தூமகேது (குஜராத்தி)

பின்னிரவின் மங்கிய ஆகாயத்திலே மனித வாழ்க்கையின் இன்ப நினைவுகள் சுடர் விடுவது போல் நட்சத்திரங்கள் ஒளி வீசிக் கொண்டிருந்தன. குளிர் காலமானதால் பனிக்காற்றின் கொடுமையிலிருந்து தப்புவதற்காக ஒரு பழைய கம்பளியைப் போர்த்திக் கொண்டு ஒரு கிழவன் நகரத்தின் மத்தியிலிருந்து வந்து கொண்டிருந்தான். சுதந்திர வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் அநேக வீடுகளிலிருந்து மணியின் இனிய நாதத்துடன் பெண்களின் மெல்லிய குரலோசை கலந்து வருவது அந்த இரவில் அவனுக்குத் துணை செய்ய வருவது போலிருந்தது. நாய்கள் குரைப்பதும், அதிகாலையில் எழுந்து விட்டவர்களின் காலடி ஓசையும், அகாலத்தில் எழுந்துவிட்ட பறவையின் சிறகடிப்பும் மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தன. இவைகளைத் தவிர நகரத்தில் பூரண அமைதி குடிகொண்டிருந்தது. மக்கள் இன்ப நித்திரையில் ஆழ்ந்திருந்தனர். குளிர் கால இரவானதால் நேரம் வளர்ந்து கொண்டிருப்பது போலிருந்தது. சொல்லும் செயலும் வேறுபட்டிருக்கும் குணம் படைத்த மனிதனைப் போல குளிர்காலக் காற்றும் உடலைத் துளைத்துக் கொண்டிருந்தது. கிழவன் குளிரில் நடுங்கிக் கொண்டு அமைதியாக நடந்து நகரின் வெளிப்புற வாயிலை அடைந்தான். பிறகு தன் பழைய கைத்தடியை ஊன்றிக்கொண்டு பாதை வழியே நடந்தான். சாலையின் ஒரு புறத்தில் அடர்ந்த மரங்களிருந்தன. மறுபுறத்தில் நகரத்தின் பூங்கா அமைந்திருந்தது. இங்கு குளிர் அதிகமாக இருந்தது. இருளும் மைபோலப் படர்ந்திருந்தது. சுக்ர நட்சத்திர ஒளியும் பூமியில் பனிபோலப் படர்ந்திருந்தது. பூங்காவின் கடைசியில் ஒரு புது மாதிரியான கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. மூடியிருந்த ஜன்னல்கள் வழியாக வெளிச்சம் உள்ளிருந்து வந்து கொண்டிருந்தது.

பக்தன் கோபுரத்தின் சிகரத்தைக் கண்டதும் ஆனந்தம் அடைவதுபோல இந்தக் கிழவனும் அந்தக் கட்டிடத்தைக் கண்டு ஆனந்தம் அடைந்தான். வெளிப்புறச் சுவரில் ’போஸ்ட் ஆபீசு’ என்ற போர்டு காணப்பட்டது.

கிழவன் போஸ்ட் ஆபீசின் வெளிப்புறத் திண்ணை மீது உட்கார்ந்து கொண்டான். உள்ளே வேலை செய்து கொண்டிருந்த நாலைந்து பேர்களுடைய சத்தம் தான் வெளிவந்து கொண்டிருந்தது. இதைத் தவிர வேறு எவ்வித சத்தமும் கிடையாது.

‘போலீஸ் சூபரின்டெண்ட்’ என்று உள்ளிருந்து குரல் கேட்டது. கிழவன் திடுக்கிட்டான். பிறகு அமைதியடைந்து உட்கார்ந்து கொண்டான். ஆசையும் அன்பும் இந்தக் குளிரில்கூட அவனுக்கு உஷ்ணத்தை அளித்து வந்தன.

உள்ளிருந்து குரலுக்கு மேல் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. சார்ட்டர் விலாசத்தைப் படித்தபடி தபால்காரனிடம் கடிதங்களை வீசிக்கொண்டிருந்தார்.

கமிஷனர், சூபரின்டெண்ட், லைப்ரேரியன் என்று பல விலாசங்களைப் பார்த்து சார்ட்டர் கடிதங்களை வேகமாக வீசிக் கொண்டிருந்தார்.

இதற்குள் உள்ளேயிருந்து ஒரு விநோதமான குரல் கேட்டது.

”கோச்வான், அலிபாபா!”

கிழவன் எழுந்து நின்று கொண்டான். பக்தியுடன் ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்தான். பிறகு முன்னே எழுந்து வந்து கதவின்மீது கையை வைத்தான்.

”கோகுல்!’’

“யார்?”

‘’எனக்குக் கடிதம் இருக்கிறதா?….நான் வந்திருக்கிறேன்.”

பதிலுக்கு கர்ண கடூரமான கேலிச் சிரிப்புத்தான் வெளிப்பட்டது.

“பாபுஜி! இவன் ஒரு பைத்தியக்காரக் கிழவன். இவன் எப்போதும் தன் தபாலைப் பெற்றுப் போக வந்து கொண்டிருக்கிறான்.”

இவ்விதம் சார்ட்டர் போஸ்ட் மாஸ்டரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இதற்குள் கிழவன் தன் பழைய இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டான். ஐந்து வருஷமாக இந்த இடத்தில் உட்கார்ந்து கிழவனுக்குப் பழக்கமாகி விட்டது.

முதலில் அலி ஒரு வேட்டைக்காரனாக இருந்தான். அபினி சாப்பிடுபவன் அபினி இல்லாமல் வாழ முடியாததுபோல அலியும் வேட்டையாடாமல் இருக்க முடியாத நிலையை அடைந்து விட்டான். கௌதாரி போன்ற பறவைகளை அலி பார்த்து விட்டால் அடுத்த கணமே அவை அவன் கைக்கு வந்துவிடும். முயல் பதுங்கியிருக்கு மிடத்தைச் சுலபமாகக் கண்டு கொள்வான். வேட்டை நாய்களால் காதுகளை உயர்த்திக்கொண்டு அங்கு மிங்கும் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் முயல்களைக் கண்டு கொள்ள முடியாது. ஆனால் அலி அவை இருக்குமிடம், போகும் வழி முதலியவைகளை எல்லாம் எளிதில் புரிந்துகொள்வான். சில சமயங்களில் மீன்களிடம்கூட உறவு வைத்துக் கொள்வான்.

ஆனால் வாழ்க்கையின் அந்திமப் பருவம் நெருங்க நெருங்க அவனுடைய வேட்டைத் தொழிலும் வேறு திசையில் திரும்பியது. அவனுடைய ஒரே ஒரு மகளான மரியமும் கலியாணம் ஆகிக் கணவன் வீடு சென்றுவிட்டாள். அவளுடைய கணவன் ராணுவத்தில் வேலை பாத்து வந்ததால் பஞ்சாபில் ஏதோ ஒரு இடத்திற்கு மாற்றலாகிப் போய்விட்டான். யாருக்காக வாழ்ந்து வந்தானோ அவளிடமிருந்து அலிக்கு இந்த ஐந்து வருடமாக ஒரு கடிதம்கூட வரவில்லை. அலிக்கு இப்போதுதான் அன்பு, பிரிவு என்பதெல்லாம் நன்கு புரிய ஆரம்பித்தன. முன்பெல்லாம் கௌதாரிக் குஞ்சுகள் பயத்துடன் வேகமாக ஓடுவதைப் பார்த்து அலி சிரிப்பான். இது வேட்டைக்காரனுடைய ஆனந்தம்.

வேட்டையில் உள்ள ஆனந்தம் அவனுடைய ஒவ்வொரு நரம்புகளிலும் நிறைந்திருந்தது. ஆனால் மரியம் அவனை விட்டுப் பிரிந்த உடனே வாழ்க்கையே அவனுக்கு சூன்யமாகப்பட்டது. அன்றிலிருந்து வேட்டைத் தொழிலை விட்டு விட்டு பயிர் பச்சைகள் நிறைந்த வயல் பக்கம் அவன் திருஷ்டியைச் செலுத்தினான். அலி வாழ்க்கையில் முதல் முறையாக அன்பின் சிருஷ்டி பிரிவு என்னும் கண்ணீர்தான் என்பதை உணர்ந்தான். அதற்கப்புறம் அலி ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு வாய் விட்டு அழுதான். அன்றிலிருந்து காலையில் நான்கு மணிக்கு எழுந்து இந்தப் போஸ்ட் ஆபீசுக்கு வருவான். அவன் பெயருக்குக் கடிதம் வருவதில்லை. ஆனால் மரியத்திடமிருந்து ஒரு நாளைக்குக் கடிதம் வரும் என்று பக்தனுடைய வைராக்ய சித்தத்துடன் தினமும் காலையில் வந்து கொண்டிருந்தான்.

போஸ்ட் ஆபீசு உலகத்திலே ஒரு சுவையற்ற இடம்தான். இருந்தாலும் அவனுக்கு அது தர்ம க்ஷேத்திரமாக இருந்தது. ஒரே இடத்தில் ஒரே மூலையில் அவன் வழக்கமாக உட்கார்ந்து கொள்வான். அவன் நிலையை அறிந்து கொண்டு அனைவரும் வேடிக்கை செய்தனர். சில சமயங்களில் அவன் பெயரைக் கூப்பிடுவார்கள். அதைக் கேட்டு அலி போஸ்ட் ஆபீசு கதவு வரையிலும் விரைந்து ஓடுவான். அதைக் கண்டு சிரித்து மகிழ்ந்தனர். எல்லையற்ற நம்பிக்கையுடனும் சிரத்தையுடனும் தினமும் வருவான். வெறுங் கையுடன் திரும்பிப் போவான்.

அலி உட்கார்ந்து கொண்டிருந்தான். ஒவ்வொருவராகக் கடிதம் வாங்கிப் போக வந்து கொண்டிருந்தனர். அநேகமாக நகரத்திலுள்ள ஆபீசுகளிலிருந்துதான் கடிதம் வாங்கப் போக வேலைக்காரர்கள் வருவார்கள். சிலர் தலைப்பாகை அணிந்திருப்பார்கள். இன்னும் சிலர் பளபளக்கும் பூட்ஸ்கள் அணிந்திருப்பார்கள். இப்படிப் பலவிதமாகத் தங்கள் தோற்றத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இதற்குள் கதவு திறக்கப்பட்டது. விளக்கு வெளிச்சத்தில் எதிரில் நாற்காலியில் சதா கவலை தோய்ந்த முகத்துடன் போஸ்ட் மாஸ்டர் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவருடைய முகத்தில் எந்தவிதமான களையும் தென்படவில்லை.

அலி தன் இடத்தை விட்டு நகராமலிருந்தான்.

“போலீஸ் கமிஷனர்” என்ற குரல் எழுந்தது. ஒரு வாலிபன் எழுந்து போய் தபாலை வாங்கினான்.

”சூபரின் டெண்ட்”

வேறொரு மனிதன் எழுந்து முன் சென்றான். இவ்விதம் எல்லாப் பெயர்களும் படிக்கப்பட்டன. விஷ்ணு பக்தன்போல அந்த சார்ட்டர் தினசரி இந்தப் பெயர்களைப் பாராயணம் செய்தாக வேண்டும்.

கடைசியாக அனைவரும் சென்று விட்டனர். அலியும் எழுந்து போஸ்டாபீசை வணங்கி விட்டுச் சென்று விட்டான். சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த அப்பாவி பாவம்!?”

“அவன் பைத்தியக்காரனா?” என்று போஸ்ட் மாஸ்டர் கேட்டார்.

‘’யாருங்கோ? அலியா? ஆமாம். ஐந்து வருஷமாகத் தினமும் கடிதம் வாங்கிப்போக வருகிறான். மழை காற்று- குளிர் எக்காலமாக இருந்தாலும் சரி, இவனுக்கும் ஏதாவது கடிதம் வருமாம்’ என்று குமாஸ்தா சொன்னார்.

‘’சுத்த ஏமாளியாக இருக்கிறானே! யார் கடிதம் எழுதப் போகிறார்கள்?”

“பாபுஜி! இவன் மூளை கெட்டுவிட்டது. முதலில் பெரிய அக்ரமக்காரனாக இருந்தான். ஒரு சமயம் இவன் ஏதோ தெய்வக் குற்றம் செய்து விட்டான். அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்” என்று தபால்காரர் சொன்னார்.

”ரொம்ப விசித்திரமான பைத்தியமாக இருக்கிறதே!”

”ஆமாம். அகமதாபாத்தில் நான் ஒரு பைத்தியக்காரனைப் பார்த்தேன். அவன் நாள் முழுதும் புழுதிகளைக் குவித்துக் கொண்டிருப்பான். வேறு ஒன்றும் செய்ய மாட்டான்.

“இன்னொரு பைத்தியக்காரன் மாலை நேரத்தில் ஆற்றங்கரைக்குப் போய் கல்லின்மீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருப்பான்.”

”வேறொரு பைத்தியக்காரன் சதா இங்குமங்கும் சுற்றிக் கொண்டேயிருப்பான். இன்னொரு பைத்தியக்காரன் ஆனந்தமாகப் பாட்டுப் பாடிக்கொண்டிருப்பான்.  ஒரு பைத்தியக்காரனுடைய வேடிக்கையைக் கேளுங்கள். அவன் தன் உடலிலுள்ள தோலைத் தானே பிய்த்துக்கொண்டு வேறு யாரோ காயப்படுத்தி விட்டதாக அழுவான்.’’

இன்று தபாலாபீசில் பைத்தியங்களின் கதா காலட்சேபம் நடந்தது. எப்போதும் இப்படித்தான் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொஞ்ச நேரம் ஆனந்தம் அனுபவித்து வந்தார்கள். இது வேலை செய்பவர்களின் பழக்கம், குடிப்பழக்கம் போல. கடைசியாகப் போஸ்ட் மாஸ்டர் எழுந்து நின்று கொண்டு, “இந்தப் பைத்தியங்களுக்கும் ஒரு உலகம் உண்டு. நம்மை அவர்கள் பைத்தியம் என்று நினைப்பார்கள். இவர்களுடைய சிருஷ்டியும் கவியின் சிருஷ்டியைப் போலத்தானிருக்கும்” என்றார்.

கடைசி வார்த்தையைக் கூறிவிட்டுப் போஸ்ட் மாஸ்டர் சிரித்துக்கொண்டே போய்விட்டார். ஒரு குமாஸ்தா நேரம் கிடைக்கும்போது கவி எழுதுவது உண்டு. அவரை அனைவரும் கேலி செய்வார்கள். போஸ்ட் மாஸ்டரும் கடைசி வார்த்தைகளைச் சொல்லும்போது அவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டுதான் சொன்னார். போஸ்டாபீஸ் முன்போல அமைதி அடைந்தது.

ஒரு தடவை அலி இரண்டு மூன்று நாள் வரையிலும்கூட வரவில்லை. அலியின் இதயத்தைப் புரிந்துகொள்ள அனுதாப மனம் படைத்தவர் யாரும் போஸ்டாபீசில் இல்லை. ஆனால் அவன் ஏன் வரவில்லை என்பதை அறிய அனைவரும் ஆவலுடனிருந்தார்கள். கடைசியில் அலியும் வந்தான். ஆனால் அன்று அவன் இருமிக் கொண்டிருந்தான். அவன் முகத்திலே வாழ்க்கையின் இறுதிக் குறிகள் தென்பட்டன.

இன்று அவன் பதட்டத்துடன் போஸ்ட் மாஸ்டரிடம், “பாபு சாகப்! என் மரியத்திடமிருந்து கடிதம் வந்திருக்கிறதா?” என்று கேட்டான்.

போஸ்ட் மாஸ்டர் அன்று ஊருக்குப் போகும் அவசரத்திலிருந்தார். இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் பொறுமை அவரிடத்திலில்லை.

“நீ யாரென்றே தெரியாதே!”

“என் பெயர் அலி” என்று பதிலளித்தான்.

”சரிதான். உன் மரியத்தின் பெயரை இங்கு யாராவது எழுதி வைத்திருக்கிறார்களா?”

”எழுதிக் கொள்ளவில்லையா? ஒருவேளை கடிதம் வந்து நான் வராமல் போனால் உங்களிடத்திலேயே வைத்திருங்கள்.”

வாழ்நாள் முழுதும் வேட்டையாடியே கழித்த ஒருவனுக்கு மரியத்தின் பெயர் அவளுடைய தந்தையைத் தவிர மற்றவர்களுக்குச் செல்லாக் காசு என்பது எப்படித் தெரியும்?

போஸ்ட் மாஸ்டர் கோபமடைந்தார். பைத்தியமா உனக்கு? வெளியில் போகமாட்டாய்? உனக்குக் கடிதம் வந்தால் யாரும் தின்றுவிட மாட்டார்கள்” என்றார்.

போஸ்ட் மாஸ்டர் அவசரமாக அங்கிருந்து போய்விட்டார். அலி மெதுவாக அங்கிருந்து வெளியேறினான். வெளியில் போகும்போது போஸ்டாபீசை ஒருமுறை திரும்பிப் பார்த்தான். இன்று அவன் அனாதையைப் போலக் கண்ணீர் வடித்தான். ஆவல் இருந்தது. ஆனால் நம்பிக்கை இழந்துவிட்டான். ஐயோ ! இனி மரியத்தின் கடிதம் எப்போது வரும்?

ஒரு குமாஸ்தா அவன் பின்னால் வருவது தெரிந்தது. அலி அவரைத் திரும்பிப் பார்த்தான்.

”ஐயா!”

குமாஸ்தா திடுக்கிட்டுப் போனான். ஆனால் அவன் நல்ல மனிதன்.

”ஏன்?”

“இதோ பாருங்கள். இவை தான் என்னிடமிருக்கின்றன” என்று கூறிவிட்டு ஒரு சிறிய தகர டப்பியைத் திறந்து ஐந்து தங்க நாணயங்களை எடுத்தான். குமாஸ்தா ஆச்சரியப்பட்டான்.

“ஆச்சரியப்பட வேண்டாம். இது உங்களுக்குப் பிரயோஜனப்படும். இனி எனக்கு இவைகளால் பிரயோஜனமில்லை. எனக்கு ஒரு காரியம் செய்வீர்களா?” என்றான்.

”என்ன?”

“மேலே என்ன தெரிகிறது?” என்று ஆகாயத்தைச் சுட்டிக் காட்டினான்.

”ஆகாயம்!”

“மேலே அல்லா இருக்கிறான். அவன் சாட்சியாக உனக்கு இந்தத் தங்க நாணயங்களைக் கொடுக்கிறேன். என் மரியத்திடமிருந்து கடிதம் வந்தால் என்னிடம் சேர்ப்பித்து விடுகிறாயா?”

குமாஸ்தா திகைத்துப் போய், “எங்கே? எங்கே சேர்ப்பிக்க வேண்டும்?” என்றான்.

“என் சமாதியில்.”

“சேச்சே!”

“உண்மையாகச் சொல்கிறேன். இதுதான் எனது கடைசி நாள். ஆமாம். அந்திம நாள்தான். மரியத்தையும் சந்திக்கவில்லை! கடிதத்தையும் பார்க்க வில்லை”.

அலியின் கண்களிலே ஒருவிதமான வெறி பளிச்சிட்டது. குமாஸ்தா மெதுவாக அங்கிருந்து போய் விட்டான். அவனுடைய ஜேபியில் தங்க நாணயங்கள் இருந்தன.

**

அலி அதற்கப்புறம் தென்படவேயில்லை. அவனைத் தேடுவார்களுமில்லை. ஒரு நாள் போஸ்ட் மாஸ்டர் கொஞ்சம் சோகத்துடனிருந்தார். அவருடைய மகள் உடல்நிலை சரியில்லாமல் ஊரிலிருந்தாள். அவளைப் பற்றித் தகவல் அறிய வேண்டி சோகத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தார்.

தபால் பை வந்தது. கடிதங்கள் குவிந்து கிடந்தன. ஒரு கவரைத் தன்னுடையது என்று நினைத்துக் கொண்டு போஸ்ட் மாஸ்டர் அவசரமாக அதைக் கையிலெடுத்தார். ஆனால் அந்தக் கவரில் “கோச்வான் அலிபாபா” வினுடைய விலாசம் எழுதப் பட்டிருந்தது.

அவர் தீயை மிதித்தவர்போல் கோபமடைந்து கவரைக் கீழே வீசி எறிந்தார். கொஞ்ச நேரத்திற்குள் அவருடைய கடின சித்தம் மாறுதலடைந்தது. மனித குணம் தலையெடுத்தது. உடனே அவருக்கு இது அந்தக் கிழவனுடைய கடிதமல்லவா என்ற நினைவு வந்தது. ஒருவேளை அவனுடைய மகள் மரியம் எழுதியிருக்கலாம்.

”லட்சுமிதாஸ்!” என்று போஸ்ட் மாஸ்டர் அழைத்தார்.

அலி அன்று தங்க நாணயம் கொடுத்த மனிதனுடைய பெயர்தான் லட்சுமிதாஸ்.

”சொல்லுங்கள்.”

இது உங்களுடைய கோச்வான் அலியினுடைய கடிதம். இப்போது எங்கே அவனைக் காணோம்?”

“தேடிப் பார்க்கிறேன்.”

அன்று போஸ்ட் மாஸ்டர் மகளிடமிருந்து ஒரு தகவலும் வரவில்லை. இரவு முழுவதும் தூக்கமின்றிக் கழித்தார். அடுத்த நாள் மூன்று மணிக்கு அவர் ஆபீசில் உட்கார்ந்து கொண்டிருந்தார். நான்கு மணிக்கு அலி வருவான். அவனிடம் கடிதத்தைக் கொடுத்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

அலி பாபாவின் நிலையை இப்போது போஸ்ட் மாஸ்டர் புரிந்து கொண்டார். இன்று காலை தபாலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஐந்து வருஷம் வரையிலும் இம்மாதிரி விடியா இரவுகள் எத்தனையைக் கழித்திருக்கவேண்டும் என்று எண்ணிப் பார்க்கவே போஸ்ட் மாஸ்டர் மனத்திலே இரக்க உணர்ச்சி பிறந்தது. ஐந்து மணிக்கு யாரோ கதவைத் தட்டினார்கள். இன்னும் தபால்காரன் வரவில்லை. ஆனால் அலிதான் கதவைத் தட்டுகிறானோ என்ற பிரமை ஏற்பட்டது. போஸ்ட் மாஸ்டர் எழுந்தார். தந்தையின் மனோ வேதனையை உணர்ந்த அவர் வேகமாக எழுந்து வந்து கதவைத் திறந்தார்.

‘வாப்பா அலி! இந்தா உன்னுடைய கடிதம்.’

கதவோரத்தில் ஒரு கிழவன் தடியை ஊன்றிக் கொண்டு குனிந்தபடி நின்று கொண்டிருந்தான். கண்ணீர் கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தது. முகத்திலுள்ள சுருக்கங்களில் உணர்ச்சியற்ற தன்மை வெளிப்பட்டது.

அவன் போஸ்ட் மாஸ்டரைப் பார்த்தான். ஆனால் போஸ்ட் மாஸ்டர் திடுக்கிட்டுப் போனார். கிழவனுடைய கண்களிலே மனித ஒளியில்லை.

”அது யார் பாபுஜி? அலியா?” என்று கேட்டுக் கொண்டு உள்ளேயிருந்து லட்சுமிதாஸ் அருகில் வந்து நின்று கொண்டார்.

போஸ்ட் மாஸ்டர் அதைக் கவனியாமல் வாயிற் பறமே பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அங்கே யாரும் தென்படவில்லை. ஆச்சரியத்துடன் அவர் கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தார். வெளியில் யாருமில்லையே! இது என்ன ஆச்சரியம்? அவர் லட்சுமிதாஸ் பக்கம் திரும்பினார்.

”ஆமாம், அலிபாபாதான்….அடே! நீயா?’’

”அலிபாபா இறந்து விட்டான். ஆனால் அவனுடைய கடிதத்தை என்னிடம் கொடுங்கள்.”

”அடடா! எப்போது காலமானான்? உண்மையா, லட்சுமிதாஸ்?’’

”ஆமாம். அவன் இறந்துபோய் மூன்று மாதமாகிறது” என்று அங்கு வந்த தபால்காரன் சொன்னான்.

போஸ்ட் மாஸ்டர் திகைத்துப் போய்விட்டார். மரியத்தின் கடிதம் அங்கேயே கிடந்தது. அலிபாபா கடைசி நாளன்று சொன்ன விஷயத்தை லட்சுமிதாஸ் சொன்னான். அவருடைய கண்ணெதிரில் அலி நிற்பது போலிருந்தது. அவர் மனம் குழப்பமடைந்து விட்டது. ‘நான் அலியைப் பார்த்தேனா அல்லது பிரமையா?’

வழக்கம்போல வேலை ஆரம்பமாகியது. ‘போலீஸ் கமிஷனர்’, ‘சூபரின்டெண்ட்’ என்று சார்ட்டர் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் போஸ்ட் மாஸ்டர் அந்த ஒரேயொரு கடிதத்தையே துடிக்கும் உள்ளத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். கவர் பதினைந்து பைசா, கார்டு ஐந்து பைசா என்ற எண்ணமே அவர் மனத்தில் எழவில்லை.

மனிதன் தன் கண்ணோட்டத்தை விட்டுவிட்டுப் பிறர் கண்ணோட்டத்தில் பார்த்தானானால் உலகில் அமைதி நிலவும்.

அன்று மாலை போஸ்ட் மாஸ்டரும் லட்சுமிதாசும் அலியின் சமாதிக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். மரியத்தின் கடிதம் அவரிடம்தான் இருந்தது. சமாதி மீது கடிதத்தை வைத்து விட்டு போஸ்ட் மாஸ்டரும் லட்சுமிதாசும் திரும்பினார்கள்.

“லட்சுமிதாஸ்! இன்று காலை நீதான் எல்லோருக்கும் முன் வந்தாயா?”

”ஆமாம்.”

‘நீதான் அலிபாபா என்று சொன்னாயா?”

‘’ஆமாம்.”

ஆனால்.. ஒன்றுமே.. புரியவில்லையே….”

“என்ன?”

”சரிசரி! ஒன்றுமில்லை” என்று போஸ்ட் மாஸ்டர் பேச்சை மாற்றினார். போஸ்டாபீசுக்கு அருகில் வந்ததும் போஸ்ட் மாஸ்டர் தனியாகப் போய்விட்டார். அவருடைய தந்தை உள்ளத்தால் அலியைப் புரிந்து கொள்ள முடியவில்லையே என்ற வேதனை அடைந்தார். இன்று வரையிலும் அவருடைய மகளைப்பற்றிய ஒரு தகவலும் தெரியவில்லை. இதே கவலையுடன் இரவைக் கழித்தார். பச்சாதாபம், கவலை, இரக்கம் முதலிய உணர்ச்சிகளுடன் அவர் ஆபீசில் உட்கார்ந்து கொண்டிருந்தார். . அருகிலிருந்த அடுப்பிலிருந்து புகையும் நெருப்பும் வெளி வந்து கொண்டிருந்தன.

000

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *