ராஜுவுக்கு… அதான் நம்ம தங்கராஜுக்குத் தூக்கமே வரவில்லை.
ஆனால், சீக்கிரம் படுக்க வேண்டும் என்ற அம்மாவின் உத்தரவுப்படி, ஒன்பது மணிக்கே படுக்கையில் படுத்துவிட்டான்.
புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லை.
மறுநாள் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டுமே! ஏழு மணிக்குப் பள்ளிக்கூடத்தில் இருக்க வேண்டும்!
வீட்டுப்பாடம் அல்லது மறுநாள் தேர்வு இருக்கும் தினங்களில் தூங்கி வழிவான். அதற்கும் அப்பா அம்மாவிடம் இருந்து திட்டுகள் கிடைக்கும்.
இன்று சீக்கிரம் படுத்தால் தூக்கம் வரவில்லை.
சுற்றுலா போகப் போகிறான் ராஜு! அந்தப் படபடப்பில் தான் அவனுக்கு இரண்டு நாட்களாகவே இருப்பு கொள்ளவில்லை.
“அம்மா! நாங்க மல மேல ஏறப்போறோம்! அங்கேர்ந்து பாத்தா எல்லாம் குட்டி குட்டியாத் தெரியும். நீ மலை மேல ஏறியிருக்கியா?”
”ம்ம்… போயிருக்கேன். மல மேல காத்து நல்லா அடிக்கும். கொஞ்சம் குளிரும்”
“அம்மா! ஒரு குளுகோஸ் டிரிங் கொண்டு வரணும் டீச்சர் சொல்லி இருக்காங்க !”
“சரிடா! ஒண்ணு இல்ல ரெண்டு டெட்ரா பேக் வாங்கி வச்சு இருக்கேன்.”
“டெட்ரா இல்லம்மா, குளுகோஸ்”
“டேய்! குளுகோஸ் தண்ணி, ஆரஞ்சு சுவையில அட்டைப் பெட்டில இருக்கும்”
“ஓ அதுவா! ஓகே! ஓகே!”
அம்மா அவனுக்காகத் தக்காளி சோறு தான் செய்து தரப் போகிறார். வேர்க்கடலை, முந்திரி எல்லாம் போட்டு! தங்கராஜுவுக்கு அது ரொம்ப பிடித்த உணவு. மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவான்.
ராஜூ, புரண்டு புரண்டு படுத்து யோசித்துக் கொண்டு இருந்தான்.
ஏதேதோ நினைவுகள்! தமிழ் ஆசிரியை சொன்னது நினைவுக்கு வந்தது.
”பிள்ளைகளே! சுற்றுலா முடிந்து வந்தவுடன், கட்டுரை எழுத வேண்டும். எங்கு சென்றீர்கள், எப்படிச் சென்றீர்கள்,சுற்றுலாவில் என்ன பார்த்தீர்கள், முக்கியக் குறிப்புகள், ஏதாவது சுவையான நிகழ்ச்சிகள்… என அனைத்தையும் குறிப்பிட்டு எழுத வேண்டும்.”நாளைக்கு வந்தவுடன் எழுதி விட வேண்டும். இல்லையென்றால் மறந்து விடும்”.
ராஜுவின் மனது ’சுவையான’ என்ற வார்த்தையில் சுழன்றது.
அம்மா செய்யப் போகும் சுவையான தக்காளி சாதம்! நினைக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுறியது அவனுக்கு.
அப்பா நிறைய தின்பண்டங்கள் வாங்கி வந்துள்ளார். புதினாச் சுவை பிஸ்கெட், ‘பாப் கேக்’ என்ற சின்ன சின்ன சதுர வடிவ கேக் துண்டுகள், கேட்பரீஸ் ஜெம், மசாலா பொறி, காரமில்லாத பூந்தி, வெண்ணெய் போட்ட முறுக்கு, ‘ரிங்’ முறுக்கு, தேங்காய் பர்பி…
அம்மாவே அசந்து விட்டாள்.
“எதுக்கு இப்படி ஊர்ப்பட்டதை வாங்கி வச்சிருக்கீங்க?”
“சும்மா! பாத்ததும் வாங்கணும் போல இருந்தது. வாங்கிட்டேன்” அப்பா.
“அப்பா, அம்மாவும் எனக்காக சூட மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், உருளை சிப்ஸ் எல்லாம் வாங்கி இருக்காங்க”
“ஆங்! அது, பயணம் போகும் போது நாலு ஃப்ரெண்ட்ஸுக்குக் கொடுத்து சாப்பிட வசதியா இருக்கும். கடலை மிட்டாயும் வாங்கி இருக்கேன்” என்றாள் அம்மா.
“சரி, சரி, ஒண்ணு ரெண்டை எடுத்து உள்ள வை. தேவையானதை மட்டும் அவன் பையில் வை” என்றார் அப்பா.
பேருந்து ஏறியதும் எல்லோருக்கும் கொடுத்துச் சாப்பிட, அப்புறம் சாப்பிட, சிறு பசி, திடீர் பசிக்குச் சாப்பிட, வாய் கசந்தால் சாப்பிட, தொட்டுக் கொள்ள, லேட்டானால், பசித்தால் சாப்பிட என கிட்டத் தட்ட எல்லா அயிட்டமும் பைக்குள் போய் விட்டது.
படுக்கையில் படுத்துக் கொண்டு இருக்கும் ராஜூ எதை எதை எப்போது சாப்பிடலாம் என மனதுக்குள் எக்ஸெல் ஷீட் போட்டுக் கொண்டு இருந்தான்.
நடுவே, நடுவே… ”தக்காளி சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள சிப்ஸா? பூந்தியா? முறுக்கா?” என்ற வழக்காடு மன்றம் வேறு ஒரு பக்கம் ஓடிக் கொண்டு இருந்தது.
அவன் நண்பன் சித்தார்த் லெமன் ரைஸ் கொண்டு வரப் போகிறான். அவனுக்கு ஒரு பிடி தக்காளி சாதம் கொடுக்க வேண்டி வரும்…
இப்படி ‘சுவையான’ நினைவுகளில் இருந்தவன், தன்னையறியாமல் கண்ணயர்ந்தான்.
மறுநாள் அம்மா அவனை உலுக்கி எழுப்பும் போது தான் எழுந்தான்.
விடுவிடுவென பல் தேய்த்து, காலைக்கடன்களை முடித்து, குளித்து முடித்து விட்டான் ராஜூ!
“என்னடா! தங்கம்! இப்படி தினமும் சுறுசுறுப்பா பள்ளிக்கூடம் கிளம்பினா எவ்வளவு நல்லா இருக்கும்” அப்பா.
“அப்போ! தெனம் டூர் ப்ரோகிராமும், தக்காளி சோறும் வேணும்” தங்கராஜூ.
“அடேய்! தீனிப் பயலே! அருங்காட்சியகம் பாக்கப் போற! என்ன என்ன முக்கியமாப் பாத்தேன்னு எனக்குச் சொல்லணும், புரியுதா?” அப்பா.
“ஆமா! தமிழ் டீச்சர் கட்டுரையே எழுதச் சொல்லி இருக்காங்க”.
இரண்டு இட்லிகளையும் ஒரு கரண்டி தக்காளி சாதத்தையும் அம்மா ஊட்டி விட்டாள்.
“அம்மா! சூப்பர்ம்மா! “ என்ற தங்கராஜின் சொல்லில் அம்மா பெருமிதம் அடைந்தாள்.
ராஜுவின் அப்பா அவனைப் பள்ளியில் விட்டபின் அப்படியே தன் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும்.
தக்கராஜூவை, வகுப்பாசிரியரிடம் ஒப்படைத்த பின், சிறிது நேரம் பள்ளியிலேயே இருந்தார் அப்பா.
மாணவர்களை அழைத்துச் செல்லும் பேருந்துகள் வரிசையாக நின்றிருந்தன. இன்னும் ஒரு பேருந்து வரவேண்டுமாம். அது வந்தவுடன் மாணவர்களை ஏற்றிக் கொண்டு கிளம்பி விடுவார்கள்.
“அமைதி! அமைதி! சைலன்ஸ்!“ என்று ஆசிரியர்கள் கூவிக் கொண்டு இருந்தாலும் மாணவர்கள் ஆரவாரமாகக் கத்திக் கொண்டு இருந்தனர்.
ஒரு பேருந்தில் இருந்து திரைப்பாடல் ஒன்றைப் போட, மாணவர்கள், உரக்கக் கத்திக் கொண்டு, குதியாட்டம் போட்டனர்.
அதோ அந்தக் கடைசிப் பேருந்து பள்ளி வளாகத்துக்குள் வந்து விட்டது. ராஜூவின் அப்பா அவனுக்குக் கையை அசைத்து விட்டுக் கிளம்பிவிட்டார்.
பேருந்துகள் வந்துவிட்டதால் ஆரவாரத்துடன் கூச்சல் ஒருபுறம், “பிரச்சினையை லெஃப்ட் ஹேண்டில் டீல் பன்னும் மைக்கலசி” என்ற பாடல் வரியினைக் கத்திக் கொண்டு குதியாட்டம் ஒருபுறம், மாணவர்களின் களிப்புக்குப் பங்கமில்லாமல், அவர்களை ஒழுங்குபடுத்தி, சுற்றுலாவை இனிதே துவக்கப் பிரயத்தனப்படும் ஆசிரியர்களின் ஆணைகள் ஒருபுறம் என சுற்றுலாக் கொண்டாட்டத்தின் உச்சக் கட்ட உணர்வுப் பெருக்காக பள்ளி வளாகம் இருந்தது.
“ஆறாம் வகுப்பு ‘பி’ பிரிவு” ஆசிரியையின் அழைப்புக்கு மின்னல் வேகத்தில் ஓடி வந்தனர் மாணவர்கள்.
நம்ம தங்கராஜும் தலை தெறிக்க ஓடி வந்தான்.
ஆசிரியர்கள் ஒழுங்குபடுத்தி, வரிசையில் நிற்க வைத்து ஒவ்வொருவராக ஏற வைத்தாலும் ஏறும் போது முட்டிக் கொண்டு தான் ஏறினார்கள்.
தங்கராஜுக்குப் பின்னால் நின்ற அர்ஜூன் அவவை நெட்டினான். ராஜுவின் தோள் பை அறுந்து கீழே விழுந்தது. பையின் ‘ஸிப்’ உடைந்து தெறித்தது. உள்ளே இருந்த தின்பண்டப் பொட்டலங்கள் இங்கும் அங்குமாய் விழுந்தன.
தங்கராஜு, “ஐயோ ! என் பை !” என்று சொல்லியபடி, வரிசையை விட்டு நகர, பின்னாலிருந்த அர்ஜூன் மற்றும் சில மாணவர்கள் அவனைத் தள்ளி விட்டு, மட மட்வெனப் பேருந்தில் ஏறினர்.
“என்னாச்சும்மா? என்றபடி ஓடி வந்தார் வகுப்பு ஆசிரியை.
மாணவர்கள் ஒன்றிரெண்டு பேரும் ஓடி வந்து, சிதறிக் கிடந்த ’ஸ்னாக்ஸ்” தினுசுகளைப் பொறுக்கினர்.
“பசங்களா! எடுத்ததை அவன் கிட்ட கொடுங்க” என்றார் ஆசிரியை.
தங்கராஜூ கண்களில் கண்ணீர்.
அம்மா கட்டித் தந்த தக்காளி சோறு டப்பா திறந்து கொண்டு, எல்லாம் கீழே கொட்டி விட்டது.
அம்மா மூன்று இட்லிகளும் ஒரு டப்பாவில் கொடுத்து இருந்தார். அது திறக்கவே இல்லை.
தங்கராஜுக்குத் துக்கம் பீரிட்டது.
அறுந்த பையில் மீண்டும் அவனது தின்பண்டப் பொட்டலங்களைப் போட்ட ஆசிரியை, “ஒண்ணுமில்லப்பா, சுற்றுலா போகப் போறோம் இல்ல… ஜாலியா இரு! அழாத!” என்றார்.
கண்ணைத் துடைத்துக் கொண்டு பேருந்தில் ஏறினான் தங்கராஜு.
அர்ஜுனும் சில மாணவர்களும், “அறுந்த பை அம்மாசி…. அங்காடிக்குப் போனானாம். அஞ்சு காசுக்கு ஆறு வடை வேணுமின்னு கேட்டானாம்… ஏய்… அறுந்த பையி…” என நக்கலாகப் பாடினர்.
தங்கராஜூ சத்தமாக அழத் தொடங்கினான்.
“சும்மா இருங்கடா! “என மாணவர்களை அதட்டல் போட்டார் ஆசிரியை.
கிளம்பும் நேரத்தில் கண்ணீரும் சத்தமாகவும் இருப்பதை அவர் விரும்பவில்லை.
தலைமை ஆசிரியை வேறு வாழ்த்து சொல்ல ஒவ்வொரு பேருந்தாக வந்து கொண்டு இருக்கிறார்.
”தங்கம்! அழாத கண்ணு! நாம சுற்றுலா போற இடத்தில உனக்கு நல்ல பையா நா வாங்கித் தரேன் என்ன?” ஆசிரியை.
அவன் கண்களைத் துடைத்து, சாக்லெட் ஒன்றை அவனிடம் கொடுத்த ஆசிரியையிடம் தங்கராஜு கேட்டான், “மிஸ், மிஸ், அங்க தக்காளி சோறு கிடைக்குமா?”
00

கமலா முரளி
கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.
ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.
கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
இவரது “மங்கை எனும் மந்திர தீபம்” (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ?” என்ற சிறுகதைத் தொகுப்பு மணிமேகலைப் பிரசுர வெளியிடாக மலர்ந்துள்ளது.
மற்றும் இவரது சிறார் கதை நூல், “கிளியக்காவின் பாட்டு” லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடாக வந்துள்ளது.
கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் முத்தமிழ் சங்கம் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் இணைந்து வழங்கிய ’திருப்பூர் சக்தி விருது’ இந்த ஆண்டு (2024) பெற்றுள்ளார்.