பரிவை சே.குமாரின் ‘வாத்தியார்’ சிறுகதை தொகுப்பை வாசிக்கையில் சிறுகதை வடிவத்தின் கச்சிதத்தன்மைகள் பல விளங்க ஆரம்பித்தன. ஒரு கற்பனைக்கதைக்கும் நிஜக்கதைக்குமான வித்தியாசங்களை நாம் முன்பே உணர்ந்திருக்கிறோம். கற்பனைக்கதைகளைக்கூட ஆசிரியர், தான் வாழ்ந்த சூழல் மற்றும் பழகிய மனிதர்களின் குணாம்சங்கள் இவற்றை மனதில் வைத்துக்கொண்டு புனைகையில் அந்தக்கதைக்குள் உயிரோட்டம் வந்து சேர்ந்துவிடுகிறது. வாசிக்கும் வாசகன் ஒருவித நிச்சயத்தன்மையை மனதால் அடைகிறான். ஒரு சிறுகதையானது வாசகன் மனதில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துமுடித்துவிட்டு அடுத்த வாசனை நோக்கிப்பயணிக்கிறது.
வாத்தியார் தொகுப்பின் முன்னுரைகளை நான் கவனிக்காமல் நேரடியாக கதைகளுக்குள் நுழைந்துவிட்டேன். காளிதாஸ் என்கிற வாத்தியார் ஒருவர் பஞ்சாயத்து பண்ணிக்கொண்டு ஊருக்குள் இருக்கிறார். அவர் பேச்சுக்கு மரியாதையும் ஊருக்குள் இருக்கிறது. முன்பாக அவர் பணியில் இன்னமும் இருக்கிறாரா? இல்லை பென்சன் பார்ட்டியா? என்றே உணராமல் வாசித்தேன். சில கதைகள் தாண்டியதும் தான் முகப்பு அட்டையைக் கவனித்தேன். ‘வாத்தியார்’. கதைகளில் வாத்தியார் நுழைகையில் கதை சொல்லலுக்கே புதிய மெருகு கூடிவிடுவதையும் உணர்ந்தேன். ஆக இந்த தனித்தனிக்கதைகளை நாம் நாவலாகவும் எண்ணி வாசிக்கத்துவங்கலாம்.
பழையன புகுதல்- தொகுப்பின் முதல் கதை. நகர்ப்புறத்தில் வசிக்கும் குடும்பம் தன் மகள் திருமணத்தை பழைய முறைப்படி தங்கள் கிராமத்தில் சம்பிரதாயங்களை விட்டுவிடாமல் செய்து முடிக்க ஆசைப்படுகிறது. நகர்ப்புறத்தில் பிறந்து வளர்ந்த மகள் அப்பாவின் பேச்சை மதிக்கிறாள். அப்பா ஆசைப்படி மகளின் திருமணம் கிராமத்தில் நடைபெறுகிறது. இந்த விசயத்தை வாசிக்கையில் கிராமத்தானாகிய நான் கூட இங்கே நடைபெறும் திருமணங்கள் அனைத்தும் முந்தைய காலம் போலில்லாமல் அருகிலிருக்கும் குறுநகரில் மண்டபம் பிடித்து ஆடம்பரமாய் நடத்த ஆரம்பித்துவிட்டார்களேயென யோசித்தேன். இங்கே கிராமத்தில் முன்புபோல வீட்டின் முன் பெரும்பந்தலிட்டு.. அதனுள் கிழக்கே பார்த்து முகூர்த்த பந்தலுமிட்டு.. உறவுச்சனம் அதே பந்தலின் கீழ் பாய்விரித்து படுத்துறங்கி.. எல்லாம் அழிந்து போய்விட்டதை நினைத்தேன். காளிதாஸ் வாத்தியார் முதல்கதையினுள்ளேயே நுழைந்துவிட்டதை மறுவாசிப்பில் தான் கவனிக்கிறேன்.
காதலித்தவளை மணம் செய்துகொண்டு வெளியூரில் வாழ்பவன் தன் அம்மா சாவில் சந்திக்கும் பிரச்சனையை கிராமிய சூழலோடு சொல்கிறது ‘தாய் முகம்’ கதை. தம்பி, தங்கைகளை விட்டுச்சென்றவந்தானே.. அவனை போகச்சொல்லுங்க மாமா! என்று இந்த நாள் வரை கவனித்த தம்பிகாரன் சொல்லும் விசயங்களும், மாற்றாக கடைசியா ஒருக்கா பார்த்துட்டு போறான் உடுடா! என்றும் பேசும் மக்களைத்தாங்கிய கதை. இறுதியில் அம்மாவுக்கு மாலையிட்டுவிட்டு ஆறுதல் சொல்ல யாருமில்லாமல் வெளியேறுகிறான் மனைவியோடு. ‘தாய்க்கு தலைப்பிள்ளை தானப்பா கொள்ளி போடணும்’ என்றொரு குரல் கேட்கிறது. அதைக்கண்டுகொள்ளாமல் கிளம்புகிறான். மிகப்பெரிய வாழ்க்கையை ஒரு சிறுகதைக்குள் அடக்கி வைத்திருக்கிறார் ஆசிரியர்.
அண்ணன் தம்பி என மூன்று பேர் நகர்ப்புறத்தில் வாழ்வதாகவும் அவர்கள் ஆளுக்கு நான்கு மாதம் தங்களின் தாய் தந்தையரை தங்கள் வீட்டில் வைத்து கவனித்துக்கொள்வதாக வாத்தியாரிடம் பேசுகிறார்கள். பெற்றோர்களோ கிராமத்தில் வாழ்வதையே தங்களுக்கான பாதுகாப்பாய் உணர்ந்து பேசுகிறார்கள், கிராமத்தில் இருவர் வாழ்வதாகவும் ஒருவர் நகரத்தில் வாழ்வதாகவும், அண்ணன் தம்பி சொத்துப்பிரச்சனை, மற்றும் சண்டைகள் என கதைகள் விரிகின்றன. எல்லாக்கதைகளிலும் தீர்ப்பு சொல்பவராக வாத்தியார் வந்து சேர்கிறார்.
வாசிக்க உகந்த மிகநல்ல தொகுப்பு இது.
வெளியீடு :- கேலக்ஸி பதிப்பகம். விலை : 180. பேச ; 99944 34432.