1.உணவுக்குப் பயன்படுகிறோம்
++
ஒரு பண்ணையாரிடம் வல்லூறும், சேவலும் இருந்தன. வல்லூறு பண்ணையாரிடம் பழகி அவர் அழைத்த போதெல்லாம் சென்று, அவருடைய மணிக்கட்டில் உட்கார்ந்து கொள்வது வழக்கம்.
ஆனால், சேவல் மட்டும் பண்ணையாரை நெருங்குவதில்லை. அவர் அருகில் வந்த உடனே, அது கூவிக் கொண்டே ஓடிவிடும்.
ஒரு நாள் வல்லூறு, சேவலைப் பார்த்து, “உங்களுக்கு நன்றி என்பதே கிடையாது”. என்று கூறியது. மேலும், கோழி இனத்தையே ஏளனமாகப் பேசத் தொடங்கியது. நீங்கள் அடிமைப்புத்தி உள்ளவர்கள். உங்களுக்குப் பசி வந்தால் மட்டும் எசமானரைத் தேடி ஓடுவீர்கள். காட்டுப் பறவைகளாகிய எங்கள் குணமே வேறு. எங்களுக்கு மிகுந்த வலிமை உண்டு. மற்ற பறவைகளை விட வேகமாக எங்களால் பறந்து செல்ல இயலும். மனிதர்களிடமிருந்து நாங்கள் விலகி ஓடுவதில்லை. எங்களை அழைக்கும் போது, நாங்களாகவே அவர்களிடம் போகிறோம். எங்களுக்கு உணவு அளித்து வளர்ப்பதை நாங்கள் மறப்பதில்லை” என்று கூறியது.
அதற்கு சேவல், “நீங்கள் மனிதர்களைக் கண்டு ஓடாமல் இருப்பதற்குக் காரணம். அவர்களுடைய உணவு மேசைகளின் மீது, வேகவைத்த வல்லூறுகளை நீங்கள் பார்த்ததில்லை. ஆனால், நாங்களோ. வேகவைத்த கோழிகளையும், குஞ்சுகளையும் அடிக்கடி பார்கிறோமே!” என்று கூறியது.
++
2. கணவனை பயமுறுத்தும் மனைவி
++
ஒரு ஊரில், கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தனர். கணவன் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வருமானம் மிகவும் குறைவாகவே கிடைத்துக் கொண்டிருந்தது.
‘அடுத்த வீட்டில், எதிர்வீட்டில் அந்தப் பொருள் வாங்கியுள்ளனர்’, ‘நாம் இப்படி எந்தப் பொருளும் வாங்காமல் ஏழ்மை நிலையில் இருக்கிறோமே’, நமக்கு எப்போதுதான் நல்ல காலம் வரப்போகிறதோ என்று மனைவி சதா புலம்பிக் கொண்டிருந்தாள்.
‘இப்போது நாம் பட்டினி கிடக்காமல், ஏதோ வயிறாரச் சாப்பிடுகிறோம் அல்லவா? அதை நினைத்து, மகிழ்ச்சியாக இருப்பதே நல்லது!’ என்று கணவன் ஆறுதலாகக் கூறுவான்.
மனைவி அதை ஏற்காமல், அவனை நச்சரித்துக் கொண்டே இருந்தாள்.
அவன் ஒருநாள் பொறுமை இழந்து, “உன் தாய் வீட்டுக்குப் போய், சில நாட்கள் தங்கியிருந்து வந்தால் நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. மாற்றம் மகிழ்ச்சியைத் தரும்” என்றான்.
அதைக் கேட்டதும், அவள் பெரிய கூச்சல் போடலானாள், “என்னை, என் தாய் வீட்டுக்கு ஓட்டிவிட்டு, எவளையாவது ஒருத்தியைக் கூட்டி வந்து கும்மாளம் அடிக்கப் பார்க்கிறாயா?” என்று கத்தினாள். அத்துடன் “இதோ கிணற்றில் போய் விழுகிறேன்” என்று கூவிக் கொண்டு கொல்லையில் இருக்கும் கிணற்றுக்கு விரைந்தாள்.
வேகமாய்ப் போனவள் அப்படியே கிணற்றடியில் நின்று, கணவன் வருகிறானா? என்று சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு திரும்பி விட்டாள்.
கணவனுக்கும் உள்ளூறச் சிறிது பயம் இருந்தது, அவள் கிணற்றில் விழுந்து இறந்து விட்டால், தான் தள்ளிவிட்டதாக ஊரார் அவதூறு கூறினால் என்ன செய்வது? என்ற அச்சம் அவனைவிட்டு அகலவில்லை.
சில நாட்களுக்குப் பிறகு, “எதிர் வீட்டில் உள்ள அம்மா வெளியூரில் இருந்து புடவைகள் வாங்கி வந்து விற்கிறாள். மாதா மாதம் இருபது ரூபாய் கொடுத்தால் போதும்” என்றாள் மனைவி.
இப்போது நமக்கு வரும் வருமானத்தைக் கொண்டு வாழவேண்டிய சிரமமான நிலைமை உள்ளது. இன்னும் புடவைக் கடன் வேறு மாதம் இருபது ரூபாய்க்கு எங்கே போவது? பிறகு பார்க்கலாம்” என்றான் கணவன்.
“ஒரு புடவை வாங்கித் தருவதற்கு வக்கில்லை, என்ன வாழ்க்கை இது? நான் கிணற்றில் விழுந்து செத்துப் போகிறேன்” என்று கிணற்றடிக்கு ஓடினாள் மனைவி.
கணவன் பேசாமல் உட்கார்ந்திருந்தான். சிறிது நேரத்தில் அவள் திரும்பி வந்து விட்டாள்.
மறுநாள், தனக்கு சம்பளத்தைக் கொஞ்சம் கூட்டித் தரும்படி முதலாளியிடம் கேட்டுக் கொண்டான் அவன். மேலும், தன் மனைவியின் நச்சரிப்பு தாங்க முடியவில்லை. அடிக்கடி என் மனைவி, “கிணற்றில் விழுந்து விடுவேன்” என்று கிணற்றடிக்கு ஓடுகிறாள். எனக்கு ரொம்பவும் பயமாக இருக்கிறது”. என்று கூறி வருந்தினான்.
“கிணற்றில் விழுவேன் என்று அவள் சொல்வதற்காக, நீ பயப்படாதே, இனிமேல், அவள் அப்படிச் சொன்னால், தைரியமாக, நீ கிணற்றில் நன்றாக விழு. எனக்குத் தொல்லை ஒழியும் என்று கூறு.” என்று தைரியம் கூறினான் முதலாளி.
“அவள் விழுந்துவிட்டால்,என்ன செய்வது? எனக்கு அவமானம் ஏற்படுமே” என்றான்.
“அப்படி சொல்லிக் கொண்டிருக்கிறவள், ஒரு நாளும் விழவே மாட்டாள்; தைரியமாக இரு” என்றான் முதலாளி.
சில நாட்களுக்குப் பிறகு, “இப்படியே வறுமையில் போராடிக் கொண்டிருக்க முடியாது. கிணற்றில் விழுந்து சாகிறேன்” என்று சொல்லிவிட்டு, கிணற்றுக்குச் சென்று கொண்டிருந்தாள் “என்னை தொல்லைப் படுத்தாதே, நீ கிணற்றில் விழுவதற்காக நான் பயப்படவில்லை. எல்லோரும் ஒரு நாள் சாக வேண்டியவர்கள் தானே. யாருடைய உயிரை யார் தடுக்க முடியும்?” என்றான். “என்னை சாகவா சொல்கிறாய்? என்று கூறி, அழ ஆரம்பித்தாள். பிறகு, அவள், “கிணற்றில் விழுவேன்” என்று சொல்வதே இல்லை. இவ்வாறு கணவனைத் தொல்லைப்படுத்துகிறவர்களும் இருக்கின்றனர்.
+++
3.புரட்சிப் பெண்
++
ஒரு கிராமத்தில் ஓலைக்குடிசை ஒன்றில், ஏழு வயதான சிறுமி பாடம் படித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது கிராம அதிகாரி வந்து “உன் அம்மா, அப்பா எங்கே?” என்று கேட்டார்.
“அம்மா பசுவைத் தேடிச் சென்றிருக்கிறாள். அப்பா முதலாளி வீட்டுத் தோட்டத்துக்குப் போயிருக்கிறார்” என்றாள் சிறுமி.
“வரும் ஞாயிற்றுக் கிழமைக்குள் வரிப்பணத்தைக் கொண்டு வந்து தரவில்லையானால், பசுவைப் பிடித்துக் கொண்டு போய்விடுவேன்.” என்று கடுமையாகக் கூறினார் கிராம அதிகாரி.
“எங்கள் வீட்டுப் பசுவைப் பிடித்துக் கொண்டு போவதற்கு நீங்கள் திருடரா?” என்று கேட்டாள் சிறுமி.
சிரித்துக் கொண்டே, ”மக்குப் பெண்ணே! நான் திருடன் அல்ல! திருடன் சொல்லிவிட்டுத் திருட மாட்டான்” என்றார் கிராம அதிகாரி.
“பிறகு, ஏன் எங்கள் பசுவைக் கொண்டு போக வேண்டும்?” என்று கேட்டாள் சிறுமி.
“அரசாங்கத்துக்குச்செலுத்த வேண்டிய வரி செலுத்தாதனால் உங்கள் பசுவைக் கொண்டு போவேன்” என்றார் அதிகாரி.
“வரி என்றால் என்ன? அரசாங்கம் ஏன் வரி போடுகிறது? அரசாங்கத்திடம் பணம் கிடையாதா? அது எங்களைப் போல் ஏழையா?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டாள் சிறுமி.
“வரி போடுவது பொதுமக்கள் நன்மைக்காகவே, மருத்துவ உதவி, கல்வி வசதி, போக்குவரத்துக்காக சாலை போடுதல், பாலம் அமைப்பது, கலவரம், திருட்டு நடக்காமல் பாதுகாப்பது, ஊழியர்களுக்குச் சம்பளம், இப்படியாக பல தேவைகளுக்கு அரசாங்கத்துக்கும் பணம் தேவைப்படுகிறது. அதற்காகவே வரி போடப்படுகிறது” என்றார் அதிகாரி.
“எங்கள் தேவைகளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம். அரசாங்கம் எதுவும் எங்களுக்குச் செய்ய வேண்டாம், அதனால் நாங்கள் வரி செலுத்த மாட்டோம்” என்றாள் சிறுமி
“வயதான பின்னர் நீ எல்லாவற்றையும் தெரிந்து கொள்வாய், இப்பொழுது விளக்கிச் சொல்ல இயலாது. உன் அம்மா வந்ததும் கிராம அதிகாரி வந்தார் என்று சொல்” என்று கூறி புறப்பட்டார்.
“இந்தப் பெண், பெரியவளானபின் ஒரு புரட்சிக்காரியாக ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்று நினைத்துக் கொண்டார்.
உலகில் அரசியல், கல்வி, சமூகம் ஆகியவற்றில் பல புரட்சிப் பெண்கள் தோன்றியுள்ளனர்.
+++
4.நன்றி இல்லாதவன்
++
இளவரசன் ஒருவன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். ஒரு மானைத் துரத்திக் கொண்டு வெகு தொலைவு சென்று விட்டான். அவனுக்குத் துணையாக வந்த காவலர்களைப் பிரிய நேர்ந்தது.
இருள் சூழ்ந்தது. அப்போது ஒரு சிங்கம் எதிரே வருவதைக் கண்டு, அருகில் இருந்த மரத்தின் மீது ஏறிப் பதுங்கிக் கொண்டான். அதே சமயம், அந்த மரத்தில் கரடி ஒன்று இருப்பதைக் கண்டு பயந்து நடுங்கினான்.
சிங்கத்திடமிருந்து தப்பி, கரடிக்குப் பலியாகப் போகிறேமே என்று கவலையில் ஆழ்ந்தான் இளவரசன். கரடி அவனுக்கு ஆறுதல் அளித்தது,
நள்ளிரவு ஆகியது. மரத்தடியில் இருந்த சிங்கம் நகரவே இல்லை, எப்படியும் இரை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருந்தது.
இளவரசன் சோர்வுற்று, தூக்கக் கலக்கத்தில் காணப்பட்டான்.
கரடி அவனைப் பார்த்து, “இளவரசனே! இருவரும் விழித்திருக்க வேண்டியதில்லை, முதலில் நீ தூங்கு, நீ கீழே விழுந்து விடாமல் உன்னை நான் பிடித்துக் கொண்டு விழித்திருக்கிறேன். பிறகு, நான் தூங்குகிறேன், நான் விழுந்து விடாமல் நீ பிடித்துக் கொள்; பொழுது விடிந்ததும் சிங்கம் போய் விடும்; நாமும் அவரவர் வழியில் போகலாம்” என்று கூறியது.
அது கூறிய யோசனைப்படி, இளவரசன் தூங்க முற்பட்டான். அப்போது சிங்கம் தன்னுடைய நயவஞ்சகத்தைக் காட்ட முனைந்தது.
“அன்புள்ள கரடியே! நாம் இருவரும் ஒரே இனம்! அவனோ நம் விரோதி; அவனை நீ காப்பாற்றலாமா? நான் போன பின், அவன் அம்பெய்து உன்னைக் கொன்று விடுவானே. மனித இனம் நன்றி பாராட்டாதது, எனவே அவனைக் கீழே தள்ளிவிடு, என் பசியைத் தீர்த்துக் கொண்டு போகிறேன், உனக்கும் பயம் அகன்று விடும், என்று தேனொழுகக் கூறியது சிங்கம்.
“ஏ சிங்க ராஜனே! நன்மையோ தீமையோ நான் அவனுக்கு வாக்கு கொடுத்து விட்டேன். அதனால், அவனுக்குத் தீங்கு செய்ய மாட்டேன்” என்று மறுத்து விட்டது கரடி.
தன் தந்திரம் பலிக்காமல் போகவே சிங்கம் அமைதியாகி விட்டது.
இளவரசன் கண்விழித்தான். சிங்கத்துக்கும் தனக்கும் நடந்த உரையாடலை அவனிடம் கூறிவிட்டு, கரடி கண் அயர்ந்தது.
கரடியிடம் தன் தந்திரம் பலிக்காமல், ஏமாந்து போன சிங்கம் இளவரசனிடம் முயன்றது.
“எனக்குப் பயந்து நீ மரத்தில் ஏறிவிட்டாய். ஆனால், கரடியிடம் இருந்து தப்ப முடியாது. நான் போனபின், கரடி உன்னைக் கொன்றுவிடும். நீ உயிர் பிழைக்க வேண்டுமானால் கரடியைக் கீழே தள்ளிவிடு” என்று நயவஞ்சகமாகக் கூறியது சிங்கம்.
அது சொன்னதை நம்பி, தன் உயிரே தனக்குப் பெரிது என்று எண்ணி, கரடியைக் கீழே தள்ள முற்பட்டான் இளவரசன்.
அரைகுறைத் தூக்கத்தில் இருந்த கரடி, மற்றொரு கிளையைப் பிடித்துக் கொண்டு கீழே விழாமல் தப்பித்துக் கொண்டது.
இளவரசனின் நம்பிக்கைத் துரோகத்தைக் கண்டு கரடி வருந்தியது
“அடே துரோகி! நட்பு எத்தகையது என்பதை உணராமல், கலக்கமுற்று, துரோகம் செய்ய முற்பட்டு விட்டாய். அதனால், உன் புத்தியும் அடியோடு கலங்கி அலைவாய்” என்று சபித்தது கரடி. இளவரசனின் மனச் சாட்சி உறுத்தியது. பைத்தியம் பிடித்தவனைப் போல் ஆனான்.
++
5.ஏமாந்த ஓநாய்
++
ஒரு கிராமத்தில் பசியோடு அலைந்து கொண்டிருந்தது ஓர் ஓநாய்.உணவு எதுவும் கிடைக்கவில்லை.
கிராமத்தின் கோடியிலிருந்த குடிசைக்கு அருகில் வந்து கொண்டிருந்தது.
குடிசையினுள் சின்னஞ்சிறு பையன் அழுது கொண்டிருந்தான்.
கிழவி எவ்வளவோ சமாதானப்படுத்தியும், பையனின் அழுகை நிற்க வில்லை.
“நீ அழுகையை நிறுத்தாவிடில், உன்னை ஓநாயிடம் தூக்கிப் போட்டு விடுவேன்” என்று பலமுறை சொல்லி பயமுறுத்தினாள் கிழவி. அதைக் கேட்டதும் ஓநாய் மேற்கொண்டு செல்லாமல், குடிசைக்கு வெளியே படுத்து விட்டது.
கிழவி, பையனை எப்பொழுது வெளியே போடுவாள் என்று ஓநாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
இரவு வெகுநேரம் ஆகிவிட்டது. ஓநாயோ காத்துக் கொண்டிருந்தது.
திடீரென்று குடிசைக்குள்ளிருந்து கிழவியின் குரல் கேட்டது.
“என் கண்ணே நீ தூங்கு! உன்னை ஓநாயிடம் போட மாட்டேன். அந்த ஓநாய் இந்தப் பக்கம் வரட்டும் அதை அடித்துக் கொன்று விடுவோம்.” என்றாள் கிழவி.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஓநாய், “மக்கள் பேசுவது ஒன்று; செய்வது வேறாக இருக்கிறதே” என்று எண்ணிக் கொண்டே எழுந்து, கிராமத்தை விட்டு வெளியேறியது.
+++

முல்லை முத்தையா
(7, சூன், 1920 – 2000) ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. [2]
வாழ்க்கை வரலாறு
பழநியப்பர், மனோம்மணி தம்பதியினருக்கு மகனாக முத்தையா தேவக்கோட்டையில் பிறந்தார். 15 வயதில் இவரின் தந்தை பர்மாவில் நடத்திவந்த கடையைப் பார்த்துகொள்ள சென்றார். இரண்டாம் உலகப்போரின்போது நடந்தே தாயகத்துக்கு திரும்பினார்.[3] 1943 ல் முல்லை என்ற பதிப்பகத்தினை உருவாகி பாரதிதாசன்,[4] கோவை அய்யா முத்து போன்றோரின் நூல்களை வெளிட்டமையால் இயற்பெயரான முத்தையா என்பது முல்லை முத்தையா என்று வழங்கப்பெற்றது.