நான் மேலே மாடியைப் பார்த்தபோது, பிடிச் சுவற்றில் வீற்றிருந்த பிள்ளையார் சிலையொன்று அர்த்தத்தோடு சிரித்தது. பக்கத்திலமர்ந்திருந்த காகங்கள் தலையையும் வாலையும் முன்னும் பின்னுமாய் கவிழ்த்தபடி ஒயிலாட்டம் காட்டின. அவளைக் காணும் ஆவல் என்னைத் துரத்திக் கொண்டிருந்தாலும் வேலையென்று ஒன்று இருக்கிறதே..! கொஞ்ச நேரம் ஸ்லைசிங் மிஷின் பக்கம் நின்றலைந்தபடி நடக்கும் பணிகளை மும்முரமாக மேற்பார்வை செய்துக்கொண்டிருந்தேன் அல்லது அங்கிருந்த பரபரப்பிற்கேற்றாற்போல என்னையும் சுறுசுறுப்பாய் காட்டிக் கொண்டிருந்தேன்.
ஜலபதி அவ்வப்போது வந்து தலைக்காட்டியபடி தன் பங்கிற்கு அங்கிருந்தவர்களை தெலுங்கில் ஏதோ சத்தம் போட்டுக் கொண்டிருந்தான் என்றாலும், அப்பெண்களின் சமயோஜித சிரிப்பும் பேச்சும் அவனை சட்டென அடக்கி விடும் வல்லமை வாய்ந்ததாக எனக்குப்பட்டது. பின் எந்தவித உணர்ச்சியையும் காட்டாது விறைப்புடன் பிதாமகன் விக்ரமை போல முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றுவிடுவான். மறுபடியும் வருவான். அதே கதைகள் தொடர்ந்த வண்ணமாய் இருந்தது.
அவன் போல் ஒருத்தர் யாரும் இல்லை என்றாலும் அங்கே வேலைகள் நடப்பதும் கஷ்டம்தான். பணி நிமித்தமாக நானும் கூட பல நேரங்களில் அவனையும் கொட்டேஸ்வரம்மாவையுமே அதிகம் சார்ந்திருந்தேன். அதனால் அவர்களது காரியங்களுக்குள் நான் தேவையில்லாமல் நுழைந்ததில்லை.
“கொஞ்சம் வெயில் கூடுறது போல இருக்கில்ல? வாங்க சார், மேல போகலாம்!” என பிரசாத் அழைத்தார். வெக்கை கூடுவது போன்று தோன்றினாலும் எனக்கும் டீ சாப்பிட வேண்டும் போலிருந்தது. கூடவே அவளையும் பார்க்க கண்களும், மனதும் கைகளுக்குள் அடைப்பட்ட பட்டாம்பூச்சியாய் பரிதவித்தன.
பரந்த வானமே பால் வண்ணம் கொண்டது போல் முதன்முறையாக எதிர்பட்டபோது நிலவென அவளை தனித்துப் பார்க்க என்னுடைய சாதாரண கண்களுக்கு இயலவில்லை. கண்டதிலிருந்து அழகிய பேயொன்று இறுகப் பற்றிக் கொண்டது போல் உடல் வேதனையோடு அலைந்துக் கொண்டிருக்கிறேன்!
மதிலைத் தாண்டி குதிக்க தவ்வும் தரை வாழ் முயல்களை போல் மனம் அவள் இருக்கும் இடத்தை காண தன்னிலை மறந்துப் போராடிக்கொண்டிருந்தது.
எதிரெதிரே கண்டுகொண்டாலும் மற்றவரிருக்க என்ன பேசுவது? பேச்சை எப்படி ஆரம்பிப்பது? பள்ளிக்காலங்களிருந்தே ஒரு காதலையும் நேராக சொல்ல இயன்றிராத அம்மாஞ்சி வரலாறுகள் வேறு உள்ளுக்குள் என்னை கெக்கப்பிக்கவென கேலிகள் செய்தன. எப்போதும் வராத அந்த துணிவு இப்போது மட்டும் திடீரென்று முளைத்துவிடுமா? அல்லது முதல் பார்வையிலேயே.. இதை காதல் என்று சொன்னாலும் நம்பத்தான் முடிகிறதா?
“சார்? சார்!” என்று பிரசாத் மறுபடியும் சத்தமாக குரல் கொடுத்தபோதுதான் அவளைப் பற்றிய எண்ண ஓட்டங்களிலிருந்து நான் மீண்டு வந்தேன்.
“என்ன சந்திரா சார் வீட்டு ஞாபகம் வந்துடுச்சா?” என்றார். ஆமால்ல! சாதாரணமா எல்லோருக்கும் புது இடத்திற்கு வந்தால் வீட்டு ஞாபகங்கள் வரும்தானே? எனக்கு அப்போதுதான் வர ஆரம்பித்தது. அதுவரை வராமல் இருந்ததற்கும் நான் சந்தோசம்தான் பட வேண்டும். இப்போது வீட்டு ஞாபகம் வந்துவிட்டதால் மேகங்களைப் போல் மனம் முழுதும் வெறுமைகளும் விரக்திகளும் மட்டுமே சூழ ஆரம்பித்தன. நான் படிப்பை முடித்ததிலிருந்து என்னை நானே கேட்டுக் கேட்டு உடைந்துப் போகும் கேள்விதான்… ஏன் எங்களின் வாழ்க்கை இப்படி திசை மாறிப்போனது?
“என்ன சந்திரா சார்.. யாரையும் லவ் பண்றீங்களா?” பிரசாத் மறுபடியும் என் மன சஞ்சாரங்களைக் கலைத்தார்.
முன்பொன்று நினைத்தேன், வேறொன்று சொன்னார், இப்போது முன்பு நினைத்துக் கொண்டிருந்ததை சொல்கிறார். அவருக்கு நன்றி சொல்வதா அல்லது அவரைக் கோபிப்பதா எனத் தெரியவில்லை. ‘அப்படி எதுவும் இல்லை சார்’ என்று ஒரு மௌனமான புன்னகையை மட்டும் வெளிப்படுத்தினேன். அதில் முன் வரை என்னை ஆக்கிரமித்திருந்த அத்தனை உற்சாகமும் வேகமும் சட்டென குறைந்து, மனதில் கவலைகளும் சோகங்களும் குடி கொள்ளத் துவங்கின.
எங்களுக்கு முன்பே வந்து ஆபிசில், ஈநாடு தெலுங்கு நாளிதழில் மீண்டும் மூழ்கியிருந்தார் சீனியர் சிட்டிசன் மிஸ்டர் கோவிந்தம். எங்கள் குளிர் நிலவு சீதம்மா அங்கேயே டீ குவளைகளோடு வந்து ஒவ்வொருவரிடத்திலும் எடுத்துக்கொள்ளுங்கள் என நீட்டினார்.
உள்ளுக்குள் இன்னும் நான் இருக்கிறேன் என்பது போல அந்த கலவரத்திலும் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும் ஜன்னல் கம்பிகள் வழியாக வீட்டினுள் எப்படியாவது நுழைந்துவிடப் பார்க்கும் குருவியைப் போல் அவளைத்தேடி ஹால், கிச்சன் என ஒவ்வொரு இடமாய் எனதுப் பார்வைகள் அலைமோதிக் கொண்டிருந்தன.
பிரசாத்தும் கோவிந்தம் சாரும் எனது பக்கத்திலிருக்கும் சுவாதீனம் வரவே, கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பினேன். கோவிந்தம் சார் பற்றி, அவர் வயது அனுபவங்களை, அருமை பெருமைகளை பிரசாத் அள்ளிவிட்டார். அது ஆபிசில் அவர் வேலைகள் ஏதும் செய்யாமல் அமர்ந்திருந்ததைக் கண்டா அல்லது உண்மையாகவே சொன்னாரா என்றுத் தெரியவில்லை. ஏனென்றால் கலைஞர் பாணியில் புகழ்வது போல் மற்றவர்களை அப்படி கிண்டலடிப்பது பிரசாதின் வழக்கமும் கூட.
ஏற்கனவே கோவிந்தம் சார் நல்ல நிறத்தில் ஜொலிப்பார், பிரசாத்தின் பேச்சுக்களால் ஏற்பட்ட பூரிப்புகளால் அவர் முகம் மேலும் சிவந்துப் போனது. வந்ததிலிருந்து இப்போதுதான் மனுசன் ரொம்ப நேரம் ஆயிரம் வோல்ட்ஸ் பல்பை போல ஈ என்று பல்லைக் காட்டிகொண்டிருந்தார். என்னால் அவ்வளவாக ஒன்றிக் கேட்க முடியவில்லையென்றாலும், முயற்சித்தேன். இடையிடையே அவர்கள் தெலுங்கில் பேசிக்கொண்டது எனக்கு புரியாமலும், கொஞ்சம் எரிச்சலையும் ஏற்படுத்தியது.
குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கிச்சன் பக்கம் போகலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கையில் “அம்மா, நேனு வஸ்த்தான்!” – அம்மா நான் வருகிறேன் என்றபடி அவள் ஹாலுக்கும் மொட்டை மாடிக்கும் இடையே இருந்த இன்னொரு கதவு பக்கமாக ஏற்கனவே என் தேவதை வெளியேறிக் கொண்டிருப்பது தெரிந்தது.
அந்த வெக்கையானச் குழலில் வியர்வைப் பூத்திருந்த சட்டைக்குள் சில்லென்று புதுக்காற்று தீண்டிய குளுமை, சுகானுபவம்… இவ்வளவு விரைவாகவா என்னைவிட்டுச் செல்ல வேண்டும்!
சினிமாவில் வருவது மாதிரி சடசடவென இறங்கி ஃபேக்டரி பக்கம் போவது போல் அவளை பின் தொடர்ந்து செல்லலாமா? கவனிக்காத பட்சத்தில், பின்னாலிருந்து ‘ஹாய்’ சொல்லி அவளை திரும்ப வைக்கலாமா? வெட்கப்பட்டு ஓடிவிடுவாளா? அல்லது ஆசைப் பொங்க பேசுவாளா? அப்படி பேசினால் அவள் என்ன பேசுவாள்? ஒருவேளை 7G அனிதாவைப் போல் ஒரு முறைப்பு முறைத்தபடி சென்றுவிட்டால்?
இதெல்லாம் கற்பனை செய்துக் கொண்டிருக்கும்போதே அவள் அங்கிருந்து மறைந்துவிட்டாள். ஆனாலும் எனது மனவெழுச்சிகள் குறையவில்லை. சாவிக்கொடுத்த சிட்டுக்குருவி பொம்மையை போல இருந்த இடத்திலேயே றெக்கைக்கட்டி வட்டமடித்துக் கொண்டிருந்தேன்.
நிதானிக்க நினைத்தாலும் சில நொடிகளுக்கு மேல் கால்கள் நிலைகொள்ளவில்லை. ரெஸ்ட் ரூம் போவது போல் எழுந்து, மொட்டை மாடிப்பக்கம் மின்னல் வேகத்தில் சென்றேன். வேலைகளை மேற்பார்வையிடுபவனாய், போகிறாளா? எங்கேனும் கண்ணிற்கு தென்படுகிறாளா என்று அங்கிருந்து கீழே கவனித்தேன்.
மேலிருந்து காண, மீன் தொட்டியில் அகன்ற துடுப்புகளோடு மஞ்சள் மீனொன்று அழகாய் நீந்திச் செல்வது போல் அவளது உடை காற்றில் பறந்து நகர்ந்தாலும், முகத்தைப் பார்க்க முடியவில்லை. எப்படியாவது பார்த்து விட முனையும் அவசரத்தில் அந்த பிள்ளையார் சிலை மீது எதார்த்தமாக கை வைக்க, அது பொத்தென்று கீழே விழுந்து உடைந்துவிட்டது!
சத்தத்தைக் கேட்டு, திடுக்கிட்டு மேலேப் பார்த்தாள் மருண்ட மான் குட்டியைப் போல். நானும் அதிர்ச்சியிலிருந்ததால் தோட்டாக்கள் ஒன்றோடொன்று துளைத்துக் கொண்ட வண்ணம் எங்களது பார்வைகள் மோதிக்கொண்டு, அரைநொடி அப்படியே உறைந்து நின்றன. பாய்ஸ் படத்தில் வரும் ‘அலே அலே’ பாட்டு போல எங்களைச் சுற்றி பல கேமிராக்கள் பொருத்தி ஒரு ஷாட் வைத்திருக்கலாம்..! காற்றாய் பறந்தது மனம்!
கீழேதான் அதிர்வு கொஞ்சம் கூடுதல் என்பதால், சத்தத்தைக் கேட்டு சிலர் ஓடோடி வந்தனர். அவளுக்கு ஒன்றும் ஆகவில்லையே என்று விசாரித்திருக்க வேண்டும். அவள் இல்லை இல்லை என்பது போல் தலையாட்டிக்கொண்டே என்னை அவ்வப்போது கவனிப்பது போல் பார்த்தாள். அவர்களும் என்னைப் பார்த்தார்கள். அவர்களுக்குள் ஏதோ பேசியபடி, அங்கே கொஞ்சம் சிரிப்புச் சத்தம் அதிகமானது.
பத்திக் கங்கின் புகைப்பாம்பாய் அவ்விஷயம் மேலெழுந்து மாடியிலிருந்தவர்களின் காதுகளையும் பதம் பார்த்துவிடுமோ என்ற படபடப்பு கூடியது. அதிர்ச்சி, பதற்றம், சிலை உடைந்த கவலை வேறு! சார் சார் என்று பிரசாத்தை கொஞ்சம் சத்தத்தோடு விளித்தேன். குரலிலிருந்த பதற்றத்தைக் கண்டு கோவிந்தமும் நான் நின்றுக் கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். ஏன் சீதம்மாவும்!
நான் சரியாக கவனிக்காது சிலைமேல் அழுத்தமாக கை வைத்துவிட்டதாகவும், அது பெயர்ந்து கீழே தவறி உடைந்துவிட்டதாகவும் நடந்ததில் முடிந்ததை மட்டும் கூறினேன். சீதம்மா கீழே நின்றுக்கொண்டிருந்த தனது மகளைக் கண்டுவிட்டு, உனக்கு ஒன்றுமில்லையே என்பது போல் எதையோ தெலுங்கில் கேட்டாள். அந்த பைங்கிளியோ என்னையேப் பார்த்தாள்.
பிரசாத் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று கொஞ்சம் பயந்தேன்தான் ஏனென்றால் அவர் கொஞ்சம் பக்திமான். சகுனங்கள் எல்லாம் பார்ப்பார் வேறு. சொல்ல மறந்துவிட்டேன் அங்கே பூஜைக்கென்றும் ஒரு பிரத்யேக அறையுண்டு.
“பரவால்ல சார், சுண்ணாம்பு சிலை போல.. தெரிஞ்சா செஞ்சீங்க விடுங்க!” என்று சமாதானப்படுத்தியவராக அங்கிருந்த பெண்களை உடைந்த சில்லுகளை சீக்கிரம் அகற்ற வேண்டி குரல் கொடுக்க, கூட்டம் கலைந்து பிறப்பித்த வேலைகளைத் தொடரலாயினர். என்னை கொஞ்ச நேரம் நிலைகுலைய செய்தவளும் தனக்கும் நடந்தவைக்கும் எந்தவித தொடர்பும் இல்லாதவள் போல முகத்தை வைத்துக் கொண்டு அங்கிருந்துப் புறப்பட்டுச் சென்றுவிட்டாள்.
சிலை உடைந்ததுதான் மனதை வருத்திக்கொண்டேயிருந்தது. முதல் நாளே இப்படி ஒரு சம்பவம் நடக்குமென்று நானும் நினைக்கவில்லை என்றாலும், நடந்தவற்றையெல்லாம் மீறி நேருக்கு நேர் அவளைப் பார்த்ததிலிருந்து மனதில் ஒரு இன்பக்கிறக்கம்! வாழை மட்டைகளைக் கட்டிக்கொண்ட மரமாய் உடம்பெல்லாம் முறுக்கிக் கொண்டு வந்தது. அவ்வப்போது கைகளை மேலுயர்த்தி, கோர்த்து கோபுரமாக்கி, வில்லாய் உடம்பை வளைத்து நெளித்துக்கொண்டிருந்தேன். ஒரு கதாநாயகனுக்குரிய அத்தனை பராக்கிரமங்களும் ஒரே நொடியில் என்னுள் பரிணமித்து பிரகாசித்தவனாய் கண்ணாடியில் என்னை நானே ரசிக்கலானேன்.
சொல்ல வெட்கமாக இருக்கிறது. இருந்தாலும் சொல்கிறேன் அன்று சீதம்மா சமைத்தது ஏதோ மாமியார் வீட்டு விருந்தைப் போல சுவைத்தது. இத்தனைக்கும் அவை எனக்கு முற்றிலும் பழக்கப்படாத உணவு முறை. சோறு கொஞ்சம் அரைப்பதத்தில் வடிக்கப்பட்டிருந்தது. தோஸ்க்கா சட்னியென்று சொன்னார்கள் அது நம்மூரில் வெள்ளரிக்காயை வைத்து துவையல் செய்தால் எப்படியிருக்கும்? அப்படியிருந்தது அதுவும் சுள்ளென்று அவ்வளவு காரம்!
கூட்டு, பொரியலையெல்லாம் தொட்டுக்கொள்ளாமல் சோறோடுப் பிரட்டிக் கொண்டுத் தின்றனர். ஆறுதலான விஷயம் பப்பும் ஆவக்காய் ஊறுகாயும் அதாவது பருப்பும் மாங்காய் ஊறுகாயும். அதில் கோவிந்தம் சார்தான் நெய்யும் சேர்த்து சாப்பிடும்படி பரிந்துரைத்தார். அடடா சுவை அமர்க்களம்! அந்த ஆவக்கா ஊறுகாயும் நெய்யும் அவர் தனது வீட்டிலிருந்துக் கொண்டுவந்ததாம். நான் அவரது மகிழ்ச்சியை ரசித்தேன்.
ஜலபதியைக் கண்டுதான் நான் சற்று அதிர்ந்து போனேன். சோற்றில் வெறும் மிளகாய் பொடியை மட்டும் பிசைந்து சாப்பிட்டான். என்னடா இது என்று கலவரத்தோடு விசாரித்தால் அங்கே அப்படியும் சாப்பிடுவார்களாம். அதனாலேயே விஜயா ஆஸ்பத்திரியில் கேசுகள் கூடுகின்றன என்று பிரசாத் மற்றொரு தகவலையும் பேச்சோடுப் பேச்சாக பகிர்ந்துக்கொண்டார். இதிலும் கூட அவர்களுக்கு ஒரு பெருமைதான் போல!
சீதம்மா, தன்னுடைய சமையல் எப்படி இருந்ததென அந்த ஊர் உணவு முறைக்கு முற்றிலும் புதியவனான என்னைப் பார்த்து மிகவும் ஆர்வமாக கேட்டார். எல்லாமே வெந்ததும், வேகாததுமா வயிற்றுக்குள் சென்றிருப்பதுப் போன்ற கலவையான உணர்வு ஏற்பட்டிருந்தாலும், “குட்!” என்று பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் வளைத்து வட்டமாக்கிக் காட்டினேன். மாமியார் வீட்டு சமையலை எவன்தான் குறைச் சொல்லியிருக்கிறான்?
***
தனது வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு சாயங்காலம் மூணு மணி வாக்கில் சீதம்மா தனது வீட்டிற்குச் சென்றுவிட்டார். நான்கு மணியானபோது மற்ற பெண்களும் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். நான் மாடியில் அந்த பிள்ளையார் சிலையிருந்த இடத்திலிருந்து அவர்கள் செல்வதை வேடிக்கைப் பார்க்கத் துவங்கினேன்.
காலையில் வெறும் சிமெண்ட் தரைகளாய் கிடந்த இடம் இப்போது அந்திச் சூரியன் பட்டு, காய்ந்துக் கொண்டிருந்த மஞ்சள் சீவல்கள் யாவும் தங்க கார்பெட்டை வழியெங்கும் விரித்தது போல் பொன்னொளி வீசியது. அதில் அவள் தங்க சரிகையிட்ட சிவப்பு தாவணியில் அதிசய மயிலாய் அங்குமிங்கும் ஓடியலைவதைக் கண்டேன். உண்மைக்கும் கற்பனைக்கும் இடைப்பட்ட வாழ்க்கையை வாழத் தொடங்கியிருந்தேன்.
அப்பாவுக்கு கவிதைகள் போல எனக்கு பாட்டுக்கள் எழுதுவதுப் பிடிக்கும். அப்பாவுடைய கவிதைகளை பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பேன். ஆனாலும் அப்போதெல்லாம் இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டுமென்கிற வேகம் இருந்ததேத் தவிர, அதற்கான திறமையும் ஞானமும் என்னிடம் போதிய அளவு இல்லை என்பதுதான் உண்மை. வளர்த்துக் கொள்ள ஆசைப்பட்டாலும் அதற்கான ஒரு சிறிய முயற்சி எதார்த்தமாக சினிமா எக்ஸ்பிரஸ் மூலம் விளைந்தது.
1998 என்று நினைக்கிறேன், நான் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த சமயம். சினிமா வேட்கை என்னையறியாமலே ஊற்றெடுத்துக் கொண்டிருந்தத் தருணம். நான் கூட ஆட்டோகிராப் மாதிரி கதை ஒன்றெல்லாம் எழுதி வைத்திருந்தேன் என்று சொன்னேனே! அதே காலக்கட்டம்தான்.
சரி, விசயத்திற்கு வருகிறேன். சினிமா எக்ஸ்பிரஸில் பாட்டுப்போட்டி ஒன்று அறிவித்திருந்தார்கள். நீங்கள் நினைப்பது நானெல்லாம் அதில் கலந்து கொள்ளவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியான பாட்டுக்களை மெட்டமைக்க முயற்சி செய்தேன். அதில் ஒரு பாட்டுக்கு என்னால் எளிதாக மெட்டமைக்க முடிந்தது.
பூபதி எனும் பெயர் நினைவடுக்கிலிருந்து வந்து போனாலும், உண்மையில் அதை எழுதியவர் அவர்தானா என்று சரியாக யூகித்து சொல்ல முடியவில்லை. ஆனால் பாட்டு வரிகள், ‘கொய்யா மரத்துக்குள்ள கூடு கட்டும் குருவிகளா..’ என்று ஆரம்பிக்கும்.
எண்பதுகளில் வந்த பாடல்களில் நான் அதிகம் திளைத்துக் கொண்டிருந்த பொழுதுகள் அவை. அதுவும் டி ஆரின் ஒரு தலை ராகம், உயிருள்ள வரை உஷா, ராகம் தேடும் பல்லவி போன்ற படப்பாடல்கள் என் மனதை அதிகம் ஆக்கிரமித்துக்கொண்டிருந்த நேரமது.
அதன் தாக்கமோ என்னவோ, சினிமா எக்ஸ்பிரஸில் வெளிவந்த குறிப்பிட்ட அந்த பாடலை கட்டிலில் தாளமிட்டபடி, மெட்டமைத்த போது அதுவும் கூட டிஆர் பாணியிலேயே அமைந்துவிட்டது. அதை கேசட்டில் ரெக்கார்ட் பண்ணிக் கூட வைத்திருந்தேன். அவையெல்லாம் இப்போது எங்குப் போயிற்றோ..!
அப்படி இப்போது நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று என் மனதில் ஒரு மெட்டுத் தோன்றியது. இதுவும் கூட பாருங்கள், ஏ ஆர் ரஹ்மான் அலையெல்லாம் இங்கே சற்று ஓய்ந்து வித்யாசாகர் மற்றும் யுவன் சற்று அதிகமாக தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்த சமயம். அதுவும் செல்வராகவன் கூட்டணியில், யுவன் அதகளம் பண்ணிக்கொண்டிருந்தார்.
ஆனால் அப்போது அப்போது ‘அறிந்தும் அறியாமலும்’ படப் பாடல்கள் வேறொரு தளத்தில் பயணித்துக்கொண்டிருக்க, அது மாதிரி வேண்டுமென்று தோன்றிய மெட்டை யுவன் ஸ்டைலில் இழைத்தேன். அதுதான் நான் எழுதி, மெட்டமைத்த முதல் பாடலும் கூட!
அந்த பாடல் இப்படி தொடங்கும்…
‘உன் பார்வைப் பார்த்து
நான் இருப்பேன் காத்து
பொன்வானம் மின்னும் அந்நேரம்
என் கண்கள் உன்னைத்’தான் தேடும்
உனக்காக ஒரு பாடல் உருவாகும்
சகியே..! சகியே..!
காதல் சகியே..!
காதல் சரியே! ‘
ஆனால் அதற்கு பின் வரும் வரிகள் அனுபல்லவிக்குள்ளும் போகாமல் சரணம் என்று சொல்ல முடியாமலும் இடைப்பட்ட நிலையில் முடிந்துவிடும். அவை வித்யாசாகர் பாணியில் இயல்பாகவே அமைந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் பல்லவியை யுவன் குரலில் கற்பனை செய்துவிட்டு, மற்ற வரிகளை பாடகர் பலராம் பாடுவது போல் வடிவமைத்ததுதான்.
“சார் வெளில வர்றீங்களா?” பிரசாத் கூப்பிட்டார். வந்ததிலிருந்து இவர்தான் அவ்வப்போது ‘எந்திரி அஞ்சலி! எந்திரி! என்று என்னை நினைவுலகிற்கு கூட்டிவருகிறார். இப்போதும் அவருக்கு நன்றி சொல்வதா கோபப்படுவதா என்றுத் தெரியவில்லை. அப்படியே கொஞ்ச நேரம் விட்டிருந்தால் அந்த பாடல் இன்னும் விரிந்திருமோ என்னவோ! ஆனால் நான் மிகவும் சந்தோசமாக இருந்ததால், உடலை சோம்பிக்கொண்டுச் சிரித்தேன்.
“என்ன?” என்று அவரும் சிரித்துக்கொண்டே கேட்டார்.
“ஒண்ணுல்ல சார்!” என்றேன்.
சிறிது நேரத்தில் இருவரும் தயாராகி அவருடைய பைக்கில் வெளியேச் சென்றோம்.
அதுதான் பிரதான குண்டூரூ! திருமலையில் விவேக் சொல்லுவாரே “என்னடா கையில லட்ட கொடுத்துட்டு, அங்கே ஜிலேபிய பிச்சுப் போட்டு வச்சிருக்காங்க!” அது போல எங்குப் பார்த்தாலும் சுந்தரமாகக் காட்சியளித்த சுத்த தெலுங்கு எழுத்துகள்தான்! இங்கிலிஷ் டைப்பிங் மற்றும் ப்ரவுஸிங் சென்டர், ஜெராக்ஸ் கடை போன்றவற்றில் மட்டும் கொஞ்சம் கொஞ்சம் ஆங்காங்கே எட்டிப் பார்த்தது. அப்படியே ராஜாக்கள் போல் ஒரு குட்டி நகர் வலம் வந்தோம்.
சென்ற வழியில் கொஞ்சம் பழைய தியேட்டர் ஒன்றில் தெலுங்கு பதாகைகளை ஏந்தியபடி 7G ரெயின்போ காலனியும் ஓடிக்கொண்டிருந்தது. பிரசாத்திடம் தெலுங்கில் இந்த படத்திற்கு என்ன பெயர் என்றேன், 7G பிருந்தாவன் காலனி என்று சொன்னார். பிறகு சொல்லத் தேவையில்லை ஆந்திராவில் பார்த்த முதல் தமிழ்ப்படம்.. ச்சே தெலுங்குப்படம் என்ற அந்தஸ்த்தை பிருந்தாவன் காலனி வெகு விரைவிலேயேப் பெற்றது.
அதனைக் கடந்து ஒரு பெரிய மரக்கடை அல்லது மர குடோனுக்குள் வண்டி நுழைந்தது. ரோட்டிலிருந்தே ஆட்கள் அங்குமிங்கும் நின்றுக்கொண்டிருந்தனர். ஏதோ ஒரு முக்கியஸ்தஸ்தரைப் பார்க்க போகிறோம் என்ற அறிகுறிகள் மூளையில் ஒளிரத் தொடங்கின. என் அனுமானம் பொய்க்கவில்லை!
அங்கே அரசியல்வாதியை போல ஒரு ஆள் கம்பீரமாக அமர்ந்திருந்தார். சுற்றி நின்றவர்களை அல்லக்கைகள் என்பதா, அல்லது அவரது அடியாட்களா எனத் தெரியவில்லை, ஆனால் அதிலொருவனாக நமது நரேஷும் நின்றுக்கொண்டிருந்தான். பிரசாத்தைக் கண்டதும் வெகு நேரம் மின்சாரம் இல்லாமல், திடீரென்று தோன்றி சட்டென்று அணைந்துபோன பாதரச பல்பை போல், மின்னல் வேகத்தில் ஒரு சிரிப்பையும் கையசைப்பையும் அவரின் பின்னாலிருந்து வெளிப்படுத்தினான். பிரசாத் பவ்யமும் இல்லாமல் அதே நேரத்தில் ரொம்ப கேஷுவலாகவும் இல்லாமல் ஒரு தொழில் ரீதியான உடல்மொழியோடு அந்த மனிதருக்கு ஒரு நமஸ்காரம் வைத்தார்.
அந்த நபர் இருக்கையிலிருந்து எழாமலே, இவரையும் இருக்கையிட்டு அமரச் சொல்லாமலும் ஓரிரு நிமிடங்கள் தெலுங்கில் ஏதோ பேசினார். அதில் கம்பீரம் கலந்த சிநேகம் வெளிப்பட்டது. பின்னர் பிரசாத் மீண்டும் ஒரு நமஸ்காரத்தை வைத்து, நரேஷிற்கு பார்வையால் கையசைத்தபடி அங்கிருந்துப் புறப்பட்டு வந்தார். இதையெல்லாம் நான் சற்று வெளியிருந்து அவதானித்தவனாய் நின்றுக் கொண்டிருந்தேன். அவர் சாதாரணமாக வருவது போல் தன்னைக் காட்டிக் கொண்டாலும், அவரது ஆழமானப் பெருமூச்சையும் நான் உணராமல் இல்லை.
“யார் சார் அது?” என்று ஆர்வமாய் விசாரித்தேன்.
“அவர்தான் சாம்ப சிவ ராவ், குண்டூருல ரொம்பவும் முக்கியமான ஆள்! இங்க இவங்ககிட்டல்லாம் பழக்கம் வச்சிக்கிட்டாதான் நாம நிம்மதியா தொழில் நடத்த முடியும்! அதனால சென்னையிலிருந்து வரும் நேரங்கள்ல்ல இவரை ஒருமுறையாவதுப் பார்த்துவிடுவேன்! நம்ம நரேஷும் அவர்கிட்ட வேல பாக்குற ஆள்தான், அதனாலேயே அவனுக்கும் கூட அப்பப்ப அளக்க வேண்டியிருக்கு!” என்று சொல்லும்போது அவர் சலித்துக் கொள்கிறாரா அல்லது பெருமையோடு சொல்லிக் கொள்கிறாரா என நான் குழப்படைந்தேன். பிரசாத்தை முழுதாகப் புரிந்து கொள்வதும் கடினம்தான்.
மணி ஏழைத் தொட்டுவிட்டிருந்தது. சரி திரும்பிவிடுவோம் என்று நாங்கள் இருக்கும் ரெட்டி பாலெத்திற்கு வண்டி விரைந்தது. ஆனால் உள்ளேச் செல்லாமல் பைக் பை பாஸிலேயே ஒரு ஓரமாக அணைத்து, நிறுத்தப்பட்டது. நான் வந்திறங்கிய போது சொன்னேனே அதே இடம்தான். இந்த நேரத்தில் அங்கிருந்த அந்த சிறிய காம்ப்ளெக்சிற்கு சற்று வெளியே ஒரு சிறிய கடை புதிதாக முளைத்திருந்தது. சாயங்கால வேளைகளில் மட்டும் போடுவார்கள் போல. வடை, பஜ்ஜி, போண்டா வாசம் ஒரு சுற்றளவு வரை பரவிக் கொண்டிருந்தது.
சரி, அங்கேதான் கூட்டிச் செல்லப் போகிறார் என்று பார்த்தால், அந்த காம்ப்ளெக்ஸ் பக்கவாட்டுச் சுவர் பக்கம் நுழைந்தார். முகப்பில் சற்று சிறியது போல் காட்சியளித்தாலும், நீளவாக்கில் அது போய்க்கொண்டேயிருந்தது. அதன் பாதியிலிருந்து ஒரு ‘பார்’ அதாவது ஒயின் ஷாப் தொடங்கியது. அந்த இடத்தில் என் முழங்கையொன்றைப் பற்றி , “சார்.. நீங்க தண்ணீ அடிப்பீங்களா?” எனக் கேட்டார்.
நான் என்ன சொல்வது என்று விழித்தேன். அதே நேரம் நாவையும் கட்டுப்படுத்த முயவில்லை. கொஞ்சம் தடுமாறி எப்போதாவது என்றேன்.
“சரி வாங்க!” என்று கூப்பிட்டு போனதில் அவரிடம் ஒரு புதிய குதூகலம் பிறந்திருந்ததை என்னால் அவரது பளிச் முகத்தில் பார்க்க முடிந்தது.
பெரியப் பெரிய டேபிள்கள், அதை விட பெரியதாய் ஒரு சுவற்றில் அது வெண்திரையா அல்லது டிவியா என்று குழம்பும் அளவிற்கு அகண்ட ஒளிவீச்சோடு ஏதோ ஒரு தெலுங்குப்படம் ஓடிக்கொண்டிருந்தது.
நான் தயங்கி தயங்கி அமர்ந்தேன். அவர் கேஷுவலாக, “என்ன சாப்பிடுறீங்க?” என கேட்டார். எனக்கு சாப்பாட்டை தவிர அன்னைக்கு வேறெதுவும் வேண்டாம் என்பது போலும் இருந்தது.
“நீங்க சாப்பிடுங்க சார், நான் கம்பெனிக் கொடுக்கிறேன். எனக்கு சாதாரண ட்ரிங்க் எதும் போதும்” என்றேன். அவர் வற்புறுத்தவில்லை. தனக்கு வேண்டியதை ஆர்டர் செய்தார். மது வாசம் மட்டுமே பிரதானமாக சூழ்ந்த, அந்த மங்கிய விளக்கொளி என்னை மிகவும் சோதித்தது.
கவனத்தை டிவி அல்லது திரை பக்கம் திருப்பினேன். தமிழில் ‘பாடும் பறவைகள்’ என்ற பெயரில் ஒரு படம் வந்ததே..
‘கீரவாணி.. இரவிலே.. கனவிலே.. பாட நீ..’ என்று ஒரு பாடல் கூட வருமே அந்த படம் போலிருந்தது. நமக்குத்தான் சினிமா என்றால் போதுமே!
இது தமிழ் படமாச்சே என்றேன். அவர் இல்லை இதுதான் நேரடிப்படம், இங்கே செம்ம ஹிட், அதனால் அங்கேயும் டப் செய்தார்கள் என்றார். நான் ஆச்சர்யப்பட்டு கார்த்திக் நேரடி தெலுங்குப் படத்தில் எல்லாம் நடித்திருக்கிறாரா என்றேன். ஏனென்றால் தொண்ணூறுகளில் நான் கார்த்திக் ஃபேன்!
“என்ன இப்படி கேட்டுட்டீங்க! அவர் நடிச்ச இன்னொரு தெலுங்கு படமும் பயங்கர ஹிட்!” என்றபடி சுவாரசியமாகப் பேசிக்கொண்டே தனது வேலையையும் முழு வீச்சோடு நடத்திக் கொண்டிருந்தார். எனக்கு ஸ்பெஷலாக பெரிய ஆம்லெட் ஒன்று வந்தது.
“படத்தோட பேரு” என்றேன்
கொஞ்சம் யோசித்துவிட்டு, “அபிநந்தா!” என்றார்.
“ஹீரோயின் யாரு?”
“ஷோபனா!” இது மட்டும் சட்டென்று வந்தது.
“அவங்களும் தெலுங்குல நடிச்சிருக்காங்களா?”
“அவங்களும் சில படங்கள்ல நடிச்சிருக்காங்க, சிரஞ்சீவி நடிச்சி நம்ம பாலச்சந்தர் டைரக்ட் பண்ணின படம் நேஷனல் அவார்டலாம் வாங்கிச்சே.. அதுல கூட அவங்கதான் ஹீரோயின்”
“என்ன படம்?”
“ருத்ரவீணா.. தமிழ்ல்ல கூட ‘உன்னால் முடியும் தம்பி’ன்னு கமலை வச்சு எடுத்தாங்க.. என்ன.. படம்தான் ஓடல!” என்று ஹாஹா என்று சிரிக்க ஆரம்பித்தார். சுதி கூடி போச்சோ என்று நினைத்துக் கொண்டேன்.
“இங்கேயும் ஜெமினிதான் அந்த அப்பா கேரக்டர் பண்ணினார். அதுதான் அவர் நடிச்ச ஒரே ஒரு தெலுங்கு படம்னு நினைக்கிறேன்” என்றார் சற்று யோசனையில் ஆழ்ந்தபடி. எனக்கு சட்டென்று நடிகை சாவித்திரியின் கடைசி நிமிடங்கள் சற்று கண்முன் வந்து போயின.
தமிழில் வந்த ‘ஏகாந்த வேளை பிறக்கும்.. இன்பத்தின் வாசல் திறக்கும்..’ என்ற பாடல் கலக்கலான ஆரம்ப இசையோடு தெலுங்கில் ஒலிக்கத் தொடங்க, திடீரென்று விளக்குகள் வண்ண வண்ணமாய்… வண்ணமயமாய்… சுழன்று சுழன்று, அணைந்து அணைந்து எரிய ஆரம்பிக்க.. எங்கிருந்தோ ஓடி வந்த ஒரு பெண், சற்று கவர்ச்சியான உடையில் எல்லோருமுன் ஆட துவங்கினாள்..!
-வளரும்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி எனும் ஊரைச் சார்ந்த இத்ரீஸ் யாக்கூப் நுண்ணுயிரியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று தற்சமயம் பணி நிமித்தமாக அமீரகத்தில் வசித்து வருகிறார். இவரது முதல் நூலான ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ – நாவல் பிப்ரவரி 2024ல் கோதை பதிப்பகம் வெளியீட்டுள்ளது. இவரது சிறுகதைகள் கீற்று, சொல்வனம், வாசகசாலை, கலகம், நடுகல் போன்ற இணைய இதழ்களிலும் மற்றும் கேலக்சி தளத்திலும் வெளியாகியுள்ளன.