அந்த தெரு வளைவில் திரும்பி நடந்தாள் ஈசுவரி. வலது தோளில் தொங்கிய தோல் பை முன்னும் பின்னும், நீண்டிருந்த பின்னிய கூந்தல் இடவலமாகவும் அவளது நடைக்கு தாளம் சேர்த்தன.

வீடு திறந்திருப்பதை தெரு முனையிலேயே கவனித்துவிட்ட ஈசுவரி கால்களை வேகமாக இயக்கினாள்.

திறந்த கதவு திறந்தபடி இருக்க, புத்தகப்பை ஒரு புறம் தாறுமாறாக வீசப்பட்டு கிடக்க, கால்களை மடக்கி முட்டியின் மேல் குறுக்காக கைகளை கட்டி கைகளுக்குள் முகம் புதைத்து  வாசற்படியில் அமர்ந்திருந்தாள் தியா.

“தியா… தியா…” அதிர்ந்து இரைந்தாள் ஈசுவரி.

அழுத கண்களில் கோபம் தெறிக்க நிமிர்ந்தாள் தியா. ஈசுவரி பதட்டத்தோடு அருகில் அமர்ந்தாள். மெதுவாக தலைவருடி,

“என்னாச்சு என் தியா குட்டிக்கு” என்றாள்.

“தியா , தியா, தியா…. This is irritating me ma. எதுக்கு தான் இந்த பேர் வச்சியோ… எல்லோரும் எப்படி கிண்டல் பண்றாங்க தெரியுமா….

அந்த தேன்மொழி…

வந்தியா, சேர்ந்தியா,  பார்த்தியா, கோர்த்தியா, இதுல நீ எந்த தியான்னு கேட்கறா” அவளுக்கு மட்டும் இனிப்பான பேராம். பீத்திக்கறா. நீ மட்டும் ஏன் எனக்கு இப்படி ஒரு பேர வச்சியோ” கண்களில் இரு கடல் தேக்கினாள்.

“ஏய்… தியா குட்டி…. இதுலா ஒரு பிரச்சனையா”

உள் கதவை திறந்தபடி கேட்டாள் ஈசுவரி.

“பிரச்சனை உனக்கு இல்ல. எனக்கு. ஸ்கூல்க்கு வந்து பாரு எல்லோரும் என்னை எப்படி கிண்டல் பண்றாங்கன்னு”

தியா மியான்னு நீ உனக்கு பேர் வச்சிக்க வேண்டியது தான. எனக்கு ஏன் வச்ச? எனக்கு இந்த பேர் வேணாம்

அழுகையும் விசும்பலுமாய் உள் அறையில் சென்று புத்தக பையை தொப் என போட்டாள் தியா.

மகளின் கோப முகத்தில் இதழ் பதித்தாள் ஈசுவரி. அம்மா கொடுத்த முத்தத்தை அழுந்த துடைத்து வீசினாள் தியா.

“எங்கண்ணுகுட்டி” கன்னம் கிள்ளி வாய்க்குள் போட்டபடி சமையலறை நுழைந்தாள் ஈசுவரி.

சில நிமிடங்களில் பன்னீர் பக்கோடா வின் கமகம வாசம் தியாவின் நாவில் எச்சிலூற வைத்தது. அதில் கோபம் சிறுக சிறுக கரைந்து கொண்டிருந்தது.

“ம்மா… செம்ம மா…” தியா தன்னை மறந்து சுவைத்து மகிழ்ந்தாள்.

“தியான்னு பேரு வச்சதுக்கு கோவ படரியே… அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? ஈசுவரி மெல்ல ஆரம்பித்தாள்.

தியாவின் கண்களில் ஒளிர்ந்த கோபத்தை பன்னீர் பக்கோடா சாந்த படுத்தியது. அமைதியாக இருந்தாள்.

ஈசுவரி தொடர்ந்தாள்…

“தியா என்பது அரபு  மொழியில் “மகிழ்ச்சி” அல்லது “இளவரசி” என்று அர்த்தம். கிரேக்க மொழியில் தியா என்றால் “தெய்வம்” என்று பொருள். தியா என்பது கருணை, அரவணைப்பு மற்றும் புத்திசாலித்தனம் போன்ற பல நேர்மறையான குணங்களுடன் தொடர்புடைய ஒரு பெயர்.”

அம்மா  சொல்ல சொல்ல மலைத்து கேட்டுக் கொண்டிருந்தாள் தியா.

“ஆனா எல்லோரும் கிண்டல் பண்றாங்களேம்மா…” சிணுங்கினாள் தியா.

“அர்த்தமில்லாமல்,  புரியாம கிண்டல் பன்றவங்களை ignore பண்ணனும் தியா. இல்லாட்டி நம் பெருமை, நமக்கே தெரியாமல் போய்டும்.”

“நம் பெயர் தான் மரியாதைக்குரிய நம் முதல் அடையாளம். பிறகு செயல்களால் அந்த மரியாதையை நிலைபெற செய்யணும். சரியா?”

“நீ தான் தியா.

தியா தான் உன் அடையாளம்.”

தாயும் மகளும் இறுக அணைத்து கொண்டார்கள்.

++

பெயர் : வாசுகி தேவராஜ்

தொழில் : முதுகலை ஆசிரியர்

கவிதைகள், கதைகள் எழுத முயற்சிக்கிறேன்.

ஊர் : வேலூர்

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *