மேற்குப்புறத்திலிருந்து சடங்குக்காக சிலுசிலுன கிளம்பி வந்த கவிதா “சடங்குக்கு வரலயா..? “என்றாள் மணிமேகலையைப் பார்த்து. “எங்க வீட்டுல கமலாவோட அம்மா பத்தரிக்கை கொடுக்கல” என்றாள் மணிமேகலை ஏக்கமாக.”சும்மா வா”என்றாள் கவிதா . அப்போது மணிமேகலை,வெண்ணிலாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு சடங்குக்கு போனம்னு அம்மாட்ட இவ ஒளறுனாலும் ஒளறிருவா; பெறகு அம்மா ஏன்டி பத்திரிக்கையே கொடுக்காத வீட்டுக்குப் போன.. அப்படி நாக்கு ருசியா திங்க கேட்குதோ..? “என்று முதுகுத்தோல பிச்சிருவா..! என்று நினைத்துக்கொண்டே “நான் வரல .நீ போயிட்டு வா”என்றாள் கவிதாவிடம்.
பின்னாடி சடங்குக்கு கிளம்பி வந்த கவிதாவோட அம்மா “ஏய் வா போவோம்” என்றாள் கவிதாவை. பேச்சுக்கு “நீங்க வரலயா..” என்று மணிமேகலை- , வெண்ணிலாவைப் பார்த்து கேட்டாள் கவிதாவின் அம்மா. அதற்கு மணிமேகலை “வரல பெரியம்மா”என்றாள். “ஏன் வரல”என்றாள்.”சும்மாதான் பெரியம்மா”என்றாள் வெண்ணிலா.
அதற்குப் பிறகு பேச்சைத் தொடராமல் கவிதாவைப் பார்த்து “ஏய்.. நேராயிருச்சு வா நாம போவோம்” என்றாள் அவளம்மா. அந்த இடத்திலிருந்து கவிதா – அம்மாவோட நகர்ந்தாள். அவர்கள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள் மணிமேகலை. “கமலாக்குதான சடங்கு. அப்ப எதுக்கு நம்ம வீட்ல கமலாவோட அம்மா வந்து பத்திரிக்கை கொடுக்கல. இத்தனைக்கும் கமலாகூடதான நானும் ஆறாம் வகுப்பு படிக்கிறேன். அப்ப எதுக்கு பத்திரிக்கை கொடுக்கல. நம்ம வீட்டுக்கு பத்திரிக்கை கொடுக்க கமலா -அவ அம்மாகிட்ட சொல்லல போல.. இருக்கட்டும் இனி பரீட்சப்ப கமலாவுக்கு எதையும் சொல்லிக்கொடுக்கக்கூடாது. எதையும் எழுதிக்கோனு காட்டக்கூடாதுன்னு” நினைத்துக்கொண்டாள் மணிமேகலை கோபமாக. சடங்குக்கு போயிட்டு, அதுஇதுனு ரெண்டு நாளைக்கு அளந்துவிடுவா கவிதா. “நான் போட்டோவில் (புகைப்படம்) நின்னேன், பிரியாணி தின்னேன், கோழிக்கறி தின்னேன்.. ஆட்டுக்கறி தின்னேன்.. ரெண்டு நாளைக்கு தொல்ல தாங்கமுடியாது. கவிதா மூலம் ஆட்டுக்கறி என்றே நினைப்பே தட்டுப்பட்டதுமே நாக்கில் எச்சி ஊறியது மணிமேகலைக்கு. ஆட்டுக்கறி… ! நம்ம வீட்ல நல்ல ஆட்டுக்கறி எடுத்து எவ்வளவு நாளாச்சு…!” என்று மணிமேகலை மனசு எண்ணிப்பார்த்தது. மணிமேகலைக்கு நினைவு பின்னோக்கிப்போனது.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி அம்மாகிட்ட ஆட்டுக்கறி கேட்டு மணிமேகலையும் -வெண்ணிலாவும் அழுக.. ஆட்டுக்கறி ஆடிப்பொங்கலுக்குதான எடுத்துத்தந்தேன் அதுக்குள்ள என்ன ஆட்டுக்கறி கேட்கிறிங்க . இப்படி அடிக்கடி கேட்டா நான் துட்டுக்கு எங்க போக …கொஞ்சநா கழிச்சு ஆட்டுக்கறி எடுக்குறேன். இப்போதைக்கு கோழிக்கறினா எடுத்துதாரேனு சொன்னாள். மணிமேகலை ஆட்டுக்கறிதான் வேணும்னு மொரண்டு பிடித்தாள் ஒரேயடியாக. மொரண்டு பிடிக்கிறத பாத்திட்டு பெறகு பொலம்பா பொலும்புனு” உங்கப்பன மாதிரி நானும் வேமா போய்சேந்தரனும். அப்பதான் உங்களுக்குத் தெரியும். நான் எவ்வளவு கஷ்டப்படுப்பட்டு உங்கள வளக்குறேன். புரிச்சுக்கிங்க.. ஆட்டுக்கறி மல வெல. ரொம்ப கிராக்கி. அந்த துட்டு வச்சு ஓரு வாரம் பொழப்ப ஓட்டிருவேன்” என்றாள். கோவத்தில் “எங்கூட படிக்கிற சுமதி வீட்டுலெல்லாம் வாரவாரம் ஆட்டுக்கறி எடுக்குறாங்க. நீதான் நம்ம வீட்டுல எடுக்க மாட்றம்மா” என்றாள் அம்மாவைப் பார்த்து மணிமேகலை. வெளத்தில் “அடுத்தவங்க குதிரைல போவாங்க. அதுக்காக நம்மலும் குதிரையில போகமுடியுமா..? நம்ம பொழைக்கிற பொழப்புக்கு வாரம் வாரம் ஆட்டுக்கறி எடுத்துத்தின்னா.. புளுப்புளுனு இருக்கும் குடும்பம்.” என்றாள் மணிமேகலைவோட அம்மா. அம்மா சொல்வதை காதில் வாங்காமல் ஒரே போர்க்களம் பண்ணினாள் ஆட்டுக்கறி வேணும்னு மணிமேகலை. வந்த கோவத்தில் ரெண்டு அப்பு அப்பினாள் மணிமேகலையை -அவளது அம்மா.
மனசு தாங்காமல் மணிமேகலையே அடிச்சதுக்கு பிரயாசித்தமாக ஒருவாரத்திற்குப் பிறகு பிள்ளைங்க ஆசையை நிறைவேத்த ஒரு முயற்சி பண்ணினாள் மணிமேகலை அம்மா. ரேஷன் அரிசியிலதான் தெனமும் அவ அம்மா சாப்பாடு காச்சுனாலும்.. ரேஷன்ல போட்ட அரிசியில ரொம்ப மோசமான அரிசிய.. காச்சி சாப்பிடமுடியாத , ரொம்ப வாடை அடிக்கிற அரிசிய எடுத்து ஒதுக்கி வச்சு வச்சு அத வெலைக்கு வாங்க வர்றவங்ககிட்டு போட்டு கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து வச்சிருந்தாள் ஆட்டுக்கறி எடுக்கம்னு. அப்பபார்த்து தெரிஞ்சவங்க வீட்ல ஒரு ஆடு அரிசியை அதிகமா தின்னு செமிக்காம தீடீர்னு செத்துப்போச்சு. முதலு முழுசா மண்ணா போயிறக்கூடதுனா தெரிஞ்சவங்க வீட்ல எல்லாம் இந்த மாதிர ஆடு அதிகமா அரிசியத்தின்னு செமிக்காம செத்துப்போச்சு பாதி விலைக்கு கறிபோடுறேன்னு ஆடு சொந்தக்காரர் தகவல் தெரிவித்தாரு. இந்த விஷயம் மணிமேகலை அம்மாவுக்கு தெரியவும் ரொம்பவும் சந்தோஷப்படடாள். செத்த ஆட்டுக்கறி எப்பவுமே முழு விலை இல்ல. பாதிவிலை தான். பாதிவிலைக்கு எடுத்து ஆட்டுக்கறி காச்சி வைத்தாள் மணிமேகலை அம்மா. . அன்னைக்கு பூராம் மணிமேகலையும் தங்கச்சியும் ஆசைதீர தின்னாங்க. எங்க வீட்ல ஆட்டுக்கறி.. ஆட்டுக்கறினு.. தன்னோடு படிக்கிற விளையாடுற புள்ளைககிட்ட பெருமையா தம்பட்டம் அடிச்சுச் சொன்னாங்க அக்காவும் தங்கச்சியும்.
