நவ்யாஸ்ரீ வீட்டுப்பாடம் எழுத உட்கார்ந்தாள். பென்சிலை ஆட்காட்டி விரலுக்கும் பெருவிரலுக்கும் இடையே பிடித்து எழுதும் போது உள்ளங்கை முழுதும் இழுத்துப்பிடித்தது, வலி!

பென்சிலைக் கீழே வைத்து விட்டு உள்ளங்கையைப் பார்த்தாள். கை முழுதும் சிராய்த்து இருந்தது. தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது கீழே விழுந்து விட்டாள். கற்கள் கையைப் பதம் பார்த்துவிட்டது.

கை வலிக்காத மாதிரி பென்சிலை வைத்துக் கொண்டு எழுதுவதைத் தொடர்ந்தாள் நவ்யா.

“என்ன நவ்யா, இப்படிக் கோணலா எழுதி இருக்க” என்று சொல்லியபடி, அம்மா, பெட்டியில் இருந்து, அழிப்பானை எடுத்து கடகடவென நவ்யா எழுதி இருந்ததை அழித்து விட்டார்.

“அச்சசோ! திருப்பி எழுதணுமா?” முணுமுணுத்தாள் நவ்யா.

“ம்ம்… எனக்கு முணுமுணுத்தாலும் கேக்கும். ஆமாம், சரியா எழுதலன்னா திருப்பி எழுதித் தான் ஆகணும்” என்றார் அம்மா.

 ”ம்ம்! எழுது ஒழுங்கா!”

நவ்யா மீண்டும் கோணலாகத் தான் எழுதினாள். அம்மா அருகிலேயே இருந்ததால் கை வலிப்பதைக் காட்டிக் கொள்ளாமல் இருப்பதில் கவனம் செலுத்தினாள்.

“என்னம்மா இப்படி எழுதற? அம்மா மறுபடி எழுதச் சொல்றாளே, கவனமா எழுதுவோம்ங்கிற நினைப்பு வேண்டாம்?”அம்மாவின் குரல் உயர்ந்தது.

”பென்சில ஒழுங்காப் பிடிச்சி எழுத வேண்டாமா? நல்ல க்ரிப்பா பிடி”

நவ்யாவின் கையில் இருந்த பென்சிலை விரல்களோடு சேர்த்து அழுத்தினார் அம்மா.

‘வீல்’ என்று அலறினாள் நவ்யா. வலி தாங்கமுடியாமல் கண்ணீர் தழும்பியது.

 ”ஹேய்! சும்மா விரலை நெருக்கித் தான பிடிச்சேன்.” என்ற அம்மா, அவள் அழுவதைப் பார்த்து, “என்னாச்சு பாப்பா! ஏன் அழுவுற?” என்றபடி உள்ளங்கையைப் பார்த்தாள்.

நல்லெண்ணெய் எடுத்துக் கைகளில் தடவி விட்டு, “என்ன ஆச்சு? இப்படி சிவந்து கிடக்குதே? இத வச்சுகிட்டு ஏன் எழுதற?”

ஒருபக்கம் கனிவு மறுபக்கம் கண்டிப்பு தெறித்தது அம்மாவின் குரலில்.

“விளையாடும் போது கிழே விழுந்துட்டேன்.”

“வந்தததும் ஏன் சொல்லவே இல்ல? ம்ம்! ஏன் சொல்லல?”

“நீங்க அப்புறம் விளையாட விட மாட்டீங்க, அதனாலதான்” என்று சொல்லிவிட்டு, முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டாள் நவ்யா.

“சரி சரி, ரொம்ப சமத்து தான்! வெறும் சிராய்ப்பா இருக்கு. அதுக்கே வலியில எழுத முடியல! சரி எல்லாத்தையும் மூடி வை. நாளைக்கி லீவ் தான! அப்புறம் எழுதலாம். இனிமே அடி பட்டா உடனே சொல்லு!“

கைபேசி கிடையாது என்று சொல்லி விட்டார் அம்மா. கை வலிக்கும் என்று. ஆனாலும் நவ்யாவுக்குப் பிடித்தமான மோட்டு – பத்லு நாடகத்தைப் போட்டுவிட்டாள். கூடவே, தின்பண்டங்களும்!

அப்பா வந்த பிறகு நவ்யாவுக்கான அறிவுரைகள் மறுஒளிபரப்பாகியது.

“நா ஒண்ணும் வேணுமின்னே விழல, அப்பா! சின்னுவப் பிடிக்க…”

“வேணுமின்னே யாரும் விழ மாட்டாங்க, நவி! விளையாடத் தெரியாதவங்க தான் விழுவாங்க”

கவனமாக விளையாட வேண்டும் என்ற கோட்பாட்டைத் திணித்த பின் அப்பாவும் தன் பங்குக்கு சில பல தின்பண்டங்களைத் திணித்தார்.

மறு நாள் மாலை! மீண்டும் வீட்டுப்பாடம் எழுதும் படலம் ஆரம்பமானது.

வலி அதிகம் இல்லை என்றாலும், நவ்யா பென்சிலை சரிவரப் பிடிக்கவில்லை.

நேற்றில் இருந்து என்ன தான் திட்டினாலும், பிள்ளைக்கு வலி இருக்கிறதே என்பதால், எல்லா வேளையும் அம்மாவே உண்வை ஊட்டி விட்டதும், விருப்பப்பட்ட பாடல்களையும் நிகழ்ழ்ச்சிகளையும் தொலைக்காட்சியில் ஓடவிட்டதாலும், நவ்யாவுக்கு கோணங்கித்தனம் மிகுதியாகிவிட்டது.

கொஞ்சம் சுணக்கமாக இருந்தால், அப்பா எழுதிக் குடுத்து விடுவாரா? அம்மா கையைப் படித்துக் கொண்டு எழுதினால் கூட அப்படியே முடித்துவிடலாம் என அந்த சின்ன மனசில் என்னென்னவோ நினைவுகள் !
”பென்சில ஏன் இன்னும் க்ரிப் இல்லாம பிடிக்கிற ?“ என்று அம்மா கிட்ட வந்து பென்சிலை அழுத்துவதற்குள் எப்படியோ பென்சில் நவ்யா கையில் இருந்து கிழே விழுந்து விட்டது.

“ஹூம், ரொம்ப ஒழுங்கு! போ எடு!“

பென்சில் முனை முறிந்துவிட்டது.

”அம்மா கூர்ப் உடைஞ்சிடுச்சு!”

”ஆமாண்டி! எழுது படின்னா ஆயிரம் குணக்கு பண்ணுவ”

“குணக்கு அப்படின்னா என்னம்மா?”

“ம்ம்… வெறுப்பேத்தற மாதிரி எதையாவது செய்யறது”

“பென்சில் தான் அம்மா குணக்கு பண்ணுது”

“சரி! ஷார்ப்பனரை எடு!”

பெட்டியைத் திறந்தாள் நவ்யா. ஷார்ப்பனர் இல்லை.

நெற்றியில் கவலை ரேகைகள். சட்டென உள் அறைக்கு ஓடினாள்.

“அங்க எங்க போற?”

“ஷார்ப்ப்னர் எடுக்க”

அஞ்சு நிமிஷமாக வெளியே வரவில்லை நவ்யா.

“நவ்யா, என்ன பண்ணற”

நவ்யாவின் பென்சில் பெட்டியை கையில் எடுத்துக் கொண்டு அம்மாவும் அந்த அறைக்கே வந்துவிட்டாள்.

”நேத்திலேர்ந்து நீ எழுதவே இல்ல. பெட்டிலதான இருக்கணும் ஷார்ப்பனர். அலமாரிக்கு எப்படிப் போகும்?”

நவ்யா அலமாரிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். கண்களில் கலக்கம்.

“இங்க இந்த கார்னர்ல இருந்தது. இப்ப காணோம். ஷார்ப்பனர் குணக்கு பண்ணுது”

“யேய்! சும்மா வாயாடாத. நேத்திக்கு பள்ளிக்கூடம் போகும் போது நாந்தான் ஷார்ப்பனரை இந்தப் பெட்டில வச்சு விட்டேன். நீ நேத்திக்கி வீட்டுக்கு வந்து எதுவும் எழுதல. பென்சில் சீவல்ல. அப்ப எப்படி அலமாரில வரும்?”

எதுவுமே புரியாத பிஞ்சுக்குழந்தையாய் முகத்தை வைத்துக் கொண்டு இருந்தாள் நவ்யா.

இருவருமாக நவ்யா பள்ளிக்குக் கொண்டு செல்லும் பையில் நன்றாகத் தேட ஆரம்பித்தார்கள்.

நோட்டுப்புத்தகத்தில் இருந்து கிழித்த காகிதங்கள் நிறைய இருந்தன.

“இதென்ன, ‘யூ ஆர் மை பிஸ்ட் ஃபரைய்டு’ அப்படின்னு பல தடவை எழுதி இருக்க?”

“பெஸ்ட் ஃப்ரெண்ட்… அப்படி எழுதினாத் தான் பேசுவேன்னு தனிஷ்கா சொன்னா”

“ஃப்ரைய்ட் அப்படின்னா என்ன தெரியுமா? வறுத்த தின்பண்டம்” அம்மா.

“ஆங்! நீ கூட உருளைக் கிழங்கு ஃப்ரை பண்ணுவியே அம்மா! ஆனா அது இல்லம்மா. நா எழுதினது ”ஃப்ரெண்டு!“ என்று சொல்லிய நவ்யாவுக்குத் தன்னுடைய எழுத்துப்பிழை புரிந்து சிரிப்பு வந்து விட்டது.

“தனிஷ்காவை ஃப்ரை பண்ணிணது இருக்கட்டும். ஷார்ப்பனர் எங்க? கரடி ரப்பரும் காணும்.” மீண்டும் பாயிண்ட்டுக்கு வந்தாள் அம்மா.

நவ்யாவும் மீண்டும் ‘ஐயோ பாவம்’ மோடுக்கு வந்து, பவ்யமாக நின்றாள்.

அப்பா அவர் அறையில் இருந்து வந்தார்.

நவ்யாவின் ‘ஷார்ப்பனர், அழிரப்பர் தொலைத்த படலம்’ மறு ஒளிபரப்பாகியது.

“நாளைக்கு டீச்சர் கிட்ட நீ போய் கேட்டுப் பாரு.”

“ம்ம். கேக்கலாம். இருந்தாலும், இவளுக்கு ஷார்ப்பனர் கொடுத்து தான் அனுப்ப வேண்டி இருக்கும். நீங்க கடைக்குப் போகும் போது ஒரு ஷார்ப்பனர் வாங்கிட்டு வாங்க”

“என்ன அம்மாவும் பொண்ணும் விளையாடுறீங்களா? முந்தாநாள் தான் வாங்கினேன் ஷார்ப்பனர் அஞ்சு ரூவா. தினம் தொலைச்சுட்டு வந்தா தினம் வாங்க முடியுமா?”என்று படபடத்த அப்பா, “பணம் என்ன மரத்துலயா காய்க்குது?” எனக் கேட்க,

“ஜி- பே ல காய்க்குது அப்பா” என நவ்யா டக்குன்னு சொல்ல,

குபீர் சிரிப்பு வெடித்தது.

“அப்பா, குணக்கு பண்ணாம கடைக்குப் போய்ட்டு வாங்க” எனச் சொல்லிவிட்டு ஓடிய நவ்யாவை அப்பாவும் அம்மாவும் செல்லமாகத் துரத்தினர்.

000

கமலா முரளி

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர்  திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.

ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.

கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவரது “மங்கை எனும் மந்திர தீபம்”  (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ?” என்ற சிறுகதைத் தொகுப்பு மணிமேகலைப் பிரசுர வெளியிடாக மலர்ந்துள்ளது.

மற்றும் இவரது சிறார் கதை நூல், “கிளியக்காவின் பாட்டு” லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடாக வந்துள்ளது.

கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் முத்தமிழ் சங்கம் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் இணைந்து வழங்கிய ’திருப்பூர் சக்தி விருது’ இந்த ஆண்டு (2024) பெற்றுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *