“ஏய்.. கவி.. சீக்கிரம் கிளம்பு..” என்றாள் கீர்த்தி.

“டென் மினிட்ஸ் டி..  ரோஷினி வந்துட்டாளா?”

“இல்ல.. அவ பாய் ப்ரண்ட பாக்க முன்னாடியே அவளோட ஹாஸ்டல்ல இருந்து கிளம்பிட்டா.. நேரா தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துடுவாளாம். அங்கிருந்து நம்மளோட ஜாய்ன் பண்ணிப்பா..”

என் அறைக்கு திரும்பி சிறிது நேரம் உட்கார்ந்து கைப்பையில் இருக்கும் எல்லாவற்றையும் ஒரு முறை சரிபார்த்துக் கொண்டேன். ரயில்வேயின் இணைய செயலியில் கிண்டி வரைக்கும் மூவருக்கான புறநகர் பயணச்சீட்டை பதிவு செய்தேன். பவர் பேங்க்கை மின்னூக்கியிலிருந்து அணைத்து, கைப்பையில் போட்டுக் கொண்டேன். என்னுடைய சாம்சங் கைபேசியை கடைசியாக ஒரு முறை பார்த்துவிட்டு, அதையும் கைப்பையின் மேல் புறத்திலிருந்த அறையில், எடுப்பதற்கு வசதியாக, வைத்துக் கொண்டேன். கைபேசியை பையில் போட்டுக் கொண்டாலும், எப்படியோ அது அனிச்சையாக சிறிது நேரத்தில் கைக்கு வந்து விடும். வெய்யில் படாமல் இருப்பதற்காகவும், மேக்கப் கலைந்து விடக்கூடாது என்பதற்கும், முகத்திலும் தலையிலும் சேர்ந்தது போல், கண்ணை மட்டும் திறந்தபடி விட்டுவிட்டு கட்டிக் கொள்ளும் மிருதுவான வெளிர் நிற துணியை கையில் எடுத்துக் கொண்டு மீண்டும் கவியின் அறைக்கு வந்தேன்.

அவள் அப்போதும் கிளம்பிக் கொண்டு தான் இருந்தாள்.

“ஏய் டைம் ஆச்சுமா…. அப்றோம் வெயில் ஏறிடும்” என்றேன் சற்று எரிச்சலுடன்.

“ரெடி ரெடி..” என்றுவிட்டு கைப்பையை தூக்கினாள்.

“பேஸ் ஷால் எடுக்கல? .. சன்ப்ளாக் கிரீம் தாங்காதுடி…” என்றேன்.

அறையை சாத்திவிட்டு “கிரீம் போடல… பாத்துக்கலாம் வா..” என்றபடி நடந்தாள். நானும் கைப்பை மற்றும் குடையையும், முகத்தில் கட்டுவதற்கான துணியையும் கையில் எடுத்துக் கொண்டு அறையை பூட்டிக் கொண்டேன்.

இளஞ்சிவப்பு நிற தட்டையான செருப்பை காலில் மாட்டிக் கொண்டு, என்னைப்பார்த்து “போலாமா?..” என்றாள்.

நான் அவளை ஒரு யோசனையுடன் பார்த்துக் கொண்டு முகத்தில் கட்டுவதற்கான துணியை சரியாக கட்டி, காலில் ஹீல்ஸ் செருப்பை அணிந்து கொண்டு, விடுதியிலிருந்து வெளியேறினோம்.

குடையை விரித்து “ம்ம்… ரொம்ப கலர்னு நெனப்போ..?” என்றேன்.

“என்ன….?” என்றபடி நடக்க ஆரம்பித்தாள்.

“வர வர நெறைய மாற்றம் தெரியுது…, ஆனா சந்தேகப்படுற மாதிரியும் ஒன்னும் தெரில..” என்றபடி நடந்து கொண்டே அவளுக்கும் சேர்த்து குடை பிடித்தேன்.

“என்ன மாற்றம்..? என்ன சந்தேகம்..?”

“முன்னல்லாம் வெளிய போகனும்னா… அப்படி ரெடியாகுவ.. இப்பல்லாம் கொஞ்சம் டல்லா இருக்குற மாதிரி இருக்கே?”

நான் மேக்கப் மற்றும் ட்ரெஸ்ஸிங்க்ஸ் பத்தி கவியிடம் இருந்து தான் நிறைய கற்றுக் கொண்டிருந்தேன். நாங்கள் மூவரும் ஒவ்வொரு வார இறுதியிலும் வெளியே எங்கேயாவது சென்று, ஊர் சுற்றி விட்டு, நூற்றுக்கணக்கில் புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்புவோம். வெளியே செல்வதே புகைப்படம் எடுப்பதற்காகத் தான். இந்த இரண்டு ஆண்டுகளில் வீட்டிற்கு செல்வதை தவிர்த்து விட்டால், அநேகமாக எல்லா வாரங்களிலும் சென்னையின் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளோம். ஏறத்தாழ அனைத்து மால்களுக்கும், திரையரங்குகளுக்கும், கடற்கரைகளுக்கும், பெரிய கோயில்களுக்கும், ரிசார்ட்களுக்கும், ஒரு முறை புத்தக கண்காட்சிக்கும் கூட சென்றிருக்கிறோம். ஆனால் சில வாரங்களாக கவியின் ஆர்வம் குறைந்துகொண்டே வருவது தெரிந்தது.

“நீ நெனைக்கிறா மாதிரிலாம் ஒண்ணுமில்ல..” என்றாள் கவி.

விடாமல் “வீட்ல எதாச்சும் பிரச்சனையாடி…” என்றேன்.

“அதெல்லாம் இல்ல கீர்த்தி..”

“அப்டினா.. அப்போ எவனோ உன்ன டிஸ்டர்ப் பண்ணிருக்கான்.. கொஞ்ச நாளாவே உன்ன பாத்துட்டு தான் இருக்கேன்” என்றேன். என் கை அனிச்சையாக கைப்பையில் இருந்த கைப்பேசியை எடுத்து ஒளிர செய்தது.

அவள் என் பக்கம் திரும்பி ஒரு பார்வையை வீசி விட்டு தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனுக்கான துணைப்பாதையில் இறங்கினாள். துணைப்பாதையின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த பூ விற்கும் பாட்டி, எங்களைப் பார்த்து “பூ வாங்கிக்கினு போயேன்மா…” என்று கேட்பது சற்று பின்னால் ஒலித்தது.

நான் குடையை மடக்கி பையில் செருகிக் கொண்டு, இன்ஸ்டாவில் நான் பதிந்திருந்த புகைப்படங்களுக்கு என்ன குறிப்புரைகள் வந்திருக்கிறது என்று பார்த்து, பாராட்டியவர்களுக்கு விருப்பக் குறியை போட்டுக் கொண்டே, அவளை பின் தொடர்ந்தேன்.

ரயில்வே ஸ்டேஷனின் டிக்கட் கவுன்டர்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. வரிசை நேராக நிற்க இடம் போதாமல், வளைந்து நுழைவு வழி வரை நீண்டிருந்தது.  இடப்பக்கமாக செல்லும் படியில் ஏறி நடைப்பாலத்தின் மீது இருந்த எண்ம பலகையில் அடுத்த ரயில் குறித்த அறிவிப்பை பார்த்தோம். அங்கிருந்து பார்க்கும் போது ரயில்வே நடைமேடை கூரைகள் சிக்குண்ட  பெரிய ராட்சத இரும்பு பறவை இரு சிறகையும் விரித்து எழ முயற்சிப்பது போல் இருந்தது. அங்கு எழும் காதை கிழிக்கும் மும்மொழி அறிவிப்புகள் அதன் அலறலைப் போன்று தோன்றியது. இரண்டாவது நடைமேடையில் இறங்கி ஒரு கற்பலகையில் இருவரும் அமர்ந்து கொண்டோம்.

அவள் ரோஷினியை தொடர்பு கொண்டு பேசினாள். நான் இன்ஸ்டாவில் மூழ்கியிருந்தேன்.

“அவ வர இன்னும் ட்வென்டி மினிட்ஸ் ஆகுமாம்..” என்றாள்.

“I got three proposals today..” என்று சொல்லிவிட்டு சற்று புன்னகைப்பது போன்று முகத்தை வைத்துக் கொண்டேன்.

“ம்ம்.. கமன்ட்ஸ்லயா…” என்று வேறெங்கோ பார்த்துக் கொண்டு கேட்டாள்.

“ஆமாம்.. அந்த மஞ்ச கலர் சுடி ஃபோட்டோக்கு செம லைக்ஸ்…” என் மனம் மகிழ்ச்சியில் நிறைந்திருப்பது போல் இருந்தது. அவளுக்கு அதனை காட்டினேன். பூ வேலைப்பாடுகளுடைய மஞ்சள் நிற சுடிதாரும், இறுக்க கால்சட்டையும் அணிந்து கொண்டு சென்ற வாரம் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்றிருந்த போது எடுத்த படம்.

சுற்றிலும் பசுமை நிறைந்து, சிவந்த மலர்களால் பூத்துக் குலுங்கிக்கொண்டிருக்கும் பெரிய வாதநாராயண மரத்தினடியில் இடப்பட்டிருந்த கற்பலகையில் அமர்ந்து கொண்டு இரு கால்களையும் சற்று நீட்டி, முன் புறமாக குனிந்து, இடக்கையை தொடையில் ஊன்றி மோவாயை பிடித்தபடி, வலது கையை பக்கவாட்டில் நீட்டி திரண்டு உந்தி எழும் மார்பகங்களுடன், சுருள் சுருளாக இருள் பரப்பி நிற்கும் முடிகள் மறுபுறம் சரிய, வரிசைப் பற்கள் அனைத்தும் தெரியும்படி சிரித்துக் கொண்டு, கண்களில் மயக்கும் குறுஞ்சிரிப்பை வீசியபடி நான் இருந்த அந்த படத்தை ஒரு கணம் பார்த்து “நைஸ்….” என்று சிறிய புன்னகையோடு சொன்னாள்.

நான் சற்று சங்கடமாக உணரத் தொடங்கினேன்.

“ஏய்.. நான் கேட்டேன்ல.. நீ சொல்லவேயில்ல..” என்றேன்.

“என்னது…?”

“யார் அந்த பையன்னு….”

“அப்படில்லாம் யாரும் இல்ல….”

“நிஜம்மா இல்லையா…..” என்றேன்.

“ப்ராமிஸ் அப்டிலாம் யாரும் இல்ல… உனக்கு தெரியாமலா டி”

அவள் சொல்வதும் சரி தான். பின்பு அவளை உற்றுப் பார்த்து “அப்ப ஏன் இப்படி இருக்க…?”

“நான் நார்மலா தான்டி இருக்கேன்”

ஓரு புன்னகை என்னையறியாமல் உருவாகியது. “இல்ல கவி… உனக்கு எங்க கூட வர பிடிக்கலனு நெனைக்கிறேன்.. எதோ வேண்டா வெறுப்பா வர்ற மாதிரி இருக்கு இப்பல்லாம்..”

அவள் சற்று என்னை கவனிப்பது போல் என் பக்கம் திரும்பினாள். வெண்ணிற வழுவழுப்பான என் வலது கையின் மீது அவளது நீண்ட பொன்னிற, வஞ்சரம் போன்ற சீரான பருமன் கொண்ட கையை நகர்த்தி, ஒவ்வொரு மயிர்க்கால்களும் துல்லியமாக தெரியும் மண்ணிலிருந்து சற்று முன் பிடுங்கிய கேரட் போன்ற விரல்களால் அழுத்தி பதித்து

“அப்படிலாம் ஒன்னும் இல்லடி… நீ ஏதேதோ கற்பன பண்ணிக்காத..” என்றாள்.

நான் கூரிய பாவனையோடு “எங்கிட்ட சொல்லாத அளவுக்கு பெர்சனல்னா வேணாம்..”

உண்மையில் அவளைப் பற்றி எனக்கு தெரியாத விஷயங்கள் எதுவும் கிடையாது. பெரும்பாலும் என் அறையில் தான் நாங்கள் இருப்போம். பல நேரங்களில் என் அறையிலேயே தூங்கியும் விடுவாள். இதுவரை அவளுக்கு காதல் மாதிரியான விஷயங்கள் கூட கிடையாது. அதனால் அவளின் பெரும்பாலான நேரங்கள் என்னுடன் தான் கழியும்.

அப்படியிருக்க திடீரென என்னவாயிற்று இவளுக்கு என்று எனக்கு புரியவில்லை. கடந்த இரு மாதத்திற்கும் மேலாக அவளின் வாட்ஸ்-அப் ப்ரொஃபைல் படத்தை மாற்றியிருக்கவில்லை, இன்ஸ்டாவில் புதிய படங்களை பதிவிடவில்லை. அதை விட முக்கியமாக, அவள் எடுத்த எந்த செல்ஃபியையும் மென்பொருள் மூலம் அழகு படுத்தவில்லை. என்னுடைய படத்திற்கும் செய்து தரவில்லை. என்னுடைய ரூமில் இப்போதெல்லாம் தூங்குவதில்லை. புதிதாக அறையிலேயே சாமி கும்பிட தொடங்கியிருக்கிறாள்.

முகத்தில் ஒரு பிடிப்பற்ற நிலை நன்றாகவே தெரிந்தது.

அதற்குள் ஷாலினி வந்துவிட மூவரும் ரயிலேறி கிண்டிக்கு சென்று அங்கிருந்து மெட்ரோ ரயில் மூலம் ஆயிரம் விளக்கில் இறங்கி, ஒரு ஆட்டோ பிடித்து ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூவிற்கு சென்றோம்.

பி வி ஆர் அரங்கில் சினிமாவிற்கு காலைக்காட்சிக்கு பதிவு செய்திருந்தோம். என்ன படம் என்பது ரோஷினியின் தெரிவு. அவள் அதில் நிபுணி, அவளிடம் நாங்கள் எதுவும் கேட்டுக் கொள்வதில்லை. எந்த மாதிரியான படமாயிருந்தாலும் இந்த வாரத்திற்கு என்ன படம் வெளியாகிறதோ அதைத்தானே பார்க்க முடியும் என்பது என் எண்ணம். அதற்கும்மேல், பொதுவாக நாங்கள் படம் பார்ப்பதற்காக செல்வதில்லை. பெரும்பாலும் ஷாப்பிங் செல்லவும், உணவு சாப்பிடவும் முக்கியமாக விதவிதமாக செல்ஃபி எடுத்துக் கொள்ளவும் தான் செல்கிறோம்.

அடர் பச்சை நிற கண்ணாடியால் ஆன மூடியிடப்பட்ட பெரும் மாவரைக்கும் இயந்திரம் ஒன்றை விற்பனைக்கு சாலை அருகில் வைத்தது போல் இருந்தது எக்ஸ்பிரஸ் அவென்யூ. கண்ணாடிக்குள் ஒவ்வொரு தளத்தின் பிரிவுகளைக் காண முடிந்தது. போனவுடன் அங்கிருந்த நுழைவில், ஒருவர்பின் ஒருவராக சற்று விலகியவாறு நின்று கொண்டு ஒரு செல்ஃபி. வெளிநடையிலிருந்த நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டத்தின் முன்பு, தனித்தனியாகவும் ஒன்றாகவும் நின்று கொண்டு வலது கையையும், இடது கையையும் மாறி மாறி நீட்டி செல்ஃபி எடுத்துக் கொண்டோம்.

பின்பு உள்செல்லும் படியில் உட்கார்ந்து கொண்டு மூவரும் இருவிரலை காட்டியவாரும், ஊஊஊ வென்று குரல் கொடுப்பது போல் வாயை குவித்து ஒரு கையை வைத்தவாறும் செல்ஃபி. காலையில் கூட்டம் ஓரளவு மிதமாகவே இருந்தது.

உள் நுழைந்து வலப்புறம் திரும்பியதும், உண்மையிலேயே மாவு அரைப்படும் இயந்திரத்தின் பொத்தானை அழுத்தியிருப்பது போல் அதன் உருண்ட பகுதியில் இரைச்சலுடன் பணியாளர்களும், வாடிக்கையாளர்களும் இங்கும் அங்கும் சென்றவாறிருந்தார்கள். விளிம்பு முழுவதும் விதவிதமான பிரபல நிறுவனங்களின் வளாகங்கள். அந்த நடுப்பகுதி வட்ட வடிவில் அமைந்திருக்கவில்லை. சற்று நீள்வட்ட வடிவில் அமைந்து நான்கு அடுக்குகள் கொண்டதாகவும், உச்சியில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெண்ணிற கூரையால் மூடப்பட்டதாகவும் இருந்தது. வலது இடது புறமாக அமைந்திருந்த இரண்டு தானியங்கி படிக்கட்டுகளில் சில மனிதர்கள் ஏறியவாறும் இறங்கியவாறும் இருந்தனர். அதன் வெளிப்பகுதியில் இருந்த எண்ம ஒளிரும் திரைகளில் கவர்ச்சியான வன்ணங்களில் விளம்பரங்கள் ஓடிக்கொண்டிருந்தது. எதிர் பக்கமாக இருந்த கண்ணாடி மின்தூக்கி, மாவு வழிக்கும் குச்சியைபோல் ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் இருந்தது.

கட்டிடத்தின் இடதுபுறம் மாவரைக்கும் இயந்திரத்தின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும் செவ்வக பகுதி. பெரும் நிறுவனங்களின் ஆடம்பர பொருட்கள் விற்கும் பெரிய பெரிய கடைகள் இருந்தன. பெரிய உணவு வளாகங்கள், ஆடைகள், சுற்றுலா பைகள், வாசனைத்திரவியங்கள், காலணிகள், தங்க நகைகள், கைக்கடிகாரங்கள், கூலர்ஸ் கண்ணாடிகள், கைப்பேசி விற்கும் கடைகள், இன்னும் ஏராளம்

நேராக மூன்றாவது தளத்திற்கு நகரும் படிக்கட்டுகள் மூலமாக சென்று அங்குள்ள ஒரு ஃபலூடா கடையில் அமர்ந்து ஆர்டர் செய்தோம். மூவரும் ஃபலூடா ஐஸ் கிரீம் கோப்பையை கையில் ஏந்தியவாறும், நாக்கை ஒரு பக்கம் வெளியே தள்ளியவாறும் ஒன்றாகவும் தனித்தனியாகவும் செல்ஃபி.

வெளியே வந்து ரோஷினிக்கு மிகவும் பிடித்த விளையாட்டு உலகத்திற்கு சென்று ஒரு சுற்று சுற்றி விட்டு, பைக் ரேஸ் வீடியோ கேமை நானும் ரோஷினியும் விளையாடிவிட்டு, மூவருமாக செல்ஃபி எடுத்துகொண்டோம். பின்பு பல்வேறு உணவகங்களை சுற்றி விட்டு மீண்டும் நகரும் படிக்கட்டின் வழியே இரண்டாவது தளத்திற்கு இறங்கினோம். நகரும் படிக்கட்டுகளில் இறங்கும்போது இடுப்பில் கைவைத்தவாறும், தலையை ஒரு புறமாக சரித்தும், இரு விரல்களை காண்பித்தவாறும் செல்ஃபி எடுத்துக் கொண்டோம்.

இரண்டாவது தளத்திலிருந்து கீழே தெரியும் பெரிய ஹாலை பின்புறமாக கொண்டு மீண்டும் இரு விரல்களை காண்பித்தும், தலையை சரித்தும், புருவத்தையும் விழியையையும் பல கோணங்களில் ஏடாகூடமாக ஏற்றியும் இறக்கியும், இடுப்பில் கை வைத்தும், கண்ணாடி அணிந்தும், நாக்கை ஒரு புறமாக வெளியே துருத்தி நீட்டியும், உதட்டை குவித்து முத்தியும், முத்தத்தை பறக்க விட்டும், அனைத்து பற்களையும் வெளியே தெரியுமாறு வாயை அசையாமல் வைத்தும், கன்னத்தில் அங்கையயும், புறங்கையையும் மாறி மாறி வைத்து தலையை சரித்தும், விரல்களை குவித்து அதன் மீது மோவாயை ஊன்றியும், இரு விரல்களின் இடைவெளியில் ஒரு கண்ணால் பார்த்தும், கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் கொண்டு சிறு இதயத்தை காட்டியும், பிடிக் கம்பியில் சாய்ந்தும், அங்கிருக்கும் தூண்களில் சாய்ந்தவாறும் தனித்தனியாகவும், ஒன்றாகவும், இருவராகவும் செல்ஃபிகளை எடுத்தோம்.

பின்பு மூவரின் முகங்களையும் ஒட்டி வைத்தும், ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து கொண்டும், கழுத்தில் கைகளை போட்டு நெருக்கியவாறும் செல்ஃபி எடுத்துக் கொண்டோம்.

திரையரங்கு உள் நுழைவதற்கான நேரம் வந்ததும், மீண்டும் மூன்றாவது தளத்திற்கு சென்று கைபேசியில் இருக்கும் பதிவு சீட்டை காண்பித்து, தின்பண்ட சோதனைக்கு பின்பு திரையரங்கு செல்லும் வழியில் விரிக்கப்பட்டிருக்கும் சிவப்பு கம்பளம், மின்விளக்கின் மஞ்சள் வண்ண மித ஒளியில் என்னை மிகவும் மயங்கச் செய்வது. அங்கும் அதேபோன்று புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம்.

பின்பு எங்களுடைய இருக்கைக்கு முன் நின்றும், இருக்கையில் அமர்ந்தும் செல்ஃபி எடுத்துக் கொண்டோம். இன்னும் பலரும் எங்களை போல் செல்ஃபியும் புகைப்படமும் எடுத்துக் கொண்டிருந்தனர். திரையில் வெளிச்சம் பரவி ஒலி எழும்பியதும் நாங்கள் படம் பார்க்க எங்களை தயார் செய்து கொண்டோம்.

படம் ஆரம்பிப்பதற்குள், ரோஷினி அவளது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தாள். நான் நடுவில் இருந்ததால், அதை கவிக்கு காட்டினேன். அவள் திரும்பி என் கைபேசியை பார்த்து மெலிதாக புன்னகைத்துவிட்டு, திரை பக்கமாக திரும்பிக் கொண்டாள்.

நான் அவளிடம், “அதுக்குள்ள எத்தன லைக்கு பாத்தியாடி..” என்று சொல்லி திரும்பி ரோஷினியைப் பார்த்து புன்னைகைத்தேன். பின்பு நானும் ரோஷினியும் அவரவர்களின் புகைப்படத்தையும், அதற்கு வரும் பார்வையாளர்களையும், குறிப்புரைகளையும், அழகு வர்ணிப்புகளையும், லவ் ப்ரப்போஸ்களையும் பற்றி, பட இடைவெளியிலும், படம் முடிந்து அதே தளத்திலிருந்த செட்டிநாடு உணவகத்தில் மதிய உணவின் போதும் பேசிக்கொண்டிருந்தோம்.

பின்பு திரும்பி வீட்டிற்கு வந்ததும் என் அறைக்கு சென்று தூங்கிவிட்டேன். விழித்து கைபேசியை ஒளிரசெய்து நேரத்தை பார்த்தேன். மணி ஏழுக்கு மேல் ஆகியிருந்தது. கைபேசியில் அன்று எடுத்த புகைப்படங்களை ஒவ்வொன்றாக ஆராய்ந்து கொண்டிருந்தேன். எவற்றில் எல்லாம் நான் அழகாக தெரியவில்லையோ அவற்றை நீக்கிக் கொண்டிருந்தேன். கவி இன்னும் என் அறைக்கு வராததால் சலிப்புற்று எழுந்து அவள் அறைக்கு சென்றேன். கதவு தாளிடப்படவில்லை, மின் விளக்கின் வெளிச்சம் கதவிடுக்குகள் வழியாக அறைக்கு வெளியே எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. இளம்பச்சை நிற விரிப்பு விரிக்கப்பட்ட கட்டிலில் இளநீல நிற, கைவைத்த பனியனும், சிவப்பு நிற அரைக் கால்சட்டையும் அணிந்து இரு தலையணைகள் மீது சாய்ந்துகொண்டு மடிக்கணிணியில் எதோ பார்த்துக் கொண்டிருந்தவள் அதனை விலக்கி என்னைப் பார்த்தாள். பின்பு வேக வேகமாக விரல்களை நகர்த்தித் தடவி அதன் பொத்தான்களை அழுத்தினாள்.

கதவை சாத்திவிட்டு “இன்னும் தூங்கிட்டு இருக்கனு நெனச்சேன்” என்றவாறு இடப்புறம் ஜன்னலுக்கு அருகில் மேசையின் கீழ் உள்நுழைத்து வைக்கப்பட்டிருந்த மர நாற்காலியை இழுத்து கட்டிலின் அருகில் அதன் பின் புறம் வருமாறு திருப்பி நான் இருபுறமும் கால்களை பரப்பி முதுகு சாயும் பகுதியின் மேல் கைகளை வைத்து, அதன் மீது மோவாயை வைத்தவாறு உட்கார்ந்து கொண்டேன்.

“இப்ப தான் முழிச்சேன்…”

“என்னடி பாக்கற லேப்டாப்ல…?” என்றேன்

“சும்மா நோண்டிட்டு இருக்கேன்..” என்றாள்.

“ஒன்னும் சரியில்ல நீ… கண்டதையும் பாத்து உடம்ப கெடுத்துக்காத..” என்று சிரித்தேன்.

அவளும் சிரித்து இடது கையை நீட்டி என் வலது காலின் தொடையின் மீது ஒரு தட்டு தட்டினாள்.

பின்பு “நீயில்லாம பாப்பேனாடி…” என்றாள்.

“இப்பல்லாம் எல்லாம் எனக்கு தெரிஞ்ச மாதிரி தான் நடக்குதா..?” என்றேன் குத்தலாக.

அவள் சற்று தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு “ம்ம் இப்ப என்ன தெரியனும் உனக்கு..?” என்றாள்.

“ஏன்டி நீ ஃபோட்டொ போடுறத நிறுத்திட்ட.. எதாச்சும் ப்ராப்ளமா?”

அவள் நிதானமாக “அதெல்லாம் ஒன்னும் இல்லடி…”

“அப்புறம்?”

“இன்ட்ரஸ்ட் இல்ல…அவ்ளோதான்..”

“ஏன் திடீர்னு… உன்ன பாத்து தான் நாங்களே ஃபோட்டோ பைத்தியமானோம்”

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

“என்ன பதில காணோம்..?”

என்னை நோக்கி திரும்பி “திடீர்னு தாண்டி தோனுச்சி… எதுக்கு இப்படி ஒரே மாதிரி நம்மளையே ஃபோட்டோ எடுத்துட்டிருக்கோம்னு..”

“ஒரே மாதிரியா..?”

“ம்ம்.. எத்தன ட்ரெஸ் போட்டாலும் திரும்ப திரும்ப அதே மாதிரி கைய வச்சி, முகத்த வச்சி.. பல்ல காட்டி..இடுப்ப வளச்சி..கண்ண உருட்டி.. நாக்க நீட்டி..”

நான் ஒன்றும் புரியாமல் அதுக்கு என்ன என்பது போல் தலையை உயர்த்திக் காட்டினேன்.

“திரும்ப திரும்ப இதையே பன்னிட்டிருக்கோம்.. இதையே எல்லாருக்கும் தெரியிற மாதிரி போடுறோம்..”

“எல்லாரும் அத தான போடுறாங்க..”

“இது நான் இல்லனு தோணுது..”

“என்னடி உளர்ற.. நம்ம இல்லாம வேற யாரு… நம்ம ஆவியா..” என்றேன் கடுப்பாக.

“அப்படி கூட வச்சிக்கலாம்..” என்றாள். “இதோ இப்ப கடுப்பா இருக்குல்ல உன் மூஞ்சி, இது தான் நீ..”

நான் எரிச்சலடைந்தேன். “பைத்தியம் பிடிச்சிருக்குடி உனக்கு.. “ கையிலிருந்த எனது கைப்பேசியை ஒளிர செய்து அதில் ஸ்கிரீன் சேவராக இருந்த, இரு விரல்களை நீட்டி சிரித்துக் கொண்டிருக்கும் என் புகைப்படத்தைக் காண்பித்து “அப்டினா இதுல இருக்கிறது நான் இல்லைனு சொல்றியா..?”

“ஆமா..”

“உன் மண்டைக்கு என்னவோ ஆகிருச்சி.. உங்க மம்மி கிட்ட சொல்லி சீக்கிரமா கல்யாணத்த பண்ண சொல்லணும்..”

“ஏய் போடி உனக்கு எப்படி புரியவைக்கன்னு தெரியல..”

“நீ ஒன்னும் சொல்லி கிழிக்க வேணாம்..” என்றேன். சிறிது நேரம் கழித்து “நான் கூட உனக்கு வேற ஏதோ ப்ராப்ளம்னு நெனச்சேன்..”

அவள் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

நானே மீண்டும் “எவன் கிட்டயோ ஏமாந்துட்டயோனு நெனச்சேன்” என்று கூறி சிரித்தேன்.

“உனக்கு வேற என்னடி தெரியும்… இட்லி மாவு” என்று என்னை ஒரு உதை உதைத்தாள்.

நான் சிரித்துக் கொண்டே “அதையாவது சரி பண்ணிடலாம்டி… இப்ப உன்ன எப்படி சரி பண்றதுனு தெரியலயே..” என்றேன்.

“சரி நீ இருடி.. நான் பாத்ரூம் போயிட்டு வர்றேன்” என்று சொல்லி கழிவறைக்குள் புகுந்து கொண்டு கதவை மூடிக்கொண்டாள்.

நான் கண்களை அவள் அறை முழுவதும் அலைய விட்டேன். அறையிலிருந்த ஸ்லாப்பின் மூன்றாவது அடுக்கிலிருந்த சிறு சாமி படம் முன்பு எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கு கண்ணில் பட்டது. மூன்று மாதங்களுக்கு முன்பு அவள், தாம்பரம் ரயில்வே நிலயத்திற்கு அருகில் இருந்த சரவணாஸ்டோரில் அந்த விளக்கை வாங்கியபோது நான் அருகில் இருந்தேன்.

“ஏன்டி இத வாங்குற” என்று கேட்டபோது, “சாமி கும்பிட” என்று அவள் சொல்லியது நினைவிற்கு வந்தது.

மின் விசிறி காற்றுக்கு அணைந்துவிடாதவாறு அது கண்ணாடி சிமிழியினுள் வைக்கப்பட்டிருந்தது. எழுந்து அருகில் சென்று பார்த்தேன். அந்த விளக்கு அண்ணாமலையாரின் புகைப்படத்திற்கு முன்பு ஏற்றப்பட்டிருந்தது.

சட்டென்று நகர்ந்து கழிவறைக்கு அருகில் சென்று, கொஞ்சம் சத்தமாக “கவி எனக்கும் போகனும், நான் என் ரூமுக்கு போறேன்..” என்று சொல்லிவிட்டு அவளது மடிக்கணினியை எடுத்துக் கொண்டு என் அறைக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டேன்.

அவளது ரகசிய கடவுச்சொல் அனைத்தும் எனக்கு தெரியும். அதனால் என்னால் அதனை உள் நுழைந்து பார்க்க முடிந்தது. அதில் புதிதாக எந்த கோப்புகளில் எல்லாம் நுழைந்திருக்கிறாள் என்று பார்த்தேன். ஒவ்வொன்றாக உள் நுழைந்து பார்த்தேன். மறைந்திருக்கும் கோப்புகளை வெளிக்கொணர முயற்சித்தேன். அப்படி எதுவும் மறைக்கப்பட்டு இருக்கவில்லை. பின்பு ஒரு கோப்பில் அவளது புகைப்பட சேகரிப்பில் உருவாகியிருந்த புதிய ஒரு கோப்பினுள் நுழைந்து அதனுள் இருந்த “ஐ யம்” என்ற இன்னொரு கோப்பினுள் நுழைந்தேன். அது முழுவதும் அவளுடைய செல்ஃபிகளால் நிறைந்திருந்தது.

எனக்குள் ஒருவிதமான பதற்றம் தொற்றிக்கொண்டது.

ஒவ்வொன்றாக திறந்து பார்த்தேன். காலையில் அவள் எழுந்திருக்கும் போதிலிருந்து இரவு அவள் தூங்கும் வரையிலான எல்லா நேரங்களிலும் அவளது வெவ்வேறு செயல்களை படம் பிடித்து வைத்திருந்தாள். அந்த படங்கள் அறையினுள் இருக்கும் போது அவள் அணிந்திருக்கும் உடைகளையே கொண்டிருந்தன. மேக்கப் என்று ஒன்றுமில்லை. தலையை கூட சரியாக வாரியிருக்கவில்லை. பல் விளக்கும்போதும், குளிக்க செல்லும்போதும், சாமிக்கு முன் விளக்கு ஏற்றும் போதும், காலை உணவு உண்ணும் போதும். அலுவலகத்திற்குக் கிளம்பும் போது அதனதற்கு உண்டான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். அலுவலகத்தில் கூர்ந்து வேலை பார்க்கும் போதும், மதிய உணவு நேரத்திலும், அலுவலக கூடுகையின் போதும், வெளியே வரும்போதும், டீ குடிக்கும் போதும், பேருந்தில் திரும்பும்போதும், காது கருவியை மாட்டிக் கொண்டவாறும், வீட்டிற்கு வந்து கட்டிலில் அதே உடையோடு படுத்தவாறும், சோர்வான முகத்தோடும், மீண்டும் முகம் கழுவும் போதும், விடுதியின் இரவு உணவின் போதும், என் அறையில் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போதும், என் மீது சாய்ந்தவாறும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இவை தவிர வெவ்வேறு சமயங்களில் அவளின் செயல்களை அவை செய்து முடிக்கப்பட்ட கணத்திலிருந்த்து வெளி வருவதற்கு முன் அவளாலேயே எடுக்கப்பட்ட புகைப்படங்கள். கோயிலில் சாமி கும்பிடும் அமைதியையும், ஷாப்பிங் செய்வதையும், எங்களுடன் ஊர் சுற்றுவதையும், அலுவலக கொண்டாட்டத்தையும், அவளது அறையில் கொண்டாடப்பட்ட அவளது பிறந்தநாளையும், ஷேர் ஆட்டோவில் நெருங்கி அமர்ந்திருக்கும் முக சுளிப்பையும், அம்மாவுடன் ஸ்கைப்பில் போட்ட சண்டையையும், அறையில் முகம் புதைந்து அழுவதையும், எரிச்சலையும், கோபத்தையும், தலைவலியில் தலையை சுற்றி ஷாலை இறுக்கி கட்டியிருப்பதையும், மூக்கில் இருந்து வரும் சளியை துடைப்பதையும், வாந்தியெடுப்பதையும், மாத்திரைகள் போடுவதையும், ஜுரத்தில் துவண்டு படுத்துக் கொண்டிருப்பதையும், நாப்கினை எடுப்பதையும் என எல்லாவற்றின் படங்களையும் வைத்திருந்தாள்.

அகல் விளக்கின் முன் அவள் கண் மூடி அமர்ந்திருப்பது போல் இருந்த தற்படத்திற்கு அடுத்து இரவில் விளக்கின் ஒளியில் அவள் நிர்வாணமாக படுத்துக் கொண்டிருப்பது போல் இருந்தது இறுதிப்படம். என் இதயத் துடிப்பின் சத்தம் மிக வேகமாக என் காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது. நெற்றியில் வியர்வைத் துளிகள் உருதிரண்டு பனித்துளிகள் போல் இருப்பதை உணர முடிந்தது.

கதவு தட்டும் ஒலி கேட்டு எழுந்து வந்து திறந்தேன். அவள் தான். உள்ளே வந்து என் மேசை மீது இருந்த மடிக்கணினியை எடுத்துக் கொண்டு ஒன்றும் சொல்லாமல் அவளறைக்கு செல்வதை பார்த்துக் கொண்டிருந்தேன்.

0

பெயர் – க சரத்குமார்.

ஜீவன் என்னும் பெயரில் எழுதி வருகிறேன்.

பிறந்த வருடம் -1991ஜூலை28

சொந்த ஊர் – செங்கல்பட்டு

ஜீவனின் குறிப்புகள் என்கிற ப்ளாகில் சில வாசிப்பு அனுபவங்களை எழுதி கொண்டிருக்கிறேன்.

கடந்த ஐந்து வருடங்களாக தீவிர இலக்கியத்தின் வாசகனாக இருந்து கொண்டிருக்கிறேன். தற்போது சிறுகதை எழுத முயற்சி செய்து வருகிறேன்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *