விடியும்பொழுது தனக்கானதாய் இருக்காது என்பதை உணர்ந்திருந்தான் குன்வர். இரவே தனது மனைவி பாருலிடம் தங்களது உடைமைகளை மூட்டை முடிச்சுக்களை எடுத்து வைக்கச் சொல்லி இருந்தான். எத்தனை நாட்களில் சொந்த ஊர் சென்றடைவோம் என்று தெரியாத நிலையில், தன்போலவே கைவிடப்பட்டு குழப்ப நிலையில் இருக்கும் சக பீகாரி நண்பர்களைச் சந்தித்துவிட்டுத் திரும்பியிருந்தான். மூன்று நண்பர்கள் தங்களது குடும்பத்தோடு குன்வருடன் இணைந்து பயணிக்கச் சம்மதித்திருந்தனர். மனம் கொஞ்சம் சமாதானம் அடைந்திருந்தாலும், வழிச்செலவுக்கான சிறியதொகையை பெரியமனதோடு கம்பெனி ஓனர் வழங்கி இருந்தார்.அதில் புரோக்கர் கமிஷனை ஒப்படைத்திருந்தான். வார சம்பளம் கைக்கு வந்ததும், அதில் தனக்கான கமிஷனைப்பெற கழுகுபோல காத்திருக்கும் புரோக்கர்களிடம் தானாய் சென்று கொடுப்பவர்கள் சிலரில் குன்வரும் ஒருவன்.

ஆறு மாதத்திற்கு முன்னர் தான் பீகாரிலிருந்து தனது மனைவி பாருல், ஒரே மகள் துல்சா இருவரையும் கோவைக்கு அழைத்து வந்திருந்தான். தான் வேலை செய்யும் பவுண்டரியின் முதலாளி, தன்னைப் போலவே உள்ள புலம்பெயர் பணியாளர்கள் தங்கிப் பணிபுரிய ஜிங்க்ஷீட் கொட்டகை கட்டிவிட்டிருந்தார். அதில் குடும்பத்துடன் தங்குபவர்களுக்கு பெரியஅறை ஒதுக்கித்தரப்படும். குன்வர் இதே கம்பெனியில் பலவருடம் வேலை செய்தவன் ஒழுக்கம் மிக்கவன்.  வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்ததால் முதலாளியிடமே நன்மதிப்பு பெற்றவன். எனவே ஊரில் தன்னைப் பிரிந்து வாழும் மனைவியையும், மகளையும் தன்னுடனே இருந்து பணியாற்ற முதலாளியிடம் அனுமதி பெற்று அழைத்து வந்திருந்தான். பத்துக்கு பதினாறு அளவிலான ஒரே அறைக்குள்ளேயே சமைப்பதும், உறங்குவதும், புழங்குவதுமாக வாழ்க்கை. உள்ளூர் லாபமும் சரி வெளியூர் நட்டமும் சரி என்ற வாதம் இங்கே இவர்களுக்குத் தலைகீழ்தான். பிடித்தது கிடைக்கவில்லை எனினும் கிடைத்ததில் பாதிபிடித்ததாக இருந்தது, நாளொன்று உழைப்புத்தின்று மீதம் வைத்ததில் உறங்கிக்கொண்டனர்.

ஒரு பிரபல மோட்டார் கம்பெனியின் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் பவுண்டரியில் மோல்டிங் பிரிவில்தான் குன்வருக்கு வேலை.  தொடர்ச்சியாக வேலை இருந்துகொண்டே இருக்கும். சீசனில் தொடர்ந்து ஒருவாரம்  இரவும் பகலும் வேலை செய்தாகவேண்டும். ஆர்டர் பெண்டிங் வைக்கமுடியாது. முதலாளி சத்தம் போட்டுக் கொண்டே இருப்பார், பல லட்சங்கள் முதலீடு புரளும் தொழில் என்பதால் உற்பத்தி பொருள் ரிஜெக்ட் ஆகிவிட்டால் பெருத்த நஷ்டத்தோடு ஆர்டரையும் இழக்கவேண்டிவரும். ஆனால் வேலை ஆட்களை அதிகப்படுத்தமாட்டார்கள், குன்வர் போன்ற வெறித்தனமாக வேலை செய்யும் ஆட்கள் கிடைப்பது அவர்களது முதலாளிகளுக்கு ஒரு அமைப்புதான், அவ்வகையில் குன்வரோடு வேலைக்கு வந்தவர்கள் பலரும் அவனைப் போலவே கடும் உழைப்பாளிகளாகவே இருந்தனர். அதோடு ஒழுக்கமான ஆட்களாகவும் இருந்ததால், கம்பெனிக்கு அருகிலேயே அவர்களைத் தங்கச் செய்திருந்தார், குன்வர் முதலில் மோல்டிங் பிரிவில் உதவியாளனாகத்தான் வந்திருந்தான், பின்னர் படிப்படியாகப் பழகி மோல்டிங் மெஷின் ஆப்பரேட்டராக உயர்ந்தான்.

உற்பத்தி துவங்கும் முதல்நாள் மோல்டிங் அடித்த பாக்ஸ்கள் வைக்கும் தளத்தின் மண்ணின் ஒரு கால் பகுதியை நிரவிவிட்டு, மீதமண்ணை, இரும்பை உருக்கி ஊற்றும் பொழுது அது உதிரிபாகத்தின் அச்சு கலைந்துவிடாது உருவமாக மாறிடக் கூடியவகையில் அதன் தன்மையை உறுதிப்படுத்துவர், அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட மண்ணை மோல்டிங் பாக்சில் நிரப்புவர், அதற்குமுன் மோல்டிங் பாக்சில் அன்றைய உற்பத்தி பாகத்தின் வார்ப்பட மாதிரியைப் பொருத்தியிருப்பர். மோல்டிங் மெஷினின் இருகைகளுக்கு மையத்தில் பாக்சை வைத்துவிட்டால், மெஷினில் உருவாகும் அழுத்தம் அதன் கைகளுக்குப்பரவி மேல்புரமும், கீழ்ப்புரமும் அழுத்தி மண்ணால் ஆன ஒருவார்ப்பட அச்சினை உருவாக்கும், அதை முன்னமே நிரவிவிட்ட தளத்தில் எவ்வித சேதாரமுமின்றி சற்றே இடைவெளி விட்டு வைக்கவேண்டும். இவ்வாறு உற்பத்தியின் தேவைக்கேற்ப, இரும்பை உருக்கும் கொள்கலனின் கொள்ளளவினைப் பொறுத்து, உதிரிபாகத்தின் எடையையும் கணக்கிட்ட மோல்டிங்பாக்சின் எண்ணிக்கையை கூடவோ குறைக்கவோ செய்து பாக்ஸ் அடிக்கும் வேலையை நிறைவு செய்வர். இவ்வாறு அடித்த பாக்ஸ்களின் இடைவெளிகளில் அதே மண்ணைக்கொண்டு பொத்தி ஓரிருநாள் நன்றாகஈரம் காய்ந்த பின்பு இரும்பை உருக்கி ஊத்துவர்.

கம்பெனிக்கு வந்து சேர்ந்ததருணத்தில், உதவியானாக எல்லா வேலையும் குன்வர் சலிக்காமல் செய்வான், சிலநாட்கள் இரும்புக் குழம்பைத் தூக்கிச் சுமக்கும் வேலையையும் செய்திருக்கிறான்,சுமார்1000டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் கொதிக்கும் அந்த இரும்புக்குழம்பைச் சுமந்து சென்று மோல்டிங்பாக்சில் ஊத்துவது மிகக்கடினமான ஒன்று, ஆனால் அதற்குத் தனிகூலி என்பதால் அதையும் துணிந்து செய்தான். உயிரைப்பணயம் வைத்து செய்யும் வேலைக்கு இச்சமூகம் கொடுத்திருக்கும் வாய்ப்பு உயிரா, பணமா என்பதுதான். ஆனால் பெரும்பாலும் உயிரைத்துச்சமாக மதித்துத்தான் சம்பாரிக்கவேண்டி உள்ளது, அதைத்தான் ஆரம்பகாலங்களில் குன்வரும் செய்தான், சிலவருடங்களில் தேர்ந்த மெஷின் ஆப்பரேட்டர் ஆனான், வேலைக்குச் சேர்ந்த புதிதில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை சொந்தஊர் சென்றுவந்தவன், காலம் உருண்டோட உருண்டோட வருடம் ஒருமுறையாகி, சமீபத்தில் தனது குடும்பத்தையே அழைத்தும் வந்துவிட்டான், இதற்குப் பின்புலமாய் அவனின் உழைப்பும், நேர்மையும், ஒழுக்கமும் இருந்தது, இதேகாலகட்டத்தில்தான், குன்வரைப் போன்ற புலம் பெயர் தொழிலாளிகளில் சிலர், அவர்கள் வேலை செய்யும் கம்பெனி தரும் சம்பளம் பத்தாமல், வாங்கிய முன்பணத்தை ஒப்படைக்காமல் மாற்றுக் கம்பெனிக்குச் சென்றுவிடுவதும், அவர்கள் வேலைசெய்யும் கம்பெனியைத் தேடி பழைய முதலாளிகள் வந்து வாக்குவாதம் செய்வதும், சில நேரங்களில் காவல்துறையே தலையீடு செய்து விவகாரத்தை முடிப்பதுமாக, ஏதேனும் ஒரு களேபரம் நடந்துகொண்டே இருக்கும்.

நண்பர்களைப் பார்த்துவிட்டு திரும்பியவனுக்கு வெகுநேரமாகியும் பசித்திருக்கவில்லை, தான் சொன்னபடி மனைவி பாருல்லும், மகள் துல்சாவும் உடைமைகளைத் தயார்படுத்தி இருந்தனர். ஏங்க ஒரு மாதிரி இருக்கீங்க? வந்து சாப்பிடுங்க.. என்றாள் கணவனின் சோகம் படிந்த முகத்தைப் பார்த்து, மனைவி பாருல். ’எனக்கு பசிக்கல… நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டிங்களா? இல்லைன்னா சாப்பிடுங்க, நான் அப்புறமா சாப்பிட்டுக்கறேன்’.. என்றான் உள்ளிருக்கும் விடைகளற்ற எதிர்காலத்தை நினைத்தவாறு,

அரசாங்கம் அறிவித்திருந்த லாக்டவுன் காரணமாக கம்பெனி மூடப்படுவதாக மேனேஜர் அனைவருக்கும் தகவல் தெரிவித்திருந்தார், மார்ச், ஏப்ரல் மாதங்கள் அன்சீசன் என்பதால்,பல தொழிலாளர்கள் தங்களது ஊருக்குச் சென்று திரும்புவது வாடிக்கைதான், இருப்பினும் இம்முறை எப்பொழுது திரும்பப்போகிறோம், வருவோமா, இல்லையா போன்ற புதிர் கேள்விகள் பல்லிளித்து நின்றது, எது நடந்தாலும் நமது ஓனர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிகையும் வேலை செய்த நாட்களுக்கான சம்பளத்துடன் மேனேஜர் கையளித்த சொச்ச தொகைக்குள் தொலைந்துபோனது. மொழி தெரியாத இடத்தில், தனக்குத் தெரிந்த மொழியில் இதுகாரும் பிழைத்துக்கிடந்ததே வேலை என்ற ஒன்றின் பிடிப்பில்தான், இந்தப்பிடிமானமும் கைதவறுகையில் நம்பிக்கை கண்ணிகள் கழன்று விழத்துவங்கின,

இரவெல்லாம் உறங்க மறுத்த விழிகளுடன் குன்வர் மனசுக்குள் உரையாடிக் கிடந்தான், ஒரு தகப்பனாய், பதின்மவயது பெண்பிள்ளையையும், மனைவியையும் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம், தான் இதுவரை சந்தித்திராத சூழல்களை காலம் கற்றுத்தருவதாக எண்ணிக்கொண்டான், மனதைத் தேத்திக் கொண்டு விடியலுக்காகக் காத்திருந்தான், ஏதுமற்றவனுக்குத் துணிச்சலைத்தானே இவ்வுலகம் கையளித்திருக்கிறது,

அதிகாலை 2 மணிக்கே அங்கித், குன்வரை அலைபேசியில் அழைத்து தாங்கள் கிளம்பும் நேரத்தை அறிந்துகொண்டு, மற்ற நண்பர்களான, கங்காநாத், பினோத் ஆகியோரிடமும் தெரிவித்துவிட்டு தொட்டிபாளைய பிரிவில் அனைவரும் சந்தித்துக் கொள்வதாகக் கூறியிருந்தான், அதன்படி விரைவாகப் புறப்பட்ட குன்வர் தனது சக்திக்கேற்ப பெரியமூட்டை முடிச்சுக்களை எடுத்துக்கொண்டு மனைவி,மகளை அதட்டிப்  புறப்படவைத்து தொட்டிபாளையம் பிரிவு வந்தடைந்தான், அங்கு காத்திருந்த நண்பர்களுடன் இணைந்து வேறொரு அலைபேசி எண்ணிற்கு அழைத்தனர், எதிர்முனை நீண்டநேரம் கழித்து இணைப்பை அனுமதித்து, அவர்களின் அருகில் வந்துநின்ற ஒரு மஸ்டா கூண்டுவண்டியிலிருந்து இறங்கியது, பேரம்பேசிய அக்குரல் ஒரு பெரியதொகையை கைபெற்றுக்கொண்டு அனைவரையும் வண்டியின் கூண்டுக்குள் ஏற்றிக் கொண்டு கிளம்பியது,

நாடு முழுவதும் முழு ஊரடங்கின் இரண்டாம் நாள் நிலவரம் அன்றைய செய்திசேனல்களில் பரபரத்துக் கிடந்தது. மற்ற நாடுகளின் நிலவரத்தை ஒருவித பதட்டத்துடனேயே சேனல்கள் விவரித்துக்கொண்டு இருந்தன, தீவிரத்தொற்று சமூகப்பரவலாக மாறினால் மக்கள்தொகையில் இரண்டாம் நிலையில் உள்ள நாம் கொத்துக்கொத்தாகச் சாகவேண்டி இருக்கும் என்ற செய்திகளைச் சொல்லி மக்களை வீட்டைவிட்டு வெளியேறா வண்ணம் ஊடகங்கள், எச்சரித்தபடி இருந்தன, புலம்பெயர் தொழிலார்கள் படும் துன்பங்கள், சாப்பாடின்றி அல்லாடும் சூழலையும் விவரித்தபடி இருந்தன, ஒரு பக்கம் கைவிடப்பட்ட அரசாங்கத்தைக் கணக்கில் கொள்ளாமல் தமது சொந்த ஊர்களுக்கு கால்நடையாக நடக்க ஆரம்பித்திருந்த காணொலிகளையும் ஒலிபரப்பிக்கொண்டு இருந்தன, மருந்துவ ஆலோசனைகள், அரசியல் விவாதங்கள், பழைய சீரியல்கள், படங்கள் என தூள்கிளப்பிக் கொண்டிருந்தன ஜனரஞ்சக ஊடகங்கள்.

மெல்ல நகரத்துவங்கிய கூண்டுவண்டி, வேகமெடுத்துப் பறக்கத் துவங்கியது, முழுஊரடங்கில் அவசரத் தேவைகள் தாண்டி வேறு எந்த வாகனத்தையும் இயக்க அனுமதியில்லை. இருந்தாலும் பாதுகாப்புக்காக போலீஸ் செக்போஸ்ட் இல்லாத குறுக்கு வழிகளில் வண்டி நுழைந்து நெளிந்து செல்வதை உள் இருந்த குன்வர் அவர்தம் நண்பர்கள் உணர்ந்தபடி இருந்தனர், சட்டவிரோதப் பயணம் என்பதால் ஒருவிதப் பதட்டம் அனைவர் மனதிலும் இருந்தது, எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் பெங்களூரு சென்றுவிட்டால் போதும், அங்கிருக்கும் தங்களின் நண்பர்களுடன் இணைந்து, இந்த ஊரடங்கு முடிந்ததும் சொந்தஊருக்குச் சென்றுவிடலாம் என எண்ணியபடி பயணித்துக்கொண்டு இருந்தனர், வண்டிக்குள் இருந்த மருந்துகளின் வாசம் ஒவ்வொருவரின் மேலும் படரத்துவங்கி இருந்தது, அதைச்சற்றும் பொருட்படுத்தாது, கைவசம் இருந்த ரொட்டிகளைப் பிய்த்து கூண்டுவண்டி ஓட்டுனருக்கும் பகிர்ந்து அனைவரும் உண்ணத் துவங்கினர். தங்களது சொந்தநாட்டிலேயே அகதிகளாய், தலைமறைவுக் குற்றவாளிகளாய் காலம் இவர்களை இயக்கிக் கொண்டிருந்தது,

இருள் அடங்கத் துவங்குவதின் அடையாளமாய் வெளிச்சம் வண்டிக்குள் பரவத் துவங்கியது,எவ்வளவு தொலைவு வந்தோமென்ற தோராயத்தெளிவு பெறாத வகையில்தான் அவர்களின் பயணம் அமைந்திருந்தது, மூன்று மணிநேர இடைநில்லா பயணத்தில் இதுவரை எந்த செக்போஸ்டிலும் சிக்கிவிடாது தங்களைக் காப்பாற்றிக் கூட்டிச்செல்லும் ஓட்டுனரைக் கடவுளாக எண்ணி நன்றிப் பெருக்கு கொண்டனர், அதைக்கலைப்பதாய்.  வெகுவேகத்தில் சென்று கொண்டிருந்த வாகனம் மிதவேகத்துக் மாறி அடங்கி அமைதியானது, வெளியே நடப்பது என்னவென்று தெரியாமல் மயான அமைதியுடன் குன்வர் குழு அமைதிகாத்தது, ஓட்டுனர் பின்பக்கக் கண்ணாடியை விலக்கி, போலீஸ் செக்அப் நடக்குது யாரும் எதும் பேசாம கம்முனு இருங்க, என்று குரலை செலுத்தினார், அவர்களுக்குப் பதட்டம் தொற்றியபடி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பாருல் தனது மகளை உடலோடு இருக்கிக்கட்டிக்கொண்டாள், அது தனது பதின் பருவ மகளைக் காப்பாற்றுவதில் அவள் காட்டும் அக்கறையை வெளிக்காட்டியது, நீண்டநேரமாகியும் வாகனம் நகர்வதாய்த் தெரியவில்லை, வெளியே நடப்பதும் அவர்களுக்குப் புலப்படவில்லை, தெரிந்துகொள்ள முயற்சித்தால் ஏதேனும் பின் விளைவுகள் நேர்ந்துவிடுமோ என்ற அச்சம், ஓட்டுனரின் குரல்மட்டுமே தங்களை ஆசுவாசப்படுத்தும் என்றெண்ணி அமைதி காத்தனர். எல்லாவிதமான கடவுள்களையும் மனதுக்குள் துணைக்கு அழைத்தனர், நேரம் கடந்ததேயன்றி சூழலின் இறுக்கம் குறைந்தபாடில்லை, அனைவரும் குன்வரின் முகத்தையே பார்த்தபடி இருந்தனர்,அவர் சரியான முடிவெடுப்பார் என்ற நம்பிக்கை துளிர்க்கத்துவங்கி இருந்தது. இனிவேறு வழியில்லை, எத்தனைநேரம் கூண்டுக்குள் ஒடுங்கிக்கிடப்பது, சுதந்திரமாய் உலவிக்கிடக்கும் உயிரினங்களை குறிப்பிட்ட அளவுக்குள் அடைத்துவைத்தால் அது அடையும் துன்பம் எவ்வாறு இருக்கும் என்பதை உணரத்துவங்கினர், குன்வர் ஒரு முடிவுக்கு வந்தவனாய், மெல்ல எழுந்து குந்தவைத்தபடி ஓட்டுனருக்கும் கூண்டுக்கும் இடையிலான கண்ணாடியை வலது கண்பார்வை வீசும் அளவு திறந்து பார்த்தான், எவரொருவரும் தெரியவில்லை, அதிர்ந்தவாறு கண்ணாடியை முழுசாகத் திறந்துவைத்து எழுந்து நின்றுபார்த்தான், கண்ணுக்கு எட்டியதூரம் வரை சாலை வெறிச்சோடிக்கிடந்தது, சூழலின் தீவிரமறிந்து, தான்கண்ட தகவலை மற்றவர்களிடமும் கூற அனைவரின் முகத்திலும் பயரேகைப் படரத்துவங்கியது, செய்வதறியாது திகைத்தபடி புலம்பியபடி இருந்தனர்.

சேலம் டூ தர்மபுரி செல்லும் சாலையில் நெடுஞ்சாலை ரோந்துப்பணி காவல் வாகனம் சைரன் சப்தத்துடன் வந்துகொண்டிருந்தது, சாலையோரம் நின்றிருந்த மஸ்டா கூண்டுவண்டியைக் கண்டதும் அதனருகில் வந்துநின்றது, ரோந்து வாகனத்திலிருந்து இறங்கிய ஆய்வாளரின் கண்ணசைவை உள்வாங்கியவராய் ஏட்டு ஒருவரும், கான்ஸ்டபிளும் நேராகக் கூண்டுவண்டியின் பின் கதவுகளை லத்தியால் தட்டியபடி,

”டேய் பரதேசி நாய்களா வெளில வாங்கடா.. பொழைக்க வந்த எடத்துல பொச்சடங்கி இருக்கமாட்டீங்களா?.. திருட்டுத்தனமாடா பண்ணுறீங்க?.’.என்றபடி கதவைத் திறந்தார், உள் இருந்தவர்கள் வரிசையாகத் தங்களின் மூட்டை முடிச்சுக்களை எடுத்துக்கொண்டு இறங்கியதும், எந்த ஒரு விசாரிப்புமின்றி ரோந்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டனர்.

”சார் ஆட்களைக் கேச் பண்ணிட்டேன்.. நம்ம ஸ்டேஷனுக்கே கொண்டுவரட்டுமா?” என ரோந்து வாகனத்தின் வெளியே நின்றபடி ஆய்வாளர் தனது மேலதிகாரியைக் கேட்டார்,

”அவனுகளைக் கொண்டு வந்து நீ என்னயா பண்ணப்போற?, சாதாரண டிரைவருக்கே அம்பதாயிரத்துக் மேல குடுத்துக் கிளம்பிருக்கானுகன்னா   அவுனுககிட்ட இன்னமும் காசு இருக்கும்யா.. எல்லாத்தையும் தொடைச்சு எடுத்துட்டு, எங்கயாச்சும் எறக்கிவிட்டுட்டு வந்துரய்யா.. நடந்து நடந்து செத்துத் தொலையட்டும். நாம வேற வகைல கேஸ் க்ளோஸ் பண்ணிடலாம்யா” என்றது எதிர்முனைக்குரல் பொறுப்புடன்.

”சரிங்கய்யா அப்படியே பண்ணிடறேன்”..

”ஆங்.. சொல்லுங்கய்யா..ம்ம். அக்கா இப்ப வீட்ல வச்சுத்தான் ரெடி பண்ணுறாங்க. சரிங்கய்யா வாங்க்கிடறேன். அய்யா….அப்படியே எனக்கும் ஒரு மூளை ப்ரை வாங்கிக்கறேனே”…

”ஹிஹி. நன்றிங்கய்யா!”  

எனச் சிரித்தபடி அலைபேசியத் துண்டித்துவிட்டு, தொப்பியைச் சரி செய்தவாறு ரோந்து வாகனத்தில் ஏறி கான்ஸ்டபிள், வண்டிய எடு.. என்று உத்தரவிட்டதும் வண்டி கிளம்பிச் சென்றது.

++

எனது பெயர் சு.மகேந்திரவர்மன். மகிவனி என்ற பெயரில் படைப்புகளை எழுதிவருகிறேன். கனத்தைத் திறக்கும் கருவி என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளேன்.கோவையில்  தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிவருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *