சிற்றருவி
———————–
இருபெரும் மலைகளுக்கிடையே
இறங்கிவரும் சிற்றருவியை
சித்திரமாக்குகிறேன்
,
சாரல் தெறிக்க
சிரங்கள் சிலுப்பி
வானேகுகின்றன
கொண்டைக்குருவிகள்
பொன்மகுடம்
——————————
விடியலில்
தொழுவத்தைவிட்டு
கிளம்பும்
கிடைமாடுகளில் ஒன்று
,
தன் கூரிய கொம்புகளில்
சூரியனைச்சூடி
தோரணையாய் நடக்கிறது
பொன்மகுடம் தரித்த
வனராஜன் போல.
ஃபில்டர்காபி பெரியவர்
————————————————
என்றைக்கும் பிரம்மமுகூர்த்தத்தில்
எழுந்துகொள்ளும் பெரியவர்
,
ஆர்மிக்காரருக்கு முன்பாகவே
பூங்காவின் நடைமேடைக்கு
வந்துவிடுபவர்
,
அம்மன் கபேவில்
ஃபில்டர் காபி ஸ்ட்ராங்காக
அருந்துபவர்
,
நாளிதழ்களை வரிவிடாமல்
வாசித்துவிட்டு
நண்பர்களிடத்தில்
விவாதம் செய்பவர்
,
என்றைக்கும் பிரம்மமுகூர்த்தத்தில்
எழுந்துகொள்ளும் பெரியவர்
,
இன்றைக்கு
பிற்பகலாகியும்
எழுந்துகொள்ளவில்லை.
அவசர நேர பரவசங்கள்
———————————————–
பண்பலையில் ஒலிக்கும்
துள்ளிசைப்பாடல்
,
கூந்தலில் நீர்சொட்ட
குங்குமத்தீற்றலோடு
எதிர்ப்படும்
இளம்பெண்
,
ஒழுங்கற்ற பவுடர்பூச்சோடு
புன்னகைத்துக் கையசைக்கும்
சீருடைச் சிறார்கள்
,
இராமனைப்பாடிவரும்
அனுமன் வேடமிட்டவர்
பரபரப்பான காலை தான்
பரவசங்கள் இல்லாமல் இல்லை.
000