இதைக் கவனித்துக்கொண்டேயிருந்த பத்மா. மணிமேகலையை ஏதாவது கொற சொல்லுணும்னு நெனச்சாள். பள்ளிக்கூடத்திலயும் சரி, விளையாடற இடத்திலயும் சரி எப்பவுமே மணிமேகலைக்கும், பத்மாவுக்கும் ஆகாது.
“எங்க வீட்ல நல்ல ஆட்டுக்கறி தான் எடுப்போம். செத்து வீசிப்போன ஆட்டுக்கறியெல்லாம் எடுக்கமாட்டோம். மூஞ்சிய ஒருமாதிரியா வச்சுக்கிட்டு சொன்னாள் பத்மா. பிறகு “வ்வோவ்னு ஓங்கருச்சு வாந்தி வந்துரும் செத்த ஆட்டுக்கறியத்தின்னால்” என்றாள் பத்மா . அப்போ பத்மாவ ஓங்கி அடிக்கணும்போல இருந்தது மணிமேகலைக்கு. இவளுக்கு எப்படித் தெரியும் செத்த ஆடுனு. ஒருவேளை இவ வீட்டுக்கும் ஆட்டுக்காரர் கறி வேணும்னா கேட்டு போயிருப்பாரோ..! பத்மா திரும்பவும் கேலிக்காக வாந்தி வருவது மாதிரி ‘வ்வோவ்னு’ சொன்னாள். அருகிலிருந்த எல்லா புள்ளைகளும் மணிமேகலையைப் பார்த்து சிரித்தார்கள். “செத்த ஆட்டுக்கறி.. செத்த ஆட்டுக்கறி வ்வோவ்னு வாந்தி வருவது மாதிரி பத்மா சொல்லவும், கோபம் உச்சிக்கு ஏறியது மணிமேகலைக்கு. “போடி சப்பைமூக்கு” என்றாள் பத்மாவைப்பார்த்து மணிமேகலை. பதிலுக்கு பத்மா “போடி செத்த ஆட்டுக்கறி ” என்றாள் மணிமேகலையைப் பார்த்து. பதிலுக்கு இவ ஏதாவது சொல்ல பதிலுக்கு அவ ஏதாவது சொல்ல என வாக்குவாதம் வளர்ந்தது . மணிமேகலையுடன் தங்கச்சி வெண்ணிலாவும் சேர்ந்துக்கிட்டு சண்டை போட்டாள் பத்மாகிட்ட. கடைசியில “செத்த ஆட்டுக்கறினு “மணிமேகலைக்கு பட்டப்பெயராகிப்போச்சு.
மணிமேகலைக்கு பத்மாவைவிட -தன் அம்மா மேல்தான் அதிகம் கோபம் வந்தது. அம்மா ரெம்ப நாளைக்குப் பிறகு ஆட்டுக்கறி எடுத்துத்தந்தாள். அதுவும் நல்ல ஆட்டுக்கறியா எடுத்துத்தராம போயிட்டாளே..! இதுக்கு அம்மா கறி எடுத்துத் தராமலே இருந்திருக்கலாம்.” என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டாள் மணிமேகலை. அம்மாவ எதாச்சும் வையவேண்டும்(வசவு)போலிருந்து. வெண்ணிலாவை கூட்டுக்கிட்டு வீட்டுக்கு புறப்பட்டாள் மணிமேகலை. “செத்த ஆட்டுக்கறினு”பின்னாடி குரல் கேட்டது. மணிமேகலைக்கு கண்ணு கலங்கிவிட்டது. வெண்ணிலா அக்காவையே பார்த்துக்கொண்டிருந்தாள். வீட்டுக்கு வந்ததும் தன்னையறியாமலே அழ ஆரம்பித்தாள் மணிமேகலை.
“என்னடி அழகுற. ஒடம்புகிடம்பு சரியில்லயாடி” “என்று பதறியடித்து அடுப்பங்கரையிலிருந்து அம்மா ஓடியந்தாள். “போ,என்னத்தொடாத -எல்லாம் ஒன்னாலதான். நீ நல்ல ஆட்டுக்கறி எடுத்துத்தராம..செத்த ஆட்டுக்கறிய எதுக்கு எடுத்துத் தந்த. அதுக்கு நீ கறியே எடுத்துத்தராம இருந்திருக்கலாம். இப்போ வெளையாடுற நக்குலு என்ன ‘செத்தாட்டுக்கறினு ‘ பத்மா சொல்லுறா” என்று ஓவென அழுதாள். “அந்த சிறுக்கி மகள் அப்படியாச் சொன்னாள். இருக்கட்டும் அவள. ” என்று பத்மாவ திட்டினாள் அம்மா.
கண்கலங்கிக்கொண்டே “சரி இனிமே செத்தாட்டுக்கறி எடுக்கமாட்டேன். நல்ல ஆட்டுக்கறி எடுக்குறேன். அழாத வான்னு” அணைத்தாள் மணிமேகலையை அம்மா . அம்மாவ கையை உதறிவிட்டு போன்னு சொல்லி தள்ளிவிட்டாள் மணிமேகலை. இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தங்கச்சி வெண்ணிலாவுக்கு என்னவோ போலிருந்தது. சிறிதுநேரம் அழுதுகொண்டேயிருந்த படியே தரையில் எதுவும் விரிக்காமல் தூங்கிவிட்டாள் மணிமேகலை. பக்கத்தில் உட்காந்துகொண்டு தரையை கீச்சிக்கொண்டிருந்தாள் தங்கச்சி வெண்ணிலா.
இறந்துபோன புருஷனை நினைத்து அழுதாள் மணிமேகலை அம்மா. “நீங்க இருந்துங்கின்னா இப்படி புள்ளைகள தவிக்க விடுவிகளா.. நீங்க பாதியில போயிட்டிகளே.. இந்த பாதகத்திய விட்டுட்டு.. நல்ல கறி எடுத்துத்தர எனக்கு வக்கில்லை.. வசதியில்ல.. வேலையில வாங்குற சம்பளம் குடும்பத்த ஓட்டவே பத்தல.. நான் என்ன பண்ண…” என்று அழுதாள் . சடங்குக்கு வந்திருந்த கொட்டுச்சத்தம்(மேளதாளம்) காதை எட்டியதும், பழைய நினைவிலிருந்து மீண்டாள் மணிமேகலை. வெண்ணிலாவைப் பார்த்து “கொட்டுப் பார்க்க போவமா..?”என்றாள். சரி என்று தலையசைத்தாள் வெண்ணிலா. வீட்டைப்பூட்டிவிட்டு கிளம்பினார்கள்.
தெருவில் ஆட்களின் நடமாட்டம் அதிகம் இருந்தது. கொட்டு அடிக்கேற்ப ரெம்பபேர் ஆடிக்கொண்டே வந்தார்கள். ஒரு சில சின்ன பசங்க கொட்டுக்காரர் பக்கத்திலப் போயி ஒரசிக்கொண்டே ஆடினார்கள். கொட்டுக்காரர்கள் செம்ம போதையிலிருந்ததால் பறையை “திந்திடு திந்திடு டின்னனக்” என்று அடித்து நகட்டினார்கள். ரெம்ப பேர் போதையில் குதியா குதியா குதித்தார்கள். ஆட்டபாட்டத்தினால் தெருவில் புழுதிக்காடு பறந்தது. கொட்டுச்சத்தத்தில், பத்த வைக்கிற பட்டாசு சத்தத்தில் வீடுகளில் கட்டிப்போட்டிருந்த ஆடுமாடுகள் பயத்தில் வெறித்தது. மணிமேகலை கூட படிக்கிற பசங்க ஒரு சிலபேர் ஆடினார்கள். அதைப்பார்த்ததும் இவளுக்கு சிரிப்பு வந்தது. கொட்டுச்சத்தத்தில் மணிமேகலை காலும் லேசாக ஆடியது. “மணிமேகலை நீ வயசுக்கு வந்தேட்டனே ஒனக்கு ஒருநாள் இப்படித்தான கொட்டு பட்டாசுனு ஜோரா ஓந்தாய்மாமன் கொண்டு வருவயான். ஓந்தாய்மாமனுக்கு பெரிய செலவ இழுத்து வச்சிருவ கொஞ்சநாள்ல” என்றாள் கேலிக்கு வசந்தா அத்தை.
அதுக்கு மணிமேகலை சிரித்துக்கொண்டாள். தெருவைவிட்டு கொட்டுக்காரர்கள் கடக்கவும் மணிமேகலை பின்னாடி போக ஆசைப்பட்டாள் பிறகு இருக்கட்டும் .. இன்னொருதடவ கொட்டுக்காரர்கள் தாய்மாமன் சீர்வரிசையோட ஊரச்சுத்த வருவாங்கள.. அப்ப போவோம் கொட்டுக்காருங்க பின்னாடி என நினைத்துக்கொண்டாள். “சடங்குக்கு போயிடாத “என்று அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. போனா கொட்டுப்பின்னாடி வேடிக்கை பார்க்கத்தான போகப்போறோம். பந்தியில ஒட்காந்து சாப்பிடவாப்போறோம்” என நினைத்துக்கொண்டாள் மணிமேகலை.
தெருவுகளில் சடங்குக்கு வைத்திருந்த பேனர்களை பார்த்தால் மணிமேகலை. அதில் தன்னுடன் படித்துக்கொண்டிருக்கும் கமலா சேலைகட்டி பெரிய பொண்ணு மாதிரி இருந்தாள். இது கமலாவா என்று ஆச்சரியமாக இருந்தது. நாளைக்கு நானும் பெரிய புள்ளயாகிட்டா இந்தமாதிரி சேலைகட்டி பேனரெல்லாம் வைப்பாங்க என் மாமா என்று நினைத்துக்கொண்டாள்.
படிப்பில, ஓட்டப்போட்டியில.. எல்லாத்திலும் எனக்குப் பின்னாடிதான வருவா கமலா.. பெரிய பிள்ளையா வர்றதல்ல மட்டும் இவ எப்படி முன்னாடி வந்தா… அதுக்கு என்ன காரணம். அது எப்படி எப்படினு யோசித்த நொடியில் “அக்கா வா வீட்டுக்குப் போவோம் ” என்ற வெண்ணிலா அழைப்பு மணிமேகலையை, கமலா நினைப்பிலிருந்து சுயநினைவுக்கு கொண்டுவந்தது.
“வீட்டுக்குப்போகவேண்டாம். தாய்மாமன் வீட்லயிருந்து சீர்வரிசை கமலா வீட்டுக்கு போகும்ல.. அப்ப கொட்டுப்பின்னாடி போவோம். அக்கா ஒனக்கு வெடிக்காத வேட்டு(பட்டாசு)எடுத்துத்தாரேன். சரியா” என்றாள். அதற்கு “சரி “என்று என்றாள் வெண்ணிலா. தாய்மாமன் வீட்லயிருந்து சீர்வரிசை பக்கத்து தெருவில் வந்துகொண்டிருப்பதை கொட்டுச்சத்தம் உணர்த்தியது மணிமேகலைக்கு. தங்கச்சிய கூப்பிட்டுக்கிட்டு பக்கத்து தெருவுக்கு கிளம்பினாள் மணிமேகலை. கூட்டத்தில் பெண்களின் தலையில் சீர்வரிசையாக பித்தளைஅண்டா, பித்தளைபானை , தாம்பலத்தட்டு..பழத்தட்டு வயசுக்கு வந்த புள்ளைக்கு சேலை, நகைப்பெட்டி சீப்பு, சோப்பு லொட்டு லொஸ்க்கு என எல்லாம் இருந்தது. தாய்மாமன் கையில் வாழைப்பழத்தார் இருந்தது. தாய்மாமன் மனைவி தலையில் பெரிய பித்தளை அண்டா இருந்தது. தாய்மாமன் அப்பா கையில் ஒரு வெள்ளாடு இருந்தது. ஆட்டபாட்டம் களைகட்டியது. கூட்டோமோடு கூட்டமாக மணிமேகலையும், வெண்ணிலாவும் சேர்ந்துகொண்டார்கள். பறைச்சதமும், வேட்டுச்சத்தமும் காதைப்பிளந்தது. வெடிக்காத வேட்டுகளை மணிமேகலை தங்கச்சிக்கு எடுத்து சேகரித்து வைத்தாள். கூட்டத்தில் வந்த ஒரு பெரியவர் வானத்தைப்பார்த்தார். பொறித்த ஆட்டு(ஆடு)இரத்தம்போல் கறுத்திருந்த மேகங்கள், சூரியனை விட்டுவிட்டு மூடியது. மழை வந்தாலும் வரும் என மனதுக்குள்ளே நினைத்துக்கொண்டார். சடங்குவீட்டை நெருங்கும்போது ஆட்டபாட்டம் உச்சத்தை நெருங்கியது. சடங்கு வீட்டில் ஒலிபெருக்கியில் கிழக்குச்சீமை படத்தின் பாடலான ‘மானூத்து மந்தையில ..மாங்குட்டி பெத்தமயிலே”பாட்டு ஓடியது. அதில் ‘தாய்மாமன் சீர்சுமந்து வாரான்டி’ என்ற வரி மட்டும் திரும்ப திரும்ப நாலைந்து தடவை ஓடியது. சடங்கு வீட்டுமுன்னாடி போனதும் செம்பில் வைத்திருந்த தண்ணீரால் தாய்மாமன்-தாய்மாமன் மனைவி கால்களை கழுவிவிட்டு, வெத்திலையை கிள்ளி குங்குமம் சேர்த்து, சிறு தட்டில் வைத்து, சூடத்தை பற்றவைத்து ஆளாத்தி எடுத்தாள் கமலா அம்மா. பிறகு சீர்வரிசை பொருளெல்லாம் வீட்டுக்குள் போனது. பிறகு பெரிய மனுஷி ஆனா கமலாவுக்கு தலைக்கு ஊத்த தாய்மாமன் பொண்டாட்டியை கூப்பிட்டார்கள். சீர்சடங்கு செய்ய தாய்மாமன் பொண்டாட்டி போனாள்.
வந்ததிருந்த கூட்டத்தைப் பார்த்து ” சாப்பிடப்போங்க” என்று கமலா அப்பா சொன்னார். எல்லோரும் சாப்பிடப்போனார்கள். பந்தியில் இருந்த ஆட்டுக்கறி சுண்டி இழுத்தது மணிமேகலையை. முக்கியமாக பணியாரம் ஆம்லெட் அவளை ஆச்சரியப்படுத்தியது. வட்டமாகத்தான் இதுவரை ஆம்லெட் அவள் பார்த்துள்ளாள். பணியார வடிவில் இப்போதுதான் பார்க்கிறாள். அதை எப்படியாவது சாப்பிடவேண்டும் போலிருந்து. பத்திரிக்கை கொடுக்காத வீட்ல, அதுவும் மொய் செய்யாம சாப்பிட்டம்னா அம்மா அடிக் கொல்லுவாளே.. என்று நினைப்பு மணிமேகலைக்கு ஓடினாலும்.. ஆம்லெட்டுக்காகவும், ஆட்டுக்கறிக்காகவும் சாப்பிடத்துணிந்து, அம்மாட்ட சொல்லிறக்கூடாதுன்னு தங்கச்சிட்ட சத்தியம் வாங்கிட்டு பந்திக்குப் போனாள் மணிமேகலை தங்கையை கூப்பிட்டுக்கிட்டு. சாப்பாட்டை அள்ளி ரெண்டு வாய்தான் வைத்தாள். மழை சடசடவெனு வந்தது. பந்தி கொட்டைகைக்கு வெளியே இருக்கும் பொருள்களை நனையக்கூடாதுன்னு பந்தி வைக்கிற ஆட்கள் ஓடிஓடி தூக்கி வைத்தார்கள். அப்போதுதான் மணிமேகலைக்கு ஞாபகம் வந்தது, மெத்துமேல வண்டுவிழுந்த தட்டாம்பயற ,மொச்சைப்பயற அம்மா வெயிலில் காயவைச்சது. சடங்கு, ஆட்டுக்கறி ஞாபகத்தில் மெத்தில அம்மா பயறு காயவைச்சதை மறந்ததை நினைத்து பயம் வந்தது மணிமேகலைக்கு. சாப்பிட்ட பந்தியில இருந்து சாப்பிட்டும்- சாப்பிடாம தங்கச்சிய இழத்துக்கிட்டு ஓடினாள். தங்கச்சி வெண்ணிலா பணியார ஆம்லெட்டை கையில் இருக்கப்பிடித்துக்கொண்டாள்.
போயி ஏணியப்போட்டு ஏறுவதற்குள் அந்த சின்னமழை பயறுகளை அரித்து கொண்டுபோய் சந்துக்குள் பருக்கை, பருக்கையாக ஊற போட்டுவிட்டது. அம்மா வந்து கேட்டா, என்ன பதில் சொல்ல என்று திருதிருவென விளித்தாள் மணிமேகலை. வெண்ணிலா உம்முனு இருந்தாள். வீட்டுக்கு வந்ததுமே அம்மா அதுஇதுனு பேசிவிட்டு. சிறிதுநேரத்திற்குப் பிறகு பயறு விஷயத்துக்கு வந்தாள். மணிமேகலையும்- வெண்ணிலாவும் உம்முனு இருந்தார்கள். ஒரு அரட்டுபோட்டாள் அம்மா. உண்மையைச்சொல்லிவிட்டாள் வெண்ணிலா. சேரும்செகதியோடும் நனைந்துபோயிருந்த பயறுகளை பார்த்தாள். கோபம் உச்சிக்கு ஏறியது. வந்த கோபத்துக்கு மணிமேகலையை கண்டாமானிக்கு விறகு கட்டையை வைத்து இழுஇழுனு இழுத்தாள். “ஏன்டி இப்படி ஓசிச்சாப்பாடு கேட்குதோ உன் வாய்க்கு.”என்று சொல்லிக்கொண்டே அடித்தாள். ஊடயில வெண்ணிலாவுக்கு ரெண்டு அப்பு விழுந்தது. இன்னிமே போவயா… ? போவயா..? என்று காலிலே அடித்தாள். அழுகை சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டு ராமாயி கிழவி ஓடியாந்தது. “ஏய் ஏன்டி இப்படிப் போட்டு அடிக்கிற சின்னப்புள்ளைகள” என்று சொல்லிக்கொண்டே தடுத்தாள். விஷயத்தை சொன்னாள் மணிமேகலை அம்மா . “அதுக்காக இப்படியா அடிக்கிறது ..சின்னஞ்சிறிசுகனா அப்படிதான் இருக்கும்.”என்று சொல்லிக்கொண்டே மணிமேகலையை தூக்கி, இன்னிக்கு என் வீட்ல வந்து படுத்துத் தூங்கு என்று கூப்பிட்டுப்போனாள் ராமாயி கிழவி.
இரவானதும் சாப்பிடாமல் படுத்துக்கிடந்த மணிமேகலையை தட்டி எழுப்பி சாப்பாடு போட்டு வைத்தாள் ராமாயி கிழவி .”சாப்பாடு வேணாம்” என்றாள் மணிமேகலை. “இராத்தரிக்கு சாப்பிடாம படுத்தா தூக்கம் வராது. சாப்பிடு”என்றாள் ராமாயி கழவி. “சாப்பிடவா-வேண்டாமா… என்று இம்புட்டு இம்புட்டாய் எடுத்து சாப்பிட்டாள் மணிமேகலை. “நல்லா அள்ளிச் சாப்பிடு அப்பதான விரட்னு பெரிய புள்ளையாவ” என்றாள் ராமாயி கிழவி. “ராமாயி கிழவி இப்படிச் சொன்னதும், மணிமேகலைக்கு தற்செயலாக கமலாவும்-அவளோட அம்மாவும் ஞாபகத்தில் வந்தார்கள். அந்த ஞாபகம் இப்படியாக சில நொடிகள் மணிமேகலை மனதிலோடியது. கொஞ்சநாளைக்கு முன்னாடி கமலா சாப்பிட்டுக்கிட்டு இருந்தாள், பக்கத்தில் உட்காந்திருந்த கமலாவோட அம்மா, கமலாவைப் பார்த்து “நல்லா அள்ளிச் சாப்பிடு அப்பத்தான விரட்னு பெரிய புள்ளையாவனு சொல்லுச்சு. சொல்லி கொஞ்ச நாள்ல பெரிய புள்ளயாகிட்ட. இப்ப ராமாயி கிழவி சொன்ன சொல்லையும் .. அன்றைக்கு கமலா சாப்பிட்டபோது கமாலகிட்ட அவ அம்மா சொன்ன சொல்லையும் மனதில் பொருத்திப் பார்த்தாள் மணிமேகலை. மனதில் சந்தோஷம் தாங்கமுடியல. அப்ப நம்மளும் ராமாயி கெழவி சொன்னதுமாதிரி அள்ளிச்சாப்பிட்டு பெரிய புள்ளையாகிடுவோம். நம்மளுக்கு ஆட்டுக்கறி கிடைக்கும்.பேனர் வைப்பாங்க எம்மாமா . அம்மா எதுகேட்டாலும் எனக்கு வாங்கித்தரும் என்ற நினைப்போடியது மணிமேகலைக்கு மனமெங்கும்.
பட்டுனு “ராமாயி பாட்டி நானும் நல்லா அள்ளிச்சாப்பிட்டா பெரியபுள்ள ஆகிருவேன்ல கமலா மாதிரி . அப்ப எனக்கு ஆட்டுக்கறி கிடைக்கும், பேனர் வைப்பாங்கல” என்றாள் மணிமேகலை.
அப்பாவித்தனமாக -வெவரம்தெரியாம- ஏக்கமாக -ஆசையாக கேட்கும் அந்த குழந்தையின் ஆசையைப் பார்த்து என்ன சொல்வதென்று தெரியாமல் கண்ணீர் கசிந்தது ராமாயி கிழவிக்கு. நாம என்ன அர்த்தத்தில சொன்னோம் இந்த குழந்தை என்ன அர்த்தத்தில புரிஞ்சிக்கிருச்சி என்ற நினைப்போடியது கிழவிக்கு. இருந்தாலும் எதுக்கு குழந்தையின் ஆசையில் மண்ணள்ளிப்போட என்று வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு “ம் , ஆமா. ரெம்ப அள்ளிச் சாப்பிடு அப்பதான் கமலா மாதிரி வேமா பெரியபுள்ளயாவ” என்றாள் ராமாயி கிழவி. என்றைக்கும் அப்படி சாப்பிட்டு பழக்கமில்லாத மணிமேகலை அன்று அபுக் அபுக்னு அள்ளிச் சாப்பிட்டாள் வேகமாக.

க. செல்லப்பாண்டி
செந்நெல்குடி சொந்த ஊர். விருதுநகர் மாவட்டம். பெரியபுள்ள என்ற சிறுகதை எழுதிய நான் எழுத்தாளர் தனுஷ்கோடி இராமசாமி 2023 சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளேன். இரண்டு குறும்டங்கள் இயக்கியுள்ளேன்.டிப்ளமோ எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் படித்துள்ளேன். கட்டிட வேலை செய்து வருகிறேன்.