையத்தில் இறங்குகிறேன்
உன் வாட்டம் உணர்ந்தும்
நீர் வார்க்க இயலாத என் கைகளை
கொள்ளி வைத்துக் கருக்கத் துணியாத
சுயநலவாதி நான்
மன்னித்துவிடு என்று கேட்கமாட்டேன்
இனிமேல் நான் உன் கண்களை
சந்திக்கக் கூடாது அவ்வளவு தான்.
2) அடைமழை
——————————
தேயிலை கொதிக்கும்
டீக்கடை பாய்லரின்
பட்டறைக்கு அடியில்
கதகதப்பாகப் படுத்துக்கொண்டு காலையிலிருந்தே விடாது பெய்கிற
இந்த மழையை வெறித்துக்
குரைத்தபடி இருக்கிறது நாய்
தென்கிழக்கு மூலையில்
கும்மரிச்சம் போட்டிருக்கும் கருமேகங்கள்
என்னையும் நாயையும் பிறகு அந்த
டீக்கடை பாய்லரின் பட்டறையையும்
விழுங்கிவிடத் துடிக்கின்றன
இவற்றிற்கு அப்பால்
உலகம் மற்றுமொரு பொன்விடியலுக்கான
பணிகளுக்கு தங்களைத்
ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறது.
3) ஒருத்தி
———————–
விட்டுப் பிரியும்போதெல்லாம்
கண்ணில் நீர் கோர்க்க
நெஞ்சோடு சேர்த்து
அணைத்துக் கொள்ளும்
அவளை உங்களுக்குத் தெரியுமா?
ஆம் எனக்கு அவள் நன்கு பரிச்சயம்
ஆலமரத்தைப் போல
மண்ணுக்கு மேலும் தன் வேரை
மனதாரப் பரப்பியிருப்பவள்
தண்டு முறிந்து வதங்கிப் போய்
வாழ்வின் அந்திமத்தில் இருக்கும்
சிறு தாவரத்தின் உயிருக்கு
உள்ளங்கையில் கொஞ்சம்
மழை கொண்டு வருபவள்
மேலும் உள்வாங்கிய போதும்
ஓயாத கடல் அலையைப் போல
அவள் மரணமில்லாதவள்!
4) பிரெட் ஆம்லெட்
———————————
மூணாறு மலைச்சாலையும்
மாட்டுப்பட்டி அணையும்
என் அடிவயிற்றுக் குமட்டலும்
நினைவுக்கு வருகின்றன
வழக்கம் போலவே
ஒன்றன்பின் ஒன்றாக
கும்பல் என்னை விட்டு
விலகிச் சென்றது அல்லது
நான் என்னைத் தனித்து
உருவிக் கொண்டேன்
பிரதமர் என் நண்பரென்று
பிதற்றிக் கொண்டிருக்கும்
முதியவரைச் சூழ்ந்து
அலைக்குமிழென சிரிப்புச் சப்தம்
பொங்கியெழுந்து கொண்டிருக்கிறது
கருத்த மேனியில்
அளவெடுத்தாற் போன்ற
காட்சிக்கு உகந்த
அங்கங்களோடு சிரிக்கும்
பிரெட் ஆம்லெட் கடைக்காரியின் மீது மேய்கின்றன
போதையில் மினுங்கும்
லாட்டரிச் சீட்டுக்காரனின் கண்கள்
சூடு குறைந்த எலுமிச்சைத் தேநீரை
என் கையளித்துவிட்டு உள்ளோடி
ஒளிந்து கொள்கிறாள்
கடைக்காரியின் மகள்
பிரதமரின் நண்பனாகும் சாத்தியம்
மிகுந்த தேசத்தில்
பிரெட் ஆம்லெட் கடைக்காரியின்
மகளாக வாழ்வது தான்
பெரும் சிரமம்.
5) ஆதுரமும் ஆண் மனமும்
—————————————————–
நீ அவன் நெஞ்சில் சாய்ந்து
ஆடியதை நான் பார்த்தேன்
பொய் சொல்லாதடி திருடி
முன்னெப்பொழுதோ நெஞ்சில் விழுந்த
நேசவிதை எத்தனை தான்
மண்ணைப் போட்டு மேவினாலும்
கிழித்துக்கொண்டு மேலெழும்பும் என்பதை
அறியாதவனா நான்?
ஆனால் ஒன்று
அந்தக் கணத்தில்
நான் ஆம்பளையாக இல்லை
என்பது பூரணமான உண்மை
ஒப்புக் கொள்கிறேன்.
( திண்டுக்கல் – கரூர் சாலையிலுள்ள
கோவிலூர் மண்ணுக்கு)
00

சு. ராம்தாஸ்காந்தி
பழனி அருகேயுள்ள மானூர் கிராமத்தைச் சேர்ந்தவர். நடப்பு இலக்கியச் சூழலில் வெளியாகும்
அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவரது கவிதைகள் சில பிரசுரமாகியுள்ளன