மாதம் ஒரு மலேசிய புத்தகம் – 5

நாகம்மாளின் மனக்குறிப்புகள்

படைப்புகளை எழுதி மாத வார இதழ்களுக்கு அனுப்பிவிட்டு பல மாதங்கள் பல வாரங்கள் கழித்து பிரசுரம் கண்ட அந்தப் படைப்புகளைக் கத்திரித்து ஒரு கோப்பில் சேமித்து வைத்திருந்தது ஒரு காலம். பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோப்பில் இருக்கும் எழுத்துப்படிவங்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது ஓர் அலாதியான இன்பம். பழைய நாளிதழ்களின் வாசம், கொஞ்சமாய் மங்கிப்போன ஓவியங்கள் போன்றவற்றும் நம் எழுத்துகளை நாமே இரசித்து வாசிக்கும் வாய்ப்பு இன்றைய எழுத்தாளர்களுக்கு அவ்வளவாக கிடைப்பதில்லை.

இணையம் பயன்பாட்டிற்கு வந்தபின் மேற்சொன்ன அனுபவம் இல்லாத பலரையும் பார்க்க நேரிடுகிறது. ஒரு படைப்பு அது பிரசுரம் ஆக எடுத்துக்கொள்ளும் கால அளவில் நம் மனம் படுபாடு இம்சையாக இருந்தாலும் அதில் ஓர் இன்பம் இருக்கிறது. எழுதியது எதுவாக இருந்தாலும் ஒரு ‘எண்டர்’ பட்டனில் அதை உலகம் முழுக்க பார்வைக்கு அனுப்பும் இணைய வசதியால்  பத்திரிகையை நடத்தும் பிரபுக்கள் மனநிலையில் உள்ள பலரையும் அது பாதித்துள்ளது. 

ஆனாலும் அவ்வபோது பலர் முயன்று நடத்தும் சிற்றிதழ்களில் பல அதன் காத்திர தன்மையால் அதன் கௌரவத்தை இன்றளவும் காப்பாற்றி வருகிறது. அதிலிருந்து தொழிற்நுட்ப வளர்ச்சியாலும் கால ஓட்டத்துடன் ஓடும் தேவையினாலும் தொடங்கிய பல இணைய பக்கங்களும் படைப்புகளில் எதிர்ப்பார்க்கும் காத்திர தன்மையினால் தனித்தே தெரிகின்றன.

ஜனரஞ்சக இதழ்களும் இணையத்தை ஆக்கிரமிக்கும் இன்றைய காலக்கட்டத்தில் இலக்கியத்திற்காகவும்  பல இணைய பக்கங்கள் இருப்பது உங்களைப் போன்ற தேர்ந்த வாசகர்கள் இருப்பதால்தான்.

உலகின் ஒரு மூலையில் இருக்கும் ஒருவரின்  எழுத்தை உலகின் இன்னொரு மூலையில் இருக்கும் ஒருவர் வாசிக்கலாம். உடனுக்குடன் அதற்கான எதிர்வினையைத் தெரிவிக்கலாம். உடனுக்குடன் அது குறித்து உரையாடலாம் என்பது எவ்வளவு வசதியோ அவ்வளவு பொறுப்பும் இருக்கிறது என்பதை எழுதுகின்றவர்கள் உணர்ந்துதான் எழுதுகிறார்களா? அதற்கு எதிர்வினையாற்றுகிறவர்களுக்கும் அந்த பொறுப்பு இருக்கிறதா என்பதை அவரவர் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இனி இன்றைய மாதம் ஒரு மலேசிய புத்தகத்திற்கு செல்லலாம்.

 நாகம்மாளின் மனக்குறிப்புகள். மலேசிய எழுத்தாளர் மனோகரன் கிருஷ்ணனின் முதல் சிறுகதை தொகுப்பு. வழக்கமாக, கதைகளை இதழ்களுக்கோ அல்லது ஏதும் ஊடங்களுக்கோ அனுப்பி அது பிரசுரமாகிய பின் தொகுத்து புத்தகமாக்குவார்கள். அல்லது புத்தகம் வெளியீடு செய்வதற்கு முன்னமே அதையொட்டிய சில கதைகளை ஊடகங்களுக்கு அனுப்பி பிரசுரிக்க வைப்பார்கள். இன்னொன்றும் இருக்கிறது தான் எழுதிய மோசமான கதைகளை இன்னொரு எழுத்தாளரிடம் கொடுத்து நன்கு செறிவாக்கம் செய்து அது முழுக்கவும் தன் கதைதான் என்கிற போலி பாவனையில் புத்தகத்தை வெளியிட்டு தங்களையும் ஓர் எழுத்தாளராக முன்னிறுத்திக் கொள்வது.

இந்த வகைகளில் இல்லாமல், தனது வலைப்பூவிலும் அவ்வபோது முகநூலிலும் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்கியுள்ளார் கதாசிரியர். தொடர்ந்து வாசிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். அதோடு பல்வேறுபட்ட பதிப்புகளில் வெளிவந்துள்ள திருக்குறள் புத்தகங்களை சேகரித்து வருகின்றார். மலேசிய எழுத்தாளர்களின் புத்தகங்களையும் தொடர்ந்து சேமித்து வருகின்றார். தற்போது வெளியீடு காணும் புத்தகங்கள் முதல் கிடைக்காத புத்தகங்கள் வரை அதில் அடங்கும். இச்செய்தி வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவும் என நம்புகின்றேன்.

இனி சிறுகதை தொகுப்பிற்கு செல்லலாம்;

மொத்தம் 15 கதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையில் மலேசிய மண்ணில் கதையைச் சொல்ல முற்பட்டிருக்கின்றது. அது முழுமையடைந்துள்ளதா என்று கேட்டால்;  அதன் முயற்சி தெரிகிறது எனலாம்.

முதல் கதை, மனைவி காத்திருக்கிறாள். இக்கதை எனக்கு ஒரு புதுமொழியை நினைக்க வைத்தது. ‘ஊருக்கு ராஜாவாக இருந்தாலும் வீட்டிற்கு துடைப்பக்கட்டைதான்’. பெரும்பாலும் கணவன்களுக்கு  இதனைச் சொல்லி கிண்டல் செய்வோம். சொல்லப்போனால்,  பெரும்பாலான கணவன்களின் நிலை இதுவாகத்தான் இருக்கும். பிறந்த விட்டிற்கு சென்றுள்ள மனைவியை அழைத்து வர செல்லும் கணவன் அதற்கான இரயிலில் ஏறினாரா இல்லையா என்பதுதான் கதை. ஒரு கதைக்கு இதுமட்டும் போதுமா என்ன.? கணவனின் அந்த பயணத்தை கதாசிரியர் சொல்லிக் கொண்டுச் செல்லும் போது நமக்கேக்கூட ஓரளவிற்கு பதற்றம் தொற்றிக்கொள்கிறது. நம்மில் பலர் பொது போக்குவரத்து சேவைக்கு இவ்வாறான  அனுபவங்களைப் பெற்றிருப்போம். ஆனால் கதையின் முடிவு கதையோட்டத்தை காப்பாற்ற தவறிவிட்டதாகப்படுகிறது. இத்தனை இன்னல்களை தாண்டி, கணவன் தன் மனைவியை அழைத்து வருவதற்கு பேருந்தில்  ஏறிவிட்டதில் என்ன கதை இருக்கிறது. முழு கதையையும் மாற்றிப்போடும்  சூட்சுமம் இருக்கும் கதை முடிவில் இன்னும் கவனம் எடுத்திருக்கலாம். பல பாடுகள் கடந்து விட்ட நிலையில் மனைவி தொலைபேசியில் அழைக்கும் சமயத்தில், சில நொடிகளின் இரயிலை தவறவிட்டு நிற்பதில்தான் இக்கதை மறைந்திருப்பதாய்த் தோன்றுகிறது. அப்படியில்லாமல் எல்லா சிக்கல்களையும் தாண்டி மனைவியை பார்ப்பதற்கு இரயிலில் ஏறிவிட்டதாய் ‘சுகம்’ என கதாசிரியர் கதையை முடித்துவிட்டது இக்கதையை பலவீனமாக்கியுள்ளது. ஆனால் இக்கதையின் முடிவு இக்கதையை அனுபவ பத்தி போல அமைத்துவிட்டது.

அடுத்த கதை, வெளியே ஒரு வானம். தன் வகுப்பு மாணவனின் வித்தியாசமான செய்கையால் ஈர்க்கப்படும் ஆசிரியை அதற்கான காரணம் தெரிந்ததும் உடைந்துப் போகிறார். இக்கதை சொல்லப்பட்டிருந்த விதம் கவர்கிறது. முன் யூகங்கள் ஏதும் இக்கதைக்கு இடம் கொடுக்கவில்லை. அடிக்கடி பள்ளிக்கு மட்டம் போடுகிறான் மாணவன் ஜெயன். அவனும் தனக்கு ஏதேதோ நோய் இருப்பதாகச் சொல்லி ஆசிரியையுடன் விளையாடுகிறான். பின் அவனுக்கு உண்மையிலேயே நோய் இருப்பது தெரியவருகிறது. அது அவனது ஆயுளை தினம் தினம் குறைத்துக்கொண்டு வருவதும் தெரிகிறது. ஆசிரியை உடைந்து போகிறார். கொஞ்சம் முயன்றிருந்தால் ஆசிரியைக்கும் மாணவனுக்கும் இடையில் இருக்கும் அன்பை இன்னமும் ஆழமாக சொல்லியிருக்க முடியும். கதையின் முடிவு செயற்கையாய் அமைந்துவிட்டது.

ஆன்மாக்களின் தரிசனமும் கடவுளின் வார்த்தைகளும். கடுங்கோன்மேயன்  என்னும் சாமியாரைத் தேடி கடல்வழி பயணிக்கிறது கதை.  புதிய அனுபவத்தை கொடுக்க முயற்சிக்கும் கதை. தனது மூதாதையர்களின் கடலில் மூழ்கிய பொக்கிஷயங்களைத் தேடிச்செல்லும் நாயகனுக்கு கடுங்கோன்மேயனின் உதவி தேவை. தனது சூட்சும மொழிகளால் நடந்ததைச் சொல்லி எச்சரித்த கடுங்கோன்மேயன் அதற்கான வழிமுறைகளையும் சொல்கிறார். நாவலுக்கான கருவை மிக சுருக்கமாக சொல்ல முயன்று அது தன் பக்கங்களின் சிலவற்றை அதிகப்படுத்தியது போல இச்சிறுகதை இருக்கிறது. இதனை நாவலாகவோ குறுநாவலாகவோ கதாசிரியர் முயற்சிக்கலாம். இன்னமும் இக்கதையை விரிவாக மேலும் சில தேடல்களுடன் எழுத வாய்ப்பு உண்டு. அது இக்கதை வாசிப்பின் அனுபவத்தை முற்றிலும் மாறுபட்டதாக கொடுக்கும்.

வட்டிப்பணம் . பணம் படுத்தும் பாடு. பணமே பிரதானம் என்னும் மனிதனின் கடைசி நிமிடம் எப்படி இருந்துவிடும் என சொல்லும் கதை. இக்கதை சொல்லப்பட்ட விதம் வாசகர்களை கவரும். மெல்ல மெல்ல காய்களை நகர்த்தி  முன்னேறிச் செல்வது போல கதையை ஆசிரியர் முன்னகர்த்தி செல்கிறார். கதையில் முடிவு முழு கதையையும் மீண்டும் நினைக்க வைக்கிறது.

ஒற்றைச் செருப்பாய் இந்நாட்டுச் சூழலில் தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை சொல்லும் கதை. பலரும் இத்தகைய கருவினை கையாண்டிருக்கிறார்கள். கதாசிரியர் தன் பார்வையில் கதையை நகர்த்துகிறார். ஒரு சாதாரண ‘மொட்டை கடுதாசி’ என்னவெல்லாம் செய்யும் என சொல்ல முயன்ற கதை.

அற்றைக்கூலி வாசித்து முடிக்கவும் மனதை கணக்க செய்துவிடுகிறது. எதற்காக போராடுகின்றோமோ அது கைக்கு எட்டிய நொடியில் நாம் அதனைவிட்டு இன்னும் அதிகம் தூரம் நகர்ந்துச் சென்றுவிடும் உணர்வு மேலிடுகிறது.

கலைந்து செல்லும் மேகங்கள், சகோதரியின் மரணத்திற்கு செல்லும் வழியில் நாயகனின் நினைவுகள் பின் செல்கின்றன. ஒரு பக்கம் மரணம் இன்னொரு பக்கம் நினைவுகள் கொடுக்கும் அதீத நம்பிக்கை என இரண்டிற்கும் இடையில் கதாசிரியர் கதையை நகர்த்தியுள்ளார்.

நெருப்புப் பிண்டங்கள், சில பக்கங்கள் கொண்ட கதைதான். ஆனால் கதையின் முடிவு என்னை பெரிதும் பாதித்தது என்றே சொல்லவேண்டும்.  தாத்தாவும் பேத்தியும் இருக்கும் வீட்டில் திருடர்கள் நுழைகிறார்கள்.  தடுக்க முயன்ற தாத்தா கொலை செய்யப்படுகின்றார். அந்த ஏழை வீட்டில் திருடர்கள் பறித்துக்கொண்டு போனது தாத்தாவின் உயிர் மட்டுமல்ல அந்த பேத்தியின் எதிர்காலத்தையும் என கதை முடியும் போது வாசிக்கையில் நம்மால் அவ்வளவு சீக்கிரத்தில் மீண்டு வர முடியாது. வீடு புகுந்து திருடுகின்றவர்களை ஏன் அதிகபட்சம் தண்டனை கொடுக்க வேண்டும் என சொல்ல வைக்கும் கதை.

பள்ளி வண்டி, கதையும் இங்குள்ள தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கல்தான். பெரும்பாலும் பேருந்து ஓட்டுனர்கள் குறித்து பெரிதாக பேசுவதில்லை. ஒரு கட்டத்தில் பள்ளி பேருந்து முதல் தொழிற்சாலை பேருந்துகள் வரை தமிழகளே ஓட்டுனர்களாக இருந்தார்கள். பின்னர் அவர்களால் அதை ஏன் தொடர்ந்து செய்ய முடியவில்லை என சொல்லும்  இக்கதை அவர்களின் சிக்கலைக் காட்டுகிறது.

தாயுமானவள், ஆசிரியை குறித்த கதை. பெரிய திருப்பங்கள் இல்லை. நன்னெறியை போதிக்கும் வகை கதை. ஆசிரியையின் அர்ப்பணிப்பு பின் தங்கிய மாணவர்களை எப்படி படிப்பில் தேர்ச்சி பெற வைக்கிறது என சொல்லி ஆசிரியர்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காட்டுகிறார்.

மானுடம் கடந்த மனிதர்கள், தலைப்பிற்கு ஏற்றார் போல அமைந்துவிட்ட கதை. தினமும் ஒரு முறையாவது  வித்தியாசமான மனிதர்களை நாம் சந்திக்கக் நேரும். அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னதான் தேவை போன்ற எந்த புரிதலுக்கும் நம்மால் வர முடியாது ஆனாலும் நம்மால் அவர்களை புறக்கணிக முடியாது. கதையின் மையம் இதுதான்.

அடுத்த தலைப்பு, புத்தக தலைப்பைக் கொண்டது. ‘நாகம்மாளின் மனக்குறிப்புகள்’. அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார் நாயகன். அங்கு சந்திக்கும் நபர் மூலம் தங்களின் தோட்டத்து பழைய வாழ்க்கையை நினைத்துப்பார்க்கும்படி கதை நகர்கிறது. குலதெய்வ வழிபாடு குறித்து இக்கதையில் குறிப்பிடும் தகவல் அதிர்ச்சியைக் கொடுக்கின்றது. ஜீரணிக்க முடியவில்லை. அந்த காலத்தில் பூப்படைந்த பெண்களைக் கண்டு வேற்று இன மன்னர்களும் சிப்பாய்களும் அதிகாரம் படைத்தவர்களும் வன்முறை செய்து இச்சையைத் தீர்ப்பதற்காக அவர்களை இழுத்துப் போவார்களாம். அதனை தடுப்பதற்காகவே, பெண் குழந்தைகள் வயதிற்கு வந்தவுடன், வீட்டின் முன் சிறு குழியை வெட்டி அந்த பெண்ணை அதில் அமரவைப்பார்களாம். அவள் கையில் அகல் விளக்கைக் கொடுத்து அவள் மேல் தென்னை மட்டைகளைப் போட்டு மூடி விடுவார்களாம். அந்த பெண் குழிக்குள்ளேயே எரிந்து பூபோல் சாம்பலாகி விடுவதால் அவளையே குலதெய்வமாய் வணங்குகிறார்களாம். எனக்கு தெரிந்து இந்தக் கதையை பல ஆண்டுகளுக்கு முன் வந்த ‘விசில்’ என்ற ஒரு திரைப்படத்தில் ஒரு பகுதியாக வந்தது. குலதெய்வங்களுக்கு பின்னால் இருக்கும் கதைகளைத் தேடினால் சில சமயங்களில் கற்பனைகளை விடவும் உண்மைகள் பயங்கரமானதாகத்தான் இருக்கிறது.

நிழல் மரக்கோடுகள் கதையும் பழைய வாழ்க்கையைச் சொல்லி செல்கிற கதைதான். போர்க்காலம், கொடுமைக்காலம், கலவரக்காலம், வசந்தகாலம் என நான்கு காலத்தின் சூழலைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. இன்னும் அதிகமாக சொல்லியிருக்க வாய்ப்புகள் இருந்தும் இக்கதையில் கதாசிரியர் அதனை செய்யவில்லை. செய்திருக்கலாம். இவரின் பெரும்பாலான கதைகளில் அதிகமாய்ச் சொல்ல வேண்டிய இடத்தில் குறைவாகவும் குறைவாய்ச் சொல்ல வேண்டிய இடத்தில் அதிகமாகவும் சொல்லிவிடுகிறார். அது பல சமயங்களில் அக்கதையின் தீவிரத்தன்மையைக் குறைத்துவிடுகிறது.

தொகுப்பின் நிறைவான கதை, சுடுகாட்டு காளி. சிறிய கதை. மேலும் செறிவாக்கம் செய்திருந்தால், ‘குறுங்கதை’ வடிவில் கிடைத்திருக்கும்.  இக்கதையை நேர்த்தியாக சொல்ல முயன்றுள்ளார். சாமாண்யன் நான்கு நம்பர் (லாட்டிரி) எடுக்கும் கதை. அதற்காக மந்திரவாதியுடன் சுடுகாட்டிற்கு பூஜை செய்ய செல்கிறார்கள். அங்குதான் சிக்கல் ஏற்படுகிறது. நினைத்துப் போன நான்கு நம்பர் கிடைத்ததா இல்லையா என்பதுதான் கதையின் சுவாரஸ்யம். கதையின் கடைசி பத்தி நம்மை நோக்கி நாமே சிரிக்கும்படி ஆகின்றது.

மனோகரன் கிருஷ்ணன் அவர்களின் இந்த நாகம்மாளின் மனக்குறிப்புகள்’ அவரின் முதல் சிறுகதை தொகுப்பு. அதற்குரிய குறைபாடுகள் இருந்தாலும் அதற்கான முயற்சிகள் தெரிகின்றன. வழக்கமாக வாசித்துப் பழகிய கதைகளில் இருந்து சற்றே மாறுபட்ட கதைபோக்குகள் கொண்ட கதைகளாக இக்கதைகளைச் சொல்லலாம். ஒவ்வொரு கதையிலும் தீவிரத்தன்மையை கூட்டியிருந்தால் அதன் ஜனரஞ்சக தன்மை தானாகவே கதையில் இருந்து விலகியிருக்கும். தொடர்ந்து எழுதுவதன் மூலம் கதாசிரியரிடம் இருந்து இன்னும் ஆழமான படைப்புகளை எதிர்ப்பார்க்கலாம்.

இனி அடுத்த மாதம் மேலும் ஒரு மலேசிய புத்தகத்துடன் சந்திக்கலாம்.

எழுத்தாளர் தயாஜி குறிப்புகள்

எழுத்தாளர் தயாஜி. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார்.  முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும்  ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.              ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *