அவள் என்னை கடந்து சென்றபோது எதுவும் தோன்றவில்லை. எதிர்திசையில் தீவிரமான முகபாவத்துடன் நடந்து கொண்டிருந்த நான் சட்டென ஆணி அறைந்தாற்போல் நின்றுவிட்டேன். இந்த முகத்தை நீ எங்கேயோ பார்த்திருக்கிறாய் என்ற குரல் அசரீரியாக காதுக்குள் சப்தமிட்டது. திரும்பி பார்த்தபோது நீண்ட கூந்தலை வனப்பாக முடிந்து நளினமாக சாலையைக் கடந்து கொண்டிருந்த அவளைக் கண்டேன்.
பூமிக்கு அடியில் காந்த சக்தி இருக்கும் என்று சேலையில் மலர் குத்திய அறிவியல் டீச்சர் எட்டாம் வகுப்பு அரைப் பரீட்சை லீவு முடிந்து பள்ளிக்கு வந்த முதல் நாளில் எடுத்த பாடம் இன்று நிரூபணமாகிவிட்டது. எனது கால்கள் இழு விசைக்கு கட்டுண்டதுபோல் அவளது கால்களைப் பின் தொடர்ந்தது. பொதுவாக எனக்கு பெண்களை பின்தொடரந்து செல்லும் துணிவு கிடையாது. இந்த நூற்றாண்டுக்கான எந்த அளவுகோள்களிலும் பொருந்தாத ஜென்மமாக நடமாடிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது புற்றீசல்களாக ஜனக்கூட்டம் துடிதுடித்து நகர்ந்துகொண்டிருக்க அவர்களுக்கு நடுவே அவளை பின்தொடர்ந்து செல்வது விளக்கமுடியாத நுண்ணுர்வுகளை எனக்குள் பிரசவித்தது.
கொடுமையான நகரத்து வீதிகளில் அர்த்தமற்று திரிந்து கொண்டிருந்த வேளையில் இப்படி ஒருத்தி எனது மொத்த வாழ்வையும் ஆக்கிரமித்துக்கொள்ளும் வேட்கையுடன் என்னைப் பின்னால் இழுத்து சென்று கொண்டிருக்கிறாள். குரூர சிந்தை கொண்ட எனது சுபாவம் தரையில் போட்டு உடைத்த கண்ணாடியாய் சுக்குநூறாக நொறுங்கியது. பாதங்கள் கிழிய அவற்றின்மீது நடந்து கொண்டிருப்பது போல் உணர்கிறேன். சுயநலவாதியான எனது கவனத்தை இவள் நொடியில் ஒரு எதேச்சையான கடந்து செல்லலில் சிறை கொண்டது ஆச்சர்யமாக இருந்தது.
அந்த சூழ்ச்சியான நகரத்துக்குள் பொதிகை ரயில் என்னை கொண்டுவந்து விட்டுச்சென்ற நாளில் இருந்து முகங்களை மறப்பதில் தேர்ச்சி பெறத் தொடங்கியிருந்தேன். உயிரேதுமற்ற ஆயிரமாயிரம் முகங்களை கடந்துசெல்ல பழகியிருந்தேன். ஆனால் இவளின் முகத்தில் தென்பட்ட நெருக்கமான உணர்வு எனது நேர்கோட்டுப் பயணத்தை புரட்டிப் போட்டுவிட்டது. பிஸ்கட்டை ஏந்திய எஜமானின் கையை வாலாட்டியபடி பின்தொடர்ந்து செல்லும் வளர்ப்பு நாய் போல அவளைத் தொடர்ந்து சென்றேன்.
இந்த முகத்தை எங்கே பார்த்திருக்கக்கூடும் என்ற விசாரணைக்குள் இறங்க முடியாதபடி அவள் தனது நடையின் வேகத்தைக் கூட்டினாள். மலர் விரித்த பூச்செடிகள் கால் முளைத்து நடப்பது போல் அவளது பாதம் பூமியின் மீது அழுத்தமில்லாமல் பதியும் மென்மை என்னைப் பித்து பிடிக்க வைப்பதாக இருந்தது. அந்தரத்தில் எக்குவது போல் காற்றில் மிதக்கும் பாவனையோடு அவளின் நடை சினிமாவில் சொல்வதுபோல் வயிற்றுக்குள்ளிருக்கும் பட்டாம்பூச்சிகளை விழிக்கச் செய்தது. நகரத்தின் குருட்டுத்தனத்தை ஒரு கணம் மறக்கச் செய்த அவளின் பாதங்களில் விழுந்து வணங்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
தினந்தோறும் நான் கண்டு அஞ்சும் பெருவெளியில் எந்தவித அக்கறையுமின்றி சர்வ அலட்சியமாக அவள் கடந்து சென்றது எனக்குப் பிடித்திருந்தது. எனக்கு பிடித்திருந்தது என்று கூறுவதற்கு எதையும் மிச்சம் வைக்காமல் அனைத்தையும் அந்நகரம் விழுங்கிமுடித்திருந்த நிலையில் அமுதசுரபியாக எனது மீட்புக்கு அவள் வந்திருக்கிறாள் என்று தோன்றியது. கடந்த மாதம் மழை ஓய்ந்த இதமான வெயில் நாளொன்றில் நான் வேலையிலிருந்து நிற்கிறேன் என்று கூறியபோது சினந்த முகத்துடன் ஏன் என்று அந்த மேனேஜர் அர்த்தமற்று கேட்டதற்கு, பிடிக்கவில்லை என்று நான் சுருக்கமாக சொல்லியிருந்தாலும் அதற்குள் தனிமனித சமூக பொருளாதார ஆன்ம வாழ்க்கைச் சலிப்பினை அடிக்கோடிடும் ஆயிரமாயிரம் உள்ளர்த்தங்களிருப்பது அவருக்கு இம்மியளவும் புரிந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.
வீராவேசமாக வேலையை விட்டிருந்தாலும் அடுத்து என்ன செய்வது என்ற அருவருப்பான கேள்வி என்னைச்சுற்றி வளைத்து எனக்குள் புகுந்து இம்சித்து வந்தது. வெளி மாநிலம் செல்லும் ரயில் பாதையில் நாட்கணக்காக நடந்தே செல்லத் தீர்மானித்து நான் அவசரமாக சென்று கொண்டிருந்த போது தான் இந்த ராட்சசி என் கண்ணில் படவேண்டுமா என்று நொந்து கொண்டேன். சொந்த ஊருக்கே போயிருக்கலாம் என்ற விசாரமான கேள்வி எனக்குள் அமர்ந்து கொண்டு நச்சரிக்கத் தொடங்கியது. சொந்த ஊர் என்பது அடுப்பில் சூடேரும் சோற்றுப் பானையாகவும் அதற்குள் நானும் வேகவைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கனவும் நேற்றிரவு வராமல் இருந்திருந்தால் நான் இந்நேரம் வடக்கிருந்து உயிர்துரப்பதை விட தெற்கிருந்து பிழைப்பைப் பார்க்கலாம் என பொதிகை ரயிலில் கடைசிப் பெட்டியில் மாவு பிசைகின்ற இயந்திர கதியில் உடல் நசுங்க உள்ளே புகுந்து மருந்து வாடையை பரப்பிக்கொண்டிருக்கும் பயோ டாய்லட் கதவின் அண்மையில் ஒற்றைக் காலில் நிற்கவேணும் லாவகமாக இடம்பிடித்திருப்பேன்.
ஊரின் மத்தியில் நண்பர்கள் கூடும் கூட்டமில்லாத டீக்கடை முகப்பில் ஆண்டாண்டு காலமாய் கொதித்துக்கொண்டிருக்கும் பாய்லரில் உள்ள வெந்நீரைப் போல ஊத்தை மனது அலைபாயந்துகொண்டிருந்தது. உலகத்தினிற்று தொடர்பருபட்டு பாழ் வெளியான மனத்தின் வெறுமைக்குள் திருஷ்டிப் பொட்டாக இவள் ஏன் வந்தாள். ஞாபகமூட்டும் முகத்துடனான இவளின் உருவத்தில் பிழை யிருக்கிறது. ரோஸ் வண்ணம் பரவிய கன்னத்தின் மேட்டில் துருத்திக்கொண்டிருந்த ஒற்றை மச்சம் முற்பிறவிக்குள் அழைத்துச் செல்லும் மந்திரத்தன்மையை கொண்டிருக்கக்கூடும். சிதறிய எண்ணங்கள் கலேடோஸ்கோப்பாகி குவியல் குவியலாய் மனதுக்குள் பின்ன பேர் தெரியாமல் ஊர் தெரியாமல் அலைமோதும் எண்ணங்கள் உயிருடன்மோதி மெதுமெதுவாக சுவடுகள் பதிக்க பெட்டையின் பின்னால் சென்றவனானேன். வாகனமேதும் வருகிறதாவென பின்னால் திரும்பி ஒருகணம் பார்த்தாள். கண்களினோடு கண்களைப் பதித்து வசைமொழியொன்றைச் சொல்லாமல் சொன்னாள். பெண்களுக்கு எப்போதும் ஞாபக மறதி அதிகம் என்று ஒருதலைக் காதலில் மனமுடைந்து எண்ணற்ற முறைகள் தற்கொலைக்கு முயன்றும் உயிர்விடமுடியாத ஏக்கத்தில் அலையும் பால்ய சினேகிதன் சொல்லியிருக்கிறான். இவளும் அதற்கு விதிவிலக்கல்ல. திசைக்கொரு பக்கமாய் தலையைச் சுழற்றி குழம்பியவளாக என்னைப் பார்த்து நின்றவளுடைய நெருப்புத் துண்டுகளான கண்களை நேருக்கு நேராகப் பார்க்கக்கூசி எதையோ தேடும் தீவிர பாவத்தை நாடகமிடத் தொடங்கியிருந்தேன். கரு நிறங்கொண்ட சீறும் சர்ப்பமாய் பின்னற்கூந்தல் முதுகில் அசைந்திட மீண்டும் ஒருமுறை சாலையைக் கடந்து அனைத்தையும் விழுங்கும் பைசாசம் போல இருட்புகை சூழ்ந்த குறுகிய தெருவொன்றில் நிதானித்து திரும்பிப் பார்த்தாள். பதினெண் சித்தரும் சொன்னதுபோல பெண்ணாசை என்னை கயிறிட்டிழுக்க இருட்டுக்குள் ஒழிந்த பூதக்கவர்சிகள் என்னை அழைப்பதாய் கற்பித்துக் கொண்டு புண் கண்ணிரண்டினை பின்தொடந்து சென்றேன். ஞாபகக் கிழவன் அர்த்தமாய் சிரித்தான். யாரிவள் என்று எனக்குச் சொல்வதாய் இருள் வீதியின் குப்பைகளெல்லாம் மலமிட்டு உந்த மூத்திர சந்துக்குள் புன்னகைத் திழுத்தான். கண்ணீர் கட்டிய விழிகளின் வழியே ஆயிரமாண்டு பழகிய உரிமையில் அதட்டலாய் என்னை முறைத்தவள் ஒருகணம் நெருக்கமாய் வந்து ரகசியம் சொல்வதாய் பிரம்மை தட்டிட சிலையாகி நின்றேன். கிழவனும் அவளும் கைகோர்த்து நடக்கும் இழியுணர்ச்சியான பிம்பம் வளர்ந்திட நகரத்தின் வேதனை எனக்குள் இறங்கியது. பூமியில் வாழும் அத்தனை மனிதரின் கொடிதினும் கொடிய துயரங்களனைத்தும் என்னுடையதாகி வெருட்டத் தொடங்கின. எட்டாம் வகுப்பு அரைப் பரீட்சை லீவில் பக்கத்து ஊர் வரை சைக்கிள் மிதித்து திசை மறந்தலைந்த ஞாபகத்திற்குள் இவளும் இருப்பதாய் தோன்றியதெனக்கு. சித்தம் தெளிய இடம் கொடுக்காமல் இருள் தெரு கடந்து சாலையில் இறங்கினாள். சிலைக்குள்ளிருந்து உடைபட்டுக்கொண்டு உயிர்ச்சதையோடு வெளிப்படும் மனிதனாய் பேய்க்கூச்சலிட்டு அலறித் துடிக்கும் நகரத்து சாலைக்குள் நானும் நுழைந்தேன். எத்தனை தூரமும் எந்த எல்லைக்கும் அருவமும் உருவமும் அமைந்தவளாகி யட்சினியாக என்முன் மிதக்கும் மர்மத்தின் ஊற்றான யுவதிக்குப் பின்னால் ஊழ்களும் ஜென்மமும் கடந்திட்ட வெளிக்குள் பூதத்தைத் துறந்த ஆத்துமாவாகி அலைந்துகொண்டிருக்கத் தலைப்படலானேன். எதற்கெடுத்தாலும் சிடுசிடுத்துக்கொள்ளும் சுபாவம் பொருந்திய அண்ணனின் சைக்கிளை களவெடுத்துக்கொண்டு பக்கத்து ஊருக்குப் புறப்பட்ட பிராயத்தின் நினைவுகள் விரிந்தன. திருவிழாச் சந்தையில் பொம்மைகள் திருடும் குருகுருப்போடு பக்கத்து ஊரின் தெருக்களில் அலைந்தேன். வெயிலுக்கு அஞ்சிய மேகங்களனைத்தும் காதலை மறந்து விலகி நின்றிருக்க ஏக்கத்தைப் போக்கும் மாலையின் வருகையை தங்கத்தை சுரந்து வரவேற்றது வானம். ஊருக்குத் திரும்பும் வழியினை மறந்து பூமியின் தனித்த உயிரினமாகி இனம்புரியாத அச்சத்தில் உலள பேய்க்கனவாக தெருக்கள் அனைத்தும் புதிருக்குள் புதிராய் அந்நியப்பட்டது. ஊருக்கு மீளும் திசைவழியாக ஞாபகக் கீற்று வலையிட்டிழுக்க விரல்கள் நீட்டிய வழிகளுக்குள்ளாக சைக்கிளை அழுத்தி பாதைக்கு மீண்டேன். முதுகு வளைந்த காந்தியின் சிலையும் தேவையே அற்ற மணிக்கூண்டொன்றும் அபத்தத்தின் சின்னமாய் நின்றுகொண்டிருந்தன. ரயில்வே பாலமும் பாரதி சிலையும் சலிப்பின் உச்சத்தை முன்னறிவிக்கும் உயர்நிலைப் பள்ளியின் வெளிப்பறத் தோற்றமும் கடந்தவனாகி இரவின் அடர்த்தியில் வீடுபேறுற்றேன். மண்பாதையொன்றில் விழுந்து வாரி வயிற்றினில் குதறிய சிராய்ப்பினைத் தணித்து கண்ணாடியிடத்தில் காண்பித்ததறிந்து, மிரட்டல் தொனியில் மட்டுமே பேசும் குடும்ப டாக்டரிடம் கொண்டுபோய் விட்டனர். சலைனில் தோய்த்த பஞ்சின் எரிச்சலில் நரம்பினில் கோர்த்த ஊசியை செறுகி வயிற்றைப் பின்னி தையலிட்டனுப்பினர். வலியினைத் தாங்கிய பெருமிதத்தோடு அறைக்கு வெளியே வந்தவன் ஒருகணம் இனம்புரியாத திகைப்பினில் மூழ்கினேன். வண்ணங்கள் கோர்த்த சேலையுடுத்திய பெண்ணின் அண்மையில் அழகுருவான சிறுமியைக் கண்டேன். வயிற்றுத் தையல் சுருக்கென வலித்தது. கண்களைச் சுருக்கி அரத்தமாய் பார்ததில் காய்ச்சல் தகிக்கும் முகத்தினில் சொஸ்தமாய் அந்த மச்சமுமிருந்தது. மணிக்கூண்டுகள் கூடி நாட்களைத் தின்ன காயத்தைத்தேடி பக்கத்து ஊருக்கும் காய்ச்சலைத் தேடி மருத்துவமனைக்கும் எண்ணற்ற முறைகள் பயணித்த போதும் தையலைக் காணும் பேறெனக்கில்லை. நியாயமாய் பார்த்தால் நான் ஒரு முட்டாள், யாரெனத் தெரியாத பெண்களைத் தேடும் பைத்தியக்காரன் என்றே தோன்றியிருக்கும். ஆழமாய் பார்த்தால் நானொரு சித்தன், யாரெனத் தெரிகின்ற பெண்களே இல்லாத சூனிய வெளிக்குள் வாசம் செய்திருப்பவன். தெரிதலை தேடும் முடிவுறாப் பயணத்தின் வழிகளைக் குலைப்பவள், திசை வரிக்கின்ற மோகினிப்பிசாசு, காலடி பதியாத நகரத்து பாதையில் நடமிடுவதுபோல் நடந்துகொண்டிருக்க, நரம்புகள் நுழைத்த ஆயிரம் ஊசிகள் உடற்பரப்புக்குள் ஒவ்வொரு இழையாய் அனுபவித்திறங்கி வலியுணர்துகின்றன. வண்ணச்சேலைக்கு அண்மித்துநின்ற சிறுமியின் உருவம் அருவமாய் வளர்ந்து நகரத்தின் பிரேதத்தில் ஒன்றுவதான அழுகல் நினைவுகள் உடலைப் பீடித்தன. பாதையறியாத பாதைகள் கடந்து தேசம் கிடையாத பிரதேசங்கள் தாண்டி யாரும் நெருங்காத இருள்களின் ஊடே ஒற்றைச் சுடராகி தகித்துக் கொண்டிருக்கும் சிறுமி வடிவான பதுமையைத் தொடர்ந்து பூமி முடிகின்ற புள்ளியை நோக்கி பெருவளி புறப்பட்ட சித்தனைப் போலே பக்கத்து ஊருக்கு அண்ணனின் சைக்கிளில் உயிரிவலிகொண்டு பெடல் மிதிக்கின்றேன். குருதியும் புழுதியுமாய் விழுந்து எழுந்த மண்பாதையோடு மொளனித்து நிற்கும் மரங்களின் ஊடாக அனைத்தையும் மறக்கும் விடுதலையுணர்வு நிழலிடுகின்றது.
000

எனது பெயர் கி. தினேஷ் கண்ணன், இலக்கற்ற பயணங்களை விரும்புபவன். இலக்கியத்திலும் சினிமாவிலும் நாட்டம் உண்டு. கூதிர் இதழில் கண்ணிவெடிகளின் தேசம், ஐந்தாவது முத்திரை ஆகிய கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தீனன் என்ற பெயரில் கவிதைகள் எழுதுவதுண்டு. ஊர் இராஜபாளையம். தற்சமயம் இதழியல் துறையில் இயங்கி வருகிறேன்.