பள்ளிக்கு மட்டம் போட்டதால், அன்று மிகத் தாமதமாகத் தான் எழுந்தேன்.. அம்மாவும், சின்ன அத்தையும், கறிக்குழம்பு  வைத்து, இட்லி சுட்டிருந்தார்கள். எனக்கு மட்டும் உருளைக் கிழங்கு குழம்பு. ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே, கறி சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன்.

அன்று ஏதோ வேண்டுதலுக்கு சேவலை அறுத்தார்கள். நாகருக்காக வேண்டிக்கொண்டதென்று நினைக்கிறேன். வீட்டுக்குப் பின்புறம் ஒரு கரையான் புற்று இருந்தது. அவ்வப்போது அப்புற்றிலிருந்து, அடிக்கடி பாம்பொன்று நடமாடிக் கொண்டிருந்தது. ஆயாவுக்கு யாரோ சொல்ல, சேவலை நேர்ந்து விட்டது.

அதன் நடமாட்டம் சற்றுக் குறைந்த பின்னர், சேவலைக் காவு கொடுப்பது என்று முடிவானது. தலையை அறுத்த பிறகும், சேவல் சற்று நேரம் அங்குமிங்கும் ஓடிய பின்னர், பொத்தென்று தரையில் விழுந்தது.

அப்போது பள்ளிப் பாடத்திட்டத்தில் புத்தர் பற்றியும், புலால் உண்ணாமை பற்றியும் படித்ததால், புலால் உணவை அன்று முதல் நிறுத்தி விட்டேன்.

இதுதான் நான் கறியை நிறுத்திய சுருக்கமான கதை.

சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது, நேற்று பார்த்த மோகனசுந்தரம் வந்து நின்றான். எம் எய்ட்டி வண்டியில் வந்திருந்தான்.

தாத்தா,”வாப்பா, சுந்தரம்!” என்றார். அப்பா,”கைக்கழுவிட்டு வா, டிபன் சாப்பிடலாம்” என்றார். “இல்ல மாமா,பக்கத்தில ஒரு வேலையா வந்தன், அப்படியே பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்”. “அட, என்னப்பா. இவ்வளவு தூரம் வந்துட்டு, சாப்பிடாமப் போனா நல்லாவா இருக்கும். ஒரு நாலு இட்லி கறிக்கொளம்போடச் சாப்புடு”.

அம்மா எல்லோருக்கும் வாழையிலையில் இட்லியும் கறிக்குழம்பும் பரிமாறினாள்.

“விவசாயம் எப்படிப் போவுதுங்க மாமா. போட்ட மொதலுக்குனாவது ஏதாவது வருமானம் வருதுங்களா?” என்று ஆரம்பித்தான்.

“அத ஏம்ப்பா கேட்கிற. வர்ற சம்பளம் மொத்தமும் காட்டு செலவுக்குத் தான் போவுது. போட்ட மொதலுக்குனாவது கெடைக்குதான்னா, அதுவும் கெடையாது. ஒரு வீம்ப்புக்கு ஓட்டிக்கிட்டு இருக்கிறோம்”.

“ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க வேண்டாம். பேசாம வர்ற வெலக்கி வித்துட்டு, டவுனுல ஒரு வீடு வாங்கி செட்டிலாயிடுங்க. பசங்களும் நல்ல ஸ்கூலுக்குப் போவாங்க. யோசனை பண்ணிச் செய்யுங்க” என்றபடியே கைகழுவினான்.

 “இப்ப ஜெயங்கொண்டத்துல தான் குடி இருக்குறம். நான் ரியல் எஸ்டேட் தொழில் பண்றேன். நல்ல வெலக்கு முடிச்சுத் தர்றேன். நீங்களும் அங்க வந்திர்லாம். செலவு கம்மி”.

“சரிப்பா, யோசன பண்ணிட்டுச் சொல்றோம்” என்றார் தாத்தா.

அவன் போனதும், சின்ன அத்தை ஆரம்பித்தது: ”இவன் சொல்றது எதுவும் கேட்காதிங்க”. உள்ளறையில் சாப்பிட்டபடியே அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த கண் பார்வையற்ற சரோஜினி அத்தை சொன்னது: ”இவன் ஒரு பெரிய பிராடு. பெரிய அக்காவே சொல்லியிருக்குது. இடையில போலீஸ் கூட இவனைத் தேடுனாங்களாம். ஏதோ ஒரு சின்னக் கட்சியில கைய காலப் புடுச்சி ஏதோ போஸ்ட் வாங்கிட்டானாம். சரியான பிராடு”.

இடையில் பல வேலைகளால், அவன் வந்து போனதே அனைவருக்கும் மறந்து விட்டது.

நான்கு மாதங்கள் அப்படியே ஓடியது. ஒரு ஞாயிற்றுக்கிழமை மோகனசுந்தரம் தனது அப்பா, அம்மாவுடன், அதாவது பெரிய மாமா, அத்தையுடன், வந்து நின்றான்.

“வாங்க மாப்ள. வாம்மா சிவகாமி” என்று வரவேற்றார் தாத்தா. அப்பா காட்டிலிருந்து வந்தவர் ”வா அக்கா. வாங்க மாமா” என்றவர், அம்மாவிடம், “அப்படியே எல்லோருக்கும் டீ குடு” என்றார்.

“என்னம்மா திடீர்னு. பசங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா” என்றார் தாத்தா.

“ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பக்கம் இருக்குறானுங்க. கடைசியான் மட்டும் எங்களோட தான் இருக்கறான். பெரியவனோட தொழிலும் முன்ன மாதிரி இல்ல. நீங்கதான் ஏதாவது உதவி பண்ணனும். ஒங்கள விட்டா, எனக்கு யாரு இருக்கா?. எங்கம்மா இருந்திருந்தா இப்படி இருக்குமா?” என அழ ஆரம்பித்தாள்.

“இரும்மா. இப்ப என்ன ஆகிப்போச்சுன்னு கண்ணீர் உடற. நாங்க இல்லியா. காசு பணம் ஏதாவது வேணுமா. எவ்வளவு வேணும்னு சொல்லு, புரட்ட முடியுதா பாக்கலாம்” என்றார் தாத்தா.

“அதெல்லாம் வேணாம். ஒரு அஞ்சு செண்டு நெலம் உட்டீங்கன்னா, நாங்களும் சோளம் கம்பு ஏதாவது போட்டுப் பொழச்சிக்குவோம்”.

“அக்கா ஒனக்கென்ன பைத்தியம் முத்திப்போச்சா? நாங்களே சம்பளத்தை எல்லாம் இந்தக் காட்டுக்குப் போட்டுட்டு தடுமாறிக் கிட்டு இருக்கறம். நீ வேற” என்றார் அப்பா. அவர் குரலில் கோபம் தெரிந்தது.

“அண்ணா, ஒன் காலப்புடுச்சிக் கெஞ்சிக் கேட்கிறேன். நான் ஒன்னோட கூடப்பொறந்தவதான. ஒரு அஞ்சு செண்டு உட்டியின்னா, நாங்களும் ஏதோ பொழச்சிக்குவோம்”.

“அப்பா, நீங்கதான் காப்பாத்தனும். ஒங்கள விட்டா எனக்கு யாருமில்ல” என்று தாத்தாவின் காலில் விழுந்தாள்.

“சிவகாமி, ஏம்மா கால்ல போயி விழுந்துக்கிட்டு. எந்திரி. ஒன்னய அப்படி உட்டுருவமா? கொஞ்சம் நேரம் குடு. கலந்துக்கிட்டு அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சொல்றேன்” என்றார்.

“ஒரு அஞ்சு செண்டு நெலத்துக்கு இப்படி யோசிக்கறீங்க. அந்த கடைசியில பாரஸ்ட்ட ஒட்டி இருக்குது இல்ல. அது மட்டும் உடுங்க. இதுக்கும் போயி எதுக்கு ஒரு வாரம்?”.

தாத்தா,”அப்பு, கொஞ்சம் இங்க வாப்பா” என்று, அப்பாவைத் தனியாகக் கூட்டிக் கொண்டு போனார். “அஞ்சு செண்டு நெலந்தானப்பா. எதுவும் பிரச்சினை வராது. நான் பார்த்துக்கிறன். சரின்னு சொல்லுப்பா’.

“பின்னால என்னதுன்னு வந்து நின்னா பெரிய பிரச்சினை ஆயிடும்பா “. “சொத்து ஏம்பேர்ல இருக்கும் போது எதுக்குப்பா கவலைப் படுற. அப்படி உட்டுருவனா. நான் பாத்துக்கிறேன்பா. சிவகாமி பாவம்ப்பா. சரின்னு சொல்லுப்பா” என்றார் தாத்தா.

“சரி,சரி, என்னமோ பண்ணித் தொலைங்க. ஆனா, பின்னாடி பிரச்சினை வரக்கூடாது”.

“சரிம்மா. நீ கேட்ட மாதிரியே பாரஸ்ட் பக்கத்துல இருக்குற அந்த அஞ்சு செண்டு நெலத்த நீங்க ஓட்டிக்கலாம். ஆனால் என்னுதுன்னு எப்பவும் வந்து நிக்கக் கூடாது. இதுக்குச் சம்மதம்னா ஓட்டிக்கிங்க” என்றார் தாத்தா.

“சரிங்கப்பா. நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிடறோம். எங்களால ஒங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. சரி, நாங்க கெளம்பறம்” என்றாள் பெரிய அத்தை.

“சாப்பாட்டு நேரம். சரியான வெயில். இருந்து சாப்புட்டு, வெயத் தாழப் போலாம்”  என்றாள் சரோஜினி அத்தை.

அரை மணி நேரத்தில், அம்மா அரிசி வடித்து, தக்காளி பஜ்ஜி செய்திருந்தார். தயிருடன் அனைவருக்கும் பரிமாறினாள்.

அனைவரும் சாப்பிட்ட பிறகு, பெரிய மாமாவும் அத்தையும் சற்று நேரம் தூங்கிய பிறகு , நாலு மணிக்கு எழுந்து கிளம்பினார்கள்.அப்போதும் டீ குடிக்கத் தவறவில்லை.

அவர்கள் சென்றதும், “ஏங்க, ஒங்க அப்பாவுக்குத் தான் ஒண்ணுமே தெரியாதுன்னா, ஒங்களுக்குமா. பின்னால, அந்த இடம் எங்களுதுன்னு வந்து நின்னா என்ன செய்யறது?” என்றாள் அம்மா.

“அப்பனுக்கும் புள்ளைக்கும் புத்தி கெட்டுப் போச்சு. இவளைப் பாத்துட்டு, சின்னவளும், புருஷனக் கூட்டிக்கிட்டு வந்து, எனக்கு ஒரு அஞ்சு செண்டு நெலத்த உடுண்ணா, என்ன செய்வ?” என்றது சரோஜினி அத்தை.

“நான் அன்னைக்கே சொன்னன், அந்த எடுபட்டப் பயலக் காட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்க உடாதன்னு, கேட்டால்தான? நம்ம பேச்சு யாரு மதிக்கிறா இந்த ஊட்டுல” என்று புலம்பலைத் தொடர்ந்தது.

“இப்ப என்னைய என்ன பண்ணச் சொல்றீங்க. அப்பா சொன்னத நான் எப்படி மதிக்காத இருக்க முடியும்? என்ன நடந்தாலும் பாத்துக்கலாம். என்னையக் கொஞ்சம் நிம்மதியா உடுங்க” என்று சொல்லி விட்டு, காட்டுப் பக்கம் சென்று விட்டார் அப்பா.

பெருமாள் தாத்தாவும் அவர் பங்குக்குத் தாத்தாவிடம் சொன்னார்:”மச்சான், என்ன இருந்தாலும் நீ அப்படி வாக்குக் குடுத்துருக்கக் கூடாது. பின்னால பிரச்சினை வந்தா என்ன பண்றது? நடந்தது நடந்து போச்சு. மறுபடியும் வந்தா, காட்டுக்குள்ள காலடி வைக்க உடாத பாத்துக்க. சொல்றத சொல்லிட்டேன்”.

“நான் என்னடா பண்ணுட்டும் பெருமாளு? மூத்தப் பொண்ணுடா அவ. கால்ல உழுவும்போது எப்படிடா என்னால வேணாண்ணு உதைச்சித் தள்ள முடியும்?. வர்றது வரட்டும் பாத்துக்கலாம்”.

இரண்டு வாரங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓடியது.

மூன்றாவது வாரம் ஒரு ஞாயிற்றுக்கிழமையில், காலையிலேயே மோகனசுந்தரம் தனது அப்பா அம்மாவுடன் வந்து விட்டான்.

“என்னப்பா இவ்வளவு காலையில?” என்றார் தாத்தா.

“சும்மாதான் தாத்தா. ஞாயித்துக்கெழம சும்மா தானே இருக்கறம். இந்தக் காட்ட சுத்தம் பண்ணுன மாதிரியும் ஆச்சி. ஒங்களப் பாத்த மாதிரியும் ஆச்சின்னு அம்மா தான் சொன்னுச்சு. அதுதான் பஸ் மாறி , பஸ் மாறி, காலையிலேயே வந்துட்டோம்” என்றான் சுந்தரம்.

“சரி வாங்க. ரெண்டு இட்லி சாப்பிட்டுட்டு ஆரம்பிக்கலாம்” என்றார் தாத்தா.

எல்லோரும் இட்லி சாப்பிட்டு முடித்ததும்,”மாமா, ஒரு கடப்பாரையும் மமுட்டியும் இருந்தா குடுக்கச் சொல்லுங்க”.

அப்பா, ஆறுமுகத்திடம் சொல்ல, கடப்பாரையும் மமுட்டியும் வந்து சேர்ந்தது.”மறந்துட்டன் பாருங்க. அப்படியே ஒரு இரும்புச் சட்டி, கல்லு அள்ளிக் கொட்டறதுக்கு”.

“ஆறுமுகம், அப்படியே துணைக்குப் போயி காமிச்சுட்டு வா. பூச்சி பொட்டு இருக்கப் போவுது. பாரஸ்ட்டுக்குப் பக்கம்” என்றார் தாத்தா.

ஆறுமுகமும் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை. முள் செடிகளை எல்லாம் கொடுவாளால் வெட்டிய பிறகு, கடப்பாரையால் வேரைத் தோண்டி எடுத்தான்.

சுந்தரம் கற்களை அள்ளிக் கொடுக்க, மாமாவும் அத்தையும், இரும்புச் சட்டியில் எடுத்துக் கொண்டு சென்று, பக்கத்தில் இருந்த ஓடைப் பள்ளத்தில் கொட்டினார்கள். வெய்யிலில் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஆறுமுகம் வீட்டுக்கு வந்து, “அண்ணா, குடிக்கறதுக்குத் தண்ணி கேட்கிறாங்க” என்றான்.

“நம்ம வேலையெல்லாம் உட்டுட்டு இவங்களுக்கு வேல செய்ய வேண்டியிருக்கு. சொன்னா கேட்டால்தான. இப்ப சோறாக்கிக் கொட்டுவதும்” என்று சலித்தபடியே ஒரு குண்டாவில், சந்துருவிடம் தண்ணீர் கொடுத்து அனுப்பினாள் அம்மா.

அவர்கள் வேலை செய்து களைத்துப் போய் வந்த போது, மதிய உணவு ரெடியாக இருந்தது. அம்மா சோறும் பருப்புக் குழம்பும் வைத்து, ஜனதா அப்பளம் பொறித்திருந்தாள். அப்பளம் கிடைத்ததில் எங்களுக்குக் குஷி.

பெரிய மாமா நல்ல சாப்பாட்டுப் பிரியர். எதையும் விட்டு வைப்பதில்லை. அசைவம் என்றால் இரண்டு மடங்கு சாப்பிடுவார். இன்று கல் அள்ளிக் களைத்துப் போனதால், ஒரு பிடி பிடித்து விட்டார்.

அம்மாவுக்கும் சரோஜினிக்கும் மீண்டும் சோறு வடிக்க வேண்டியதாயிற்று.

சாப்பிட்டு விட்டு ஒரு குட்டித் தூக்கம். எழுந்ததும் ஒரு டீ என்று விழுங்கியபின், கிளம்பினார்கள்.

“அந்தக் காட்ட எப்படியாவது சுத்தம் பண்ணி, சோளம் கம்பு ஏதாவது போடனும் மாமா” என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் சுந்தரம்.

தாத்தா இப்போது தான், தனது தவறை உணர்ந்து வருந்தினார். ஆனால் வழி ஏதும் தெரியவில்லை.

இரவு உணவுக்குப்பின் எல்லோரும் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தோம்.

சரோஜினி தான் ஆரம்பித்தது :”சின்னவளும் கேட்டா என்ன செய்யப் போறீங்க. யோசிச்சு வச்சிக்கங்க”. “நீ வேற, கொஞ்சம் வாய் மூடிக்கிட்டு சும்மா இரு. அதெல்லாம் ஒன்னும் கேட்க மாட்டா. திரும்பத்திரும்ப அதயே சொல்லிக்கிட்டு. நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காத”. அப்பா திட்டவும் அத்தை அமைதியானது.

அடுத்த நாள் காலையில், பெருமாள் தாத்தா,”மச்சான், ஊருக்குப் போயி ரொம்ப நாளாயிடுச்சி. கொஞ்ச நாள் அங்கு இருந்திட்டு வர்றன்” என்றார். “ஏம்ப்பா திடீர்னு கெளம்பற. சரி சரி, சீக்கிரம் வந்து சேரு”.

பெருமாள் தாத்தாவுக்கு பள்ளிப்பாளயம் செல்லும் வழியில், ஒட்ட மெத்தையில் வீடு. மருமகனுக்கு நூல் வியாபாரம். தாத்தாவுக்கு நூல் வியாபாரம் அத்துப்படி. கடையில் அவர்தான் இருப்பார். ஆனால் அவருக்கும் பாட்டிக்கும் ஆகாது. எப்போதும் சண்டை. தாத்தா தினமும் குடிப்பது பாட்டிக்குப் பிடிக்காது. தினமும் இதனாலேயே சண்டை வரும்.

அடிக்கடி சண்டையிட்டு எங்கள் காட்டுக்கு வந்து விடுவது தாத்தாவின் வழக்கம்.”சனியன், எங்கயாவது ஒரு இடத்துலே இருந்தா சரி” என்று பாட்டியும் விட்டு விடுவாள்.

சில மாதங்களுக்கு, மோகனசுந்தரம் அடிக்கடி தனது அப்பா அம்மாவுடன் வந்து, நிலத்தை சுத்தம் செய்கிறேன் என்று கற்களைக் பொறுக்கி, ஓடையில் போட்டுக் கொண்டு இருந்தான்.

அந்த வருடம் தீபாவளியும் வந்தது. ஒவ்வொரு தீபாவளிக்கும் பலகாரங்களோடு வரும் சின்ன அத்தை பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து விட்டாள். பலகார சீட்டு நடத்திக் கொண்டு இருந்தாள். லட்டு, ஜிலேபி, பாதுஷா, மைசூர் பாகு, முருக்கு மற்றும் மிக்சர் என பலகாரங்கள் சில்வர் டப்பாக்களில் குவிந்து கிடந்தது . எங்களுக்கு ஒரே கொண்டாட்டம். இதற்காகவே பள்ளி விட்டவுடன் வேகமாக ஓடி வருவோம். அம்மாவுக்கு சில்வர் பாத்திரம் கிடைப்பதில் சந்தோஷம். அதுவுமில்லாமல் பண்டிகை அன்று எண்ணெயில் வேகும் வேலை கிடையாது.

அடுத்த நாள் பண்டிகை என்பதால் அத்தை கிளம்பிக் கொண்டு இருந்தாள். அப்பாவும் சற்று நேரமாகவே வந்திருந்தார்.

“சரிண்ணா நான் கெளம்பறன். ரெண்டு பஸ் மாத்திப் போகணும்”. “இருந்து சாப்பிட்டு காலையில போகாலாம்”.”இல்லண்ணா, பண்டிகை நாளு. மூணு பொட்டப் புள்ளைங்க. அந்தாளுக்கு குடும்பத்து மேல் அக்கறையே கெடயாது. தினமும் குடிக்கிறாரு, இப்பல்லாம். மாமியார்க்கெழவி  பாத்துக்க மாட்டா. அந்த முருகன் பையன் ஓடிப் போயி மூணு வருஷம் ஆகிப்போச்சு. எங்க போனான்னே தெரியல.நான் இருந்தா தான் சரியா வரும்”.

“சரிம்மா உன் இஷ்டம். பாத்துப் போய்ட்டு வா. ஊட்டுக்காரர க் கேட்டதாச் சொல்லு”.

“அப்பா, நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே?” என்று தாத்தாவிடம் பூடகமாக ஆரம்பித்தாள். “சொல்லும்மா”.

“இல்ல, பெரியவளுக்கு மட்டும் நெலம் உட்டுருக்கிறீங்க. நானெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியல”.

“இல்லம்மா, பாரஸ்ட்க்குப் பக்கத்துல மேட்டாங்காடு. கல்லு பொறிக்கிப் போட்டுச் சுத்தம் பண்றன்னு சொன்னா. வேற ஒண்ணும் இல்லம்மா. ஒனக்கு இல்லாததா”.

“எங்களுக்கும் ஒரு அஞ்சு செண்டு நெலத்த உட்டிங்கண்ணா நல்லா பாத்துக்கவம். ஒரு கண்ணுல வெண்ணெய், மத்த கண்ணுக்கு சுண்ணாம்பா”.

“அடம் புடிக்காத, சொன்னாக் கேளு. வீணா மனஸ்தாபம் வேண்டாம்”.

“எங்க அம்மா இருந்திருந்தா, இப்படி எல்லாம் நடக்குமா?. இதையெல்லாம் பாக்க வேணாண்ணு தான் போய்ச் சேர்ந்துட்டா.கனகாம்பரம் வித்து சம்பாரிச்சக் காசயெல்லாம், போண்டாக்காரிக்கிட்டக் குடுத்துட்டுப் போய்ட்டா. பெரியவ வீட்டில தான் செத்தா. செத்தப்ப கழுத்துல தங்க செயினு போட்டிருந்தான்னு தான் இழவுக்கு வந்தவங்க சொன்னாங்க. பெரிய மாமன் வில்லன். எடுத்துக்கிட்டானோ என்னமோ?”.

“இப்ப ஏன் சம்பந்தமில்லாம எதையெதையோ இழுக்கற. ஒனக்கு நெலம் வேணாம்மா. பொழப்பப் பாரு. நூல் வியாபாரம் நல்லாதானப் போவுது. புள்ளங்களும் நூல் சுத்தறத்துக்குப் போறாங்கதானே. அவங்களுக்கு சீக்கிரம் ஒரு வழி பண்ணு. என்னால முடிஞ்சதச் செய்யிறன்”.

‘சரிப்பா, நான் போறேன். அவளுக்கே எல்லாத்தையும் அள்ளிக் குடு” என்று கோபமாகச் சொல்லி விட்டு, யாரிடமும் சொல்லாமல் கிளம்பினாள்.

தாத்தாவின் முகம் மிகவும் வாடிப் போனது. ஆயா இருக்கும்வரை இப்படிப் பட்ட பிரச்சினைகள் எழுந்ததில்லை. ஆயாவின் இறப்புக்குக்காக வருந்தினார். தாத்தாவைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.

“தாத்தா, ஒண்ணும் கவலப் படாத. எல்லாம் சரியாகிவிடும்” என்றேன் பெரிய மனுஷன் தொனியில். “நீங்க இருக்கும் போது எனக்கு எதுக்கு கவல” என்று என்னை அணைத்துக் கொண்டார்.

“சின்னவளுக்கு எப்படித் தெரியும்? இந்தப் பெருமாள் கெழவன் தான் சொல்லி இருப்பான் “ என்று கரித்துக் கொட்டியது சரோஜினி.

தாத்தாவுக்கு ஆறு பிள்ளைகள். இருவர் வளர்ந்த பிறகு தவறி விட்டனர். இருவருமே தற்கொலை செய்து கொண்டதுதான் கொடுமை.

அப்பாவின் தம்பி குணாளன் அப்பாவை விட மிகவும் அழகாக இருப்பாராம். போட்டோவில் பார்த்திருக்கிறேன். நடு வகிடு எடுத்து சீவியிருப்பார். புகை பிடித்ததற்காக, தாத்தா அவரின் நண்பர்கள் முன்னிலையில் அடித்து விட, அந்தக் கோபத்தில் கிணற்றில் விழுந்து இறந்து விட்டார்.

பத்மா அத்தை வயிற்று வலி தாள முடியாமல், தீ வைத்துக் கொண்டது.

சரோஜினி அத்தை தான் கடைசி. சின்ன வயதில் ஓரளவு பார்வை இருந்திருக்கிறது. கண் புரை அறுவை சிகிச்சை செய்தால், குணமாகி விடும் என்று டாக்டர் சொன்னாராம். எப்படியோ அலட்சியமாக இருந்து விட்டதால், ஒரு நாள் இரண்டு கண்களிலும் பார்வை பறிபோய்விட்டது.

அத்தைக்குக் கல்யாணமும் ஆக வில்லை. அப்பாவுடனே தங்கி விட்டது.

அத்தைக்குக் கண்கள் தெரியாவிட்டாலும் காதுகள் அபாரமாக வேலை செய்யும். சுவர் தாண்டி, ஆயா என்ன பேசினாலும் அத்தைக்கு எப்படியோ கேட்டு விடும்.

அதே போல், தங்கத்தின் மீது அவ்வளவு ஆசை. அடம் பிடித்து, கம்மல் வாங்கிப் போட்டுக் கொண்டது. குழந்தைகளைக் கையால் கொடுத்தால், முதலில் பார்ப்பது அரை நாண் கொடி இருக்கிறதா, தங்கமா, வெள்ளியா, எனத் தடவிப் பார்த்தே சொல்லி விடும்.

உறவினர் வருகையின் போது கொடுப்பது, பண்டிகையின் போது, அப்பாவும் தாத்தாவும் கொடுப்பது என்று நிறைய சிறுவாடு காசு சேர்த்து வைத்து இருக்கும்.

அம்மாவும் அத்தையும் நன்றாகவே பழகினார்கள்.

ஆனால், இப்போதெல்லாம் அம்மாவுக்கும் சரோஜினி அத்தைக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம், அத்தை ஏதேனும் சொல்லப்போக, அம்மாவுக்குக் கோவம் வந்து விடுகிறது.

வேண்டுமென்றே அத்தை நடு ராத்திரியில் குளிக்கப் போகும். முதலில் என்ன சத்தம் என்று பதறியபடி எழுந்து கொள்வோம். அத்தையோ மெதுவாக குளித்தபடி இருக்கும்.

“ஏன் இப்படி உயிரை எடுக்கற. எங்கயாவது உழுந்தா, அதுவும் என்னோட தலையில தான விடியும்” என்பாள் அம்மா.

“எவளும் என்னையப் பாக்க வேணாம். யாருக்கும் பாரமா இருக்க விரும்பல. நான் போய்ச் சேர்ந்தா தான் உனக்கு சந்தோஷம்” எனப் பதிலடி வரும்.

ஒரு முறை, கிணற்று மேட்டுக்கு நள்ளிரவில் சென்று விட்டது. தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் சரியான கோபம். அத்தைக்கு நன்றாக திட்டு விழுந்தது. தண்ணீர் இறைப்பதற்காக ஊன்றப்பட்ட மரக்கம்புகள் வரை சென்று விட்டது. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில், அப்பா முரட்டுத்தனமாக கைகளைப் பிடித்து இழுக்க, கிணற்று மேட்டடிலேயே கீழே விழுந்தது. ஓவென்று குரல் கொடுத்து அழ ஆரம்பித்ததும், அப்பாவிடம் அடி வாங்கியது.

“செத்துத் தொல. தொலச்சித் தல முழுகிடறேன்” என்றார் தாத்தா தன் பங்குக்கு. இன்னும் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிக்க, அம்மா திட்ட ஆரம்பித்தாள்.

“குடும்ப மானத்தக் காத்துல பறக்க விடறதுக்கே வந்து சேர்ந்திருக்குது”.

எப்படியோ ஒரு வழியாக விடியற்காலையில் சத்தம் ஓய்ந்து, மீண்டும் தூங்க ஆரம்பித்து, பள்ளிக்கு தாமதமாகச் சென்றோம்.

அதிலிருந்து சில மாதங்களுக்கு அத்தை அடங்கியிருந்தது.

இப்போது இரண்டு அத்தைகளும் நிலத்தை முன் வைத்து சண்டையை ஆரம்பித்து வைத்து விட்டார்கள்.

ஒரு விடுமுறை நாள் இரவில், சரோஜினி அத்தையும் ஆரம்பித்தது.

“அப்பா, எனக்குன்னு எதுவுமே இல்ல. நான் போகும் போது, பசங்களுக்குக் குடுக்கறத்துக்காவது ஏதாவது வேணமில்லையா. என் பேர்ல கொஞ்சம் நெலம் இருந்தா, பசங்களுக்குக் குடுத்துட்டுப் போவன். எனக்கும் ஒரு மதிப்பு இருக்கும். நீங்க தான் பார்த்துச் செய்யனும்”.

தாத்தாவால் கோபத்தை அடக்க முடியவில்லை. நடப்பதற்கு உபயோகிக்கும் ஊன்றுகோலால் ஓங்கி அத்தையின் காலில் ஒரு அடி வைத்தார். அத்தை தனது நாடகத்தை ஆரம்பித்தது. ஓவென்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது.

பண்ணையத்திலிருந்த ஆறுமுகம் அவன் குடிசையில் இருந்து ஓடி வந்து விட்டான். பக்கத்துக் காட்டு மாதேஸ்வரனும் என்னமோ ஏதோவென்று வந்து சேர்ந்தான்.

அம்மாவுக்கும் அப்பாவுக்கும்,அத்தையின் பேராசையால், சரியான கோபம்.

“எங்கியாவது அனாதை இல்லத்திலக் கொண்டு போயி உட்டுட்டு வந்திடுங்க. எவ்வளவு பேராசை. எவ்வளவு கெட்ட எண்ணம். இனிமேல் ஒரு நிமிஷங்கூட என்னால இவளைப் பாத்துக்க முடியாது” என்று கத்த ஆரம்பித்தாள் அம்மா.

ஆறுமுகம் பொண்டாட்டி அம்மாவையும் அத்தையையும் மாற்றி மாற்றிச் சமாதானம் செய்தாள்.

இப்படியாக மோகனசுந்தரம் எறிந்த கல்லானது ஒரு அமைதியான குளத்தில், சலனங்களை ஏற்படுத்த ஆரம்பித்தது.

“அடுத்த முறை ஒங்க அக்கா வரும்போது, காலடி எடுத்து வைக்க உடாத, துரத்தி உடனும் அப்பு. இதுக்கெல்லாம் காரணம் அந்த வீணாப்போனவன உள்ள விட்டதுதான்” என்றார் தாத்தா ஆவேசத்துடன்.

அந்த நாளும் வந்தது. வழக்கம் போல, அம்மா, அப்பாவுடன் வந்திருந்தான் மோகனசுந்தரம். “அங்கிய நில்லுங்க. வாசற்படி ஏறக்கூடாது. குடும்பத்து நிம்மதியக் கெடுக்கறத்துக்கின்னே இப்படி செய்றீங்க. முதல்ல இங்கிருந்து போய்டுங்க. இல்லன்னா நடக்கிறதே வேற” என்று சத்தம் போட ஆரம்பித்தார் தாத்தா.

மோகனசுந்தரம் எகிற ஆரம்பித்தான்:”அப்படியெல்லாம் உட்டுட்டுப் போக முடியாது. ஒரு வருஷமா மூணு பேரும் வேகாத வெய்யில்ல, மாடா உழைச்சு இருக்கிறம்”.

“இப்ப என்ன பண்ணனும்கிற. சத்தம் அதிகமாக போட்ட, போலீஸ்ல புகார் கொடுத்துடுவன்” என்றார் அப்பா.

“எந்தப் போலீஸிக்கு வேணும்னாலும் போங்க. கோர்ட்டிலப் பாத்துக்கலாம். வாம்மா போலாம். இனிமேல இவங்க கிட்ட என்ன பேச்சு. வக்கீல் நோட்டீஸ் பேசுட்டும்” என்றபடியே வந்த வழியேக் கிளம்பினான்.

தாத்தா மிகவும் இடிந்து போய் விட்டார். “அப்பு, எது நடக்கக் கூடாதுன்னு நெனச்சேனோ அது நடக்குதேடா. நான் யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணிலியே. ஈஸ்வரா!” என்றபடியே திண்ணையில் அமர்ந்தார்.

“ஒண்ணும் பண்ண முடியாது. பாத்துக்கலாம். வெத்துப் பய. சும்மா பயமுறுத்தித்திட்டுப் போறான். வெறும் லெட்டர் பேடு கட்சியில இருந்து கிட்டு, மெரட்டிப் பாக்கறான். நல்ல வக்கீலா நானும் பார்க்கிறேன்” என்று சமாதானம் செய்தார் அப்பா.

அன்றிரவு யாருக்கும் தூக்கம் வரவில்லை.

-வளரும்.

கண்ணன்

வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *